இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தூய ஆவியார் வருகை பெந்தகோஸ்த் பெருவிழா 15, மே, 2016

முதலாம் வாசகம்: தி.தூ 2,1-11; திருப்பாடல்: 104,1.24.29-31,34; இரண்டாம் வாசகம்: உரோ 8,8-17; நற்செய்தி: 14,15-16.23-26;


யார் இந்த தூய ஆவியார்?
விவிலியத்தில் ஆழமான சிந்தனைகளையும் பல ஆராய்சித் தேடல்களையும் உருவாக்கிய சிந்தனைகளில் தூய ஆவியானவர் பற்றிய சிந்தனையும் மிக முக்கியமானது. கத்தோலிக்க திருச்சபை இவரை பாரம்பரிய விசுவாசத்தின் படி திருத்துவத்தின் மூன்றாவது ஆளாக ஏற்றுக்கொண்டு நம்புகிறது. எபிரேயத்தில் רוּחַ קָדוֹשׁ ரூஹா காடோஷ், தூய மூச்சு அல்லது தூய காற்று என இவரை பொருள்கொள்ளலாம். கிரேக்கத்தில் πνεῦμα ἅγιος புனுமா ஹகியோஸ், தூய மூச்சு என்றும் இலத்தீனில் ளிசைவைரள ஸ்பிரித்துஸ், உயிர்-ஆவி என்றும் இவரை பொருள் கொள்ளலாம். எபிரேயத்தில் இவர் பெண் பாலகவும், கிரேக்கத்தில் பலர்பாலகவும், இலத்தீனில் ஆண்பாலகவும் இருப்பதனால், தூய எரோம், கடவுள் பால் பிரிவினைகளை கடந்தவர் என்று வாதாடுகிறார். (காண் தொ.நூ 1,2: யோபு 33,4).

முதல் ஏற்பாட்டில், கடவுள் தெரிவு செய்யும் ஆட்களை உந்துபவர்களாக இந்த சக்தி வர்ணிக்கப்படுகிறது. முக்கியமாக நீதிமான்களையும், இறைவாக்கினர்களையும், அரசர்களையும் இந்த ஆவி ஆட்கொள்கிறது (காண் நீதி.தலை 3,10: 6,34). இறைவாக்குரைத்தல், கனவுகளுக்கு விளக்கம் கொடுத்தல் போன்றவை இந்த ஆவியின் முக்கியமான பணிகளாக காட்டப்படுகிறது (காண் தொ.நூ 41,38: 1சாமு 10,10). இறைவாக்கினர்கள் முக்கியமாக இந்த ஆவியின் நபர்களாக காணப்பட்டனர் (எசே 2,2) அத்தோடு முதல் ஏற்பாட்டில் இந்த ஆவியார் அதிகமான வேளைகளில் நபர் அல்லாத சக்தியாக காணப்படுகிறது.

புதிய ஏற்பாட்டில் இந்த ஆவியானவரைப் பற்றிய சிந்தனை, முதல் ஏற்பாட்டு விசுவாசத்தில் இருந்து வளர்கின்றது. நற்செய்தியாளர்கள் லூக்கா, யோவான் மற்றும் பவுல் போன்றவர்கள் இந்த ஆவிபற்றிய சிந்தனைகளை விசேட விதமாக இயேசுவின் பணியுடன் இணைத்து காட்சியமைக்கிறார்கள். மாற்கு நற்செய்தியாளர் இயேசு தூய ஆவியில் திருமுழுக்கு கொடுப்பார் எனவும் (1,8), அவர் அந்த ஆவியை தனது திருமுழுக்கில் பெற்றார் எனவும் (1,10), இந்த தூய ஆவிக்கெதிரான குற்றம் பாரதூரமானது எனவும் காட்டுகிறார் (3,29). சில வேளைகளில் இயேசு அசுத்த ஆவிகளை விரட்டுவதையும் காட்டுகிறார் (3,11). ஆண்டவரின் பிறப்பு நிகழ்சிகளில் இந்த ஆவியானவரின் முக்கியமான பணிகளை மத்தேயு விவரிக்கின்றார் (1,20) அதே ஆவியானவரை இயேசு இறுதியில் சீடர்களுக்கும் கொடுத்து கட்டளை கொடுக்கிறார் (28,18-20). லூக்காவின் நற்செய்தியை ஒவ்வொரு பகுதியையும் இந்த ஆவியார் ஆட்கொள்ளுவார். மரியா, சக்கரியா, எலிசபேத்து, யோவான், சிமியோன் போன்றவர்கள் இதே ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆவியார் திருமுழுக்கில் இயேசு மீது இறங்குகிறார், ஆண்டவரை பாலை நிலம் அழைத்து செல்கிறார், பணிகளில் அவர்கூட இருக்கிறார், இறுதியாக இந்த ஆவியானவரை இயேசு தன் சீடர்களுக்கு பணிக்கிறார் (24,49). இதே ஆவியின் ஆட்கொள்ளலை திருத்தூதர் பணிகள் நூல்கள் ஆழமாக காட்டுகிறது. வரலாற்றில் ஒரு கட்டத்தில், இந்த நூல் தூய ஆவியின் நற்செய்தி என அழைக்கப்படும் அளவிற்கு அவரின் செயற்பாடுகளை இங்கே காணலாம். பவுல், உயிர்த்த ஆண்டவரின் முகவராக தூய ஆவியைக் காண்கிறார் (உரோ 8,9). இந்த ஆவியானவரையும் கிறிஸ்துவையும் பிரிக்க முடியாது என்பதும் அவர் நம்பிக்கை (1தெச 1,5-6). முதல் ஏற்பாட்டை போலல்லாது பவுல் தூய ஆவியை தனி ஆளாக காட்டுகிறார், அத்தோடு தூய ஆவியின் கொடைகளையும் கனிகளையும் தனித்தனியாக விவரிக்கிறார் (1கொரி 12-14: கலா 5,22-23). உரோமையார் 8ம் அதிகாரம் தூய ஆவியார் அருளும் வாழ்வை விவரிக்கிறது.

இவர்களின் சிந்தனைகளையும் தாண்டி தூய ஆவியானவரின் உள்ளார்ந்த அனுபவத்ததை விவரிக்கிறார் யோவான் நற்செய்தியாளர். யோவான் தூய ஆவியானவரை துணையாளராக காட்டுகிறார். ஒருவருடைய புதிய பிறப்பு இந்த தூய ஆவியானவராலேயே நடக்கிறது, எனவும் இயேசு அறிவித்த பலவற்றை இந்த ஆவியானவரே விளங்கப்படுத்துவார் என்பது யோவானின் படிப்பினை. உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் இந்த தூயஆவியாரலே வழியிலே நடைபெறும் என்பதும் இவரின் புதிய சிந்தனை. திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக இந்த தூய ஆவியானவரை மத்தேயுவும், திருமுகங்களும் அங்காங்கே தெளிவாக காட்ட முயற்சிக்கின்றன (காண் மத் 28,19: 2கொரி 13,14).

முதல் வாசகம்
முதலாம் வாசகம்: தி.தூ 2,1-11

1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.✠ 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். 5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7எல்லோரும் மலைத்துப்போய், 'இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?' என வியந்தனர். 9பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! 'என்றனர். 12எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர். 13இவர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர்.

இன்றைய இரண்டாம் வாசகம், தூயஆவியாரின் வருகை நிகழ்வை காட்டுகின்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியைப் போல திருத்தூதர் பணிகளில் வேறு எந்த பகுதியும் முக்கியம் பெறவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வ.1: இந்த விழா, (πεντηκοστή பென்டேகோஸ்டே) பாஸ்காவிற்கு பதினைந்தாம் நாளுக்கு பின்னர் முற்காலத்தில் கொண்டாடப்பட்டது (காண் தோபி 2,1). இஸ்ராயேலரின் மூன்றில் இரண்டாவது முக்கியமான விழாவும் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது எருசலேமில் பாஸ்காவின் பின்னர் ஏழாவது வாரத்தில் அறுவடைகளுக்கு நன்றியாக கொண்டாடப்பட்டது. இதனை வாரங்களின் திருநாள் (חַג שָׁבֻעֹת֙ ஹக் ஷவுஓத்) மற்றும் அறுவடையின் திருநாள் (חַג קָּצִיר֙ ஹக் காட்சிர்) என்றும் அழைப்பர்.

வவ.2-4: தூய ஆவியாரின் வருகை விவரிக்கப்படுகிறது. லூக்கா இங்கே, இஸ்ராயேலர் சீனாய் மலையடிவாரத்தில் பெற்ற இறைக்காட்சி அனுபவத்தை ஒத்தாக விவரிக்கின்றார் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். தூய ஆவியானவரை காற்றாகவோ அல்லது நெருப்பு நாவாகவோ இங்கே லூக்கா காட்டவில்லை மாறாக தூய ஆவியை இவற்றிக்கு ஒப்பிடுகிறார். நெருப்பு நாக்கு என்ற உருவகம் கிரேக்க உரோமைய இலக்கியங்களில் உள்ளாந்த உளவியல் அனுபவங்களையும், இறைவாக்கு, அறிவியல், பேச்சு அனுபவங்களையும் காட்டுவனவாக அமைந்திருந்தது. லூக்கா இந்த உருவகங்கள் மூலமாக கடவுள் தனது வல்லமையை காட்டுவதாக உணர்த்துகிறார். முழு வீடு, ஒவ்வொருவரின் தலை, வௌ;வேறான மொழிகள், இவைகள் கடவுளின் நிறைவான அருளையும் அவரின் பல்முகத்தன்மையையும் காட்டுகின்றன. பரவசப்பேச்சு பற்றும் பல மொழிப்பேச்சுக்கள் என்பவை ஒரே பொருளைக் குறிக்காது.

வவ. 5-8: ஈழத் தமிழர் சமூதாயத்தைப்போல், யூத மக்கள் பல காலங்களாக தாயக மற்றும் புலம் பெயர்ந்த சமூகங்களாக காணப்பட்டனர். இந்த புலம்பெயர்ந்த யூத மக்கள் அந்த நாட்டு மொழிகளையும் அத்தோடு கல்வி மொழியான கிரேக்கத்தையும், அரச மொழியான இலத்தீனையும் கற்றனர். தாயக இஸ்ராயேலில் அதிகமானோர் பாலஸ்தீன அரமேயிக்கத்தை பேசினர். இந்த அறுவடைத் திருநாளுக்காக அனைத்து புலம்பெயர்ந்த இடங்களில் இருந்து வந்தவர்களை லூக்கா இங்கே காட்டுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் கலிலேயரின் அரமேயிக்கத்தை அறிந்திருக்க வாய்பில்லை, திருத்தூதர்கள் அனைவருக்கும் கிரேக்கமோ இலத்தீனோ தெரிந்திருக்கவும் வாய்பில்லை, அல்லது இதனை இந்த யூதர்கள் எதிர்பார்திருக்கவும் மாட்டார்கள். புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. தமது புலத்து மொழிகளில் கலிலேயர் பேசுவதைக் கேட்கின்றனர். வழமையாக புலம்பெயர்ந்தவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தனர், இதனால் தாயகத்தில் இருந்த வறியவர்களை நக்கல் கண்களோடு பார்த்திருக்கலாம். இதனால் கலிலேயரின் சாகசங்கள் ஆச்சரியத்தை தருகிறது. (இந்த தாயாக-புல ஆச்சரியங்களை நாமும் நல்லூரிலும் மடுவிலும் அடிக்கடி காணலாம்). ஆச்சரியம் தந்தாலும் இவர்களின் கேள்விகள் நியாயமானவை.

வவ. 9-11: உரோமைய பேரரசு திருத்தூதர் காலத்தில் பரந்து விரிந்திருந்தது. பார்தியா, மேதியா, எலாயமியா, மொசோப்போதோமியா போன்றவை உரோமையரின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை. மற்றைய பகுதிகளான: யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா (சின்ன), பிரிகியா, பம்பலியா, சீரேன் போன்றவை வடகிழக்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய துருக்கி, இஸ்ராயேல், லெபனான், சிரியா, பலஸ்தீனா). எகிப்து லிபியா போன்றவை, தெற்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய எகிப்து, லிபியா, துனிசயிh, அல்ஜீரியா, மோறாக்கோ போன்றய நாடுகளின் வடக்கு பிராந்தியாங்கள்). உரோமை என்பது பழைய உரோமை நில அளவைக் குறிக்கும். அத்தோடு லூக்கா, யூதர்கள் மட்டுமல்ல யூத மதத்தை தழுவியவர்களையும் விவரிக்கின்றார். இவர்கள், கிரேக்கரும், அரேபியருமாவர். உரோமையில் பல யூதர்கள் இருந்தனர், ஆனால் உரோமையர்களில் சிலர் யூத மதத்தை தழுவினார்கள் என்பது சாத்தியமில்லை. இந்த விவரிப்பில் இருந்து அக்காலத்தில் சமய சுதந்திரங்களும், சகிப்புத்தன்மைகளும், தூர புனித பயணங்களும் வழமையில் இருந்ததை காணலாம். (உரோமை பேரரசின் நில வரபடைத்தை காண இங்கே சொடுக்குக: http://www.timemaps.com/civilization/Ancient-Rome)



பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 104,1.24.29-31,34

வவ. 1-4: இந்த வரிகளில், ஆசிரியர் படைப்புக்களின் அதிசயங்களால் கடவுளை விவரிக்க முயலுகிறார்.

வவ. 5-9: ஒரு காலத்தில் உலகை மூடியிருந்த நீர்த்திரளை கடவுள் அதனதன் இடத்தில் ஒழுங்கு படுத்துகிறார்.

வவ. 10-12: நீர் திரளையும் கடலையும் கடவுள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பதை விவரிக்கிறார். ஒரு காலத்தில் அடங்காமல் இருந்த நீர் இப்போது மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் காட்டுகிறார் (ஒப்பிடுக தொ.நூல் 1,6-7).

வவ. 13-18: மழையையும், நிலத்தின் விளைச்சல்களையும் கடவுள் செவ்வனே வடிவமைத்துள்ளார் என்கிறார் ஆசிரியர். லெபனானின் அழகிய மலைகளும் அதன் செழிப்புக்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

வவ. 19-23: இருள் மற்றும் வெளிச்சத்தின் வித்தியாசங்களையும் அவற்றின் தேவைகளையும் காட்சிப்படுத்துகிறார். இருளும் வெளிச்சமும் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையானவை என்பதை அழகிய வார்த்தை பிரயோகங்களில் விவரிக்கின்றார்.

வ. 24.25-29: ஆண்டவருடைய வேலைப்பாடுகளைப் பார்த்து ஆசிரியர் ஆச்சரியப்படுகிறார். ஆண்டவருடைய படைப்புக்களால்தான் பூவுலகு நிறைந்துள்ளது என்பது இவரின் நம்பிக்கை. பரந்து விரிந்த கடலும் ஆண்டவருடைய கட்டளைக்கு கட்டுப்பட்டது என்பது ஆசிரியரின் அசையா நம்பிக்கை. கடல் உயிரினங்கள் அனைத்தையும், அங்கே பயணிப்பவை அனைத்தையும் கடவுளே காக்கிறார் என்கிறார் ஆசிரியர். லேவியத்தான் (לִוְיָתָן லிவ்யாதான்), இது ஒருவகை புராதன கடல் உயிரினத்தைக் குறிக்கும். மத்திய கிழக்கு இலக்கியங்கள் இதனை கடல் அரக்க பாம்பாக கண்டன. முதல் ஏற்பாடு பல இடங்களில் கடவுள் இதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விவரிக்கின்றது. தற்கால திமிங்கலங்கள், பெரிய முதலைகள், ஒக்டோபஸ்கள் போன்றவற்றை அக்கால ஆசிரியர்கள் இவ்வாறு கண்டிருக்கலாம்.

வவ.30-35: உலகம் விதியால் இயங்கவில்லை மாறாக கடவுளின் ஆவியால் இயங்குகிறது என்கிறார் ஆசிரியர். ஆண்டவரின் மாட்சி, பார்வை போன்றவை மனிதனின் கண்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், உயிர் உள்ளவரை அனைவரும் ஆண்டவரை போற்றி தியானப்பாடல் இசைக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார் இந்த ஆசிரியர். இறுதியாக பாவிகளையும் தீயோர்களையும் இந்த அழகிய உலகத்தை விட்டு ஓடி விட கேட்கிறார்.



இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசகம்: உரோ 8,8-17

8ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. 9ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. 10பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். 11மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். 12ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. 13நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். 14கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். 15மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். 16நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். 17நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

உரோமையர் எட்டாம் அதிகாரம் தூய ஆவியார் அருளும் வாழ்வை விவரிக்கின்றது. இந்த அதிகாரத்தில் பவுல் ஊனியல்பையும் ஆவிக்குரிய வாழ்வையும் ஒப்பிட்டு, ஆவிக்குரிய வாழ்வை உயர்த்திப் பேசுகிறார். இதனை பவுலுடைய திருமுகங்களில் மிக ஆழான பகுதிகளில் ஒன்று என இதனைச் சொல்லலாம்.

வ.8: ஏழாவது வசனத்தில் ஊனியல்பு கடவுளுக்கு பகையானது எனச் சொன்னவர், ஊனியல்புக்கு உட்பட்டோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்கிறார். ஊனியல்பை குறிக்க σάρξ சார்க்ஸ் எனும் கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது சதையையோ, உடலையோ, உடலின் சாதாரண குணங்களையோ குறிக்கலாம். அனேகமாக இது உயிருடன் இருக்கும் உடலை குறிக்கும்.

வவ.9-11: ஆவியை உடலில் கொண்டிருந்தால் இந்த ஊனுடலின் இயல்பில் இருந்து விடுபடலாம் என்று இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவைத் தருகிறார் பவுல். முதல் ஏற்பாட்டில் கடவுளுடைய தோரா சட்டங்களையும் விருத்தசேதனத்தையும் கொண்டு ஒருவர் கடவுளின் பிள்ளையாக ஏற்க்கப்பட்டடார். இங்கே அதற்கு புது விளக்கத்தை தருகிறார் பவுல். ஒருவர் கடவுளுக்கு ஏற்றவராக இருக்க அவருக்கு இருக்க வேண்டியது ஆவியக்குரிய வாழ்வே என்கிறார். இந்த வரிகளை அவதானமாக வாசித்தால் பவுல், கடவுளின் ஆவி (πνεῦμα θεοῦ புனுமா தியு), கிறிஸ்துவின் ஆவி (πνεῦμα Χριστοῦ புனுமா கிறிஸ்து) மற்றும் ஆவி (πνεῦμα புனுமா) என்று மாற்றி மாற்றி பாவிக்கின்றார். ஆக இவருக்கு இந்த மூன்றும் ஒன்றுதான் அல்லது ஒன்றோடொன்று தொடர்புபட்டது போல தோன்றுகிறது. பாவத்தின் விளைவுதான் சாவு என்பது என்பது யூத மக்களின் நம்பிக்கை அதனை பவுலும் நம்புகிறார். 10வது வசனத்தில் கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் ஆவியையும் ஒத்த சொல்லாக பார்க்கிறார். கடவுளுக்கு ஒருவர் ஏற்புடையவராக, கிறிஸ்து அல்லது அவரின் ஆவியே தேவை என்கிறார். கிறிஸ்துவை உயிர்தெழ செய்தவர் இறந்த அனைவரையும் உயிர்த்தெழ செய்யக் கூடடியவர், எனேவே கடவுளின் ஆவியை நாம் நம் உடலில் கொள்ள வேண்டும் இதனால் உயிர் பெறுவோம் என்கிறார். இங்கே கடவுளின் ஆவியை கொண்டு வருகிறார்.

வவ. 12-13: பவுலுடைய கடிதங்களில் பல வேளைகளில் முடிவடைகின்ற கருத்துக்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைப் பார்க்கலாம் (நம்முடைய சில மறையுறைகள் முடிவடைந்து பின்னர் தொடர்வதைப் போல்). மனிதர்கள் மனிதர்களாகத்தான் வாழ முடியும் என்று சொல்லி விழுமியங்களை கனவுகளாகப் பார்ப்பவர்களுக்கு பவுல் விடைசொல்கிறார். ஊனியல்பிற்கு கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்ல என்பதே அந்த விடை. சாவிற்கும் வாழ்விற்கும் தெரிவைக் காட்டுகிறார். முதல் ஏற்பாட்டில் கடவுள் மோசேக்கு (இஸ்ராயேலருக்கு) வாழ்வையும் சாவையும் முன்வைத்தார். இங்கே அதே சாவும் வாழ்வும் முன் வைக்கப்படுகிறது. (ஒப்பிடுக இ.ச 30,15). ஆக சாக தூண்டக்கூடியது ஊனியல்பின் வாழ்வு, வாழ்வு தரக்கூடியது தூயஆவியின் துணை.

வவ. 14-15: யார் கடவுளின் மக்கள் என்பதை தெரிவுபடுத்துகிறார் இந்த புறவினத்தவருக்கான திருத்தூதர். உரோமைய புறிவினத்தவ கிறிஸ்தவ சபைக்கு இந்த வரிகள் நிச்சயமாக பலனளித்திருக்கும். பாலை வனத்தில் கடவுளின் மக்கள் கடவுளின் பாதுகாப்பால் இயக்கப்பட்டார்கள் (மேகத் தூணும், நெருப்புத் தூணும்). இங்கே ஓர் உள்ளார்ந்த இயக்கத்தை முன்வைக்கிறார். கடவுளின் ஆவியே அந்த இயக்கம், அந்த இயக்கமே ஒருவரை கடவுளின் பிள்ளையாக்குகிறது (எவ்வளவு ஆழமான வரி). மறைமுகமாக யாரையோ சாடுகிறார். ஒரு வேளை இஸ்ராயேலர் கடவுளால் மீட்கப்பட்டும் அச்சத்திற்கு உள்ளானார்கள் ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அந்த அச்சம் தேவையில்லை என்பதைப் போல் உள்ளது. அப்பா என்பது அரேமெயிக்கச் சொல். (Αββα அப்பா, தந்தை, அலலது பப்பா என்று பொருள் படும்). உரோமைய யூத -கிறிஸ்தவர்கள் இலத்தீனைவிட கிரேக்கத்தையே பேசினார்கள், இவர்களுக்கு இந்தச் சொல் நன்கு தெரிந்திருந்தது. ஆண்டவர் இயேசுகூட இந்த சொல்லை அடிக்கடி பாவித்திருப்பார் (ஒப்பிடுக மாற் 14,36 கலா 4,6).

வவ. 16-17: கடவுளின் பிள்ளைகளாவதற்கு புதிய அனுமதி அட்டையை தருகிறார். இங்கே நம்முடைய உள்ளத்தையும் தூய ஆவியையும் குறிக்க, ஆவி என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் என்பவர்கள் உரிமைப்பேறு பெற்றவர்கள், அதாவது அக்கால நிலைமைகளின் படி அடிமையாய் இல்லாதவர்கள். கிறிஸ்து கடவுளின் முதல் வாரிசாக இருக்கிறபடியால் மற்றவர்கள் உடன்-வாரிசுகள் என்று விளக்குகிறார் பவுல். ஆக உடன்-வாரிசுகள் தமது மாட்சிமையில் பங்குபெற துன்பங்களிலும் பங்கு பெற வேண்டும் என்ற நியதியை தர்க்க ரீதியாக விளக்குகிறார்.


நற்செய்தி வாசகம்
நற்செய்தி: யோவான் 14,15-16.23-26

15நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். 16'உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். 23'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். 24என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல் அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

யோவான் நற்செய்தியின் 14வது அதிகாரம், இயேசு ஆண்டவர் தன் சீடர்களுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடல்கள் அடங்கிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தில் சீடர்களுடைய கடமையையும், அவர்களிடம் தாம் எதிர் பார்பவற்றையும், அதனால் அவர்களுக்கு கிடைக்க போகிறவற்றையும் பற்றி அறிந்து கொள்ளலாம். யோவான் நற்செய்தியின் சிறப்புத் தன்மை, அதனை வாசிக்கிறபோது அது காலங்களைக் கடந்து ஏதோ நமக்கு நேரடியாக சொல்வதனைப்போல உணர்வோம்.

வ. 15: அன்பும், கட்டளைகளும் யோவான் நற்செய்தியின் மிக முக்கியமான பதங்கள். அன்பிற்கு இங்கு (ἀγάπη அகாப்பே) என்ற சொல்லும் கட்டளைகளுக்கு (ἐντολή என்டொலே) என்ற சொல்லும் பாவிக்கப்பட்டுள்ளன. அன்பென்ற உள்ளார்ந்த வாழ்க்கை முறை கட்டளை என்ற வெளியார்ந்த வாழ்க்கை முறையுடன் நெருங்கி தொடர்பு பட்டுள்ளதை ஆண்டவர் விவரிக்கின்றார். உள்ளார்ந்த விசுவாசமும் வெளியார்ந்த வாழ்க்கை முறையும் ஒன்றொடொன்று தொடர்பு பட்டிருக்க வேண்டும் என்ற ஆரம்ப கால திருச்சபையின் தேவையை இந்த வரி பிரதிபலிக்கின்றது.

வ. 16: யோவான் நற்செய்தியில் மிகவும் முக்கியமான வரி. இங்கேதான் முதன் முதலில் παράκλητος பராகிலிடொஸ் என்ற தூயஆவியாருக்கான வார்த்தை வருகிறது. யோவான் நற்செய்தி மற்றும் திருமுகங்களில் இந்த வார்த்தை இதே அர்த்தத்தில் ஐந்து தடவைகள் வருகிறது. நற்செய்தியாளர்களில் யோவான் மட்டுமே இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார். இதற்கு, உபதேசி, ஊக்குவி, ஆறுதல் சொல், திடப்படுத்து, உதவிசெய், முறையிடு என்று பல அர்த்தங்கள் உள்ளன. இவை சட்ட ரீதியான பண்புகளைக் கொண்டிருப்பது இதனுடைய சிறப்பு அம்சங்களாகும். துணையாளர் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு மிகவும் பொருத்தமான தெரிவு. ஆங்கில (counseor, advocate, helper) மற்றும் வேறு மொழிபெயர்ப்புக்கள் இந்த παράκλητος இன் ஒரு பக்கத்தையே காட்ட முயல்கின்றன. சில இடங்களில் இயேசு தான்தான் துணையாளரை அனுப்புவதாக கூறியிருக்கிறார், இங்கே தந்தையிடம் கேட்பதாக கூறுகிறார். இது முரண்பாடுகளையல்ல மாறாக தந்தையும் தானும் ஒரே வேலையைத்தான் செய்வதாக காட்டுகிறது.

வ. 23: இயேசுவின் மீது அன்பு, அவர் கட்டளைகளை கடைப்பிடித்தல், தந்தையின் அன்பு, இயேசு மற்றும் தந்தையின் வாசம் போன்றவை ஒன்றிலொன்று தங்கியுள்ளது. தந்தை மற்றும் இயேசுவின் வாசம், ஆரம்ப கால திருச்சபையில் மிகவும் முக்கியமானதாக தேவைப்பட்டது. கடவுள் மற்றும் இயேசுவினுடைய வருகை எப்படி திருச்சபையின் அன்பிலும் அன்புறவிலும் தங்கியுள்ளது என்பதை இந்த வரி அழகாக காட்டுகிறது. தந்தையும் இயேசுவும் வந்து குடியிருத்தல் ஆழமான திருத்துவத்தின் குடியிருப்பை விவரிக்கின்ற சிந்தனைகள்.

வ. 24: கீழ்படிதல் அன்பை அடிப்படையாக கொண்டுள்ளதை ஆண்டவர் காட்டுகிறார். உண்மையான அன்பில்லாத இடத்தில் கடைப்பிடிப்பு இருக்காது. அத்தோடு இயேசுவின் வார்த்தை கடவுளின் வார்த்தைகள். ஆக இயேசுவை வெறுத்து கடவுளை நேசிக்க முடியாது என்கிறார் யோவான். இயேசுவை விட்டு எப்படி கடவுளை அடைய முடியும் என்பது யோவானின் ஆச்சரியமான கேள்வி.

வ. 26-27: இங்கே இயேசு இரண்டு விதமான அறிவுறுத்தல்களை முன்வைக்கிறார். அ). சாக்குபோக்கிற்கு இனி இடமில்லை, எல்லாவற்றையும் இயேசு சொல்லிவிட்டார். ஆ) துணையாளர் சொல்லித் தருவார். இயேசு தன் மக்களின் பலவீனத்தை அறிந்திருக்கிறார். அதனால்தான் துணையாளர் வந்து சொல்லித்தர வேண்டிய தேவை உள்ளதனை ஏற்றுக்கொள்கிறார். துணையாளர் சொல்லித்தருவதோடு மட்டுமல்லாது நினைவூட்டுவார் என்றும் சொல்கிறார். இங்கே யோவான் மனித குலத்தின் நினைவு மறதி வியாதியை நமக்கு நினைவூட்டுகிறார்.

பரவசப்பேச்சு பேசுதல், பல்மொழி பேசுதல், அதிசயங்கள் குணமாக்கல் செய்தல், ஆழ்ந்த தியானங்கள் செய்தல் போன்றவற்றில் மட்டும் துணையாளரை அடக்கிவிட முடியாது. துணையாளரின் வருகையும் அவரின் செயல்களும் இயேசுவின் அன்பையே மையப்படுத்துகிறது. இயேசுவின் அன்பில்லா வித்தைகள் எல்லாம் மாய வித்தைகளே. தூய ஆவியானவர் எப்போதோ வந்துவிட்டார், இப்போதைய தேவை அவரை கண்டுகொள்ளுவதும் பற்றிக்கொள்ளுவதுமே ஆகும். தூய ஆவியானவர் யாருக்கும் சொந்தமானவர் அல்ல மாறாக நாம் அனைவரும் அவருக்கு சொந்தம்.

அன்பு ஆண்டவரே, இயேசுவே! உம்முடைய ஆவி, உண்மையை கற்றுத்தரவும், அந்த உண்மை எங்களை எங்களது வட்டங்களில் இருந்து விடுவிக்கவும் தொடர்ந்து அருள்வீராக. ஆமென்.