இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






புனித வாரம், பெரிய வெள்ளி (அ)

முதல் வாசகம்: எசாயா 52,13-53,12
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 31
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4,14-16: 5,7-9:
நற்செய்தி: யோவான் 18,1 - 19,42


பெரிய வெள்ளி என்று தமிழில் அழகாக அழைக்கப்படும் இந்த தூய்மையான வெள்ளி பலவாறு பல மொழிகளில் அழைக்கப்படுகிறது. Good Friday என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இத்தினம் God Friday என்பதிலிருந்து வந்ததென்கின்றனர் சிலர். இதனை விட இன்னும் சில நாடுகளில் இது தூய வெள்ளி, பெரிய வெள்ளி, கறுப்பு வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஜேர்மானியத்தில் இவ்வெள்ளி Karfreitag (வியாகுல வெள்ளி) என்று அழைக்கப்படுகிறது. ஆண்டவரின் தெய்வீகத்தை வெளிப்படுத்தியது உயிர்ப்பு ஞாயிறு என்றால், அவரின் அளவுகடந்த அன்பையும் இந்த மனித குலத்தின் பெறுமதியையும் உறுதிப்படுத்தியது இந்த வெள்ளியாகும், துன்பாமான வெள்ளியாக இருந்தாலும், மனித குலத்தை விடுவித்ததால் இதனை பெரிய-வெள்ளி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

முதல் வாசகம்
எசாயா: 52,13-53,12 துன்புறும் ஊழியர்

13இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். 14அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. 15அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர். 1நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? 2இளந்தளிர் போலும் வறண்ட நில வேர் போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை; 3அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. 4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். 5அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். 6ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். 7அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். 8அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். 9வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். 10அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். 11அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார். 12ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

நான்காவது ஊழியர் பாடல் என்று அறியப்படும் இந்த இரண்டாவது எசாயா புத்தகப்பாடல், யூத மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகளில் மிகவும் முக்கியமான பாவனையை கொண்டுள்ளது. யார் இந்த துன்புறும் ஊழியர் என்பதில் கிறிஸ்தவ மற்றும் யூத வல்லுனர்களிடையே பல வேறுபட்ட கருத்தியல்களை காணலாம். யூத அல்லது எபிரேய ஆய்வாளர்க்ள், இந்த துன்புறும் ஊழியரை இறைவாக்கினர் எசாயா, அல்லது தாவீதின் ஒரு வாரிசு, அல்லது புலம் பெயர்ந்த இஸ்ராயேல் இனம் என்று காண்கின்றனர். கிறிஸ்தவ பாரம்பரியம் மாற்றுக் கருத்துக்கள் இன்றி இந்த துன்புறும் ஊழியரை ஆண்டவர் இயேசுவாகவே காண்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம் இந்த துன்புறும் ஊழியரின் வரிகளை ஒப்பனை செய்கிறது.

வவ. 13-15: இந்த வரிகள் கடவுளின் நேரடி சொற்களாக உள்ளன. தாழ்தப்பட்ட கீழ்மையிலிருந்து ஊழியர் எவ்வாறு உயர்த்ப்பட்டு மேன்மையடைவார் என்பதை இவ்வரிகள் விவரிக்கின்றன. பிற இனத்தார், அரசர்கள் என்று கூறப்படுவதால் இந்த ஊழியர் துன்புறும் இஸ்ராயேல் இனம் என்றே எண்ணத்தோன்றுகிறது. இஸ்ராயேல் இனத்தை ஏன் எசாயா ஒரு துன்புறும் ஊழியனாக சித்தரிக்கிறார் என்பது புலப்படவில்லை. இதனைக் கொண்டு அவர் ஒரு நபரை சித்தரிக்கின்றார் என்றால், அது அந்த நபருக்கு நன்கு பொருந்துகின்றது. எசாயாவின் துன்புறும் ஊழியர் சைரஸ் மன்னன் என்றால், இந்த வரிகள் அவருக்கு எப்படி பொருந்தும் என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன. இந்த துன்புறும் ஊழியர் தாவீதின் ஒரு வழிமரபு என்றால், அந்த காலத்தில் அப்படி அங்கு யார் தாவீதின் வழிமரபாக வாழ்ந்தார் என்பதிலும் பல கேள்விகள் உள்ளன.

வவ. 1-3: இங்கே பேசுகிறவர் இன்னொருவர். ஊழியர் எவ்வாறு பரிகாசம் செய்யப்பட்டார் என்று இறைவாக்கினர் விவரிக்கின்றார். இங்கே சொல்லப்படுகின்ற விவரணங்கள் அதிகமான அடையாளங்களை கொண்டதாய் அமைந்துள்ளன. (לֹא־תֹאַר அமைப்பு இல்லை, לֹא הָדָר மாண்பு இல்லை, לֹֽא־מַרְאֶה தோற்றம் இல்லை). அவருடைய துன்பங்களாக: இகழப்பட்டார் (נִבְזֶה֙), புறக்கணிக்கப்பட்டார் (חֲדַל אִישִׁים), வேதனையுற்றிருந்தார் (אִישׁ מַכְאֹבוֹת), நோயுற்று நலிந்தார் (וִיד֣וּעַ חֹ֑לִי), முகத்தை மறைத்துக் கொண்டார் (כְמַסְתֵּר פָּנִים), இழிவுபடுத்தப்பட்டார் (מִמֶּ֔נּוּ נִבְזֶ֖ה), அவரை நாம் மதிக்கவில்லை (לֹא חֲשַׁבְנֻהוּ), போன்றவை காட்டப்படுகின்றன. இயேசு கைது செய்யப்படுவதற்கு முன், அவருடைய தோற்றமும், மக்கள் அவரிலே வைத்திருந்த மரியாதையும் இந்த இறைவாக்குடன் ஒத்துப்போகாது. கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட இயேசுவின் சாயல் இந்த விவரணங்களுடன் ஒத்து போவதற்கான வாய்ப்புக்கள் வெளிப்படையாக அதிகமாக உள்ளன.

வவ. 4-6: இந்த வரிகள் நச்சென்று இயேசு ஆண்டவருக்கு பொருந்துகின்றன. இது இந்தப்பாடலின் மையப்பொருள் என்று சொன்னால் மிகையில்லை. அவரும், நாங்களும் என்று ஒப்பிட்டு ஊழியரின் செயல்கள் விவரிக்கப்பட்டு மெச்சப்படுகின்றன. மக்களின் பாவங்களை ஓர் ஆட்டின் மீது ஏற்றி அந்த ஆட்டை சமூகத்திற்கு வெளியே அனுப்பி, அதனை கழுவாயாக்கும் மரபு இருந்தது. அந்த மரபில் இங்கே இந்த ஊழியர் கழுவாயாகிறார். இயேசுவின் பாடுகளை தியானிக்கும் போது, புதிய ஏற்பாட்டில் அதுவும், பவுலுடைய சிந்தனையில் இந்த வரிகள் மிகவே இயேசுவின் பாடுகளை நமக்கு காட்டுகின்றன. அவர் நம் பிணிகளைத் தாங்கினார் (חֳלָיֵ֙נוּ֙ ה֣וּא נָשָׂ֔א), நம் துன்பங்களை சுமந்தார் (מַכְאֹבֵינוּ סְבָלָם), நம் குற்றங்களுக்காக காயப்பட்டார் (הוּא֙ מְחֹלָ֣ל מִפְּשָׁעֵ֔נוּ), நம் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டார் (מְדֻכָּא מֵעֲוֹנֹתֵ֑ינוּ), நமக்கு நிறைவாழ்வு அளிக்க தண்டிக்கப்பட்டார் (מוּסַ֤ר שְׁלוֹמֵ֙נוּ עָלָ֔יו), அவர் காயங்களால் நாம் குணமடைகின்றோம் (וּבַחֲבֻרָת֖וֹ נִרְפָּא־לָֽנוּ׃) போன்ற வரிகள் ஆழகன கிறிஸ்து-இறையியல் சிந்தனைகளை முன்வைக்கின்றன. ஆறாவது வசனம் இஸ்ராயேல் மக்களை வழிதவறிய ஆடுகளுக்கு ஒப்பிடுகிறது (כֻּלָּ֙נוּ֙ כַּצֹּ֣אן תָּעִ֔ינוּ), அத்தோடு எல்லாரின் பாவங்களையும் கடவுள் அவர் மேல் சுமத்தினார் என்பதன் மூலமாக கடவுள் மக்கள் மீது கொண்ட அன்பும், இந்த ஊழியர் மக்கள் மீது கொண்ட இரக்கமும் புலப்படுகிறது.

வவ. 7-9: இயேசுவை பலவேளைகளில் செம்மறி ஆட்டுக்குட்டிக்கு ஒப்பிடுவது வழக்கம், அதற்கான காரணத்தை விவிலிய வல்லுனர்கள் இந்த இந்த பகுதியிலிருந்து பெற்றிருப்பார்கள் எனலாம். இயல்பிலே மிகவும் சாதுவான செம்மறி (רָחֵל ராஹெல்), தான் கொலையுற போகிறதையும் அறியாதிருக்கிறது, ஆனால் இந்த ஊழியர் அறிந்திருந்தும், கடவுளுக்கு பணிந்து அமைதியாயிருக்கிறார் என்கிறார் ஆசிரியர். ஒன்பதாவது வசனம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மிகவும் கடினமானது. இறந்தபோது செல்வந்தராய் இருந்தார் என்பதற்கு பல அர்தங்கள் உள்ளன, செல்வரின் கல்லறையில் அடக்கம்செய்யப்பட்டார் என்றும் சிலர் கருதுகின்றனர்.

வவ. 10-12: முதலில் அவரை கழுவாயாக்குவதும், பின்னர் அவருக்கு நீடூழி வாழ்வு அருளுவதும் கடவுளின் திருவுளம் என்கிறார் இரண்டாம் எசாயா. பாவங்களை சுமத்தலும், பலருக்காக பரிந்து பேசுதலும் என்ற இந்த வாசகத்தின் செய்தி, இஸ்ராயேல் இனம் என்பதனையும் தாண்டி, யாரே ஒரு நபரைக் குறிப்பது போலவே காணப்படுகிறது. யார் இந்த துன்புறும் ஊழியர், எசாயாவா, சைரஸ் மன்னனா, இஸ்ராயேலா, தாவிதின் ஒரு வாரிசா, அல்லது இயேசு ஆண்டவரா? விசுவாச அல்லது திருச்சபையின் வரலாற்று கண்ணோட்டத்தில் இவை இயேசு ஆண்டவரைத் தவிர வேறு எவருக்கும் கச்சிதமாக பொருந்த வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 4,14-16: 5,7-9: இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை

14எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! 15ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல் மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். 16எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. 7அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். 8அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9அவர் நிறைவுள்ளவராகி, 'தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். 10'மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு' என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.

இந்த புத்தகம், திருமுகமா அல்லது விரிவுரையா என்பதில் இன்னமும் கருத்தொற்றுமையில்லை. கிறிஸ்தியலை மையமாக கொண்டு அழகான இறையியல் வாதங்களை அக்கால தேவைகளுக்கு ஏற்றபடி கொடுத்த இந்த புத்தகம், இன்றும் எமக்கும் பல சிந்தனைகளை தந்துகொண்டே இருக்கிறது. எபிரேயர் புத்தகத்தின் நான்காம் அதிகாரம், இயேசுவை இரக்கம் நிறைந்த நம்பத்தகுந்த தலைமைக் குரு (ἀρχιερεύς அர்கியரெயுஸ்) என்று வர்ணிக்கிறது. தலைமைக்குரு என்னும் ஒரு பணி பபிலோனிய இடப்பெயர்விற்கு முன் அதிகாரத்தில் இருந்ததா என்பது கேள்விக்குறியே.

ஆரோனும் அவர் புதல்வர்களும் குருக்களாகவும் தலைமைக்குருக்களாகவும் அறியப்பட்டாலும் (காண்க எண் 25,10-13), இந்த சிந்தனைகள் அதிகமாக பபிலோனியாவில் இருந்து மக்கள் நாடு திரும்பியதன் பின்னர்தான் உருவானது என்பது அதகிமான ஆய்வாளர்களின் சிந்தனை. எருசலேமில் தாவிதின் வழிமரபும், அரச தலைமைத்துமும் இல்லாமல் போனதன் பின்னர்தான் இப்படியான ஒரு தலைமைத்துவம் (தலைமைக்குரு) சாதோக் மற்றும் செருபாபேல் குடும்பங்களிடையே தோன்றியது என வரலாறு காட்டுகின்றது. இந்த இரண்டு குடும்பங்களும் தாவீது மற்றும் சாலமோன் காலத்தில் இருந்த குருத்துவ குடும்பங்கள் (காண்க எஸ்ரா 3-8). மக்கபேயர் புரட்சியின் பின்னர் ஹஸ்மோனியருடைய காலத்தில் (கிரேக்கர் காலம்) இந்த தலைமைக் குரு என்கின்ற பதவி மிக முக்கியமான பதவியாக மாறியது. இவர்கள் இந்த காலத்தில் ஏறக்குறைய ஒரு சிற்றரசர்கள் போல மாறியிருந்தார்கள். தலைமைக் குருவாக வர பலர் போட்டி போட்டுக்கொண்டனர். சிலவேளைகளில் இந்த போட்டி சகோதரர்கள் மத்தியிலே போராக மாறியது. எரோது மற்றும் உரோமையருடைய காலத்தில் இந்த பதவி மட்டுப்படுத்தப்பட்ட பதவியாகவும், ஆலயம் மற்றும் சமயம் சார்ந்த பதவியாகவும் குறைக்கப்பட்டது. இவர்களுக்கும் சதுசேயர்களும்;கும் பல உறவுகள் இருக்கிறது என்ற வாதமும் பலமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தீத்து என்கின்ற உரோமைய இராணுவ அதிகாரி (பின்னாள் சீசர்) கி.பி 70 இல் எருசலேமை தரைமட்டமாக்கி திருக்கோவிலை அழித்த போது இந்த தலைமைக் குருத்துவமும் அழிந்து போனது.

ஆனால் ஆரம்ப கால திருச்சபையில் இதன் உணர்வுகளும், தாக்கங்களும் அழியாமல் இருந்தன. தலைமைக்குருதான் மரபுப்படி மக்களின் பாவங்களுக்காக கழுவாய்ப் பலி ஒப்புக்கொடுக்கிறவர். அவர் மனிதராதலால் தனக்காவும் தன் மக்களுக்காவும் பலி ஒப்புக்கொடுப்பார். எபிரேயர் நூலின் ஆசிரியர், இந்த தலைமைக் குரு என்கின்ற அழகான சிந்தனையை கையில் எடுத்து உண்மையான தலைமைக்குரு இயேசு என்று வாதிடுகிறார். அத்தோடு இந்த இயேசு மிருக இரத்தத்தால் கழுவாய் பலி ஒப்புக்கொடுக்கவில்லை மாறாக தன்னுடைய சொந்த இரத்தத்தால் பலி ஒப்புக்கொடுக்கிறார் அதேவேளை அவர் கடவுளாக இருக்கிற படியால் அவருக்கு எந்த விதமான தனிப்பட்ட பாவ பரிகாரப்பலியும் தேவையில்லை என வாதிடுகிறார். இஸ்ராயேலின் தலைமைக்குருத்துவம் செல்லாது அது ஒரு தோல்வி, மாறாக புதிய தலைமைக்குரு இயேசு, அவர் குருத்துவம்தான் செல்லும் என்பதும் இவருடைய முக்கியமான இறையியல் நம்பிக்கை.

இன்றைய வாசகம் இரண்டு கருத்துக்களை முக்கியமாக முன்வைக்கிறது.

அ. இயேசு மாபெரும் தலைமைக்குரு (ἀρχιερέα μέγαν)
ஆ. அவர் சோதனைகளைத் தாங்கிய தலைமைக் குரு (πεπειρασμένον).
வவ. 14-16: எந்த ஒரு தலைமைக் குருவும் தன்னுடைய மனிதத்தன்மை மற்றும் சுய பாவ நிலை என்று பலவீனங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார், எனவே வானங்களைக் கடக்க இயலாதவர். ஆனால் இயேசுவிற்கு இந்த சிக்கல்கள் இல்லையென்பதால், அவர்தான் உண்மையான தலைமைக் குருவாகிறார். இயேசுவினுடைய இரக்க குணத்தை விவரிக்க συμπαθέω சும்பதேயோ என்ற கிரேக்க மூலச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவர் தன்னுடையவர்களுக்காக சேர்ந்து துன்பப்படுதலைக் குறிக்கும். ஆக இயேசுவின் இரக்கம், அனுதாபம் அல்ல, அதையும் தாண்டிய அன்புகடந்த உடன்-இருப்பு என்கிறார் ஆசிரியர். வழமையாக அரியணைகள் ஆட்சியாளர்களின் அதிகாரங்களையும், செல்வங்களையும் குறிக்கும், இங்கே இயேசுவின் அரியணை இரக்கத்தின் அரியனை என் விவரிக்கப்படுகிறது.

வ. 7-: தலைமைக் குருக்களின் வேண்டுதல்கள் உன்னத தலைமைக் குருவான இயேசுவிற்கு முன்னால் இரண்டாம் தரமானவை என்கிறார், ஆசிரியர். εὐλάβεια எவுலாபெய்யா என்பது இறைபற்று கலந்த அச்சம் என்று அழகாக மொழிபெயர்கப்பட்டுள்ளது. இவர்களை பேறுபெற்றோர் என்று முதல் ஏற்பாடும் குறிப்பிடுகிறது. இறையச்சமே மெய்யறிவின் தொடக்கம் எனவும் சொல்லப்படுகிறது. இதுவே கடவுள் இயேசுவிற்கு செவிசாய்க்க காரணம் என்கிறார், ஆசிரியர்.

வவ. 8-10: துன்பங்கள் வழியே கீழ்படிதல் (ἀφ᾿ ὧν ἔπαθεν τὴν ὑπακοήν) என்று, மூல மொழியில் சிலேடை பாவிக்கப்பட்டுள்ளது. துன்பப்பட்டு கற்றுக்கொண்டார், அல்லது கீழ்படிதலை துன்புற்று கற்றுக்கொண்டார் என்றும் மொழிபெயர்கலாம். கீழ்படிதல் ஒரு விழுமியம் என்று இவ்வாறு காண்பிக்கப்படுகிறது. இதனால் இப்போது தனக்கு கீழ்படுவோர்க்கு அதே ஆசீரை வழங்குவார் என்று விவாதிக்கிறார். மெல்கிசதேக் என்னும் குரு, சாலமின் அரசர் என்று தொடக்கநூலில் வருகிறார். இவரின் பின்புலங்களைப் பற்றிய அதிகமான புரிதல்கள் விவிலிய பதிவுகளில் இல்லை. (காண் தொ.நூ 14: தி.பா 110,4). தொடக்கமும் முடிவும் இல்லாமையாலும், ஆபிரகாமே இவருக்கு காணிக்கை செலுத்தியதாலும், முதல் ஏற்பாட்டில் இவர்தான் கடவுளின் முதல் குரு என அறியப்படுகிறார். நீதியின் அரசர் என்றும் இவருடைய பெயருக்கு பொருளுண்டு. ஆக முதல் ஏற்பாட்டு குருக்களோ அரசர்களோ அல்ல, மாறாக இயேசுவே இவர் வழி வந்த உன்மையான தலைமைக்குரு என்பது ஆசிரியரின் வாதம்.


நற்செய்தி வாசகம்
யோவான் 18,1 - 19,42

இயேசுவைக் கைது செய்தல்

(மத் 26:47 - 56; மாற் 14:43 - 50; லூக் 22:47 - 53)

1இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். 2அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர். 3படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். 4தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, 'யாரைத் தேடுகிறீர்கள்?' என்று கேட்டார். 5அவர்கள் மறுமொழியாக, 'நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்' என்றார்கள். இயேசு, 'நான்தான்' என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான். 6'நான்தான்' என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள். 7'யாரைத் தேடுகிறீர்கள்?' என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்' என்றார்கள். 8இயேசு அவர்களைப் பார்த்து, ''நான்தான்' என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்' என்றார். 9'நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை' என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது. 10சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. 11இயேசு பேதுருவிடம், 'வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?' என்றார்.

தலைமைக் குருமுன் இயேசு கொண்டுவரப்படுதல்

(மத் 26:57 - 58; மாற் 14:53 - 54; லூக் 22:54)

12படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, 13முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். 14'இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.

பேதுரு மறுதலித்தல்

(மத் 26:69 - 70; மாற் 14:66 - 68; லூக் 22:55 - 57)

15சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார். 16பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார். 17வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், 'நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?' என்று கேட்டார். பேதுரு, 'இல்லை' என்றார். 18அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

தலைமைக் குரு இயேசுவை விசாரித்தல்

(மத் 26:59 - 66; மாற் 14:55 - 64; லூக் 22:66 - 71)

19தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார். 20இயேசு அவரைப் பார்த்து, 'நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. 21ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே' என்றார். 22அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், 'தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். 23இயேசு அவரிடம், 'நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?' என்று கேட்டார். 24அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.

பேதுரு மீண்டும் மறுதலித்தல்

(மத் 26:71 - 75; மாற் 14:69 - 72; லூக் 22:58 - 62)

25சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், 'நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே' என்று கேட்டனர். அவர் 'இல்லை' என்று மறுதலித்தார். 26தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், 'நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?' என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். 27பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.

பிலாத்துமுன் இயேசு கொண்டுவரப்படல்

(மத் 27:1 - 2, 11 - 14: மாற் 15:1 - 5; லூக் 23:1 - 5)

28அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. 29எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, 'நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?' என்று கேட்டார். 30அதற்கு அவர்கள், 'இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்' என்றார்கள். 31பிலாத்து அவர்களிடம், 'நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்' என்றார். யூதர்கள் அவரிடம், 'சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது' என்றார்கள். 32இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள். 33பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான். 34இயேசு மறுமொழியாக, 'நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?' என்று கேட்டார். 35அதற்கு பிலாத்து, 'நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?' என்று கேட்டான். 36இயேசு மறுமொழியாக, 'எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்றார். 37பிலாத்து அவரிடம், 'அப்படியானால் நீ அரசன்தானோ?' என்று கேட்டான். அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். 38பிலாத்து அவரிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டான்.

இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தல்

(மத் 27:15 - 31 மாற் 15:6 - 20; லூக் 23:13 - 25)

38இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, 'இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே' என்றான். 39மேலும், 'பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?' என்று கேட்டான். 40அதற்கு அவர்கள், 'இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்' என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.

1பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். 2வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். 3அவரிடம் வந்து, 'யூதரின் அரசே வாழ்க!' என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். 4பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், 'அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்' என்றான். 5இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், 'இதோ! மனிதன்'⁕ என்றான். 6அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், 'சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்' என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், 'நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை' என்றான். 7யூதர்கள் அவரைப் பார்த்து, 'எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்' என்றனர். 8பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான். 9அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், 'நீ எங்கிருந்து வந்தவன்?' என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. 10அப்போது பிலாத்து, 'என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்றான். 11இயேசு மறுமொழியாக, 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்' என்றார். 12அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால் யூதர்கள், 'நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி' என்றார்கள். 13இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். 'கல்தளம்' என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் 'கபதா' என்பது பெயர். 14அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், 'இதோ, உங்கள் அரசன்!' என்றான். 15அவர்கள், 'ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்' என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், 'உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், 'எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை' என்றார்கள். 16அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல்

(மத் 27:32 - 44; மாற் 15:21 - 32; லூக் 23:26 - 43)

17இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். 18அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். 19பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்று எழுதியிருந்தது. 20இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. 21யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ''யூதரின் அரசன்' என்று எழுத வேண்டாம்; மாறாக, 'யூதரின் அரசன் நான்' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்' என்று கேட்டுக்கொண்டார்கள். 22பிலாத்து அவர்களைப் பார்த்து, 'நான் எழுதியது எழுதியதே' என்றான். 23இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. 24எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, 'அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்' என்றார்கள். 'என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. 25சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். 26இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்' என்றார். 27பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்' என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

இயேசுவின் சாவு

(மத் 27:45 - 56; மாற் 15:33 - 41; லூக் 23:44 - 49)

28இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, 'தாகமாய் இருக்கிறது' என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். 29அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள் 30அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

இயேசுவின் விலாவைக் குத்துதல்

31அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். 32ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். 33பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. 34ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. 35இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். 36'எந்த எலும்பும் முறிபடாது' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. 37மேலும் 'தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்' என்றும் மறைநூல் கூறுகிறது.

இயேசுவை அடக்கம் செய்தல்

(மத் 27:57 - 61 மாற் 15:42 - 47; லூக் 23:50 - 56)

38அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். 39முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். 40அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். 41அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. 42அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.


வழமையாக அ,ஆ,இ ஆண்டுகளாக இருந்தாலும், பெரிய வெள்ளியன்று பாடுகளின் வரலாறு தூய யோவான் திருத்தூதரின் நற்செய்திப்படியே வாசிக்கப்படுகிறது. இது யோவான் நற்செய்தியின் முக்கியத்துவத்தையும், பெரிய வெள்ளியின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. யோவானுக்கு கழுகு என்ற அடையாளம் கொடுக்கப்படுகிறது. இந்த கழுகு அக்கால இலக்கியங்களில் கடவுளின் பறவையாக அறியப்படுகிறது. கழுகினுடைய பல குணாம்சங்கள் மற்றும் அதனுடைய துல்லியமான பார்வை போன்றவை அக்கால மக்களுக்கு இது ஒரு தெய்வீக பறவை என்ற சிந்தனையைக் கொடுத்திருக்கலாம் (காண்க இ.ச 28,49: 2சாமு 1,23: எரே 4,13: புல 4,19). எசேக்கியேலின் காட்சியிலும் இந்த கழுகு காட்டப்படுகிறது (காண்க எசேக் 1,10). யோவானுடைய பார்வையும் இந்த கழுகின் பார்வையை ஒத்திருக்கிறது என்பது திருச்சபை தந்தையர்களுடைய கருத்து. யோவான் எழுதியபடி ஆண்டவரின் பாடுகளை தியானிப்பதற்கு முன், யோவானை பற்றிய சிறு விளக்கம் நல்லதென நினைக்கிறேன்.

அ. திருச்சபை காலம் காலமாக நான்காம் நற்செய்தியின் ஆசிரியர், ஆண்டவர் இதயத்திற்கு நெருக்கமான திருத்தூதர் யோவான் என நம்புகிறாள்.

ஆ. கலிலேயரான இந்த யோவான், ஆழமான அரேமேயிக்க மற்றும் கிரேக்க மொழி புலமைத்துவத்தை எப்படி பெற்றிருப்பார் என்பது, பலரின் வாதமும், கேள்வியுமாகும். இருப்பினும் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பதையும் மறக்க முடியாது.

இ. அதிகமான நிகழ்சி பற்றிய தரவுகள், யாரோ இயேசுவிற்கு அருகில் இருந்து அவதானித்தவர் போல பதியப்பட்டுள்ளன.

ஈ. கொய்னே (சாதாரண) கிரேக்க மெய்யியல் தழுவல்களையும், இராபினிக்க யூத கற்கை நடைமுறைகளையும் கொண்டமைந்துள்ளதும் இந்நற்செய்தியின் சிறப்பம்சமாகும்.

உ. இயேசுவை மெசியாவாகவோ, அல்லது தாவிதின் வழிமரபாகவோ, அல்லது உன்னதமான மனிதராகவோ காட்டுவதை விடுத்து, யோவான் நற்செய்தி இயேசுவை அதிவல்லமை வாய்ந்த முதல் ஏற்பாட்டுக் கடவுள், அல்லது கடவுளின் வார்த்தைப் பொருளாகக் காட்டுகிறது.

ஊ. யோவான் நற்செய்தியில், இயேசு தான் செய்யும் எல்லா காரியங்களையும், முழு அறிவுடனும், விருப்பத்துடனுமே செய்வார். இயேசுவின் திட்டபடியே அனைத்தும் நடக்கின்றன என்பதையும் யோவான் அழகாக காட்டுவார். சுருக்கக் கூறின், முதல் ஏற்பாட்டில் தோன்றிய அதோனாய் எலோகிம் இறைவன் தான் இந்த இயேசு ஆண்டவர், என்று யோவான் வார்த்தைக்கு வார்த்தை நிறுவிப்பார்.

இதனையே இந்த பாடுகளின் வரலாற்றிலும் யோவான் காட்சிப்படுத்துகிறார். இந்த பாடுகளின் வரலாற்றை இவ்வாறு பிரிப்போம்:

அ. 18,1-11: ஆண்டவர் முன்வந்து கைதாகிறார்

ஆ. 18,12-27: அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர்

இ. 18,28-19,16: பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார்

ஈ. 19,16-22: சிலுவையில் அறையப்படுகிறார்

உ. 19,23-24: ஆடைகள் களையப்படுதல்

ஊ. 19,25-27: தாயும் அன்புச் சீடரும்

எ. 19,28-30: மரணம்

ஏ. 19,31-37: விலா குத்தப்படுகிறது.

ஐ. 19,38-42: நல்லடக்கம்

அ.18,1-11: ஆண்டவர் முன்வந்து கைதாகிறார் (கடவுளை யாரும் கைது செய்ய முடியாது: ஒளியை சிறைபடுத்த முயலும் தீப்பந்தங்கள்!!!)

யோவான் இந்த இடத்தை பெயர் சொல்லாவிட்டாலும், புவியியல் அடையாளங்களை வைத்தும் சமநோக்கு நற்செய்தியாளர்களின் தரவுகளை வைத்தும் இதனை கெத்சமெனி எனக் கணிக்கலாம். சமநோக்கு நற்செய்திகளைப்போல் இயேசு கெத்சமனியில் துயருற்று செபித்ததாக காட்டப்படவில்லை. இது அவருடைய திடத்தைக் காட்டுகிறது. இயேசு அடிக்கடி எருசலேமிற்கு சென்றுவந்தார் என்பது யோவான் நற்செய்தியின் ஒரு படிப்பினை, இதனையும் இங்கு காணலாம். யூதாசு நெருப்புக்களோடும் தீப்பந்தங்களோடும் வந்தது, இவை நடந்தது இரவில் என்று காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் இருள் தீமையின் ஆதிக்கத்தை காட்டுகிறது. சமநோக்கு நற்செய்திகளைப் போலல்லாது யோவான் இயேசுவின் மனிதத்தை அதிகமாக காட்ட மாட்டார். இங்கே இயேசுவே முன்வந்து யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்கிறார். இது அவருடைய அதிகாரத்தை காட்டுகிறது. நான் தான் (ἐγώ εἰμι எகோ எய்மி) என்ற இயேசு கூறும் வார்த்தைகள் முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்தும் போது கூறுகின்ற வார்த்தைகள் (காண்க தொ.நூல் 46,3 'நானே உன் தந்தையரின் கடவுள்' אָנֹכִ֥י הָאֵ֖ל אֱלֹהֵ֣י אָבִ֑יךָ: தொ.நூல் 35,11: 'நானே அதி வல்லமையுடைய கடவுள'; אֲנִ֨י אֵ֤ל שַׁדַּי֙ ). கடவுள் தன்னை வெளிப்படுத்தும் போது தீய சக்திகள் தரையில் விழுவது போல படைவீரர்களும், தலைமைக் குருக்கள் மற்றும் பரிசேயரின் காவலர்களும் தரையில் விழுகின்றனர். இயேசு தன்னோடு இருந்தவர்களையும் தனது அதிகாரத்தால் பாதுகாக்கிறார். கடவுள் தன் பணியாளர் மீது துன்பங்களை திணிக்கிறார் என்பது சரியான வாதமாகாது. யோவான் நற்செய்திப்படி படைவீரரின் காதை துண்டித்தவர் பேதுரு. இயேசு அவ்வீரரை குணப்படுத்தியன் மூலம் வன்முறைக்கு முடிவுகட்டுகிறார்.

ஆ. 18,12-27: அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர்

(கடவுள், தன் குருக்களால் சோதிக்கப்படுகிறார், ஆண்டவர் தன் தானைத் தளபதியால் மறுதலிக்கப்படுகிறார்)

படைபிரிவினர், ஆயிரத்தலைவர், யூத காவலர், என அதிகமானவர்கள் ஆண்டவரை கைது செய்ய ஒன்றாக சேர்ந்துள்ளனர். இது ஒரு போர்க் காட்சி போல இருக்கிறது. நன்பர்களைவிட பகைவர்கள், சுயநலத்திற்காக ஒன்றாக சேர்வது இலகுவான காரியம் போல. (இது ஈழ தமிழருக்கு நன்கு தெரிந்த அனுபவம்). அன்னா, இவர் முன்னால் தலைமைக் குரு, கி.பி 7-14 ஆண்டுகளில் சேவையிலிருந்தார். இவரின் ஐந்து புதல்வர்களும் இறுதியாக மருமகனான கயபா தற்போது சேவையிலிருந்தார். இந்த கயபா எற்கனவே இயேசுவைப்பற்றி வாக்குரைத்திருந்தவர் (11,50). !. பேதுரு மறுதலித்தல்: முதலாவது தடைவையாக பேதுரு மறுதலிக்கிறார். பேதுருவுடன் சென்ற இந்த மற்ற சீடர் யார் என்று தெளிவாக சொல்லப்படவில்லை. இந்நற்செய்தியின் ஆசிரியராய் இருக்கலாம். இந்த சீடர் பேதுருவைவிட தலைவர்களிடம் பரீட்சாத்தியமாய் இருக்கிறார். இந்த சீடர்தான் பேதுருவை உள்ளே அழைத்து செல்கிறார். முதலாவது தடவையாக ஒரு பெண்ணிடம் தன் ஆண்டவரை மறுதலிக்கிறார் பேதுரு. வாயில்களை பெண்கள் இந்த காலத்தில் காவல் செய்திருக்கிறார்கள் என்பது இங்கே புலப்படுகிறது. இந்த பெண்ணிடம் ஆண்டவரை மறுதலித்தாலும் அவரை விட்டு அகலாமல் அந்த வளாகத்திலுள்ளே சுற்றி வரும் பேதுருவை, ஒரு பலவீனன் ஆனாலும் புனிதன் என காட்டுகிறார் யோவான். ஆண்டவரை கைது செய்த காலத்தில், மலை வேளைகள் குளிராய் இருந்திருக்கிறது. ஆக இது வசந்த காலமாக (சித்திரை, நிசான்) இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

!. அன்னா, யோவானில் இயேசுவை விசாரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். இங்கே இயேசுவே அதிகம் பேசுகிறார். இயேசு தலைமைக்குருவிற்கு நேரடியாக பதிளிக்காமல், வீரத்துடன் மற்றவர்களிடம் கேட்கச் சொல்கிறார் தான் மறைவாய் எதையும் செய்யவில்லை என்றும் சொல்கிறார். இது சூழ்ச்சியால் கைது செய்யப்பட்ட ஒரு அரசர் வீரத்துடன் எதிரிகளுக்கு பதிலளிப்பதை ஒத்திருக்கிறது. தான் வெளிப்படையாக பேசுகிறவன், ஆனால் நீங்கள்தான் மறைமுகமாக பேசி சூழ்ச்சி செய்கிறவர்கள் என்று சாடுவதலைப் போல் உள்ளது. இயேசுவை கன்னத்தில் அறைந்தவர்கும் இயேசு பதிலளிக்கிறார். இயேசு அனைவருக்கும் சவால் விடுகிறார். இதன் மூலமாக இந்த கடவுள் சாதுவாக இருந்தாலும், அவர் வல்லமையுடையவர் என்பது காட்டப்படுகிறது.

!. பேதுரு இரண்டாம் முறையாகவும் மூன்றாம் முறையாகவும் மறுதலிக்கிறார், பின்னர் சேவல் கூவுகிறது. இந்த நிகழ்வுகள் சமநோக்கு நற்செய்திகளைப்போல் ஒரு நாளுடைய சாமத்தில் நடந்ததைப்போல் உள்ளன. பேதுருவுக்கு ஆண்டவர் சொன்னது இவ்வாறு நிறைவேறுகிறது (காண்க 13,38).

இ. 18,28-19,16: பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார்

(கடவுளை வைத்து புறவினத்தவரிடம் அரசியல் லாபம்)

!. பிலாத்து, வரலாற்றில் நன்கு அறியப்பட்ட உரோமைய பதிலாளி. யோவான் பிலாத்துவை காட்டும் விதமும் தனித்துவமானது. பிலாத்துவை தந்திரக்காரனாகவும், உண்மையென்றால் என்வென்று அறியாதவர்களில் ஒருவனாகவும் காட்டுகிறார். !. பத்து வருடங்களாக உரேமைய, யூதேய-கருவூல முகவராயிருந்த இவன், பல இரத்த கலரிக்கு காரணமாக இருந்தான். ஆலயத்திற்குள் உரோமைய இராணுவ உருவங்களை கொணர்ந்தமை, ஆலய பணத்தை சுரண்டியமை போன்ற பல கேவலமான செயல்களை யூதருக்கெதிராக செய்தான். யூதர்கள் எவ்வளவு கடினவாதிகளாக தங்களை உரோமையருக்கு காட்டினரோ அதனையே இவன் யூதர்களுக்கு பதிலுக்கு பதில் செய்தான். சமாரியருக்கு இவன் செய்த கொடுமையின் காரணமாக திபேரியஸ் சீசர் உரோமைக்கு இவனை திரும்பும்படி அழைத்தார். இறுதியாக இவன் தற்கொலை செய்து கொண்டான் என்று எவுசோபியசு கூறுகிறார். உரோமைய ஆட்சியின் பல ஆளுமையற்ற தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டே மாண்டனர். மற்ற நாடுகளை சுரண்டியவர், தங்கள் இதயங்களை கையாளாமல் மாண்டுபோகிறார்கள், இதற்கு இவன் நல்ல உதாரணம். இவன்இயேசுவை விசாரித்தான் என்பதைவிட, இயேசு முன்னால் இவன் தோன்றிய காரணத்தால் மட்டுமே வரலாற்றில் இன்றும் அறியப்படுகிறான், ஆனால் அசிங்கமாக.

!. யோவான், பிலாத்து இயேசுவை விசாரித்த விதத்தை, இரட்டை அரங்கு விதத்தில் விவரிக்கிறார். இயேசு மாளிகைக்குள் இருக்கிறார், யூத தலைவர்கள் மாளிகைக்கு வெளியில் இருக்கின்றனர். பாஸ்கா காலமாகியதால் அவர்கள் உரோமைய இராணுவ மாளிகைக்குள் நுழையவில்லையாம். ஆனால் பாஸ்காவின் கடவுளும், பாஸ்கா செம்மறியும் உள்ளே இருக்கிறார். இயேசு ஒரு நல்ல யூதர், இவரை உன்மையில்லாத யூதர்கள் சிலர், புறவினத்தவர் மாளிகைக்குள் பாஸ்கா காலத்தில் அனுப்பி பாஸ்காவை கேவலப்படுத்துகின்றனர். பிலாத்துவினதும், தலைவர்களினதும் கேள்விகளும் விடைகளும், இவர்களுக்கிடையில் எரிந்துகொண்டிருந்த உரோமைய-யூத பகைமையை நேரடியாகவே காட்டுகிறது.

!. பிலாத்து இயேசுவை, நீ யூதரின் அரசனா என்று ஆச்சரியமில்லாமலே கேட்கிறான். உரோமைய பேரரசில் கபபம்கட்டும் அரசர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்தான். பிலாத்துவின் கேள்விக்கு ஆண்டவரின் பதில் இன்னொரு கேள்வி. யார் யாரிடம் கேள்வி கேட்பது. இயேசு சில விடயங்களை பிலாத்துவிற்கு சொல்வது போல, அனைத்து போலி தலைவர்களுக்கும்சொல்கிறார். கடவுளுடைய அரசும், ஆட்சியும், உண்மையும், இவ்வுலக போலித் தலைவர்களுக்கும் அவர்களின் பங்காளிகளுக்கும் தெரியவே தெரியாது என்பதுதான் அது.

!. உண்மை, ἀλήθεια அலேதெய்யா, என்பது ஒரு முக்கியமான கிரேக்க மெய்யறிவு வாதம், இது பிலாத்துவிற்கு மட்டுமல்ல, அதிமானவர்களுக்கு புரியாது.

!. பாஸ்கா விழாவிற்கு ஒரு கைதியை விடுதலை செய்வது, நற்செய்திகளில் மட்டுமே காணப்படுகிறது, அதுவும் கொலைகாரர்களை விடுதலை செய்வதும் புதுமையாய் உள்ளது. உரோமையர்களும் கொலைகாரர்களே. கொலைகாரர்கள் கொலைகாரர்களை விடுதலை செய்கிறார்கள்.

!. படைவீரர்கள் செய்யும் பரிகாசங்கள், போரிலே தோற்றும், சரணடையாத அரசனுக்கு செய்யும் அவமரியாதையை ஒத்திருக்கிறது. முள் முடி, செம்போர்வைகள் மறைமுகமாக அரச அணிகலன்களையே காட்டுகின்றன. இதோ மனிதன் (Ecce Homo) என்று பிலாத்து அன்று சொன்னது, இன்று முக்கிய வாக்காகிறது. நேரடியாக மொழிபெயர்த்தால் இதோ அப்பாவி என்றும் பொருள் படும். (காண் செக்கரியா 6,12)

!. பிலாத்து தன்னுடைய அதிகாரத்தைப் பற்றி சொல்ல, இயேசு தன்மேல் எவருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார். அதேவேளை காட்டிக்கொடுபபவர்கள் பாவப்பட்டவர்கள் என்கிறார்.

!. கல்தளம், கபதா என்பது விசாரனை செய்யும் இருக்கை, இதன் எச்சங்களை வடக்கு எருசலேமில் இன்னும் காணலாம். இயேசு தன்னை கடவுள் என்று சொல்லி தேவ தூசணம் சொல்கிறார் என்று பொய் சொல்லியவர்கள், உரோமைய சீசரை தங்கள் கடவுளுக்கு நிகராக வைத்து, தமது அரசான கடவுளாக்கி, யூத தலைவர்களே தேவ தூசணம் சொல்கிறவர்கள் என்று, அன்புச் சீடர் கோபத்தோடு சரியாகச் சொல்கிறார். இத்தோடு இயேசுவின் கொலைப் பொறுப்பை யூதத் தலைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.

ஈ. 19,16-22: சிலுவையில் அறையப்படுகிறார் (சிலுவை சுமக்கும் கடவுள்) யோவான் நற்செய்தியில் இயேசு தன்சிலுவையை தானே சுமப்பார். கொல்கொதா என்கிற எபிரேய சொல், லத்தின் மொழியில் கல்வாரியா என்று பொருள்படும். சிலுவையின் உச்சியில் வைக்கப்பட்ட பெயர் பலகை நான்கு நற்செய்திகளிலும் நான்கு விதமாக உள்ளது இருப்பினும் யூதர்களின் அரசன் என்ற இந்த வாசகம் அனைத்து நற்செய்திகளிலும் காணப்படுகிறது. மூன்று மொழியில் எழுதப்பட்டது, இயேசுவின் முழு உலக அரசாட்சியைக் காட்டுகிறது. எழுதியது எழுதியதே என்பது, கலகக் காரர்களின் கூக்குரல் எப்போதும் எடுபடாது என்பதைக் குறிக்கலாம். பிலாத்து இயேசுவை வைத்து யூத தலைவர்களை ஏளனப்படுத்துகிறான்.

உ. 19,23-24: ஆடைகள் களையப்படுதல்

(தைக்கப்படாத தையல்)

சிலுவையில் அறையப்படும் கைதிகளின் உடைமைகளை படைவீரர்கள், தங்களுடையாக்;கிக் கொண்டது வழமை. (போரின் போதும், இடப்பெயர்வின் போதும், எமது உடமைகளை சாதாரன சிப்பாய்களே தங்களுடையதாக்கினது நினைவுக்கு வரும். இன்னும் போரில் கொள்ளையடித்து அதற்கு அர்தமும் கொடுக்கும் அழிவின் கலாச்சாரம் நின்றபாடில்லை!!! கொள்ளைக்காரர்கள்.) இங்கே இயேசுவின் தையலே இல்லாமல் இருந்த ஆடை, அவரின் தலைமை குருத்துவத்தை அடையாளப்படுத்துகிறது என்கின்றனர் சிலர். ஆனால் யோவான் இயேசுவை தலைமைக் குரு என்பதைவிட அரசராகவே காட்ட முயற்சிக்கிறார்.

ஊ. 19,25-27: தாயும் அன்புச் சீடரும்

(திருச்சபையும் தாயும்)

யோவான் நற்செய்திப்படி இதனை சாதாரன நிகழ்வாக எடுக்க முடியாது. பெயரிடப்படாத மரியாவும், யோவானும் அவர்களின் அடையாள உருவகங்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிகழ்வு பல படிப்பினைகளை தாங்கி வருகிறது.

!. இந்த பெண், திருச்சபையையும், அன்புச் சீடர் கீழ்படிதலையையும் குறிக்கலாம், அன்னை மரியாளையும் திருச்சபையையும் குறிக்கலாம்.

!. தொடக்க நூலில் வந்த முதல் பெண்ணும், மரக்கனியையும் போன்று, இங்கே புதிய பெண்ணும், புதிய கனியும் என்றும் நோக்கலாம்.

!. ஏன் யோவான், மட்டும் மரியாவை சிலுவையடியில் நிறுத்துகிறார்:

- திருச்சபையின் பெண் தன்மையை காட்ட இருக்கலாம்.
- மீட்பின் வரலாற்றில் பெண்மையின் தன்மையை காட்டவும் இருக்கலாம்
- மரியாவின் நல் உதாரணத்தை காட்டவும் எணலாம்.
- இனி மரியா இயேசுவிற்கல்ல மாறாக நமக்கும் தாய் என காட்டவும் எனலாம்.
எ. 19,28-30: மரணம்

(கடவுளின் தூக்கம்)

யோவான் நற்செய்தியில் இயேசு ஆண்டவராக தனது மரண நேரத்தை தானே முடிவு செய்கிறார். அனைத்தும் நிறைவேறிவிட்டதென்பது என்பதையும் நன்கு அறிந்திருக்கிறார். தாகமாய் இருக்கிறது διψῶ என்பது திருப்பாடல் 69,21ஐ அல்லது 22,15ஐ நினைவூட்டலாம். ஈசோப்புத் தண்டில் திராட்சை இரசம், எகிப்தில் வாயிற் கதவுகளில் பூசப்பட்ட இரத்தத்தை நினைவூட்டலாம். இப்படியாக இவரது மரணம் பலருக்கு உயிர்ப்பு கொடுக்க இவ்வாறு நிகழ்ந்தது என்றும் கூறலாம். இறுதியாக இயேசு வலியால் மரணமடையவில்லை மாறாக தனது ஆவியை தானே ஒப்படைக்கிறார், παραδίδωμι பராதிதோமி- கையளி என்று பொருள். இவ்வாறு அவர் முடிவையும் இங்கே அவரே முடிவுசெய்கிறார். எல்லாம் மறைநூலின் உள்ளபடியே நடைபெறுகிறது என்பது யோவானின் நற்செய்தி.

ஏ. 19,31-37: விலா குத்தப்படுகிறது.

(எலும்பு முறிபடாத பாஸ்கா செம்மறி)

யோவான் நற்செய்திப்படி இயேசு சிலுவையில் உயிர்விட்டது, வெள்ளி மதியம் எனவே, இது பாஸ்காவிற்கு முதல் நாள். எனவே பலருடைய மரணம் விரைவுபடுத்தப்படுகிறது. எனெனில் சனிக்கழமையில் (பாஸ்காவில்) உடல்கள் தொங்கப்படக்கூடாதாம். யூதர்கள் புனித நாட்களில் உடல்கள் தொங்கக்கூடாது என விரும்பினர் (இ.ச 21,22-23: யோசுவா 8,29). உரோமையர்கள் கலகக் காரர்களின் உடல்கள் தொங்குவதை விரும்பினர், இதனால் மற்றவர்களுக்கு பயம் உண்டாகும் என நம்பினர். எனினும் இயேசுவின் உடல் இறக்கப்படுகிறது. (உயிரைவிட சடங்குகள் முக்கியமாகிறது! ஆண்டவரை கொலை செய்து அவரின் பாஸ்கா கொண்டாடப்படுகிறது! ஆண்டவரை வெளியில் விட்டுவிட்டு கேவினுள் ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுப்பது போல). யோவான் இந்த பாடுகளின் வரலாற்றில் பல இறைவாக்குகள் நிறைவேறுவதை ஆரம்பம் முதல் குறிப்பிடுகிறார். விலாவில் இருந்துவந்த இரத்தத்தையும் நீரையையும், திருச்சபை தந்தையர்கள் நற்கருணைக்கும், திருமுழுக்கிற்கும் ஒப்பிடுகின்றனர். இயேசு புதிய ஆதாமாகவும், சிலுவை புதிய மரமாகவும், திருச்சபைக்கு அருட்சாதனங்கள் இங்கே வழங்கப்படுகிறது. யோவான் இடையில் ஆண்டவரின் விலாவை குத்திய உரோமையரின் சாட்சியை பதிவு செய்கிறார் போல தோன்றுகிறது. ஆண்டவரின் எலும்புகள் முறிபடாதது, பாஸ்கா செம்மறியின் சட்டங்களை நினைவூட்டுகிறது (காண் வி.ப 12,46). குத்தியவரை ஊடுருவி பார்ப்பதன் மூலம் இயேசு நேர்மையாளர் என்று மீண்டும் நினைவூட்டப்படுகிறது (காண் செக் 12,10). இந்த உரோமையர் யோவான் நற்செய்தி எழுதப்பட்ட வேளை உயிரோடு இருந்திருக்க வேண்டும் அல்லது அவரது சாட்சியம் யோவான் நற்செய்தியாளருக்கும், யோவானிய திருச்சபைக்கும் கிடைத்திருக்க வேண்டும்.

ஐ. 19,38-42: நல்லடக்கம்

(உயிரின் உறக்கம்)

நான்கு நற்செய்தியாளர்களும் அரிமத்தியா யோசேப்பு இயேசுவின் நல்லடக்கத்திற்கு உதவியதை பதிவு செய்திருக்கின்றனர். மத்தேயு நற்செய்திப்படி இந்த கல்லறைத் தோட்டம் அரிமத்தியா யோசேப்புடையது. நிக்கோதேம் இங்கே வந்து அரிமத்தியா யோசேப்புடன் ஆண்டவரை அடக்கம் செய்தது யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. யோவான் இவர்கள் இருவரையும் நல்லவர்களாக இருந்தாலும், பயந்தவர்களாகவும், இருட்டில் பணிசெய்கிறவர்களாகவும் காட்டுகிறார். இயேசுவின் சீடர்கள் இன்னும் வெளிப்படையாக பகலில் பணிசெய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று என்கிறார் போல. இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுகின்ற நறுமண பொருட்கள் முப்பது கிலோக்களாக இருப்பது, ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு யோவான் இறுதியாக ஓரு அரச நல்லடக்கத்தை காண்பிக்கிறார். புதிய கல்லறையும் இதனைத்தான் குறிக்கிறது. இயேசு இவ்வாறு கன்னியின் வயிற்றில் உருவானவர், புதிய கல்லறையில் விதைக்கப்படுகிறார், உயிர்ப்பதற்காக. கடவுளுக்கே அடக்கச் சடங்கு!!!

கல்லறையில் உயிர்கள் தூங்குகின்றன என்பது கிரேக்க சிந்தனை,

அங்கே உடல்கள் கடவுளின் வருகைக்காக காத்திருக்கின்றன என்பது கிறிஸ்தவ சிந்தனை,

துயிலும் இல்லத்தில் உடலும் உயிரும் விதைக்கப்படுகின்றன என்பது

ஈழ தமிழ் சிந்தனைகளில் ஒன்று.

உயிரை அழிக்கலாம், உடலை சிதைக்கலாம், உயிர்ப்பையும் உண்மையையும் எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆண்டவரே, இயேசுவே, பாடுகளைத் தாங்கி, மரணத்தை தழுவி, உயிர்ப்பைக் காட்டிய நீர்,

தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்,

அப்பாவிகளைக் காக்க விரைந்து வாரும்.

துன்பமின்றி தூய்மையில்லை என்பதை கற்றுத்தாரும். ஆமென்.

(காப்பக அறிவிப்பு: இந்த விளக்கவுரை கடந்த வருடம் ஏற்கனவே இத்தாலி, றெஜியோ எமிலியாவில், 23, பங்குனி 2016 இல் எழுதப்பட்டது, இப்போது மீண்டும் தொகுக்கப்படுகிறது). இந்த விளக்கவுரைகள் http://jegankumaromi.blogspot.it என்ற வலைப்பூ பதிவிலும், என்ற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியத்தின் http://www.tamilcatholic.de/sundaySermon/JeganKumarFr_biblical_explanations.html என்ற வலைத்தளத்திலும் ஏற்றப்படுகின்றன. அங்கே முன்னைய பதிவுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்).