இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






குருத்தோலை ஞாயிறு (இ)

முதல் வாசகம்: எசாயா 50,4-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 21
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2,6-11
நற்செய்தி: லூக்கா 22,14 - 23,56


குருத்தோலை ஞாயிறு:

இன்றோடு தவக்காலம் முடிவடைகிறது அத்தோடு பரிசுத்த வாரம் ஆரம்பமாகின்றது. இன்றைய நாள், அன்று இயேசு மகிமையுடன் எருசலேம் நகரினுள் நுழைந்ததை நினைவூட்டுகின்றது. இயேசு எருசலேமில் நுழைந்த போது அவரைச் சுற்றியிருந்தவர்களும், அவரோடு வந்தவர்களும் ஆர்பரித்து ஆரவாரம் செய்தார்கள். தங்களுடைய கைகளில் ஒலிவ இலைகளை தாங்கி இருந்தார்கள். ஒலிவ இலைகள், மாட்சியையும் வெற்றியையும் குறிக்கின்ற அடையாளங்கள். சாதாரணமாக போரில் வெற்றி பெற்று வருகின்ற அரசர்கள், படைவீரர்கள் மற்றும் தலைவர்களுக்கு இவ்வாறு ஒலிவ இலைகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள். இயேசுவை வரவேற்றவர்கள் தங்கள் போர்வைகளை பாதையின் மேல் போட்டு இயேசுவிற்கு செங்கம்பழ வரவேற்பு கொடுக்கிறார்கள். இயேசு கழுதைக் குட்டியின் மீது வருகிறார். இவையனைத்தும் அடையாள மொழிகள். இயேசு, போர்த் தலைவர்களைப் போல் வெண் புரவியில் அல்லாமல், சாதுவான கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து வருவது அவரது அரசின் வித்தியாசமான சாந்தமான கொள்கையைக் காட்டுகிறது.

போருக்கு சென்று நாடு திரும்பும் வெற்றி பெற்ற அரசர், ஒன்றில் தன் வெற்றியைக் கொண்டாடுவார் அல்லது நாட்டிலே புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவார். இதனைப் போலவே இயேசுவுடைய எருசலேம் வருகையும் அமைகிறது. இயேசு எருசலேம் வருவது அவருடைய மனித வாழ்வின் இறுதி நாட்களை அறிவிப்பது போல அமைகிறது. இதனை போருக்காக முன் வரும், வருகை என்றும் கூடச் சொல்லலாம்.

குருத்தேலை வருகையை அனைத்து நற்செய்திகளும் காட்டினாலும் (காணக் மத்தேயு 21,1-11: மாற்கு 11,1-10: லூக்கா 19,28-38: யோவான் 12,12-18) யோவான் மட்டுமே ஒலிவ இலைகளைப் பற்றி பேசுகிறார் (காண்க யோவான் 12,13).

முதல் வாசகம்
முதல் வாசகம்: எசாயா 50,4-7

4நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 5ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. 6அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

எசாயா புத்தகத்தின் 49-50 வது அதிகாரம், மீட்பின் விடியல் என்ற பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது. கடவுளின் ஊழியர், எருசலேமின் மீட்பு, கடவுளின் ஊழியருடைய பாடல், முடிவுறாத அருள் போன்ற மிக அழகான பகுதிகள் இங்கே உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்றைய பகுதி, கடவுளின் ஊழியருடைய மூன்றாவது பாடல் என அறியப்படுகிறது. இந்தப் பாடலின் கதாநாயகர், யார் என்பதில் பல கேள்விகளும் பதில்களும் உள்ளன. சிலர் இவரை, பாரசீக மன்னரான சைரசாகவும், அல்லது இறைவாக்கினர் எசாயாவாகவும், அல்லது மெசியாவாகிய மீட்பராகவும், காண்கின்றனர். இன்றைய பகுதி இரண்டாவது எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா முழு புத்தகத்தையும், நாம், எசாயா என்கின்ற ஒரு ஆசிரியருக்கு கொடுத்தாலும், இந்த புத்தகத்தை பல ஆசிரியர்கள் எழுதியிருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. இந்த இரண்டாவது எசாயா புத்தகம், பல வழிகளில் தனித்துவமாக தெரிகிறது. இதனை எசாயாவின் மாணவர் ஒருவர், அடிமைத்தன வாழ்விலிருந்துகொண்டு, அல்லது அதற்கு சற்று காலத்திற்குப் பினனர் எழுதியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

வ.4: ஊழியருடைய முக்கியமான ஒரு தகமை இங்கே பாடப்படுகிறது. கடவுளின் சேவகர், தன் மக்களின் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் கேட்கக்கூடியவராக இருக்க வேண்டும். கேட்டல் ஒருவகை, அதிலும் கற்போர் கேட்கும் விதம் இன்னொரு விதம் (לְשׁוֹן לִמּוּדִים லெஷோன் லிம்மூதிம்- நாவின் வாக்கு), அதனை இந்த ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். அத்தோடு அவர் தன்னுடைய நல்வாக்கால் நலிந்தவர்களை தூக்கிவிட தெரிந்தவராக (לָדַעַת לָעוּת אֶת־יָעֵף லாத'அத் லா'ஊத் 'எத்-யா'எப்- நலிந்தவரை தூக்கிவிட தெரிந்த) இருக்க வேண்டும்.

ஆண்டவர் ஒரு தாயைப் போல இவரை காலைதோறும் எழுப்பி விடுகிறார் என சொல்கிறார். அதாவது ஆண்டவர்தான் இவருடைய நாளை அல்லது செயற்பாடுகளை தீர்மாணிக்கிறார் என்பதை இவர் சொல்வதாக எடுக்கலாம் (בַּבֹּקֶר בַּבֹּקֶר יָעִיר לִי֙ பாபோகெர் பாபோகெர் யா'இர் லி- காலைதோறும், காலையில் என்னை எழுப்பகிறார்).

வ.5: இந்த வரி ஆண்டவரின் ஊழியரின் கீழ்ப்படிவைக் காட்டுகிறது. ஆண்டவர் தன் காதுகளை திறந்துள்ளதாகச் சொல்கிறா (אֲדֹנָי יְהוִה֙ פָּתַח־לִי אֹ֔זֶן அதோனாய் எலோஹிம் பாடாத்-லி 'ஓட்சென்), இதன் வாயிலாக காதுகள் செவிப்புலனோடு இருந்தாலும், அனைவரும் அனைத்தையும் கேட்பதில்லை என்பது புலப்படுகிறது. இங்கே காதுகளை திறப்பவர் கடவுளாக இருப்பதனால் அனைத்தும் கேட்க்கப்படுகிறது. கிளர்ச்சி செய்தலும், திரும்பிச் செல்லுதலும் கீழ்படிதலுக்கு எதிரானவை, அதனைத்தான் ஆசிரியர் மீள வலியுறுத்துகிறார். கேட்டல் என்பது கீழ்படிவோடு சம்மந்தப்பட்டது. ஆக கேட்டல், கிளர்ந்தெழாமை, திரும்பிச் செல்லாமை போன்றவை நல்லதோர் தலைவனின் பண்பாகின்றன, (וְאָנֹכִי לֹא מָרִיתִי אָחוֹר לֹא נְסוּגֹֽתִי׃ வெ'ஆனோகி லோ' மாரிதி 'ஆஹோர் லோ' நெசூகோதி- நான் கிளர்ச்சி செய்யவும் இல்லை, பின்னால் திரும்பி செல்லவம் இல்லை).

வ.6: அக்கால வன்முறை சமுதாயத்தின் இகழ்ச்சிகள் இந்த வரியில் காட்டப்படுகின்றன. கிறிஸ்தவ விவிலிய ஆய்வாளர்கள் இந்த தண்டனை விளக்கத்தை, ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒரு அரசர் தன் தாடியையோ, தன் உடலையோ, தன்னை சித்திரவதை செய்வோருக்கு கொடுப்பதில்லை, அப்படி செய்தால் அவர் மாண்புள்ள தலைவராக இருக்க முடியாது, ஆனால் இந்த தலைவர் இந்த சித்திரவதைகளை ஆண்டவருக்காக ஏற்றுக்கொள்கின்றார். முகத்தை திறந்து வைத்தல் மற்றும் எச்சில்களை ஏற்றுக்கொள்தலும், அக்கால அரசர்களால் நினைத்தும் பார்க்க முடியாதவை, அதனையும் இந்த ஊழியர் ஏற்றுக்கொள்கிறார் (פָּנַי לֹא הִסְתַּרְתִּי מִכְּלִמּוֹת וָרֹֽק பானய் லோ' ஹிஸ்தார்தி மிக்லிமோத் வாரோக்-என் முகத்தை நான் மறைக்கவில்லை, அவமானத்திலும் எச்சிலிலுமிருந்து). கிறிஸ்தவ பாரம்பரியத்தில், இங்கே இவர் சந்திக்கின்ற தண்டனைகள், ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கப்படுகின்றன.

வ.7: இந்த ஊழியத் தலைவர் எப்படி இந்த அவமானங்களைத் தாங்க வல்லமை பெறுகிறார் என்பதற்கு விடை இந்த வரியில் காட்டப்படுகிறது. ஷஆண்டவர் தனக்கு உதவிசெய்கிறார்| என்கிறது எபிரேய விவிலியம் (וַאדֹנָי יְהוִה יַֽעֲזָר־לִי வா'அதோனாய் அதோனாய் யா'அட்செர்-லி - கடவுளாகிய ஆண்டவர் எனக்கு உதவி). இந்த வரியில் அவருடைய ஆழமான விசுவாசமும் தெரிகிறது. முகத்தை கற்பாறை ஆக்கிக் கொள்ளல் என்பது, உணர்வுகளை அடக்கிக்கொள்வதற்கு சமனாகும், (פָנַי כַּֽחַלָּמִ֔ישׁ பானவ் கஹல்லாமிஷ்- முகத்தை இறுக்கமாக்கி) இதன் மூலம் ஒருவர் தன்னுடைய அசைவுகளை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை பெறுகிறார் என்று சொல்லலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 22

துயர்மிகு புலம்பல்

(பாடகர் தலைவர்க்கு: 'காலைப் பெண்மான்' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?

2என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை.

3நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்;

4எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.

5உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்; உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை.

6நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.

7என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,

8'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர்.

9என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீNர் என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே!

10கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே!

11என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார் யாருமில்லை.

12காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன் பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.

13அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.

14நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின் என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.

15என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.

16தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.

17என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.

18என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

19நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.

20வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;

21இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.

புகழ்ச்சிப் பாடல்

22உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

23ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.

24ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

25மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

26எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

27பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.

28ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.

29மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.

30வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.

31அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு 'இதை அவரே செய்தார்' என்பர்.



32 வரிகளைக் கொண்ட (முன்னுரை அடங்கலாக) இந்த திருப்பாடல் ஒரு தனி மனித புலம்பல் பாடலாக பார்க்கப்படுகிறது. எபிரேய விவிலியத்தில் இதனுடைய முதலாவது வரி, இப்பாடலின் முன்னுரை போல காணப்படுகிறது. 'பாடகர் தலைவர்க்கு காலைநேர பெண்மான் போல' (לַמְנַצֵּחַ עַל־אַיֶּלֶת லம்நட்செஹ 'அல்-'அய்யெலெத்) என்னும் வரி இந்தப்பாடலின் மெட்டைக் குறிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். அத்தோடு இது தாவீதின் பாடல் அல்லது தாவீதுக்கான பாடல் என்றும் முன்னுரைப் படுத்தப்பட்டுள்ளது (מִזְמוֹר לְדָוִד׃ மிட்ஸ்மோர் லெதாவித்). இந்த பாடலை இரண்டு பிரிவுகளாக பிரித்து, முதலாவது புலம்பல் பாடலாகவும் (வவ2-22), இரண்டாவது புகழ்ச்சிப் பாடலாகவும் (வவ.23-32) நோக்கலாம். இதன் முன்னுரை பிற்கால இணைப்பாகக்கூட இருக்கலாம். பல கிறிஸ்தவ ஆசிரியர்கள் இந்தப் பாடலை இயேசுவின் பாடுகளின் அழுகையோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

வ.1: ஆசிரியர் கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக பாடலை தொடங்குகின்றார். இது புலம்பல் பாடலுக்கான ஒரு அடையாளம். இதன் எபிரேய வரிகள் (אֵלִי אֵלִי לָמָה עֲזַבְתָּנִי) எலி எலி லமாஹ் 'ட்ஸாவ்தானி, இயேசு சிலுவையின் கூறிய வார்த்தைகளை நினைவூட்டுகின்றன (ஏலி ஏலி லமாஹ் சபத்தானி ηλι ηλι λεμα σαβαχθανι) - என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர். இயேசு ஒருவேளை இந்த திருப்பாடலை இறுதியாக நினைத்திருப்பார் என எண்ணத்தோன்றுகிறது.

ஏன் தன்குரலைக் கேளாமல் கடவுள் வெகுதொலைவில் இருக்கிறார் என்ற கேள்வியையும் ஆசிரியர் கேட்கிறார்.

வ.2: ஆசிரியரின் ஏமாற்றத்தை இந்த வரி காட்டுகின்றது. பகலிலும் இரவிலும் தன்னுடைய செபம் கேட்கப்படுவதில்லை, அதாவது தன்னுடைய செபம் என்றுமே கேட்கப்படுவதில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். אֶקְרָא יוֹמָם וְלֹא תַעֲנֶ֑ה וְלַ֗יְלָה וְֽלֹא־דֽוּמִיָּה לִי׃ 'எக்ரா' யோமாம் த' 'அனெஹ் வெலய்லாஹ் வெலோ'-தூமியாஹ் லி- பகிலில் கத்துகிறேன் பதில் இல்லை: இரவிலும் எனக்கு ஆறுதல் இல்லை.

வ.3: புலம்பலும், ஏமாற்றமும் முதல் வரிகளில் சொல்லப்பட்டாலும், கடவுள் ஏமாற்றாதவர், நம்பிக்கைக்குரியவர் என்ற வாதத்தை இந்த வரி முன்வைக்கிறது.

கடவுளை இஸ்ராயேலின் தூயவர் என்று விழிப்பது விவிலியத்தில் மிக முக்கிய கடவுளைக் குறிக்கும் சொல். אַתָּה קָדוֹשׁ 'அத்தாஹ் காதோஷ்- நீர் தூயவர். இஸ்ராயேலின் நோக்கம் கடவுளைப் புகழ்தல் என்பதும் சொல்லப்படுகிறது. תְּהִלּוֹת יִשְׂרָאֵל׃ தெஹில்லோத் யிஸ்ரா'எல்- இஸ்ராயிலன் புகழ்பாக்கள்.

வவ.4-5: இந்த வரிகளில், ஆசிரியர் தன் மூதாதையர்களின் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கின்றார். முதாதையர்களின் நம்பிக்கை, வேண்டுதல் மற்றும் மன்றாட்டுக்கள் அவர்களின் நம்பிக்கை வாயிலாக நல்ல பலனைத் தந்தது. אֲבֹתֵינוּ בָּטְחוּ וַתְּפַלְּטֵמוֹ׃ 'அவோதினூ பாத்ஹு வத்தெபல்லெதெமோ- எங்கள் தந்தையர்கள் நம்பிக்கைவைத்தனர், நீர் அவர்களை விடுவித்தீர்.

இந்த ஆசிரியர் தன்னுடைய மன்றாட்டு கேட்கப்படவில்லை என்றாலும், தன் மூதாதையரின் மன்றாட்டு கேட்க்கப்பட்டது என்று சொல்லி, பிழை தன்னுடைய பக்கமே இருக்கிறது என்கிறார். எபிரேய திருப்பாடல் இலக்கியத்தில் புலம்பல் இருந்தாலும், அங்கும் நம்பிக்கை இருக்கிறது என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. לֹא־בֽוֹשׁוּ׃ லோ'-வோஷு, ஏமாற்றம் அடையவில்லை.

வவ. 6-8: இந்த வரிகள் ஆசிரியரின் துன்பங்களை காட்டுகின்றன. இவர் தன்னை ஒரு புழுவிற்கு ஒப்பிடுகிறார் (אָנֹכִי תוֹלַעַת 'ஆனோகி தோலா'அத்- நான் ஒரு புழு). புழு உயிரினங்களுள் மிக அர்ப்பமான பிராணி, அவ்வாறு தன்னிலையும் மற்றவர்களால் மாற்றப்பட்டுள்ளது என்கின்றார் போல. பார்க்கிறவர்கள் ஏளனம் செய்கிறார்கள் என்கின்றார் (כָּל־רֹאַי יַלְעִגוּ לִי கோல்-ரோ'அய் யல்'இகூ லி- பார்க்கும் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்). மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணுவதும், மற்றவர்கள் துன்பத்தில் வெற்றி காண்பதும் ஒருவகையான மனநோய் என்பதை நவீன உளவியல் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இந்த நோய் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மக்களை தாக்கியிருக்கிறது என்பது இந்த வரியில் நன்கு தெரிகிறது. உதட்டை பிதுக்குதல் மற்றும் தலையை அசைத்தல் போன்றவை இப்படியான ஏளனக் குறிகள் (בְשָׂפָ֗ה יָנִיעוּ வெசாபாஹ் யானி' 'ஊ- உதட்டால் அசைக்கிறார்கள்).

அத்தோடு இவர்கள் ஆண்டவரையும் விட்டபாடில்லை. அவரையும் கிண்டல் செய்கிறார்கள் என்கின்றார். ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தால் அவர் விடுவிப்பார் என்ற விசுவாசமும் இங்கு தெரிகிறது. ஆண்டவர் இவரை அன்புகூர்ந்தார் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். כִּי חָפֵֽץ בּֽוֹ கி ஹாபெட்ஸ் போ-ஏனெனில் அவர் இவனில் மகிழ்ந்தார்.

வவ.9-11: இந்த வரிகள் ஆசிரியரின் தனிப்பட்ட விசுவாச அறிக்கை போல வருகிறது. கருப்பையிலிருந்து ஒருவரின் அழைப்பு தொடங்குகிறது என்பது விவிலியம் காட்டும் உண்மைகளில் ஒன்று, அதனை இந்த ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகின்றார் (כִּי־אַתָּה גֹחִי מִבָּטֶן கி-''அத்தாஹ் கோஹி மிப்பாதென்- ஏனெனில் நீர் என்னை கருப்பையில் இருந்து வெளிக்கொணாந்தீர்). இதற்கு இணையாக தாயின் மடியிலிருந்தே தான் காக்கப்பட்டதாக ஒத்த வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன (מַבְטִיחִי עַל־שְׁדֵי אִמִּי மவ்திஹி 'அல்-ஷெதெ 'இம்மி- என்தாயின் மார்புகளின் நான் திடப்பட்டேன்).

10வது வரி இதே அர்த்தத்தை வேறு சொற்களில் மீள பாடுகின்றது. தான் தன் தாயின் கருப்பையிலிருந்தே கடவுளுடையவன் என்கிறார், அத்தோடு, கடவுள்தான் தன் இறைவன் என்பதையும் தொடக்கத்திலிருந்தே ஏற்றுக்கொள்கிறார் (מִבֶּטֶן אִמִּ֗י אֵלִי மிபெதென் 'இம்மோ 'ஏலி- தாயின் கருப்பையிலே நீர் என் இறைவன்).

11வது வரி ஒரு வேண்டுதலாக அமைந்து, அதன் மூலம் தன்னுடைய பயத்தை வெளிகாட்டுகிறார் ஆசிரியர். தன்னைவிட தொலைவில் போய்விட வேண்டாம் என்று மன்றாடுகிறார் (אַל־תִּרְחַק מִמֶּנִּי 'அல்-திர்ஹாக் மிம்மெனி- என்னைவிட்டு தொலைவில் வேண்டாம்). தனக்கு உதவி யாரும் இல்லை என்று சொல்வது அவருடைய உறவின் வெறுமையைக் காட்டுகிறது.

வவ.12-13: இந்த வரிகளில் ஆசிரியர் தன் எதிரிகளை விலங்குகளுடன் ஒப்பிடுகிறார். எருதுகள் சாதுவானாலும், அதேவேளை அவை பலமானவை. சிலவேளைகளில் அவை சிங்கங்களையும் தாக்கக்கூடியவை. காட்டு எருதுகள் ஆபத்தான விலங்குகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்த எருதுகளுக்கு தன் எதிரிகளை ஒப்பிடுகிறார் (פָּרִים பாரிம்-எருதுகள்). இந்த எருதுகளை திருப்பி பாசானின் காளைகள் என அர்த்தப்படுத்துகிறார் (אַבִּירֵי בָשָׁן 'அவ்ரே வாஷான்). யோர்தான் நதிக்கு கிழக்கிலே யார்முக் நதியின் வழியிலே காணப்படும் இந்த பாசான் பகுதி கானான் தேசத்தின் மிக வளமான பகுதி, இங்கே மேய்சலில் ஈடுபடும் மாடுகளும் பசுக்களும் கொழுத்து பருத்திருந்தன. இந்த உருவகத்தை முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புறவினத்தவர்களுக்கும் பாவித்தனர். இந்த திருப்பாடல் ஆசிரியரும் அதனையே இங்கே செய்கிறார். சிங்கங்கள் இஸ்ராயேல் நாட்டில் பிற்காலத்தில் இல்லாமல் போயினும், அவை முற்காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கின்றன அத்தோடு அவற்றைப் பற்றிய நல்ல அறிவும் அங்கே இருந்திருக்கிறது. சிங்கத்தின் பலம் அதன் கால்களிலும், அதன் தாடைகளிலும் இருக்கின்றன அதனைத்தான் ஆசிரியர் எதிரிகளுக்கு ஒப்பிடுகிறார் (אַרְיֵ֗ה 'அர்யெஹ்- அரி, சிங்கம்). சிங்கத்தைப்போல இவர்கள் வாயை திறந்து கொண்டு திரிகிறார்கள் என்கிறார். அவர்களின் செயற்பாடுகுள் சிங்கத்தின் பாய்ச்சலுக்கு ஒப்பிடப்படுகிறது.

வவ.14-15: எதிரிகளின் பலத்தை வர்ணித்த ஆசிரியர் தன்னுடைய பலவீனத்தை பலமான உருவங்கள் வாயிலாக ஒப்பிடுகிறார்.

அ. கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன் (כַּמַּיִם נִשְׁפַּכְתִּי֮ கம்மாயிம் நிஷ்பாக்தி): கொட்டப்பட்ட நீரை மீளவும் பெறமுடியாது அதனைப் போல் தன்னிலை என்கிறார்.

ஆ. எலும்புகள் கழன்றுபோயின (הִתְפָּרְדוּ כָּל־עַצְמוֹתָי ஹித்பார்தூ கோல்-'அட்ஸ்மோதாவ்): எலும்புகள் கழன்றால் உடல் இயங்காது அத்தோடு அது தாங்க முடியா துன்பத்தைக் கொடுக்கும்.

இ. இதயம் மெழுகுபோல் உருகிற்று (לִבִּי כַּדּוֹנָג லிபி கத்தோனாக்): உருகிய மெழுகு தன் உருவத்தையும் வடிவத்தையும் இழக்கும், அதனால் ஒளிகொடுக்க முடியாது.

ஈ. ஓடுபோல் காய்ந்த வலிமை (יָבֵשׁ כַּחֶרֶשׂ כֹּחִי யாவெஷ் கஹெரெஸ் கோஹி): சில மூல பிரதிகள் இந்த 'வலிமையை' மேல் நாக்கு என்று வாசிக்கின்றன. காய்ந்த வலிமையினாலும், காய்ந்த மேல் நாக்கு ஓட்டினாலும் எந்த பயனுமில்லை என்பதுதான் ஆசிரியரின் புலம்பல்.

உ. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது (לְשׁוֹנִי מֻדְבָּק מַלְקוֹחָי லிஷோனி முத்பாக் மல்கோஹாவ்): அசையாத நாக்கினால் உச்சரிக்க முடியாது.

ஊ. சாவின் புழுதியிலே போடப்பட்டார் (לַעֲפַר־מָוֶת תִּשְׁפְּתֵֽנִי ல'அபர்-மாவெத் திஷ்பெதெனி): புழுதி, சாவு மற்றும் அசுத்தத்தைக் குறிக்கும் சாதாரண அடையாளம்.

வவ.16-18: இந்த வரிகளும் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை அப்படியே வர்ணிப்பது போல உள்ளன. ஆசிரியர் தன்னுடைய துன்பமான நிலையை மீளவும் காட்ட முயற்;ச்சிக்கின்றார். தீமை செய்பவர்களை நாய்கள் கூட்டத்திற்கு ஒப்பிடுகிறார் (כִּי סְבָבוּנִי כְּלָבִים கி செவாவூனி கெலாவிம்). விவிலியம் நாய்களை அசுத்தமான மற்றும் தீமையான விலங்காக வர்ணித்தாலும், புதைபொருள் ஆய்வுகள், நாய்கள் வீட்டுப்பிராணிகளாக பாலஸ்தீனாவிலே வளர்கப்பட்டிருந்ததைக் காட்டுகின்றன. இருப்பினும் நகர்ப்புறங்கள் மற்றும் வீதியோரங்களில் கூட்டமாக திரிந்த கட்டாக்காலி நாய்கள் சில வேளைகளில் மனித உடல்களையும் தின்றன. இது மிகவும் பயங்கரமான காட்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் நாய் இவருக்கு மிகவும் அருவருப்பான மற்றும் அசிங்கமான விலங்காக பார்க்கப்படுகிறது.

தன் கைகளும் கால்களும் துளைக்கப்படுகின்றன என்கிறார், நற்செய்தியாளர்கள் இந்த வரியை இயேசுவின் சிலுவை அறைதலுக்கு ஒப்பிடுகின்றனர்.

தன்னுடைய எலும்புகளை எண்ணிவிடலாம் என்று தன்னுடைய உடலின் மெலிவை வறுமையாக காட்டுகிறார் (עַצְמוֹתָי 'அட்ஸ்மோதாவ்- என் எலும்புகள்).

18வது வரி நற்செய்தியில் உரோமைய பாடைவீரர்கள் இயேசுவின் உடைகளை பங்கிட்டதை நினைவூட்டுகின்றது (மத் 27,35: மாற் 15,24: லூக் 23,34: யோவா 19,24). அக்காலத்தில் போரிலே தோற்கின்ற எதிரி வீரர்களின் உடமைகளை, வெற்றி பெறுகிறவர்கள் பங்குகொள்வர். இதனைத்தான் இந்த வரி நினைவூட்டுகிறது.

வவ.19-21: இந்த திருப்பாடலின் முதலாவது பிரிவில், இந்த வரிகள் இறுதி வேண்டுதல்களாக அமைகின்றன. ஆண்டவரை தன்னருகில் இருக்கும்படிக் கேட்கிறார், அதாவது ஆண்டவர் தொலைவில் போவது, அடியானுக்கு ஆபத்தானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். ஆண்டவருக்கு 'தன்னுடைய பலம்' (אֱיָלוּתִ֗י 'ஏயாலூதி) என்று அழகான பெயரை சூட்டுகிறார். வாளுக்கு இரையாகாத படி தன்னைக் காப்பற்றக் கேட்பது, இந்த பாடலுக்கு இராணுவ சாயம் பூசுவது போல இருக்கிறது. ஏற்கனவே தன் எதிரிகளுக்கு நாய் (כֶּ֗לֶב கெலெவ்), சிங்கம் (אַרְיֵה 'அர்யெஹ்), எருமை (רְאֵם ரெ'எம்) என்று பெயர் வைத்தவர் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார்.

மேலுள்ள 21(22) வரிகளில் தன்னுடைய புலம்பலை பாடிய ஆசிரியர் இனிவருகின்ற பத்து வரிகளில் கடவுளை புகழந்து பாடுவதற்கு முயற்சி செய்கிறார்.

வ.22: ஆசிரியர், தன் கடவுளின் பெயரை தன்னுடைய சகோதரர்களுக்கு அறிவிப்பதாகச்சொல்கிறார். கடவுளின் பெயர் எனப்படுவது, கடவுளின் மாட்சியையே குறிக்கிறது (אֲסַפְּרָה שִׁמְךָ לְאֶחָי 'அசாப்ராஹ் ஷிம்கா லெ'எஹாய்), கடவுளின் பெயரை அறிவிப்பது கடவுளை அறிவிப்பதற்கு சமனாகும். இங்கே சகோதரர்கள் என்போர் இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தினரையே குறிக்கின்றனர். இந்த சிந்தனையை, இந்த வரியின் இரண்டாம் பாகம், 'சபை' (קָהָל காஹால்) என்று வரைவிலக்கணப்படுத்துகின்றது. இந்த சபையும் (காஹால்) இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தையே குறிக்கிறது. திருச்சபையை ஒரு சபையாக இறையியல் படுத்துவதற்கு இந்த சொல்தான், பின்புலம்.

வ.23: இந்த சபையினர் யாவர் என்று பெயரிடுகின்றார். இஸ்ராயேல் சமூகத்தின் அழகான பெயர்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, இவையனைத்தும் ஒத்த கருத்துச் சொற்களில் அமைகின்றன:

அ. ஆண்டவருக்கு அஞ்சுவோர் (יִרְאֵי יְהוָה யிர்'ஏ அதோனாய்).

ஆ. யாக்கோபிக் மரபினர் (כָּל־זֶרַע יַעֲקֹב கோல்-ட்செரஅ' ய'அகோவ்).

இ. இஸ்ராயேல் மரபினர் (כָּל־זֶרַע יִשְׂרָאֵל கோல்-ட்செரஅ' யிஸ்ரா'எல்).

வவ.24-25: ஏன் இஸ்ராயேல் சமூகம் கடவுளை புகழ்ந்து பாடவேண்டும் என்பது இந்த வரியில் விளக்கப்படுகிறது (עָנִי 'ஆனி- எளியோர், שַׁוְּעוֹ ஷவ்வெஓ- அவரைநோக்கி கத்துவோர்). கடவுள் எளியோரை அற்பமானவர்களாக எண்ணாதவர், அவர்களை கவனிப்பவர், அவர்களுக்கு தன் முகத்தை மறைக்காதவர், அத்தோடு அவர்களுக்கு செவிசாய்க்கிறவர். இந்த புகழ்ச்சிகளை எல்லாம் ஆசிரியர் தான் தன்னுடைய மாபெரும் சபையாகிய அதாவது இஸ்ராயேல் இனத்திடமிருந்தே செய்வதாக சொல்கிறர்.

இஸ்ராயேலை மாபெரும் சபை என்று சொல்வது ஒரு பாரம்பரியம் (קָהָל רָב காஹால் ராவ்). இந்த மாபெரும் சபையினராகிய இஸ்ராயேலர், கடவுளுக்கு அஞ்சுகிறவர்கள் என்ற இன்னோர் ஒத்த கருத்துச் சொல்லால் விழிக்கப்படுகிறார்கள் (יְרֵאָֽיו யெரெ'அய்வ்-அவருக்கு அஞ்சுவோர்).

வவ.26-27: இந்த வரிகளில் வருகின்ற எளியோர் மற்றும் ஆண்டவரை நாடுவோர்கள், என்றும் வாழ்வார்கள் என சொல்லப்படுகிறார்கள் யார் இவர்கள், இஸ்ராயேல் மக்களா அல்லது இஸ்ராயேல் மக்கள் அல்லாதவர்களாக என்ற கேள்வி எழுகின்றனது.

ஆனால் 27வது வரி, ஆசிரியர் உலகின் அனைத்து மக்களையும் உள்வாங்கி பாடுகிறார் என்பதை தெளிவாக காட்டுவது போல உள்ளது. ஆக எளியோர்கள் என்பவர்கள் அனைத்து மனிதர்களும்தான் என்பதை ஆசிரியர் காட்டுகிறார். இதனைக் குறிக்க 'உலகின் எல்லையில் இருப்போர்' (כָּל־אַפְסֵי־אָרֶץ கோல்-'அப்செ-'ஆரெட்ஸ்), மற்றும் 'புறவினத்துக் குடும்பங்கள்' (כָּל־מִשְׁפְּחוֹת גּוֹיִם கோல்-மிஷ்பெஹோத் கோயிம்) என்ற சொற்களைப் பாவிக்கிறார்.

வவ.28-29: இந்த வரிகள் மேற்சொன்ன கருதுகோளை இன்னும் தெளிவாக்குகின்றது. அரசு ஆண்டவருக்குரியது என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து (לַיהוָה הַמְּלוּכָה லஅதோனாய் ஹம்மெலூகாஹ்), ஆண்டவருக்கு பிரிவினைவாதம் கிடையாது அத்தோடு அனைவரும் அவர் மக்கள் என்பது புலானகிறது.

செல்வர்களாக இருந்தாலும் சரி, எதுவும் இல்லாத வறியவர்களாக இருந்தாலும் சரி அவர்களும் ஆண்டவரின் புகழ்ச்சிக்குள்ளும் வழிபாடுகளுக்குள்ளும் உள்வாங்கப்படுகிறார்கள். மண்ணின் செல்வர்களைக் குறிக்க (דִּשְׁנֵי־אֶ֗רֶץ திஷ்னெ-'எரெட்ஸ்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது உணவுண்டு கொழுத்தவர்களைக் குறிக்கும். இவர்களுக்கு எதிர்பதமாக கல்லறைகளில் வாழ்பவர்கள் காட்டப்படுகிறார்கள். இவர்களைக் குறிக்க கோல் யோர்தே அபார் (כָּל־יוֹרְדֵי עָפָר) என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது, இது புழுதிக்குள் இறங்குபவர்களைக் குறிக்கும்.

வவ.30-31: இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்களைப் பற்றி பாடிய ஆசிரியர் இந்த வரிகளில் இனி இருக்கப்போகும் எதிர்கால சந்ததியினரைப் பற்றி வசனிக்கிறார். எதிர்கால தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி சொல்லப்படும் என்கிறார் ஆசிரியர் (זֶרע יַֽעַבְדֶ֑נּוּ יְסֻפַּר לַֽאדֹנָ֣י לַדּֽוֹר׃ ). இனி பிறக்கப் போகும் தலைமுறையும் (לְעַם נוֹלָ֗ד லெஅம் நோலாத்), ஆண்டவரின் செயல்களை அறிந்துகொள்ளும் என்கிறார்.

வருங்காலத் தலைமுறையினர் கடவுளின் நீதியை பறைசாற்றுவர் என்று, கடவுளைப் பற்றி அறிவிக்க வருங்கால தலைமுறையும் ஆயத்தமாயிருக்கிறது என்று தன் பாடலை முடிக்கிறார் ஆசிரியர். (יָבֹאוּ וְיַגִּידוּ צִדְקָתוֹ யாவோ'ஊ யெலக்கிதூ ட்சித்காதோ- அவர்கள் வந்து அவரின் நீதியை அறிவிப்பார்கள்).



இரண்டாம் வாசகம்
பிலிப்பியர் 2,6-11

6கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; 11தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

பவுலுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த இந்த பிலிப்பிய திருச்சபை சில முக்கியமான ஆபத்துக்களை சந்தித்தது, அவற்றில், வளர்ந்து வரும் பிரிவினை வாதம், யூத ஆணவம், தலைவர்களின் மமதை, தாழ்ச்சியைப் பற்றிய தவறான கருத்துக்கள் மற்றும் இயேசுவை பற்றிய சில பிழையான போதனைகள் போன்றவை மிக முக்கியமானதாக அமைந்தன. இதனை சரிப்படுத்த பவுல் இந்த திருமுகத்தை பயன்படுத்துகிறார் எனலாம். பிலிப்பிய சமுதாயம் மகிழ்ச்சியில் வாழவேண்டும் என்றால் அது தாழ்ச்சியில் வாழவேண்டும் என்பதில் பவுல் கவனமாக இருந்தார். யாருடைய தாழ்ச்சியை இவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டுவது என்ற தேடலில், அவர் இறுதியாக ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியையே இங்கே உதாரணமாக எடுக்கிறார். இந்த பகுதி, ஆரம்ப கால திருச்சசபையின் ஒரு வழிபாட்டு பாடலாக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வாதாடுகின்றனர். இதன் வார்த்தைகளை கவனமாக ஆய்வு செய்வதன் வாயிலாக ஆரம்பகால திருச்சபை கிறிஸ்துவைப் பற்றி கொண்டிருந்த நம்பிக்கைகளை இதனுள் காணலாம். வ.6: கிறிஸ்து கடவுள் வடிவில் விளங்கினார் (ὃς ἐν μορφῇ θεοῦ ὑπάρχων ஹொஸ் என் மொர்பே தியூ ஹுபார்கோன்). கிறிஸ்து கடவுளின் உருவம் மட்டுமல்ல, அவர் உன்னதமான மனிதர் மட்டுமல்ல, கடவுளின் மகன் மட்டுமல்ல, அவற்றிக்கும் மேலாக அவர் உண்மையாக கடவுளாக இருந்தார். அத்தோடு கடவுளாக இருக்கும் நிலையை அவர் வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டிய தேவையிலும் இருக்கவில்லை. தன் மக்களுக்காக இந்த கடவுள் எதையோ செய்ய முன்வருகிறார். கிரேக்க சிந்தனைக்கு இது மிக வித்தியாசமாக அமையும். கிரேக்க தெய்வங்கள் தங்களுடைய நிலையை தக்கவைக்க, வேறு தெய்வங்களுடன் போர்களை செய்ததாகவும், புரட்சிகளை செய்ததாகவும் கிரேக்க புராணக் கதைகள் சொல்கின்றன. ஆனால் உண்மைக் கடவுளாக இயேசு தன் மக்களுக்காக தனது கடவுள் தன்மையையும் வேறு விதத்தில் பாவிக்கின்றார் என்று பவுல் சொல்வது அழகாக இருக்கிறது. கடவுள் தன்மையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க ஒரு கடவுள் எண்ணவில்லை என்பது, அந்த கடவுள் எவ்வளவு மாட்சிக்குரியவர் என்பதைக் காட்டுகிறது.

வ.7: தம்மையே வெறுமையாக்கினார் அடிமையின் வடிவை ஏற்றார் (ἑαυτὸν ἐκένωσεν μορφὴν δούλου λαβώνஇ ஹெஅவ்டொன் எகெனோசென் மொர்பேன் தூலூ லாமோன்). தங்களுடைய யூத பிறப்பையும், அல்லது கிறிஸ்தவ அழைப்பையும் பெருமையாக கருதிய சில பிலிப்பிய கிறிஸ்தவர்களுக்கு பவுல் சவுக்கடி கொடுக்கிறார். அடிமையின் வடிவை யாரும் ஏற்க மாட்டார்கள், ஆனால் இயேசு அதனைத்தான் செய்தார், ஆக கிறிஸ்தவர்களும் தங்கள் ஆண்டவரை பின்பற்ற வேண்டும் என்பதுதான் இங்கே பவுலின் செய்தி. கிறிஸ்து மனித உருவில் தோன்றி மனிதருக்கு ஒப்பானார் என்று பவுல் சொல்வது, பல செய்திகளை பின்புலமாகக் கொண்டுள்ளது. கிறிஸ்து ஒரு சாதாரண மனிதர் அல்ல இருப்பினும், அவர் மனித சாயலையும், தோற்றத்தையும் விரும்பியே பெறுகிறார் என்ற செய்தியும் இதன் பின்னால் மறைந்துள்ளன.

வ.8: கிறிஸ்துவின் தாழ்ச்சியின் பலம் இங்கே காட்டப்படுகிறது. கடவுளால் மரணிக்க முடியா? இது ஒரு முக்கியமான கேள்வி. மரணம் அக்காலத்தில் தோல்வியின் அடையாளமாக கருதப்பட்ட வேளையில் கடவுள் மரணத்தை தழுவ முன்வருகிறார் அதுவும் சிலுவை சாவை (θανάτου δὲ σταυροῦ தனாடூ தெ ஸ்டாவ்ரூ) ஏற்கும் அளவிற்கு முன்வருகிறார். சிலுவை சாவு உரோயைருக்கு மடமை, யூதருக்கு சாபம். உரோமையர்கள் இந்த தண்டனையை சட்டமில்லாதவர்கள், உரோமையர் அல்லாதவர்கள், புரட்ச்சிக்காரர்கள், ஆபத்தான குற்றவாளிகள் என்று தாங்கள் கருதியவர்களுக்கு கொடுத்தனர், அதே வேளை இந்த தண்டனையை பெறுகிறவாகள் கடவுளால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்கள் என யூதர்கள் கருதினார்கள். இந்த சிந்தனைகள் பலமாக இருக்கின்ற வேளையில்தான், இங்கே கடவுளே முன்வந்து சிலுவை சாவை ஏற்று, இப்படியான சிந்தனைகள் உண்மையல்ல என்பதையும், தாழ்ச்சிதான் உண்மையான பலம் என்பதையும் காட்டுகிறார் (இ.ச 21,23: 1கொரிந் 1,8).

வ.9: கடவுள் இயேசுவிற்கு செய்த கைமாறை விளக்குகிறார். எனவே கடவுளும் அவரை உயர்த்தினார் என்பது (διὸ καὶ ὁ θεὸς αὐτὸν ὑπερύψωσεν தியொ காய் ஹொ தியூஸ் அவ்டொன் ஹுபெருப்ஸ்சோசென்), ஆண்டவர் இயேசுவின் மெசியாத்துவத்தினுள் அவரை கடவுள் உயர்த்தியது ஓர் அங்கம் என புலப்படுகிறது. அத்தோடு இயேசுவினுடைய வருகை, பாடுகள் மற்றும் உயிர்ப்பினுடன் கடவுள் இணைந்திருக்கிறார் என பவுல் காட்டுகிறார். இதனால் இயேசுவை மறுதலிப்பவர்கள் கடவுளை மறுதலிப்பவர்கள் ஆகின்றனர்.

வ.10: இந்த வரி மானிட குலம் மற்றும் இறையரசின் மக்கள் கூட்டத்தை நினைவுபடுத்துகின்றது. மூன்று விதமான மக்கள் கூட்டத்தை பற்றி பேசுகிறார் பவுல்.

அ. மேலுலகோர்- விண்ணவர் (ἐπουράνιος எபுரானியோஸ்): இது பரலோக வாசிகளைக் குறிக்கிறது. இவர்கள் யார் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. கிரேக்க சிந்தனையில் இதற்க்குள் கடவுள், வானதூதர்கள், தூயவர்கள் அத்தோடு கதிரவன், சந்திரன் நட்சத்திரங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. எபிரேய சிந்தனையில் இதற்க்குள், கடவுள், செரூபீன்கள், செராபீன்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. பவுல் இந்த இரண்டு சிந்தனைகளையும் உள்ளடக்குகிறார் என எண்ணத்தோன்றுகின்றது. காலத்திற்கு காலம் இந்த வானவர்கள் பற்றிய சிந்தனை மாற்றம் பெற்றுக்கொண்டு வந்துள்ளது.

ஆ. மண்ணுலகோர்- மண்ணவர் (ἐπίγειος எபிகெய்யோஸ்): விவிலிய மற்றும் கிரேக்க மெய்யிலின் படி இந்த சொல் பூமியில் வாழ்கிறவர்களைக் குறிக்கின்றது. இவர்கள் காணக்கூடிய உடலைக் (σῶμα சோமா-உடல்) கொண்டவர்கள். இவர்கள் பரலோக வாசிகள் அல்லர். இவர்கள் உடலின் உணர்வுகள், ஆசைகள் மற்றும் துன்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்களுடைய ஞானம் மட்டுப்படுத்தப்பட்டது அது தவறிழைக்கக்கூடியது. கிறிஸ்தவ சிந்தனையை விட, கிரேக்க சிந்தனையின் படி, முக்கியமாக பிளேடோட்வின் சிந்தனைப்படி இவர்கள் எப்போதும் குறைவானவர்கள் என கருதப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவ மெய்யியல் அப்படியான வாதத்தை முன்வைக்கவில்லை.

இ. கீழுலகோர் (καταχθόνιος கடாக்தோனியோஸ்): கிறிஸ்தவ கால கிரேக்க சிந்தனை, இவர்களை இறந்து கீழுலகில் அதாவது நரகத்தில் வாழ்கிறவர்கள் என சொல்கிறது. கிறிஸ்தவம் இவர்களை நரகத்தில் வாடுகிறவர்களைக் குறிக்கிறது. இவர்களைப் பற்றி எபிரேய மற்றும் யூத சிந்தனைகள் வித்தியாசமானவை. யூதர்கள் நரகம் என்னும் எண்ணக்கருவை ஆரம்ப காலத்தில் கொண்டிருக்கவில்லை, ஆனால் இறப்பிற்கு பின் மனிதர்கள் சீயோல் என்ற ஆதாளபாதாளத்திற்கு செல்கிறார்கள் என்ற எண்ணம் இவர்களிடம் இருந்திருக்கிறது.

கிரேக்கருடைய காலத்தில், இந்த யூதர்களின் சிந்தனையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதை இணைத்திருமுறை நூல்களில் காணலாம்.

இப்படியான மூவுலக வாசிகளும் இயேசுவின் பெயருக்கு மண்டியிடுவர் என்று சொல்லி, ஆண்டவரை அனைவருக்கும் அதிபதியாக்குகிறார் பவுல்.

வ.11: இந்த வரி மிகவும் இறையியல் ஆழம் கொண்டது. இயேசுவே ஆண்டவர் அத்தோடு அவரை இப்படி சொல்வது தந்தையாகிய கடவுளின் மாட்ச்சிக்காகவே. (πᾶσα γλῶσσα ἐξομολογήσηται ὅτι ⸂κύριος Ἰησοῦς Χριστὸς⸃ εἰς δόξαν θεοῦ πατρός. பாசா குலோஸ்சா எட்சொமொலொகேசேடாய் ஹொடி குரியொஸ் ஈயேசூஸ் கிறிஸ்டொஸ் எய்ஸ் டொக்சான் தியூ பாட்ரொஸ்) எல்லா நாவுகளும், அதாவது பேசக்கூடியவர்கள் எல்லோரும் இதனை செய்கிறார்கள். இயேசுவை ஆண்டவர் என்று ஏற்பதும், ஆண்டவரை மாட்சிப்படுத்துவதும் ஒன்றோடோன்று தொடர்புபட்டது. இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிடாதவர்கள், தந்தையாம் கடவுளை மகிமைபடுத்தாதவர்கள், அதாவது அவவிசுவாசிகள் என்பது பவுலின் ஆழமான கருத்து.


நற்செய்தி வாசகம்
(லூக்கா 22, 14 - 23, 56)



லூக்கா எழுதிய படி, பாடுகளின் வரலாறை இவ்வாறு பிரிப்போம்

அ. விடுதலை தரும் பாஸ்கு உணவு

ஆ. உறவின் மேசையில் கலவரம்

இ. இறைவனின் துயரமும் கைதும்

ஈ. தலைமை ஆயர் பேதுருவின் மறுதலிப்பு

உ. பலமில்லாத யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு

ஊ. வெளிநாட்டத்தலைவர்கள் பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல்

எ. உயிருக்கு மரண தண்டனை

ஏ. மீட்பின் சிலுவைப் பாதை

ஒ. தேய்வத்தை சிலுவையில் அறைதலும் மரணமும்

ஓ. உயிரின் நல்லடக்கம்

அ. விடுதலை தரும் பாஸ்கு உணவு (22,7-20), இயேசு புதிய பாஸ்கா உணவாகிறார்.

1. லூக்கா மாற்கு மற்றும் மத்தேயுவைப்போல ஆண்டவரின் இராவுணவை பாஸ்காவுணவாகவே காட்டுகிறார். இயேசு பேதுருவிடமும் யோவானிடமும் அடையாளங்கள் வாயிலாக பாஸ்கா கொண்டாடும் இடத்தைப்பற்றி சொல்லுவது, ஒருவேளை தான் முன்கூட்டியே கைதாகமல் இருப்பதற்கு என கருதலாம். வழமையாக பெண்கள் தண்ணீர் குவளைகளை சுமந்து கொண்டு வருகின்ற காலங்களில், ஆண்கள் அதனை சுமப்பது சீடர்களுக்கு நல்ல அடையாளமாக அமைகிறது.

2. லூக்கா இயேசுவை உண்மையான பாஸ்கா உணவாக காட்டுகிறார். நான் ஆவலாக இருந்தேன் என்று இயேசு சொல்லுவதன் மூலம், இந்த பாஸ்காவுணவு இயேசுவிற்கு முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது. இறையாட்சி நிறைவேறும் மட்டும் இனி இந்ந பாஸ்கா உணவை உண்ணமாட்டேன் என்று இயேசு சொல்வது, இறையாட்சி என்பது ஒரு தொடர் பணி அது சாதாரண பாஸ்காiவிட முக்கியமானது, இறையாட்சின் முன் இப்படியான கொண்டாட்டங்கள் இரண்டாம் தரமானவை எனக் காட்டுகிறது.

3. வவ 19-20: இந்த வசனங்கள்தான் திருச்சபை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பயன்படுத்துகின்ற வசீகர செபங்கள். இந்த செபங்கள் வருடாந்த பாஸ்கா விழாவையும் தாண்டி இப்போது அவை இயேசுவை மையப்படுத்துகின்றன. கடவுளே வரும் போது பூசாரிக்கு என்ன வேலை எனக் கேட்கலாம். பாஸ்கா விழா பல வகையான செபங்கள், ஆசீர்கள், உணவு வகை பரிமாற்றங்களைச் சார்ந்தது, இங்கே இயேசு தன்னை மையப்படுத்தி, அப்பத்திலும் இரசத்திலும் தனது செய்தியை கொடுக்கிறார். இது ஒரு புதிய நித்திய உடன்படிக்கையை குறிக்கலாம். நினைவாக செய்யச்சொல்லுவது, இதே போன்ற பலியை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதைக் காட்டுகிறது. நினைவுகள் வாழ்வதற்கே என்ற தத்துவம் இங்கே திருவருட்சாதனமாக்கப்படுகிறது. நற்கருனை ஏற்படுத்தப்பட்ட கதாம்சம் இரண்டு பாரம்பரியங்களில் நமக்கு வருகின்றன,

அ). மாற்கு-மத்தேயு பாரம்பரியம்,

ஆ). பவுல் பாரம்பரியம். சாதாரணமாக நான்கு கிண்ண இரசங்கள் பாஸ்காவிழாவிற்கு பயன்பட்டன, இயேசு இரண்டை பாவித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆ. உறவின் மேசையில் கலவரம்: (22,21-38), பதவி மோகம்.

1. ஆசை யாரையும் விடாது! கடவுள் பக்கத்தில் இருந்தும் கூட, பதவிகளை நாடச்செய்கிறது. லூக்கா இந்த காட்சியை சற்று வித்தியாசமாக பதிவு செய்கிறார். லூக்கா யூதாசின் காட்டிக் கொடுப்பை உதாரணமாக்கி ஒருவரின் பாவ வாழ்க்கைக்கு அவரே பொறுப்பு என்றி சொல்லி, விதி என்று ஏமாற்று வித்தை காட்டவேண்டாம் என்கிறார். யூதாசிற்கும் இந்த பன்னிருவருக்கும் இந்த மேசையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவன் பணத்தை விரும்பினான், இவர்கள் பதவிகளை விரும்புகின்றனர். யார் பெரியவர் என்ற வாதம் இதனையே குறிக்கிறது.

2. யார் பெரியவர் என்ற கேள்வியும் அதற்கான கதையிடங்களும் மாற்குவிலும் மத்தேயுவிலும் (மாற் 10,42-45: மத் 20,25-28) வேறு இடங்களில் அமைகின்றன. இயேசு இறையாட்சிக்கும் அரசியல் ஆட்சிக்கும் வித்தியாசம் காட்டுகிறார். அரசியல் ஆட்சியில் அடிமைத்தனங்களே நன்கொடை என்பதை அழகாக சித்தரிக்கிறார். இயேசு உரோமையரின் ஆட்சியை நன்கு வறுத்தெடுக்கிறார். இறையாட்சியில் அதிகாரம் கிடையாது, தன்னையொட்டி சேவை மட்டுமே உள்ளது என்கிறார். (διακονία தியாகோனியா-சேவை).

3. சேவையின் தன்மைகளைப பற்றி பன்னிருவருக்கு அறிவுறுத்திய பின் இயேசு சீடர்களை இஸ்ராயேலரின் குலமுதுவர்களாக நியமிக்கிறார். இப்போது இந்த புதிய இஸ்ராயேலின் முதல் குலமுதுவரை அவருடைய எபிரேய பெயரில் அழைக்கிறார் (சீமோன் - Σίμων). சாத்தான் அனுமதி கேட்கிறான் என்பதன் மூலம், பன்னிருவரை சோதிக்க விசேட அனுமதி தேவை என்கிறார், ஆனால் தனது உடனிருப்பு எப்போதும் உள்ளது என்பதையும் நினைவூட்டுகிறார். பேதுருவின் பலவீனத்தை ஆண்டவர் சொன்ன வேளை பேதுரு தனது பலததை நிரூபிக்கப் பார்கிறார். சேவல் கூவாது என்பது, இங்கே பேதுரு தனது பலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு விடியல் இல்லை என்பது போல உள்ளது.

4. சீடர்கள் பணிக்கு அனுப்பப்பட்ட நிகழ்வை மீளாய்வு செய்கிறார் இயேசு (9,3). சில மாற்றங்களையும் உண்டு பண்ணுகிறார். அப்போது கடவுளின் தயவை நாடச்சொன்னவர், இப்போது பணப் பையையும், பயணப் பையையும் எடுக்கச் சொல்கிறார். இது ஆரம்ப கால திருச்சபையின் அங்கலாய்பு நிறைந்த நாட்களை படம் பிடிக்கிறது. ஆயுதங்களை எடுக்கச் சொன்னது போருக்கு தயாராக இருக்கச் சொல்லுவது போல உள்ளது. சீடர்கள் அதனை மிக ஆழாக எடுத்து எத்தனை கத்திகள் வேண்டும் என கேட்கின்றனர், இயேசு சொன்னது ஆயத்தங்களை, ஆயுதங்களை அல்ல. இங்கே வாள் என்று லூக்கா எழுதுவது ஒரு வகை பட்டாக்கத்தி (μάχαιρα மகாய்ரா, பட்டாக் கத்தி), அக்காலத்து கைத்துப்பாக்கி எனச் சொல்லலாம், இது தற்பாதுகாப்பிற்கே, போருக்கு உதவாது.

இ. இறைவனின் துயரமும் கைதும் (22,39-53),

அழுக்காகிப்போன அன்பு முத்தம்.

1. மாற்குவின் கெத்சமெனி காட்சியை லூக்கா சிறியதாக்கியுள்ளார். ஒலிவ மலை லூக்காவிற்கு மிக முக்கியமான இடம். இங்கு இயேசு பல முக்கியமான முடிவுகளை எடுக்கிறார் இதனால்தான் கெஸ்தமெனியை ஒலிவ மலையாக மாற்றுகிறார் லூக்கா, அல்லது ஒலிவ மலையில் கெஸ்தமெனி இருந்ததை உறுதிப்படுத்துகிறார். மாற்குவிலும் மத்தேயுவிலும் இயேசுவை மூவர் பின்தொடர்ந்தனர், இங்கு சீடர் என்று பலரை உள்வாங்குகின்றார் லூக்கா. ஆக செபமும், திருவிழி;ப்பும் அனைத்து சீடர்களின் கடமையாகிறது. செபித்தலும் விழித்தலும் அனைவருக்கும் உரியது என்கிறார் போல. சோதனை இயேசுவையும் விடவில்லை ஆனால் அவர் அதனை மேற்கொண்டதை கோடிடுகிறார். கிண்ணம், (ποτήριον-பொடெரியோன்) சாதரணமாக கடவுளுடைய நீதியையும் கோபத்தையும் வெளிப்படுத்தலாம், இங்கு தீர்ப்பை வெளிப்;படுத்துகிறது. வானதூதரின் பங்களிப்பு இயேசு தனியாக இல்லை எனக் காட்டுகிறது. இரத்த வியர்வை இயேசுவின் முழு மனித இயல்பை காட்டும் உருவகம். மறு புறத்தில் சீடர்களின் உறக்கம் மனித பலவீனத்தை காட்ட, அதனை மேற்கொள்ள விழித்திருந்து செபிக்க வேண்டும் என்கிறார் இயேசு. துயரத்தால் அவர்கள் தூங்கினார்கள் என்று இவர்களின் தவறை சிறியவர்களின் தவறாக்குகிறார் லூக்கா.

2. யூதாசை பன்னிருவருள் ஒருவன் என்பதன் மூலம் திருத்தூதர்களின் முரண்பாட்டை விளக்குகிறார், இங்கே மாற்கு-மத்தேயுவுடன் சேர்ந்து போகிறார் லூக்கா. காதல், அன்பு, நம்பிக்கை, உறவு, நட்பு போன்றவற்றின் அழகிய அடையாளமான முத்தம் காட்டிக்கொடுக்கும் அசிங்கமான அடையாளமாக மாறுகிறது. பாவியென்று ஆண்களால் அடையாளமிடப்பட்ட பெண்ணொருவர் ஆண்டவரின் பாதங்களை கண்ணீரால் முத்தமிட்டு கழுவினார், இங்கே திருத்தூதரிலே ஒருவர் கன்னத்தை முத்தமிட்டு தீயவர்களிடம் தன் ஆண்டவரையே கையளிக்கிறான். (ஒப்பிடுக 7,38: 22,47). யோவான் நற்செய்திப்படி இயேசுவிற்காக படைவீரரின் காதை துண்டித்தவர் பேதுரு. லூக்கா நற்செய்தியில் மட்டுமே இயேசு காது துண்டிக்கப்பட்டவரை குணப்படுத்துகிறார். லூக்காவிற்கு இயேசு எப்போதுமே குணப்படுத்தும் ஆண்டவர். இருளில் நடக்கும் கைது மனிதர்களின் இருண்ட யுகத்தையும் இருண்ட குணங்களையும் காண்பிக்கிறது. நேரம் என்பது அதிகமாக யோவானில் நேர் பதமாகும், லூக்கா இங்கே இதனை எதிர் மறையாக பாவிக்கின்றார். இருட்டில் இவர்கள் செய்யும் செயல், கள்வர்கள் செய்யும் கொள்ளை செயலாகும் என்று சொல்கிறார் போலும்.

ஈ. தலைமை ஆயர் பேதுருவின் மறுதலிப்பு (22,54-65), அபாயமாகிப்பபோன ஆண்டவர்.

1. தலைமைக்குருவின் வீட்டிற்கு இயேசுவை இழுத்துச் செல்வது, ஏற்கனவே இவர்கள் அதனை திட்டமிட்டிருந்தார்கள் என்பதனைக் காட்டுகிறது. மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது பேதுருவை மையப்படுத்துகிறார் லூக்கா. ஒரு மணித்தியாலத்தில் ஒரு பெண்ணும் இரு ஆண்களுமாக மூன்று பேர் பேதுருவை சோதிக்கின்றனர். ஒரு வேளை பேதுரு சோதனைகளின் போதும் இந்த இடத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதனைக் காட்டலாம். ஆண்டவர் பேதுருவை கூர்ந்து நோக்கினார் என்று, எமது காட்டிக்கொடுப்புக்களில் கடவுள் கூர்ந்து நோக்குகிறார் என்கிறார் லூக்கா. மனம்நொந்து அழுதது, இயேசுவிடம் இருந்து ஓடிச்செல்ல அல்ல, மாறாக ஊதாரி மகனைப்போல தந்தையிடம் திரும்பிவரவே என்கிறார் லூக்கா. பேதுரு பாவியானலும் துரோகியல்ல என்பது போல உள்ளது.

2. இயேசுவை பரிகாசம் செய்தவர்கள் ஆலய காவலர்கள் என்பது லூக்காவின் எழுத்து. இங்கே மெசியா அல்லது மனுமகன் என்பதைவிட, கடவுளின் உண்மையான இறைவாக்கினர் ஏளனம் செய்யப்படுகிறார் எனக் காட்டுகிறார். இறைவாக்கினரை பழிந்துரைப்பதன் மூலம் ஆலயத்தை காக்கிற இவர்கள், ஆலயத்தின் கடவுளையே பழிந்துரைக்கின்றனர் என்கிறார் லூக்கா.

உ. பலமில்லாத யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு (22,66-71): கடவுள் நிந்தனை சட்டம், கடவுளை நிந்திக்கிறது.

1. இயேசுவை இழுத்து வந்தவர்கள் மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் என்பதன் மூலம் அனைத்து தலைமைத்துவமும் இயேசுவை முடிவுகட்ட ஒன்றாக வருவதை அழகாக காட்டுகிறார். லூக்கா, இங்கே உரையாடல்களை பதிவு செய்வதன் மூலம், இயேசு சுயநினைவில் இருந்தார் என்பதனை காட்டுகிறார், எனவே இவர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிடுகின்றனர், இயேசு தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதில் மற்றைய நற்செய்தியாளருடன் ஒத்துபோகிறார். மத்தேயு-மாற்குவில் இரவில் நடக்கும் சங்கக் கூட்டம் இங்கே விடியலில் நடக்கிறது. இயேசு இத்தலைவர்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறார் அத்தோடு தனக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கிறது என்கிறார். தன்னை இங்கே மானிட மகனாக உருவகித்து கடவுளின் வலப்புறம் தன்னுடையது என்கிறார் (காண் தானி.7,13-14). தேவ நிந்தனைச் சட்டம், தேவனையே நிந்திப்பதாக மனிதர்களின் நகைச்சுவையை விவரிக்கிறார் லூக்கா.

2. சங்கத்திற்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லாமையால் அதனை தேட வழிதேடுகின்றனர். இயேசுவின் வாயிலிருந்து கேட்டோமே என்று இவர்கள் சொல்வதன் மூலம், கேட்டும் புரிந்து கொள்ளவில்லை என ஊகிக்க வைக்கிறார்.

ஊ. வெளிநாட்டத்தலைவர்கள் பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல் (23,1-12) நரியும் கழுதைப்புலியும்

1. பிலாத்து அன்றைய நாளில் இருந்து உரோமைய பேரரசின் மாகாண பதிலாளி. ஐந்து வருடங்களாக இந்த வேலையை செய்து வந்தான், தன்னுடைய அலுவலகம் செசாரியாவில் இருந்தாலும், பாஸ்கா விழாவில் கலவரம் நடப்பதை எதிர்பார்த்து எருசலேமில் இருந்தான். அரசியல் ரீதியான காரணங்களை தங்களுடைய சகோதரனுக்கு எதிராக ஒர் அன்னிய ஆட்சியாளரிடம் முன்வைக்கின்றனர், இந்த மூத்த சகோதரர்கள். மத ரீதயான காரணங்களை, பல கடவுள் கொள்கைக்காரர்களான உரோமையர் செவிசாயார் என்பதனை உணர்ந்து: புரட்சி, கப்பம், அரச துரோகம் என்ற குற்றங்களை சுமத்துகின்றனர். மாற்குவைப் போல லூக்காவும், பிலாத்துவை அவ்வளவு கெட்டவனாக காட்டாமல், ஆண்டவரை குற்றம் சுமத்தியவர்கள்மேல் வாசகர்களின் பார்வையை இழுக்கிறார். பிலாத்துவுக்கு இயேசு கொடுக்கும் பதில், புதிர் போல உள்ளது.

2. ஏரோது முன்னிலையில் இயேசுவின் காட்சி லூக்காவில் உள்ள சிறப்பம்சம். இந்த இதுமேயனான ஏரோது, ஒரு யூதன் அல்ல, மக்கபேயருடைய காலத்தில் கிரேக்கருடனும், உரோமருடனும் சேர்ந்து, ஹஸ்மோனிய ஆட்சியாளர்களை வஞ்சித்து ஆட்சியை பிடித்தவன்தான் இவன் பாட்டன், பெரிய ஏரோது. வரலாற்றில் பெரியவர்கள் இப்படியானவர்கள்தான். இவனைத்தான் ஆண்டவர் நரி என்று வர்ணிப்பார். பிலாத்துவும் ஏரோதும் ஒருவருக்கொருவர் குறைவில்லாத அரசியல் செய்கின்றார்கள். ஏரோது திருமுழுக்கு யோவானைப் பொருட்டு இயேசுவைக் காணவிரும்பினான். இயேசு இவனுக்கு எந்த பதிலும் சொல்லாதது, அவனுக்கு கிடைக்கும் உச்ச கட்ட தண்டனை. அவர் வார்ததைகளைக் கேட்க இவனின் காதுகளுக்கு தகுதியில்லை எனச் சொல்லாம். அமைதி எவ்வளவு பலமான ஆயூதம் என்பதை இங்கு காணலாம். ஆலய படைவீரர்களைப் போல ஏரோதின் கூலிப்படைகளும் ஆண்டவரை ஏளனம் செய்கிறது. தீயவர்கள் நன்பர்கள் ஆகிறார்கள். இயேசுவின் உயிர்பின் பின்னர் இந்த நரியும், பிலாத்துவும் தங்களது தலைவர்களாலேயே தூக்கி வீசப்படுவார்கள். பிலாத்து ஏரோதுவை வைத்து அரசியல் லாபம்செய்யப் பார்கிறான். உரோமையர்கள் தங்களை கழுகு என்பார்கள், இவனுக்கு எந்த கழுகுக் குணமும் இல்லை.

எ. மரண தண்டனை (23,13-25), உயிருக்கு மரணதன்டனை.

1. இந்த காட்சி மூன்று செய்திகளை அழகாக வர்ணிக்கிறது.

அ. இயேசுவின் குற்றமின்மை,

ஆ. கலகக்கும்பலின் தீமைக்கான கொந்தளிப்பு,

இ. பிலாத்துவின் பலவீனம்.

பிலாத்து மூன்று முறை அதாவது நிறைவாக, இயேசுவை விடுதலை செய்ய விரும்பியும் அவனால் முடியவில்லை என்று காட்டுவதன் மூலம் இந்த பாவத்திற்கு முழுகாரணமும் இந்த மக்கட் தலைவர்களே என்கின்றார் லூக்கா. பரபாவை இவர்கள் விடுதலை செய்யக் கேட்பதன் ஊடாக எப்படியாவது அல்லது எவரையாவது கொண்டு இயேசுவை முடிக்கவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது புலனாகிறது. வ.17 லூக்காவின் மூல பிரதியில் இல்லை, மாற்குவிலிருந்து உள்புகுத்தப்பட்டுள்ளது (மாற் 15,6). பிலாத்து இவர்களை கூப்பிட்டு பேச நினைக்கையில் கலகக் கும்பல் திடீரென சிலுவை மரணத்தைக் கேட்டு கத்துகிறது. லூக்கா கிரேக்கத்தில், ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டார்கள் (ἀνακράζω அனாகிராட்ஸோ) என்று எழுதுகிறார்.

2. ஆட்சியாளின் பலவீனமும், கலகக்காரர்களின் பலமும் எவ்வளவு ஆபத்தானது. அவை இயேசுவிற்கு மரசண தண்டனையை கொண்டுவருகின்றன. சிலுவை மரணம் உரோமையருடைய ஆட்சியில், பேரரசிற்கு எதிராக கலகம் அல்லது பாரிய குற்றம் என உரோமையர்கள் நினைத்ததை-செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இது உரோமையர் அல்லாதவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. யூதர்கள் இந்த தண்டனையை கடவுளுடைய சாபமாக கண்டனர் (காண் இனை 21,23: காலா 3,13). இங்கே கடவுளுடைய சாபத்தை கடவுளுக்கு கொடுக்க இவர்கள் முயலுகிறார்கள். பிலாத்துவின் முயற்சி தோற்க்க, கலகக் கும்பலின் கூச்சல் வெற்றியளிக்கிறது. இயேசு இவர்களின் ஆசைக்கு கையளிக்கப்படுகிறார் என்று உணர்வு பூர்வமாக பதிகிறார் லூக்கா.

ஏ. மீட்பின் சிலுவைப் பாதை (23,26-31), பாதையான முதல் பயனம்.

1. இந்த பகுதியில் எமது பாரம்பரிய சிலுவைப்பாதையின் சில நிலைகள் வருவதைக் காணலாம். (சீரேனூர் சீமோனும், எருசலேம் மகளீரும்). இந்த சீரேன் ஊர் சீமோன், பின்னாலில் வந்த சீரேனிய கிறிஸ்தவர்களை நினைவூட்கிறார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீமோன் இயேசுவின் சிலுவையை சுமந்ததை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவுசெய்கின்றனர். சீமோன் நல்ல சீடன் போல இயேசுவிற்கு பின்னால் நடக்கிறார். (காண் 14,27: சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றாதவர் என் சீடராய் இருக்க முடியாது.)

2. பலமில்லாமல் சிலுவையைச் சுமந்தாலும், ஆண்டவராக இருக்கிறார் என்பதை எருசலேம் மகளீருக்கு சொன்ன வார்த்தைகளிலிருந்து எண்பிக்கிறார் லூக்கா. இங்கே ஆழமான பல கருத்துக்களை பதிகிறார் லூக்கா. எருசலேம் மகளீர் என இஸ்ராயேல் இனத்தையே குறிப்பிடுகிறார் லூக்கா. இயேசு ஒசேயா 10,8ஆ வரிகளையே நினைவூட்டுகிறார். லூக்கா 11,27ல் ஒரு பெண் மரியாவுக்கு குழந்தை பிறந்ததை நினைத்து மகிழ்ந்ததற்கு மாறாக இப்போது இவர்கள் பிள்ளைப்பேற்றை நினைந்து அழுவார்கள் என்பது, லூக்கா வாசகர்களுக்கு தரும் கடவுளின் இறுதி நாள் பற்றிய பயங்கர காட்சிகளாகும். பாவம் செய்யாத ஆண்டவருக்கு இந்த தண்டனை கிடைத்தால், பாவத்திறகுரிய எருசலேமின் நிலை என்ன என்று கேட்கிறர் லூக்கா. இந்த கேள்விற்கு விடை கி.பி 70இலும், 150 இலும் கிடைத்தது. ஒசேயா 10,8ஆ நிறைவேறியது, உரோமையரின் இரக்கமற்ற இராணுவ கைகளால்.

ஒ. சிலுவையில் அறைதலும் மரணமும் (23,32-49). உயிர்த் தூக்கம்.

1. லூக்கா, கொல்கொதா என்ற அரமேயிக்க சொல்லை பாவிக்கமால் மண்டையோடு என்று கல்வாரி மலையின் உச்சியை குறிக்கும் ஒரு பொதுப் பெயரை பாவிக்கிறார். இயேசு இரண்டு குற்றவாளிகளின் நடுவில் சிலுவையில் அறையப்படுகிறார், இதனை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர் (காண் எசா 53,12).

2. இயேசுவின் மன்னிப்பு வார்த்தைகள் பின்னாலில் கிறிஸ்தவ மறைசாட்சிகளின் மன்னிப்பு வார்த்தைகளானது, ஸ்தேவானும் இதனையே சொன்னார் (காண். தி.பணி 7,60).

3. இயேசுவின் ஆடைகளை பகிர்ந்து தி.பாடல் 22,19ஐ நிறைவுசெய்கிறார்கள். லூக்கா முழு யூத இனத்தையும் குற்றம் சொல்லாமல், அவர்களின் தலைவர்களையே கடுமையாக சாடுகிறார். லூக்கா, வழிப்போக்கர்கள் இயேசுவை கடவுளின் மெசியா என்று சொல்லி கிண்டல் செய்வாதாக குறிப்பிடுகிறார், இது ஆண்டவரின் திருஉரு மாற்றக் காட்சியை நினைவு படுத்துகிறது (காண் 9,35). மற்றைய நற்செய்தியாளர்கள் இந்த இடத்தில் இயேசுவை, யூதர்களின் அரசர் என்று சொல்லி ஏளனம் செய்ததாக எழுதியுள்ளார்கள். படைவீரர்கள் தங்களது இரண்டாம் தர இரசத்தை அரசரான இயேசுவுக்கு கொடுப்பதன் மூலம், தங்களது பகிடிவதையை காண்பிக்கின்றனர்.

4. திருந்திய குற்றவாளியின் விசுவாச பிரமாணம், லூக்காவிற்கே உரிய பாணி. அவரின் நற்செய்தியின் மையப் பொருளும் இதுதான். பாவிகளையே தேடி மீட்கிற கடவுள், இங்கேயும் அதனையே செய்கிறார். இவரின் மூலம், ஆண்டவரின் அரசு வருகிறது என்பதையும், அதிலே அரசர், இயேசு என்பதையும், மனந்திருப்பியவர்கள் இன்றே அதை அடைவார்கள் என்பதையும், இயேசுவின் மரணம்தான் புதிய விடுதலைப் பயணம் என்பதையும் அழகாக காட்டுகிறார். இன்று (σήμερον செமெரொன் - இன்று) என்பதன் மூலம், இயேசு காலங்களை நிர்ணயிக்கும் கடவுள் என்று காட்டுகிறார். பேரின்ப வீடு என்பது கிரேக்கத்தில் பரதெய்சொஸ் (παράδεισος) எனப் பொருள் படும். இது ஏதோன் தோட்டத்தை நினைவுபடுத்துகிறது.

5. இயேசுவின் மரணத்தில் பல காட்சிகள் நடைபெறுகின்றன. இருள்: தீமையின் நேரம் என உருவகிக்கலாம். திரை கிழிதல்: இயேசுவின் மரணம், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான திரையை கிழக்கிறது என நினைவூட்டுகிறது. இயேசு, யாராலும் கொலை செய்யப்பட முடியாதவர், அவர் கடவுள், தன் ஆவியை தன்னால் தான் கொடுக்க முடியும் என்று காட்டுகிறார் லூக்கா. சொந்த மக்கள் தம் மெசியாவை புறக்கணிக்க இங்கே ஒரு அன்னியன் அவரை இறைமகனாக அடையாளம் காண்கிறார். மாரடித்து புலம்புவதன் மூலமாக பெண்கள் எப்போதும் லூக்காவில் முக்கியமான இடத்தை பிடிப்பதைக் காணலாம். லூக்கா, கெஸ்தனமெனியில் சீடர்க்ள் இயேசுவை விட்டு ஓடினார்கள் என்று குறிப்பிடவில்லை, ஆகவே அவர்கள் இங்கே தெலைவில் நின்று அனைத்தையும் பார்திருக்கலாம்.

ஓ. உயிரின் நல்லடக்கம் (23,50-56)

1. அரிமத்தேயா எருசலேமிற்கு வடக்கிலிருந்த ஒரு சிற்றூர். யோசேப்பு இங்கே சக்கரியா, எலிசெபேத்து, சிமியோன், அன்னா போன்ற நீதிமான்களின் வரிசையில் இடம்பெறுகிறார். இவரும் இறையாட்சிக்கு காத்திருக்கிறார். புதுக் கல்லறை என்கிற இடத்தில் ஆச்சரியாமாக ஒத்தமை நற்செய்தியாளர்களும் யோவானும் ஒத்துப்போகிறார்கள். தெய்வீக மக்கள் அல்லது அரசர்கள் புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை பல வரலாற்று கதைகளில் காணலாம்.

2. பெண்கள் கல்லறையில் இயேசுவை தரிசித்தார்கள் என்று சொல்லி இது வதந்தியல்ல என்கிறார் லூக்கா. ஓய்வு நாளுக்கு எதிராக எவரும் எதனையும் செய்யவில்லை என்பதை அவதானமாக சொல்கிறார் லூக்கா. இது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வாதத்தை தருகிறது. நறுமண தைலங்களையும் எண்ணைகளையும் ஆயத்தம் செய்கிறார்களே தவிர, அவற்றைக் கொணர்ந்து இயேசுவிற்கு ஓய்வு நாளில் பூசவில்லை என்கிறார்.

ஆண்டவரின் பாடுகளின் வரலாறு கல்லறையில் முடிவடையவில்லை,

அது அவரின் உயிர்பிலே நிறைவடைந்து தொடர்கிறது.

எருசலேமிலே அவர் நடந்த பாதைகளில்

இன்றும் பல ஆயிரம் மக்கள் தினம் தினம் நடக்கிறார்கள்,

ஆனால் அழுகையும் ஒப்பாரியும் இன்றும் நின்றபாடில்லை.

இயேசு நம்முடைய பாதையும், பயணமும்,

நாம் அடையவேண்டிய இலக்குமாக இருக்கிறார்.

இந்த குருத்து ஞாயிறிலே,

கழுதைக் குட்டியில் வருகின்ற ஆண்டவர்,

எங்களை எமது பாவங்கள், பலவீனங்களில் இருந்து மீட்பாராக. ஆமென்.

குருத்தோலை ஞாயிறு வாசக விளக்கத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://jegankumaromi.blogspot.com