இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம் இரண்டாம் வாரம் (இ)

முதல் வாசகம்: தொடக்க நூல் 15,5-12.17-18
பதிலுரைப்பாடல்: 27
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3,17-4,1
நற்செய்தி: லூக்கா 9,28-36


முதல் வாசகம்
தொ.நூ 15,5-12.17-18:

5அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்றார். 6ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். 7ஆண்டவர் ஆபிராமிடம், 'இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே' என்றார். 8அதற்கு ஆபிராம், 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?' என்றார். 9ஆண்டவர் ஆபிராமிடம், 'மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா' என்றார். 10ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. 11துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். 12கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. 17கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. 18அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, 'எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19 கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்' என்றார்.

இந்தப் பகுதி கடவுள் ஆபிரகாமுடன் (அவரின் பெயர் இன்னும் மாற்றப்படவில்லை) செய்த உடன்படிக்கையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு சற்று முன்னர் ஆபிரகாம் கீழைத்தேய அரசர்களை லோத்துவின் பொருட்டு தோற்கடித்திருந்தார். அத்தோடு விவிலியத்தில் கிறிஸ்துவுக்கு முன்அடையாளமாக கருதப்பட்டு பல கேள்விகளை இன்னும் எழுப்பிக்கொண்டிருக்கும் சாலமின் அரசர் மெல்கிசதேக்கின் ஆசீரையும் பெற்றிருந்தார், இருந்தும் தனக்கு வாரிசில்லாத துன்பம் அவரை வாட்டிக்கொண்டிருந்தது. இப்படியான வேளையில்தான் உண்மையான ஆசீர் கடவுளிடம் இருந்து வருகிறது. இந்தப்பகுதியிலே விவிலிய ஆசிரியர், ஆபிரகாமின் விசுவாசத்தையே மையக்கருத்தாக காட்டுகிறார். இதனை பல வேளைகளில் பவுல் தனது கடிதங்களில் கோடிடுவார். ஆண்டவர் இயேசுவும் ஆபிரகாமின் விசுவாசத்தை பாராட்டுவார். இங்கே பல பாரம்பரியங்கள் (யாவே மற்றும் எலோயிஸ்து) ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆழமாக வாசித்தால் சில வித்தியாசங்களைக் காணலாம். வ5 இரவுக் காட்சியை காட்டுகிறது, வ12,வ17 மாலைக் காட்சிகளைக் காட்டுகின்றன. வ.6 ஆபிரகாமின் விசுவாசத்தை காட்டுகிறது, வ.7 கடவுளின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது, எற்கனவே வ.2ல் ஆபிரகாம் கடவுளின் பெயரைத் தெரிந்திருக்கிறார். இங்கே சில பகுதிகள் வ.1-6, வ.13-16 எதிர்கால சந்ததியை பற்றி கூறும் வேளை, வ.17-21 உடன்படிக்கை சடங்குகளைப் பற்றி கூறுகிறது.

வ5: ஆபிரகாமின் இறைவாக்கினர்-தன்மை காட்டப்படுகிறது. ஒர் இறைவாக்கினரைப் போல ஆபிரகாம் வெளியே அழைக்கப்படுகிறார். விண்மீன்கள், அளவிட முடியா எண்ணிக்கையையும் என்றும் அசையாத உறுதியையும் குறிக்கின்றன. விண்மீன்களையும், கடற்கரை மணலையும் அளக்க முடியாது என்பது அக்கால ஞானமாக இருந்திருக்கலாம். இன்றும் இவற்றை முக்கியமாக, விண்மீன்களை துல்லியமாக அளக்கமுடியுமா என்பது கேள்விதான். (நிச்சயமாக கடற்கரை மணலை அளவிட முடியாது என எடுக்கலாம்.) סְפֹר הַכּוֹכָבִים אִם־תּוּכַל செபெர் ஹகோகாவிம் 'இம்-தூகல்- முடியுமானால் வானத்து விண்மீன்களை எண்ணிப்பார்.

வ.6: இந்த வரி மிக அதிகமாக புதிய ஏற்பாட்டில் பாவிக்கப்படுவது, புனித பவுலுக்கு பிடித்தமான வரி. (காண் உரோ 4,3.20-24: கலா 3,6: யாக் 2,23), இதுவே இந்த பகுதியின் மையக்கருத்தாக இருந்திருக்க வேண்டும். நீதியாக கருதுதல், ஒரு குருத்துவ மொழி. ஒருவரின் காணிக்கை இவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கே ஆபிரகாமின் நம்பிக்கையே அவருடைய காணிக்கையாக கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. (צְדָקָה ட்செதெக்காஹ் - நீதி) வ. 7-8: இந்த வரிகள் கடவுளுக்கும் ஆபிரகாமிற்கும் இடையிலான உடன்படிக்கை உரையாடல். ஆபிரகாமின் கேள்விக்கு பின்னால் தன்னுடைய வாரிசைப்பற்றிய கவலை தெரிகிறது. இந்த உரையாடல் ஆபிரகாமிற்கு மட்டுமல்ல பல வேளைகளில் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்ட போது, இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்தது. இன்று நமக்கும் சரியாக பொருந்தும்.

ஆபிரகாம் கல்லேதய நாட்டின் ஊரிலிருந்து அழைக்கப்பட்டவர். (מֵאוּר כַּשְׂדִּ֔ים மெ'ஊர் கஷ்திம்). கல்தேயா பபிலோனியாவின் எபிரேயப் பெயர். இயல்பில் ஆபிரகாம், ஒரு பபிலோனியர் என எடுக்கலாம். பிற்காலத்தில் பபிலோனியர், வரலாற்றின் நிகழ்வாக எபிரேய-யூதர்களின் எதிரிகளாக கருதப்பட்டனர்.

முதலில் ஆபிரகாம் நம்பினார் எனச் சொல்லப்பட்டது. இப்போது அவர் கேள்வி கேட்கிறார். சிற்றரசர்கள் பேரரசர்களுடன் உடன்படிக்கை செய்கின்றபோது, அவர்கள் அடையாளம் கேட்பார்கள். அவர்களுக்கு இது தேவையாக இருந்தது. இந்த பின்புலத்தில் தான் ஆபிரகாமின் கேள்வியும் இருக்கிறது. இதனை ஆபிரகாமின் அவநம்பிக்கையாக கருதமுடியாது.

வ.9-11: மிகவும் ஆச்சரியத்திற்குரிய பகுதி. இது மெசப்தேமியாவில் இருந்த உடன்படிக்கை சடங்குகளை ஒத்திருக்கிறது. மூன்று வயதுள்ள பசு, செம்மறி, வெள்ளாடு போன்றவை நிறைவான பலிகளைக் குறிக்கலாம். மிருகங்களை வெட்டியவர் புறாக்களை வெட்டவில்லை ஏன் என்று இன்றுவரை சரியாகத் தெரியாது. தின்ன வந்த பறவைகளை சில ஆய்வாளர்கள் எகிப்திய அடிமைத்தனமாகவும், வெட்டப்பட்ட மிருகங்களை, எகிப்தில் பலியான இஸ்ராயேலரை குறிப்பதாகவும் காண்கின்றனர்.

வ.12-17: அந்தி, உறக்கம், காரிருள், படர்ந்த இருள், புகை மற்றும் தீப்பந்தம் என்பவை கடவுளை குறிக்கவும், அவருடைய வெளிப்பாட்டை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு;ள்ளன. சிலர் இதனை எகிப்திலிருந்து மக்களை மீட்டதற்கான முன் அடையாளமாகவும் காண்கின்றனர்.

வ. 18-20: இந்த மக்கள் கூட்டம் அக்காலத்தில் இந்த பகுதியிலே வாழ்ந்தவர்களை குறிக்கிறது. எகிப்தின் ஆறு என்பது நைல் நதியைக் குறிக்காது, மாறாக சீனாயை நோக்கி இருந்த ஒரு ஓடையைக் குறிக்கலாம். இதுதான் கானான் நாட்டின் எல்லையாக கருதப்பட்டது. இந்த பகுதிகள் உண்மையில் சாலமோனின் காலத்தில் மட்டும்தான் இஸ்ராயேலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பத்து வகையான மக்கள் கூட்டம் இந்த இடத்தில் மட்டுமே தனித்துவமாக உள்ளது. இங்கு நோக்கப்பட வேண்டியது, அனைத்து நிலங்களும் கடவுளுடையவை, அவர் தான் விரும்பியவர்களுக்கு கொடுக்கிறார். யாரும் இந்த பூமியை பரம்பரை சொத்தாக கொள்ள முடியாது. சிலர் தங்களைத் தவிர மற்றவரை வெளிநாட்டவர், வந்தேறிகள் என்று கூறுவது வேடிக்கையானது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 27

1ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

2தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.

3எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.

4நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.

5ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்.

6அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்; அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.

7ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்; என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.

8'புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம்; ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன்.

9உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்; என்னைக் கைவிடாதிரும்.

10என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.

11ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்; என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்.

12என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.

13வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.

14நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.



திருப்பாடல் 27, தனி மனித புகழ்ச்சிப்பாடல் என தமிழ் விவிலியத்தில் வகைப் படுத்தப்பட்டுள்ளது. தாவீதுக்கு அல்லது தாவீதுடைய, என்ற ஓர் ஒற்றைச்சொல் முன்னுரையை எபிரேய விவிலியம் இதற்கு தருகிறது (לְדָוִד லேதாவித்). திருப்பாடல் 26, ஒரு நேர்மையாளர் செய்யும் விண்ணப்பம் போலவும், இந்தப்பாடல் அதன் தொடர்ச்சியாக அந்த நேர்மையாளரின் புகழ்ச்சியாகவும் அமைந்துள்ளது. இது புகழ்சிப்பாடலாக தோன்றினாலும், இதன் வரிகளுக்கு பின்னால் இஸ்ராயேலின் விசுவாச பிரமாணம் அடங்கியுள்ளதை அவதானிக்கலாம். இதன் காலம் மற்றும் இடத்தை அறிவது இலகுவாக இருக்காது, ஆனால் துன்பமான வேளையிலும் மற்றும் செப வேளையிலும் பாவிக்கப்படக்கூடிய ஒரு பாடல் போல தோன்றுகிறது. ஒரு சில ஆய்வாளர்கள் இந்த பாடலில் சமாந்தர அடுக்கு கவிநடையை காண்கின்றனர். அதே வேளை தனியான வரிகளில் இந்த பாடல், ஏறு படி வடிவிலான கவிநடையையும் கொண்டுள்ளது.

அ1: வவ.1-3- கடவுளின் மீது நம்பிக்கை வைக்கவேண்டிய தேவை

ஆ1: வவ.4-6- கடவுளிடம் பாதுகாப்பிற்கான முதலாவது செபம்

ஆ2: வவ.7-12- கடவுளிடம் பாதுகாப்பிற்கான இரண்டாவது செபம்

அ2: வவ.13-14- கடவுளிடம் நம்பிக்கை வைத்தல் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது.

வ.1: ஆசிரியர் இரண்டு கேள்விகளை கேட்கிறார் அதில் அவருடைய விடையும் அடங்கியுள்ளது, இந்த கேள்விகள் நேர்மறையான கேள்விகள் அல்ல, விடைகளைக் கொண்ட கேள்விகள் எனலாம். ஒளி மற்றும் மீட்பு என்ற சொற்கள் இரண்டு வேறு சொற்கள் என்றாலும், அர்த்தத்தில் அவை ஒத்த கருத்துச் சொற்களே. இருவருடைய மீட்புதான் ஆசிரியர் சொல்லும் ஒளி. இதனையே இந்த ஆசிரியர் காட்டுகிறார். இந்த ஒளியாகவும், மீட்பாகவும் ஆண்டவர் இருப்பதனால், அவர் நீதிமான்கள் யாருக்கும் அஞ்சவோ அல்லது அஞ்சி நடுங்கவேண்டியதோ இல்லை என்கிறார். முதல் ஏற்பாட்டில் ஒளியும் (אוֹר ஓர்), மீட்பும் (יֵשַׁע யெஷா), கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகின்ற அடையாளங்கள்.

வ.2: தீயவர்கள் என்பவர்கள் இங்கே இவரின் எதிரிகளாகவும், பகைவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இவரின் உடலை விழுங்க முயற்சிக்கிறார்கள் என்கிறார், இது அவர்கள் இவரை அழிக்க முயல்கிறார்கள் என்பதை ஊகிக்கலாம்.

வ.3: இந்த வரி, அரச வாழ்வியலை காட்டும் வரி போல மேலோட்டமாக தோன்றுகிறது. இந்த வரியைக் கொண்டு ஆய்வு செய்கிறவர்கள், இந்த பாடலின் ஆசிரியர் ஓர் அரசராக இருக்க வேண்டும் என நினைப்பர், ஆனால் இது சாதாரண மனிதனின் சிக்கலாகக் கூட இருக்கலாம். அதே வேளை, ஆசிரியர் இதனை கற்பனையாகவும் வடித்திருக்கலாம். போர் மற்றும் படை போன்றவை அக்காலத்திலும் இக்காலத்திலும் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கிய நிகழ்வுகள். இருப்பினும் ஆண்டவர் தன்னோடு இருப்பதனால் இவற்றிக்கு அஞ்சவேண்டிய தேவை தனக்கில்லை என்கிறார் ஆசிரியர்.

வ.4: தன்னுடைய ஒரே ஒரு விண்ணப்பம் என்று சொல்லி மூன்று விண்ணப்பங்களை முன்வைக்கிறார் ஆசிரியர். அவை உண்மையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டதே. அவர் விண்ணப்பங்களானவை:

அ. ஆண்டவரின் இல்லத்தில் வாழ்நாள் எல்லாம் குடியிருத்தல் שִׁבְתִּי בְּבֵית־יְהוָה

ஆ. ஆண்டவரின் அழகை-இனிமையைக் காணுதல் לַחֲזוֹת בְּנֹֽעַם־יְהוָ֗ה

இ. அவரது கோவிலில் அவர் திருவுளத்தை காணல் ולְבַקֵּר בְּהֵיכָלֽוֹ



இந்த வேண்டுதல்கள் இஸ்ராயேல் நீதிமானுடைய சாதாரணமானதும், இறுதியுமானதுமான வேண்டுதல்கள். இவற்றையே அதிகமான இஸ்ராயேலர் விரும்பினர். ஆண்டவருடைய இல்லம் என இரண்டு வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன, அவை ஓர் கட்டப்பட்ட ஆலயத்தை குறிப்பன போல் உள்ளன, ஆக இந்த பாடல் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டதன் பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம் (בֵית־יְהוָה கடவுளின் வீடு, הֵיכָלֽוֹ அவர் மாளிகை).

வ.5: இந்த வரியில் கடவுளின் உறைவிடம் கூடாரம் என சொல்லப்படுகிறது (אֹהֶל 'ஓஹெல்). இந்த சொல் பாலைவன இடப்பெயர்வு அனுபவத்தை நினைவுகூறுகிறது. அதாவது இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து மீண்டு வந்தபோது நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் பயணம் செய்தனர், அப்போது ஆண்டவர் சந்திப்புக் கூடாரத்தில் தங்கினார், இதனால் கூடாரம் கடவுளின் இல்லத்தின் அடையாளமாகியது. இந்த கூடாரத்தில் கடவுள் தன்னை எல்லா தீங்கிலிருந்தும் ஒழித்து வைப்பார் என்கிறார் ஆசிரியர், ஏனெனில் இந்த கூடாரத்திற்குள் எவரும் நுழைய முடியாது. ஆக இது மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியது. அடுத்து, குன்றின் உச்சியையும் அவர் பாதுகாப்பான இடமாக காண்கிறார். குன்றிலே என்று எபிரேய விவிலியத்தில் உள்ளது (צוּר ட்சுர்). குன்று பாதுகாப்பான இடம், அத்தோடு இங்கு இலகுவில் எதிரிகள் ஏறிவர முடியாது, அல்லது மறைவாக தாக்க முடியாது.

வ.6: மேல் சொன்ன வரியில், பாதுகாப்பிற்காக மன்றாடுகிறார், இதன் பலனை இந்த வரியில் விவரிக்கிறார். எதிரிகள் முன்னால் தலைநிமிர்தல், வெற்றியைக் குறிக்கிறது. ஆண்டவரின் கூடாரத்தில் பலிசெலுத்துவும், புகழ்ச்சிப் பாடல்களை பாடுவதும் மகிழ்வைக் குறிக்கின்றன. அவை வெற்றியையும் குறிக்கலாம். אֹֽיְבַי 'ஓயெவாய்- என் எதிரிகள்.

வ.7: இந்த வரி மீண்டுமாக வேண்டுதலை மையப்படுத்துகிறது. குரலைக் கேட்பதும், பதிலளிப்பதும் ஆண்டவரின் செவிசாய்தலைக் குறிக்கின்றன. ஆண்டவர் இரக்கம் கொள்ளும் போதுதான் செவிசாய்கிறார் என இஸ்ராயேலர்கள் நம்பினார்கள்.

வ.8: இவர் செபிக்கும் போது அந்த செபம் கேட்கப்பட்டுவிட்டது என்றால் போல், இவரின் உள்மனம் சாற்றுகின்றது. ஆண்டவரின் முகத்தை நாடுதல் என்பது, அவரின் பிரசன்னத்தை நாடுதல் என்ற பொருள் படும். இதனைத்தான் இவர் உள்ளம் சொன்னது, அதனையே அவர் செய்வதாக வாக்களிக்கிறார். בַּקְּשׁוּ פָנָי பாக்ஷூ பானாவ்- அவர் முகத்தை தேடு.

வ.9: இந்த வரியில் ஒரு பயத்தையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். கடவுள் ஒருவருக்கு முகத்தை மறைத்தல் என்பது, கடவுள் ஒருவருக்கு செவிசாய்கிறார் இல்லை என்ற பொருளைத்; தருகிறது. கடவுளுக்கு உருவம் இல்லை, அவருக்கு முகமும் இல்லை ஆனால் இங்கே கடவுளை ஒரு மனித தலைவராக வர்ணிக்கிறார், இது அவரின் கடவுள் அனுபவத்தைக் காட்டுகிறது. கடவுள் முகத்தை மறைத்தல் என்ற செயலுக்கு இன்னும் பல ஒத்த செயல்கள் விவரிக்கப்படுகின்றன: சினம்கொண்டு அடியேனை விலக்கிவிடல், மீட்பராகிய கடவுள் தன்னை தள்ளிவிடல், மற்றும் கைவிடுதல் போன்றவை அவை. אַל־תַּסְתֵּ֬ר פָּנֶ֨יךָ 'எல் தஸ்டெர் பானெகா- உம் முகத்தை மறைக்காதீர்.

வ.10: இந்த வரி ஆசிரியரின் இறையனுபவத்தின் உச்சத்தைக் காட்டுகிறது. தன் தந்தையும் தாயும் தன்னைக் கைவிட்டாலும், கடவுள் தன்னை கைவிடார் என்கிறார். தன் பெற்றோர் தன்னை கைவிட்டுவிட்டார்கள் எனச் சொல்லவில்லை (כִּי־אָבִי וְאִמִּ֣י עֲזָבוּנִי கி-'ஆவி வெ'இம்மி 'அட்சாவூனி). பெற்றோர்கள் பிள்ளையை கைவிடுவது இயற்கையல்ல, அதனையும் தாண்டிய அன்பு இறைவனுடையது என்கிறார். (இக்கால உலகில் பெற்றோர்கள் பிள்ளைகளை கைவிடுவது அவ்வளவு கடினமான செயல் அல்ல, என்பதைப்போல் பல சந்தர்பங்களைக் காண்கின்றோம்).

வ.11: ஆண்டவரின் வழியை கற்றல் என்பது ஆண்டவரது நியமங்களை கற்றல் என்பதற்கு சமன். ஆண்டவரின் வழிதான் செம்மையான பாதை என்கிறார் ஆசிரியர். பாதை (דֶּרֶךְ தெரெக்) என்பது, விசுவாசம், மார்கம் மற்றும் வாழ்கை முறை என்ற பல அர்தங்களைக் கொடுக்கும்.

வ.12: இந்த வரி, ஆசிரியருக்கு பல எதிரிகள் இருப்பதுபோல ஒரு காட்சியைக் காட்டுகிறது. பொய்சாட்சிகள் மற்றும் வன்முறைகள் அக்காலத்திலும், நீதிமான்களுக்கு எதிரான சக்திகளாக இருந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. ஆசிரியர் தனக்கெதிராக சூழ்ச்சிகள் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிறார்.

வ.13: இஸ்ராயேலின் பாரம்பரிய விசுவாசம், மறுவாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லை. இஸ்ராயேல் முதல் ஏற்பாட்டு காலத்தில் இவ்வுலக வாழ்க்கையே முதலும் முடிவும் என நம்பினர். வாழ்வோர் நாடு என்பது இவ்வுலக நாட்டை குறிக்கும் (בְאֶרֶץ חַיִּים பெ'எரெட்ஸ் ஹய்யிம் வாழ்வோர் நாட்டில்). இறந்தோர் நாடு என்பது இருள் சூழ்ந்த சீயோல் שְׁאוֹל என்ற ஒரு பள்ளத்தை குறிக்கும். இதனை பற்றிய சரியான புரிதல் இன்னும் இல்லை. இது மரணத்தை குறிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர். ஆசிரியர் தான் இன்னும் நம்பிக்கையில் இருப்பதாக கூறுகிறார்.

வ.14: இந்த வரி, ஆசிரியர் தன்னுடைய உள்ளத்திற்கு தானே கட்டளையிடுவதைப் போல் அமைந்துள்ளது. ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பது ஒரு முக்கியமான நம்பிக்கை விழுமியம். காத்திருத்தல் என்பது இதயத்தை சஞ்சலம் இல்லாமல் வைத்திருத்தல் என்ற ஒரு அர்த்தத்தை இங்கே காட்டுகிறது. இதயம்தான் எண்ணத்தின் உறைவிடம் என்ற பழைய எபிரேய சிந்தனை இங்கே புலப்படுகிறது.



இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசகம்

பிலி 3,17-4,1: 17சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். 18கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். 19அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. 20நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். 21அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர். 1ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

பிலிப்பி நகரம் பல வகைகளில் உரோமையருக்கும் கிரேக்கருக்கும் மிக முக்கியமான நகரம். வெளியிலிருந்த சின்ன உரோமை என இதனை அழைத்தனர் (சில்லாலையை சின்ன உரோமை என அழைப்பது போல) காண்: தி.ப 16,12. உரோமையர் அனுபவித்த பல சுகபோகங்களை இந்நகரும் அனுபவித்தது. அலெக்ஸான்டரின் தந்தை மசிதோனிய பிலிப்புவின் பெயரைத்தான் இந்நகர் கொண்டிருந்தது. உரோமையர்களின் பல போர்களை இந்நகர் சந்தித்திருந்தது. இதுதான் திருத்தூதர் பவுலின் முதலாவது ஐரோப்பிய மறைத்தலம். இங்கு அவர் சீலாவோடும் திமோத்தேயுவோடும் பணியாற்றினார். இங்கே தான் லிதியா என்ற பெண் பவுலுக்கு பல உதவிகளைச் செய்தார். இங்கே பவுல் சிறைபடுத்தப்பட்டாலும், அவர் நிறுவிய தலத்திருச்சபை என்றும் அவருக்கு பிரமாணிக்கமாய் இருந்தது. பவுலுடைய திருச்சபைகளில் அவருக்கு பிடித்த தலத்திருச்சபையாக இதனைக் கொள்ளலாம். பிலிப்பியருக்கான திருமுகம் அவர் செசாரியாவில் சிறையில் இருந்தபோது எழுதினார் என பலர் கருதுகின்றனர். இன்றைய இரண்டாம் வாசகம் விண்ணக குடியுரிமையைப் பற்றி விவரிக்கின்றது. பவுல் உலக வாழ்க்கை தீயது என்று சொல்லவில்லை மாறாக உலக வாழ்வை அர்த்தமுள்ளதாகக் கேட்கிறார்.

வவ.12-16: இலக்கை நோக்கி ஓடுதல் என்ற தலைப்பில் இந்த வரிகள் வருகின்றன. பவுல் பல விதத்தில் தான் சரியான பாதையில் இருப்பதாக சொல்வார். இந்த வரியில் தனக்கும் தெரியாதவை பல உள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றித்திருக்க வேண்டும், என்பது பவுலுடைய மையக் கருத்தாக இருந்தது.

வ.17. இந்த வசனத்தை, 'என்னுடைய முன்மாதிரிகையை பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்' என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டும். இங்கே எழுவாய் பொருள் பவுல் அல்ல இயேசு ஆண்டவர். இரண்டாவது பகுதியில் உதாரண நடத்தைக்கு தன்னோடு இருந்தவர்களையும் பவுல் உள்வாங்குகிறார். 'Συμμιμηταί μου γίνεσθε ட்சும்மிமேடாய் மூ கினெஸ்தெ- என்னைப் போல் பின்பற்றுகிறவராய் இருங்கள்.'

வ.18. கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரானவர்கள் என்று பவுல் குறிப்பிடுவது, கிளர்ச்சி அல்லது பிரிவினை செய்பவர்களாக இருக்கலாம் 'τοὺς ἐχθροὺς τοῦ σταυροῦ τοῦ Χριστοῦ, டூஸ் எக்ஸ்த்தூஸ் டூ ஸ்டௌரூ டூ கிறிஸ்டூ - கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரானவர்கள்' . இவர்கள் யூதர்கள், கிரேக்க-உரோமையர்கள் அல்லது கிறிஸ்தவர்களாக கூட இருக்கலாம். கண்ணீரோடு சொல்லுதல் (καὶ κλαίων λέγω, காய் கிலாய்யோன் லெகோ- கண்ணீரோடு சொல்கிறேன்), அக்கால பவுலின் மன ரீதியான வேதனைகளைக் காட்டுகிறது. ஒருவேளை பவுல், இயேசு தன் மக்களை நினைத்து அழுததை பின்பற்றுகிறார் எனச் சொல்லலாம்.

வ.19. இவர்களின் செயல்களை விவரிக்கின்றார்: இதிலிருந்து எதோ உணவுச் சடங்குடன் சம்பந்தப்பட்டவர்களை பவுல் சாடுவதைப் போல தெரிகிறது. பிலிப்பு நகரில் இப்படியான பல சடங்குகள் அக்காலத்தில் பாவனையிலிருந்தன. சில யூத கிறிஸ்தவர்களும், திருமுழுக்கு பெற்றவர்கள் யூதச் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்று குழப்பம் செய்தனர். ὧν τὸ τέλος ἀπώλεια, ஹோன் டொ டெலொஸ் அபோலெய்யா- அழிவே அவர்கள் முடிவு. ὧν ὁ θεὸς ἡ κοιλία ஹோன் ஹொ தியூஸ்- வயிறு அவர்கள் கடவுளாக இருக்கிறது. καὶ ἡ δόξα ἐν τῇ αἰσχύνῃ αὐτῶν காய் ஹே தொக்ஸா என் டே அய்ஸ்குனே அவ்டோன்- அவர்களின் புகழ், அவர்களின் அவமானம், οἱ τὰ ἐπίγεια φρονοῦντες ஹொய் டா எபிகெய்யா புரொனூன்டெஸ்- அவர்களின் சிந்தனை உலகைப் பற்றியதே.

வ.20-21: சடங்குகளுக்காக மகிழ்வாக இருப்பவர்களுக்கு, எதிர் மக்களாக, கிறிஸ்தவர்களுக்கு விண்ணகத்தை தாய் நாடாக அமைக்கக் கேட்கிறார். தாய் நாடு என்ற கருத்துக்கு கிரேக்க மூல மொழியில் குடியுரிமை அல்லது பொநுநலவாயம் என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது (πολίτευμα பொலிடெயுமா). இந்தச் சொல்லின் ஊடாக பல கடமைகளையும் பல உரிமைகளையும் சொல்லுகிறார். மீட்பர் என்ற சொல்லை பவுல் இயேசுவிற்கு மிக அரிதாகவே பாவிப்பார் (σωτήρ சோடேர்- மீட்பர்), இச் சொல் சீசருக்கு பாவிக்கப்பட்டது. சில தேவைகளுக்காக பவுல், இச்சொல்லை பாவித்து சீசரை அல்லது மனித தலைவர்களை விட, இயேசு உன்னதமானவர் என்கிறார். அழியக்கூடிய உடலை மீட்கக்கூடியவர் இயேசு ஒருவரே என்பது பவுலுடைய வாதம்.

இயேசுவால் மட்டும்தான் தன்னுடைய சொந்த உடலை மீட்க முடிகிறது என்பது பவுலின் மிக முக்கியமான வாதம். அத்தோடு அவரால்தான் அனைவரையும் தனக்கு பணிய வைக்க முடிகிறது.

வ.1: இந்த வசனம் பவுல் பிலிப்பிய திருச்சபையை எவ்வளவு அன்பு செய்தார் எனக் காட்டுகிறது. பவுல் பாவிக்கும் அன்பு சொற்கள்: என் சகோதர சகோதரிகளே, அன்பிற்குரியவர்களே, விரும்பப்பட்டவர்களே, எனது மகிழ்சியானவர்களே, என் மகுடமானவர்களே. மகிழ்ச்சி (χαρά காரா- மகிழ்ச்சி) என்பதுதான் பிலிப்பியர் கடிதத்தின் முக்கியமான செய்தி. பவுல் பிலிப்பியர்களை தனது முடி, வாகை (στέφανος ஸ்டெஃபானோஸ்- முடி) எனச் சொல்லி தன்னை ஒரு மெய்வல்லுனராக காட்டுகிறார். விசுவாச வாழ்வு ஒரு ஓட்டப் போட்டி என்பதும் பவுலுடைய ஒரு உதாரணம். ஆண்டவரின் அன்பில் நிலைத்திருங்கள் என்பதே பவுலுடைய பிலிப்பியருக்கான காதல் செய்தி.


நற்செய்தி வாசகம்
லூக் 9,28-36

28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். 29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. 30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். 31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். 33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். 34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். 35அந்த மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. 36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

இந்த பகுதி லூக்கா நற்செய்தியின் ஆழத்திற்கு இன்னொரு உதாரணம். 4-8 அதிகாரங்களில் பல போதனைகள் புதுமைகளை செய்த ஆண்டவர் தன்னுடைய எருசலேம் பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறார். லூக்கா இங்கே பதிவு செய்யும் ஆண்டவருடைய திரு உருமாற்றக் காட்சி, முதலாம் வாசகத்திலே ஆண்டவர் ஆபிரகாமுக்கு காட்சி கொடுத்ததை பல வழிகளில் ஒத்திருக்கிறது. அத்தோடு முதல் ஏற்பாட்டில் சீனாய் மற்றும் ஒரேபு மலைகளில் ஆண்டவர் மோசே எலியாவுக்கு காட்சிகளை கொடுத்ததையும் நினைவூட்டுகின்றது. லூக்கா, மாற்கு நற்செய்தியில் இருந்து முக்கியமான மூலங்களைப் பெற்றார் எனினும் இன்னும் பல ஆதாரங்களை இங்கே சேர்கிறார். ஒப்பிட்டு பார்க்க (மத் 17,1-9: மாற் 9,2-10, லூக் 9,28-36). லூக்காவினுடைய இந்த பதிவு, இயேசுவின் கிறிஸ்தியலிலும், மெசியா-நிலையிலும் மிக முக்கியமான படிப்பினைகளைக் தருகிறது. இதனை ஆறு பகுதிகளாக பிரித்து அவதானிப்போம்.

இந்த பகுதிக்கு முன் இயேசு திருத்தூதர்கள் பன்னிருவரையும் பணிக்கு அனுப்புகிறார் (வவ.1-6), இயேசுவைப் பற்றி ஏரோது குழப்பமுடையவனாய் இருக்கிறான் (வவ.7-9) இங்கே ஏரோது ஆட்சியாளர்களைக் குறிக்கிறான். அதாவது அரசியல் வாதிகள் மெசியாவை கண்டுகொள்ளவில்லை என்பதை இது காட்டுகிறது. அதேவேளையில் இயேசு ஐயாயிரம் பேருக்கு அப்பத்தை பெருக்கிக் கொடுக்கிறார் (வவ.10-17). இந்த பின்புலத்தில்தான் பேதுரு இயேசுவை இறைவனின் மெசியா என்பதை அடையாளம் கண்டுகொள்கிறார் (வவ.18-21). பேதுரு இயேசுவின் மாட்சியை அறிந்து கொள்ள இயேசு தன்னுடைய சாவை இன்னொருமுறை அறிவிக்கிறார் (வவ.27). இந்த காட்சிகளின் உச்சமாக இயேசு மலையில் உருமாறுகிறார்.

௧. இயேசு மலைக்குச் செல்லுதல், வ.28:

லூக்கா எட்டு நாட்கள் என்று இன்னொரு வடிவத்ததை பதிவு செய்கிறார். அத்தோடு மற்றைய நற்செய்திகளை விட சீடர்களின் பெயர்களின் வரிசையிலும் மாற்றம் செய்கிறார். இயேசு செபிப்பதற்கே மலைமீது ஏறினார் என்று சொல்லி இன்னொரு செய்தியையும் இங்கே சேர்க்கிறார். இந்த மலையினுடைய இட அமைவு சரியாக சொல்லப்படவில்லை. சிலர் எர்மோன் எனவும், சிலர் தார்போர் எனவும் எண்ணுகின்றனர். இந்த மலை அனுபவம், மோசே எலியாவின் சீனாய், ஒரேபு மலை அனுபவங்களை ஒத்திருக்கிறது.

௨. திரு உருமாற்றம், வ.29:

முக மாற்றம், உடைகளின் வெண்மை இயேசுவை கடவுளாக காட்ட பயன்படலாம். மோசே சீனாய் மலையில் கடவுளைக் தரிசித்த போது அவரின் முகம் மின்னியது. ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின் தோன்றிய இரண்டு மனிதர்கள் வெண் ஆடைகளிலேயே இருந்தனர் (காண்க தி.ப 1,10).

௩. மோசே எலியாவின் தோற்றங்கள், வவ.30-33அ:

இந்த இரண்டு தலைவர்களின் தோற்றம் பல எண்ணங்களை முன்வைக்கிறது. சிலர் மோசே-சட்டம், எலியா-இறைவாக்கு இயேசுவில் நிறைவடைவதாக இதனை காண்பர். இதற்கு அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது. பல வேளைகளில் இது லூக்காவின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் இயேசுவின் இறப்பைப் பற்றி பேசுகிறார்கள். கிரேக்க மூலம் விடுதலைப் பயணத்தைப் பற்றி பேசினார்கள் (ἔξοδος எட்ஸோடொஸ் பயணம்) என்கிறது. லூக்கா ஆண்டவரின் மரணத்தை உண்மையான விடுதலைப் பயணமாக காண்கிறார் போலும். அதே. சீடர்கள் தூக்க மயக்கமாய் இருக்கிறார்கள் ஆனால் மூவரையும் காண்கின்றனர். ஆபிரகாமும் தூக்க மயக்கத்தில் இருந்தது நினைவுக்கு வருகிறது. பல முக்கியமான வேளைகளில் இவர்கள் தூக்க முகமாகவே இருக்கின்றனர். (காண்க லூக் 22,46)

௪. பேதுருவின் பதில், வ.33ஆ:

பேதுருவின் கூடாரம் அமைக்கும் ஆலோசனை, பாலைவன சந்திப்புக் கூடாரத்தை நினைவூட்டலாம். கிரேக்க மூலத்தில் அவர் ஆண்டவரை (κύριος கூரியோஸ்), தலைவரே (ἐπιστάτης எபிஸ்டாடேஸ்) என்று அழைக்கிறார். இன்னும் மயக்கத்தில்தான் இருக்கிறார் போல.

௫. மேகத்திலிருந்து குரல், வவ.34-35:

மேகம் கடவுளின் இருப்பை காட்டும் மிக முக்கியமான உருவகம். விடுதலைப் பயணத்திலும், தானியேல் நூலிலும் இதனை நன்கு அவதானிக்கலாம். திரு முழுக்கின் போது கேட்டதனைப்போல இன்னொரு குரல் இயேசுவை கடவுளின் அன்பு மகனாக விளக்கம் கொடுக்கிறது. லூக்கா, எசாயா 42,1ஐ நினைவூட்டுகிறார். இயேசு தெரிவு செய்யப்பட்ட மகனாகக் மோசேயையும் எலியாவையும் பின்னுக்கு தள்ளுகிறார்.

οὗτός ἐστιν ὁ υἱός μου ஹுடொஸ் எஸ்டின் ஹொ ஹுய்யொஸ் மூ- இவரே என் மகன்

ὁ ⸁ἐκλελεγμένος, ஹொ எக்லெலெக்மெனொஸ் - தெரிந்து கொள்ளப்பட்டவர்

αὐτοῦ ἀκούετε அவடூ அகூஎடெ- அவருக்கு செவிசாயுங்கள்

௬. சீடர்களின் செயல், வவ.36: மாற்கு நற்செய்தியை போலல்லாது, இங்கே இன்னொரு விதமான அமைதி காக்கிறார்கள். ஆண்டவரின் உயிர்ப்புக்குப்பின் பின்னர் நிறைவாக அறிக்கையிடுவார்கள்.

குரலுக்கு பின்னர் இயேசு மட்டுமே இருக்கிறார். அவர்தான் இருக்க வேண்டியர் என லூக்கா காட்டுகிறார் போல, சீடர்கள் அமைதி காக்கிறார்கள்.

ஆண்டவர் பெரியவர், நல்லவர்,

ஆண்டவர் நமக்கு அருகில் இருக்கிறார் என்பதற்காக,

அவர் மாட்சியையும், அவர் தூய்மையையும் அறியாமல் விடுவது சரியல்ல,

இயேசு இல்லாத சட்டமும், இறைவாக்கும் பிரையோசனப்படாது.

இயேசுதான் நம்முடைய பாரம்பரியத்தின் மையமாக இருக்கவேண்டும்.

இயேசு நடுவில் இருந்தால், அனைத்தும் இனிமையாக இருக்கும்.

அவரைவிட்டு தூரச் செல்ல செல்ல,

பாதுகாப்பு குறையும், இழுவையும் குறையும்,

ஆபத்துக்கள் அதிகமாகும்.

அன்பு ஆண்டவரே, உம்மை என் மையமாக்க உதவி செய்யும். ஆமென்.

(பொள்ளாச்சி துன்பியல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம்,

ஆண் வர்க்கத்தின் மிலேச்ச குணம் அழியட்டும்)