இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









மூவொரு கடவுள் பெருவிழா

மூவொரு இறைவன்

நீதிமொழிகள் 8: 22-31
உரோமையர் 5: 1-5
யோவான்: 16: 12-15

நமது தாய் திருஅவை என்றும் வாழும் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. தந்தை மகன் தூய ஆவியானவராகிய மூவொரு இறைவன் அன்பில், ஒன்றிப்பில் முழுமையாக இணைந்து செயல்படுகின்றார்கள். தந்தையான இறைவன் அன்பின் வெளிப்பாடாக தான் அன்பு செய்த மனிதனை தன்னுடைய உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டு, தன்னை மனித குலத்திற்கு " இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே ", (விப: 14) " தொடக்கமும் நானே, முடிவும் நானே " (எசா:44:6), அகரமும் னகரமும் நானே, தொடக்கமும் முடிவும் நானே " (திவெ). என்று தன்னை வெளிப்படுத்துகின்றார். தான் தேர்ந்தெடுத்த இஸ்ரேயல் மக்களுடன் உடனிருந்து பயணம் செய்து வாழ்வு அளித்து அன்பும், நேசமும், இரக்கமும் கனிவும் கொண்டுவராக இன்றும் என்றும் நம்மில் செயலாற்றுவதை காண்கின்றோம்.

தந்தையாம் இறைவன் உலகின்மீது அளவிட முடியாத அன்பு கொண்டதால் தான் அன்பு செய்த தன் மகனை இம்மானுவேலாக என்றும் வாழ்வதற்கு வார்த்தையின் வடிவில் நம்மிடையே குடிகொள்ள விரும்பி, தந்தையின் ஒரே மகனை இம்மானுவேலாக அனுப்புகின்றார். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கியவராகிய இறைமகன் இயேசுவை "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ". (லூக்கா:3:22). என்றும். என்னைக் காண்பது தந்தையைக் காண்பது. நான் தந்தையுள் இருக்கின்றேன, தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்.( யோவான் 14: 9,11) என்று இயேசுவே தந்தையாம் இறைவனைக் குறித்து சான்று பகர்கின்றார்.

இறைமகன் இயேசுவில் தந்தையும் ஆவியானவரும் நிறைவாக வாழ்ந்து செயலாற்றுவதை அவருடைய செப வாழ்விலும், பணிவாழ்விலும் காண்கின்றோம். எப்பொழுதும் தந்தையின் குரலுக்கு செவி கொடுத்து அவரோடு இணைந்து வாழ்ந்தார். இறைமகன் இயேசு செப வேளையில், லாசரை உயிர்ப்பிக்கும் முன்பு, தான் அன்பு செய்த சீடர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும், கெத்சமனி தோட்டத்தில் தனிமையில் இருந்தபோதும், சிலுவை மரணத்தின் போதும் தந்தையிடம் உரையாடுவதைக் காண்கின்றோம். இறைமகன் இயேசுவில் தந்தையானவர் உடனிருந்து செயலாற்றுவதை நற்செய்தியின் வழியாக அறிகின்றோம்.

திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் கூறியது ' அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுப்பார் " என்று முன்கூட்டியே தூய ஆவியைப்பற்றி பரைசாற்றுகின்றார். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன் என்று இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகவும், நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன் என்று இறைவாக்கினர் யோவேல் வழியாகவும் ஆவியானவரைக் குறித்து பேசுவதைக் காண்கின்றோம். இறைமகன் இயேசு தூய ஆவியானவரால் வழிநடத்தப்பட்டவர். அவர் கூறிய வார்த்தைகள் உண்மையானவை. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்று யோவான் நற்செய்தியில் காண்கின்றோம். நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் வழியாக தந்தை, மகன், தூய ஆவியானவராகிய மூவொரு இறைவன் நம்மில் வாசம் செய்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் தந்தை மகன் தூய ஆவியானவராகிய மூவொரு இறைவனை சிலுவை அடையாளம் வரையும்போது அவர்களை நாம் வரவேற்று அவர்களைப்போல் நாமும் அன்பிலும், அறிவிலும். ஞானத்திலும் வளர வாழ துணை வேண்டுகின்றோம். இறைமகன் இயேசு நம்மைப்போல் மனிதராக மண்ணில் வாழ்ந்தபோது தந்தையிடமும் ஆவியானவரிடமும் இடைவிடாது செப உறவில் ஓர் ஆழமான பற்றுதலையும் பந்தத்தையும் வளர்த்து அனைத்தையும் அவர்களுடைய நாமத்தில் செயலாற்றி மரணத்தை வென்று நிலைவாழ்வின் பாதையை நமக்கு விட்டுச் சென்றார். இன்று மூவொரு இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது அவர்களைப்போல் அன்புறவில் வாழ அழைப்பு விடுக்கின்றார்கள். இன்று சிறப்பாக அனைத்து குடும்பங்களுக்காக மூவொரு இறைவனிடம் மன்றாடுவோம். குடும்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் உறவில் உண்மையான அன்பு பகிர்வு மன்னிப்பு ஒற்றுமை விளங்கவும் அதன்வழியாக அவர்கள் அனைவரும் ஞானப் பண்புகளில் வளர்ந்து மூவொரு இறைவனுக்கு சாட்சியாய் வாழ அவர்களிடம் வரம் கேட்போம்.