இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு The Nineteenth Sunday in Ordinary Times.

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம்: 18,6-9

பதிலுரைப் பாடல்: திருப்பாடல்: 33

இரண்டாம் வாசகம்: எபிரேயர் 11,1-2.8-19

நற்செய்தி: லூக்கா:


முதல் வாசகம்
சாலமோனின் ஞானம்: 18,6-9

6தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. 7நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 8எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர். 9நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்றுபோலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள். 

சாலமோனின் ஞானப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த பகுதி நம்பிக்கையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. பத்தாம் அதிகாரத்திலிருந்து இறுதிவரை (பதினாறாம் அதிகாரம்) உள்ள பகுதி மீட்பு வரலாற்றில், ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. ஞானம் ஆதாமிலிருந்து மோசேவரை எங்கனம் செயற்பட்டது என்பதையும் அது தெளிவூட்டுகிறது. முதல் ஏற்றபாட்டின் சில புத்தகங்களின் வாசகங்கள் நம்மிடையே சில கேள்விகளை ஏழுப்புவது வழமை. இந்த பதினெட்டாம் அதிகாரத்தின் ஐந்தாவது வசனம் கூட அப்படியான பகுதிகளில் ஒன்றுதான் (காண்க 18,5 ✯).

பல காரணங்களுக்காக இந்த வசனத்தை திருச்சபை தந்தையர்கள் இன்றைய வாசக பகுதிகளில் இருந்து நீக்கியிருக்கலாம். எகிப்திய அடிமைத் தலைவர்கள், தீயவர்களாக இருந்தாலும்கூட, எப்படி கடவுள் அவர்களை பயங்கரமாக தண்டிக்கலாம், அதிலும் விசேடமாக எகித்திய அடிமைத் தலைவர்களின் பாவங்களுக்காக எப்படி கடவுள் அவர்களின் பிள்ளைகளை மூழ்கடிக்கலாம்? இந்த கேள்விகள் பல விடைகளுக்காக தவம் கிடக்கின்றன. (✯எகிப்தியர்கள் உம் தூயவர்களின் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு குழந்தை மட்டும் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது. எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளை மாய்ந்துவிட்டீர்; அவர்கள் அனைவரையும் பெரும் வெள்ளத்தில் ஒருசேர மூழ்கடித்தீர்)    

                                                                                                                                                                                                                                                                                                                                                                                            வ.6: இங்கே இரவு என்று மையப்படுத்தப்பட்டுள்ளது, கடவுள் எகிப்தியர்களை தண்டித்ததாத இஸ்ராயேலர் நம்பிய இரவைக் குறிக்கிறது. இந்த இரவு எகிப்தியர்களுக்கு பயங்கரமானதாகவும், தண்டனைக்குரியதாகவும் இருந்தாலும், இஸ்ராயேலருக்கு அது நம்பிக்கையின் இரவாக காணப்பட்டது. ஆண்டவர் தங்களுக்கு அறிவித்ததனை நம்புவதற்கு அந்த இரவு ஓர் அடையாளமாக இருந்தது. வழமையாக இரவு இஸ்ராயேல் அடையாளங்களில் அவ்வளவு நல்ல சகுனமாக இருக்காது, ஆனால் இங்கே இந்த இரவு இவர்களுக்கு முக்கியமான இரவாக மாற்றம் பெறுகிறது. (νὺξ நுக்ஸ், இரவு - இந்த சாலமோனின் ஞானப் புத்தகம் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இனைத்திருமுறை நூல்களில் ஒன்று). 

வவ.7-8: வரலாறு எப்பொழுதும் ஒரு சாராரின் அழிவையும், இன்னொரு சாராரின் மீட்பையும் வித்தியாசமான பார்வையின் ஆவணப்படுத்தும். இங்கே இஸ்ராயேலருக்கு எகிப்தியரின் அழிவு, மீட்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பகைவர்களான எகிப்தியர்களை தண்டித்த செயல் இஸ்ராயேலருக்கு பெருமையின் அடையாளமாக விளங்குகின்றது. 

வ.9: நல்லவர்களின் தூய மக்கள் என்பது கிரேக்க மூலத்தில், 'நல்லவர்களின் தூய பிள்ளைகள்' என்றே காணப்படுகிறது. இது இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தினரைக் குறிக்கும். இறை சட்டத்திற்கு உடன்படுதல், நன்மைகளையும், நன்மையில்லா தன்மைகளையும் ஒரே விதத்தில் சந்தித்தல் போன்றவை விசுவாச வாழ்வின் முக்கியமான கூறுகள் என்பதை ஆசிரியர் இங்கே விவரிக்கிறார்.  



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 33

1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

2யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; 

3புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.

4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின் அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின. 

7அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார்.

  8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக! 

9அவர் சொல்லி உலகம் உண்டானது அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.

10வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார். 

11ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 

12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 

13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். 

14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார்.

15அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! 

16தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை. 

17வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது.

18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 

19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

  20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 

21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். 

22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!



திருப்பாடல் 33, புகழ்ச்சிப்பாடலாக கருதப்படுகிறது. இருப்பத்திரண்டு வரிகளைக்கொண்டுள்ள இந்தப் பாடல் அழகாக இரட்டை வரி அமைப்பில் பிரித்து நோக்கப்படுகிறது. தொடக்க மற்றும் முடிவு வரிகள் கடவுளில் மகிழ்வதற்கான அழைப்பை விடுகின்றன. அனேகமான திருப்பாடல்களைப் போல, இந்த திருப்பாடலும் திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு தலைப்பு வழங்கப்படவில்லை, இதனால் இதனுடன் தொடர்புள்ள விவிலிய பின்புலத்தை அறிவது கடினமாக இருக்கலாம். 

வ.1: இந்த வரி இப்பாடலின் ஆரம்ப அழைப்பாக பணியாற்றுகிறது. நீதிமான்கள் ஆண்டவரில் களிகூரக் கேட்கப்படுகிறார்கள். அதாவது நீதிமான்கள் என்பவர்கள் (צַדִּיקִים ட்சத்திகிம்), ஆண்டவரில் தங்களது திருப்தியை தேடக் கேட்கப்படுகிறார்கள், இச்செயலானது அவரைப் புகழ்வதற்கு பொருத்தமானது என சொல்கிறார் ஆசிரியர். 

வ.2: யாழ், எபிரேய இசைக்கருவிகளில் மிகவும் பிரசித்தமானது, இதனை வாசிப்பதில் தாவீது அரசர் விருப்பமுடையவராய் இருந்தார் என சொல்லப்படுகிறது. இது ஒருவகை நரம்பிசைக் கருவி. நம்முடைய யாழ் நகருக்கும் இதற்கும் தொடர்பிருப்பதாக ஈழ வரலாறு சொல்கிறது. பத்து நரம்பிசைக் கருவி என்றும் இதனை ஒத்த சொல்லில் அழைத்தார்கள். இதனைத்தான் ஆசிரியர் திருப்பிக்கூறும் நடையில் இங்கே பாவிக்கிறார். இதிலிருந்து இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல் என்பது புலப்படுகிறது. ஆகவே திருப்பாடல்கள் வாசிக்கப்படுவதை விட, பாடப்படவேண்டும் என்பது உண்மையே.

வ.3: ஆண்டவருக்கு புதிய பாடல் பாடப்படவேண்டும் (שִׁיר חָדָשׁ ஷிர் ஹாதாஷ்), அவருக்கான பாடல்கள் திறம்பட இசைக்கப்பட வேண்டும் என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆண்டவர் சாதாரண தலைவர்களைப் போல அர்த்தமில்லா உதட்டுப் புகழ்ச்சிக்கு உரியவர் அல்லர், அவர் மேன்மை மிக்கவர், இறைவன். இதனால் அவருக்கான பாடல்கள் எப்போதும் புதியனவாகவும், மகிழ்ச்சி ஒலியுடையதாகவும் இருக்க வேண்டும் என்பது இவர் நம்பிக்கை.

வ.4: வாக்கு என்பது ஒருவரின் அடையாளம். அரசர்களுடைய வாக்கு கட்டளை அல்லது ஆணை போன்றது, அது பொய்க்கக் கூடாது, இதனை விட ஆண்டவருடைய வாக்கு உண்மையானது என்கிறார் ஆசிரியர் (דְּבַר־יְהוָה தெவார் அதோநாய்). ஒருவருடைய வாக்கிற்கும் செயல்களுக்கும்  இடையில் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். தாறுமாறான செயற்பாடுகள் நல்ல வாக்கை பிரதிபலிக்காது. ஆனால் ஆண்டவரைப் பொறுத்த மட்டில் அவர் வாக்கும் செயல்களும் (מַעֲשֶׂה  ம'அசெஹ்) ஒன்றானவை என்கிறார். 

வ.5: ஆண்டவர் எதை விரும்புகிறார். சடங்குகளின் பெருக்கம்; ஆண்டவர் சடங்குகளையும், பலிகளையும் மற்றும் இரத்தத்தையும் விரும்புகிறார் என்ற பொய்பிரச்சாரத்தை முன்வைத்தன.  இஸ்ராயேல் இனம் குருத்துவத்தை மையப்படுத்தியபோது, இந்த ஆபத்துக்களை அதிகமாகவே எதிர்கொண்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் ஆண்டவர் பலிகளையோ அல்லது எரிபலிகளையோ விரும்பியதாக காட்டப்படவில்லை. இந்த பலிகள் அனைத்தும் காலத்தால் பிற்பட்டவை.  இவற்றைவிட ஆண்டவர் உண்மையாக விரும்புவை, நீதியும் நேர்மையும் என்கிறார் இந்த ஆசிரியர் (צְדָקָ֣ה וּמִשְׁפָּט ட்செதாகாஹ் வுமிஷ்பாத்). இயேசு ஆண்டவருடைய படிப்பினைகளில் இந்த சிந்தனை ஆழமாக ஊடுருவி இருந்தது. இதன் காரணமாகத்தான் இந்த முழு பூவுலகுமே அவரது அன்பால் நிறைந்துள்ளது. ஆண்டவருடைய பேரன்பு என்பது முதல் ஏற்பாட்டில் மிக முக்கியமான சொற் பிரயோகம்

வ.6: இந்த வரி ஆண்டவரின் வாக்கின் பலத்தை காட்டி, அத்தோடு பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் காட்டி நிற்கின்றன. பிரபஞ்ச படைப்புக்களை தெய்வங்களாக பார்த்த, அக்கால கானானிய மக்கள் நடுவில் வாழ்ந்த இஸ்ராயேலருக்கு, கடவுளின் பெருமையையும், பிரபஞ்ச படைப்புக்களின் சிறுமையையும் காட்ட வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. வானங்களும் (שָׁמַ֣יִם ஷமாயிம்), வான்கோள்களும் (כָּל־צְבָאָם கோல் ட்செவாம்), ஒன்றுமில்லை மாறாக கடவுளுடைய படைப்பே என்பது இவர் சிந்தனையில் உள்ள உண்மை. 

வ.7: வானங்கள் மட்டுமல்ல அதற்கு இணையாக கீழ் உள்ள நீரை அறிவிக்க வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. கடல், பல விதத்தில் விவிலியத்தில் காட்டப்படுகிறது. சில வேளைகளில் இது நேர்முகமாகவும் பல வேளைகளில் எதிர் மறையாகவும் காட்டப்படுகிறது. இந்த கடலில்தான் தீய சக்திகள் உறைவதாகவும் அக்கால விஞ்ஞானம் கருதியது. ஆனால் கடவுளுக்கு முன்னால் இவையும் சாதாரண படைப்புக்களே. அத்தோடு இவையும் கடவுளின் சிந்தனையால் உருவானவையே என்று பெரிய விஞ்ஞானத்திற்கு, சிறிய ஆனால் ஆழமான முடிவுரையை எழுதுகிறார் ஆசிரியர். இந்தக் கடலை (מֵי הַיָּם மி ஹயாம்), கடவுள் குவியல் போல் குவித்துள்ளார் எனச் சொல்கிறார், இது தொடக்க நூல் (※1,9) சிந்தனையை நினைவூட்டுகிறது எனலாம்.  நிலவறைகளில் சமுத்திர நீரை சேமித்துவைத்துள்ளார் கடவுள் என்கிறார் ஆசிரியர். இதற்க்கு תְּהוֹמֽוֹת தெஹோமோத் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ்கடல் நீர்கள் என்று எபிரேயம் காட்டுகின்றது. இது எதனை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை இது நிலக்கீழ் நீரைக் குறிக்கலாம். அத்தோடு ஆழமான பாதாளங்கள் நிலத்தின் கீழே உள்ளன என்பதும் இவர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த இடத்திலே கடவுள் நீரை சேமித்து வைத்துள்ளார் என்கிறார் ஆசிரியர். 

(※அப்பொழுது கடவுள், 'விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!' என்றார். அது அவ்வாறே ஆயிற்று.)

வ.8: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது ஒரு விவிலிய விழுமியம். இக்கால சிந்தனையில் இது மூட நம்பிக்கையாக பார்க்கப்படலாம். ஆனால் இந்த கடவுள் அச்சம் என்பது ஆழமான விசுவாசத்தைக் குறிக்கிறது. இந்த அச்சத்தின் காரணமாக மனிதர் நன்மைத் தனத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். இக்கால சிந்தனையில் இதனை மரியாதை கலந்த அன்பு என்று கூடச் சொல்லலாம். இன்று உலகில் உள்ள அவவிசுவாசம் மற்றும் காட்டுச் சுதந்திரத்திரத்திற்கான காரணமாக இந்த இறையச்சம்மின்மையே என்பது பலருடைய எண்ணம். 

வ.9: இந்த உலகத்தின் படைப்பு எப்படி உருவானது, அதனுடைய மூல கர்த்தர் யார் என்பது அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி முக்கியமான கேள்வியாக உள்ளது. புகழ்ச்சிப்பாடல்களில் பல மெய்யறிவுச் சிந்தனைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான சான்றை இந்த வரியில் கண்டுகொள்ளலாம். உலகத்தை ஒரு சொல்லால் படைத்தவர் நம் கடவுள் என்ற ஆழமான மெய்யறிவு வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். 'அவர் சொன்னார் அது உருவானது' என்பது இஸ்ராயேலின் அசைக்க முடியாத நம்பிக்கை (כִּי הוּא אָמַר וַיֶּהִי கி ஹு' 'ஆமர் வய்யெஹி). 

இந்த வரியில், உலகம் என்ற எழுவாய் பொருள் எபிரேய விவிலியத்தில் இல்லை, ஆனால் முன்னுள்ள வரியில் அது உள்ளபடியால் தமிழ் விவிலியம் இந்த வரிக்கும் உலகு என்ற சொல்லை பயன்படுத்துகிறது. 

வ.10: ஆண்டவர் ஏன் வேற்றினத்தாரின் திட்டங்களை முறியடிக்க வேண்டும், ஏன் வேற்றினத்தார் தோற்க்க வேண்டும் என்பது நம்முடைய கேள்வியாக இருக்கலாம். கடவுள் இஸ்ராயேலின் கடவுள் மட்டுமல்ல, அவர் அனைவரின் கடவுள். இதனைத்தான் இயேசு காட்டினார். ஆனால் இங்கு வேற்றினத்தார் என குறிப்பிடப்படுகிறவர்கள் (גּוֹיִם கோயிம்), அனைத்து மக்களையும் குறிக்கவில்லை, மாறாக இஸ்ராயேலின் வீழ்ச்சியை விரும்பிய ஒரு குறிப்பிட்ட மக்களாக அல்லது அவர்களது தலைமைத்துவமாக இருக்கலாம். இங்கே இவர்களின் எண்ணங்கள் குலைக்கப்படுகிறது என்றால், இஸ்ராயேல் காக்கப்படுகிறது என்று பொருள். 

வ.11. தீயவர்களுடைய எண்ணங்கள் தீமையானவை, ஆனால் கடவுளுடைய எண்ணங்கள் அனைவருக்கும் நன்மையானவை. இதனால் இந்த எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் (לְעוֹלָם லெ'ஓலாம்), அவர் இதயத்தின் திட்டங்களும் அனைத்து பரம்பரைக்கும் உறுதியாக இருக்கும். ஆசிரியர் ஆண்டவருக்கும் இதயத்தைக் கொடுத்து மனித வார்த்தைகளில் அவரை வடிக்க முயல்கிறார்.  

வ.12: இஸ்ராயேல் இனம் அக்கால சமுதாயத்தில் ஒப்பிடுகின்ற வேளை மிக சிறியதாகவும், மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. நிலத்தை பொறுத்த மட்டில் பெரிதாக வளமான நிலங்களை கொண்டிருந்தது என்று சொல்வதற்கும் இல்லை. இங்கே 'ஆண்டவரை தம் கடவுளாக கொண்ட இனம்' என்பதை 'யாவேயை கடவுளாக கொண்ட இனம்' (אֲשֶׁר־יְהוָה אֱלֹהָיו 'அஷேர்-அதோனாய் 'ஏலோஹாய்வ்), என்று மொழிபெயர்க்க வேண்டும். இதனால் பலர் கடவுளாக பல தெய்வங்களை கொண்டிருந்த வேளை, இஸ்ராயேல் தங்கள் கடவுளாக ஆண்டவரை (அதோனாய்-யாவே) கொண்டிருப்பதனால் அது பேறுபெற்றது என்கிறார் ஆசிரியர். அதேவேளை ஆண்டவரும் இஸ்ராயேலை தன் உரிமைச் சொத்தாக எடுத்திருந்தார், இதனால் இஸ்ராயேல் பேறுபெற்றதாகின்றது. உரிமைச் சொத்தாக எடுத்தல் என்பது ஆட்சி அதிகாரம் அல்லது வாரிசு அதிகாரம் போன்றவற்றைக் குறிக்கும். இதனை இஸ்ராயேல் பெற்றுள்ளது என்பது இவர் வாதம். 

வ.13: கடவுள் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதற்கு இந்த வரி விளக்கம் கொடுக்கிறது. வானின்று கடவுள் பார்க்கிறார், இதனால் கடவுள் வானில் இருக்கிறார் என்ற இவர்களின் நம்பிக்கை புலப்படுகிறது. ஆதாமின் மக்கள் அனைவரையும் பார்க்கிறார் என்று எபிரேய பாடம் வாசிக்கிறது. இங்கே ஆதாம் என்பவர் அனைத்து மக்களினங்களையும் குறிக்கிறார் (כָּל־בְּנֵי הָאָדָם கோல்-பெனெ ஹா'ஆதாம்).

வ.14-15: இந்த வரிகளும் பதின்மூன்றாவது வரியை ஒத்ததாக இருக்கின்றன. பார்த்தல் என்ற எபிரேய சொல் רָאָה (ரா'ஹ்), நோக்கல், கண்நோக்கல், அவதானித்தல், உற்றுபார்த்தல், ஆராய்தல் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கும். கடவுள் மனிதர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் என்ற படியாலும், மனிதர்களின் செயல்களை உற்று நோக்குவதனாலும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கின்றன. 

வ.16-17: மனிதரின் பலம் என்ன? அரசர் தன் படையால் காப்பாற்றப்பட முடியாதவர், படைவீரர் தன்னுடைய அதீத பலத்தாலும் மீட்கப்பட முடியாதவர், என்பது அக்கால இராணுவ அறிவுக்கு எதிரானது. ஏனெனில் சாதாரண அரசர்களும், வீரர்களும், தங்கள் படைபலத்திலும் உடல் வலிமையிலுமே அதிக கவனம் செலுத்தினர். இதனைத்தான், வீண் என்கிறார் ஆசிரியர். அதற்கான காரணத்தையும் வரலாறு இவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம். இந்த பாடலின் ஆசிரியர் ஒரு அரசராக இருந்தால் இது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்த சிந்தனைக்கு மேலும் வலுவூட்ட போர்க் குதிரையை உதாரணமாக எடுக்கிறார் ஆசிரியர் (סּוּס சுஸ் குதிரை). அக்காலத்தில் குதிரையின் வலுவினைக் கொண்டு படைகளின் பலம் கணக்கிடப்பட்டது. இக்காலத்தில் இராணுவ வாகனங்களைப் போல. 

வ.18: இது இப்படியிருக்க கடவுள் யாரை காக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை, கடவுள் தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்பிற்காக காத்திருப்போரையும் காக்கிறார் என்கிறார் ஆசிரியர். இந்த சிந்தனை ஏற்கனவே முன் வரியில் வந்திருக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளில் நம்பிக்கை வைத்தல் என்பதைக் குறிக்கும். கடவுளின் அன்பிற்காக காத்திருத்தல் என்பதும் (לַמְיַחֲלִים லம்யாஹாலிம்), கடவுளில் நம்பிக்கை வைத்தலையே குறிக்கும்.

வ.19: இவர்களுக்கான உதவி சொல்லப்படுகிறது. கடவுள் இவர்களை சாவினின்று காக்கிறார்  (מִמָּוֶת נַפְשָׁם மிம்மாவெத் நப்ஷாம்), அத்தோடு அவர்களை பஞ்சத்திலும் உயிர்பிக்கின்றார் (לְחַיּוֹתָם בָּרָעָב லெஹய்யோதாம் பாரா'ஆவ்). இந்த வரியும் இராணுவ சிந்தனைகளையே பின்புலமாகக் கொண்டுள்ளது. போர் காலத்தில் பஞ்சமும் சாவும் நிச்சயமானவை, இதனை அரசரின் பலமோ, போர்க்குதிரைகளோ தவிர்க்காது. அதனை தவிர்க்கக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே. 

வ.20-21: இந்த வரிகளில் ஆசிரியர் இஸ்ராயேல் மக்களின் வரைவிலக்கணத்தைக் காட்டுகிறார். அவர்கள் ஆண்டவரை நம்பியிருக்கிறவர்கள், அவர்களின் கேடயமும் துணையும் ஆண்டவர் என்கிறார்;. இதனால் இதயம் களிகூர்வதாகவும், அவரது தூய்மையான பெயரில் நம்பிக்கை வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. נַפְשֵׁנוּ חִכְּתָה לַיהוָה நப்ஷெனூ ஹிக்தாஹ் லதோனாய் - நம் ஆன்மாக்கள் கடவுளுக்கு காத்திருக்கின்றன. 

வ.22: இந்த வரி இறுதியான வரியாக, வேண்டுதலாக வருகிறது. இறுதியாக ஆசிரியர் கடவுளின் பேரன்பிற்காக இரஞ்சுகிறார் (יְהִי־חַסְדְּךָ יְהוָ֣ה עָלֵינוּ யெஹி-ஹஸ்தெகா அதோனாய் 'ஆலெனூ). அதற்கான நியாயமான தங்களுடைய எதிர்நோக்கை காட்ட முயற்சிக்கிறார். இந்த எதிர்நோக்கு (יָחִיל யாஹில்), ஒரு விவிலிய விழுமியமாக இருக்கிறபடியால் இவருடைய வேண்டுதல் சரியான பாதையில் செல்கிறது எனலாம். 



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 11,1-2.8-19

1நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. 2இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். 8ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். 9வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஒர் அன்னியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். 10ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத்திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே. 11ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். 12இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். 13இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். 14இவ்வாறு ஏற்றுக் கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. 15தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். 16ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, 'அவர்களுடைய கடவுள்' என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒருநகரை ஆயத்தப்படுத்தியுள்ளார். 17-18ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். 'ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்த போதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். 19ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்கவிருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

முதல் இரண்டு பகுதிகளைப்போலவே இந்த பகுதியும் நம்பிக்கையையே மையப்படுத்துகிறது. எபிரேயர் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் அதிகாரங்கள் நம்பிக்கை மற்றும் பொறுமையை மையப்படுத்துகின்றன. எபிரேயர் நூல் முற்காலத்தில் திருமுகங்களில் ஒன்றாக கருதப்பட்டது, பின்னர் இதனை ஓர் மறையுறை நூலாக பல ஆய்வாளர்கள் வகைப்படுத்தினர். எபிரேயர் நூல் ஒரு திருமுகமா இல்லையா என்பதில் பல கேள்விகளும் விடைகளும் இருக்கின்றன, எனினும் இதனை பவுல் எழுதியிருக்க முடியாது என்பது இன்று பலருடைய வாதங்கள். பல விதமான முதல் ஏற்பாட்டு உதாரணங்கள் மூலம் இந்த ஆசிரியர் கிறிஸ்துவின் முதன்மைத்தன்மையை மையப்படுத்துகிறார். 

வவ.1-2: இந்த வசனம் புதிய ஏற்பாட்டு இறையியலில் மிக மிக முக்கியமானது. இந்த வசனம்தான் நம்பிக்கை (πίστις பிஸ்டிஸ்- நம்பிக்கை, நம்பகதன்மை) என்றும், ஓர் இறையில் விழுமியத்திற்கு வரைவிலக்கனம் கொடுக்கிறது. இந்த வரைவிலக்கனம் நம்பிக்கையை எதிர்காலத்துடனும், எதிர் கால காட்சிகளுடனும் தொடர்பு படுத்துகிறது. இஸ்ராயேலர் தாங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதற்கு பல காரணங்களை முன்வைத்தனர் அதில் நம்பிக்கையால் கடவுளுக்கு ஏற்புடையவராதல் முக்கியமான காரணமாக அமைகிறது. 

வவ.3-7: இந்த விடப்பட்ட வரிகளில் ஆபிரகாம், ஆபேல், ஏனோக்கு, நோவா, போன்றவர்களின் விசுவாச வாழ்வு உதாரணமாக காட்டப்படுகிறது. 

வவ.8-12: இந்த வசனங்கள் ஆபிரகாமின் விசுவாச வாழ்வை விவரிக்கின்றன. ஆபிரகாம் என்ற இந்த நபர் யூதர்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவர்களுக்கும் ஆரம்ப காலம் தொட்டே விசுவாசத்தின் அடையாளமாக இருந்திருக்கிறார் என்பதனை இங்கே கண்டுகொள்ளலாம். 

வ.8: ஆபிரகாமின் அழைப்பும், பின்னர் அவர் கடவுளுக்கு கீழ்படிந்ததும் அவரின் நம்பிக்கையின் முதற்கட்ட அடையாளமாக பார்க்கப்படுகிறது.

வ.9: ஆபிரகாமின் கானானில் அன்நியராக தங்கியிருந்ததும் நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கூடாரங்களில் ஆபிரகாம் குடியிருந்ததன் மூலம், அவர் எப்போதும் பயணத்தில் இருந்தார் என்பது காட்டப்படுகிறது. ஆபிரகாமின் இந்த நம்பிக்கை வாழ்விற்குள் அவர் வாரிசுகளான ஈசாக்கும் அவர் மகன் யாக்கோபும் உள்வாங்கப்படுகின்றனர். 

வ.10: இங்கே வருகின்ற இந்த 'அசையா நகர்' வானுலக கனவு நகரான புதிய எருசலேமை குறிக்கின்றது. மண்ணுலக எருசலேம் போலல்லாது இந்த நகர் கடவுளால் கட்டப்பட்ட படியால் அது அசைவுறாது அல்லது தகர்க்கப்படாது என்பது இந்த எபிரேயர் நூல் ஆசிரியரின் நம்பிக்கை. திருச்சபைத் தந்தை தூய அகுஸ்தினாரின் 'கடவுளின் நகர்' என்ற நூல் இப்படியான சிந்தனையில் இருந்தே தோற்றம் பெறுகிறது. 

வ.11: இந்த வசனம் ஆபிரகாமின் முதிர்ந்த வயதையும், கடவுளின் மேல் அவர்கொண்ட நம்பகத்தன்மையின் ஆழத்தையும் காட்டுகின்றன. ஒருவரின் வயதும் உடலியல் மட்டுப்படுத்தல்களும் நம்பிக்கைக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது இந்த ஆசிரியரின் நம்பிக்கை. 

வ.12: தொடக்க நூல் 22,17ல் கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதிகள் மீளவும் நினைவுகூறப்படுகின்றன. 

(✯ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்.)

வ.13: அதிகமாக இந்த வரி இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் பட்ட துன்பங்களை அல்லது அவர்களின் மூதாதையர்கள் (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) கானானில் நாடோடிகளாக அனுபவித்த துன்பங்களை குறிக்கிறது எனலாம். இவர்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் தங்கள் வாழ்நாளில் காணவில்லை மாறாக அதனை அடுத்த வாழ்வில் எதிர்பார்த்தார்கள் என்ற இந்த ஆசிரியரின் சிந்தனை முழுக்க முழுக்க கிறிஸ்தவ சிந்தனை. முதல் ஏற்பாட்டு இஸ்ராயேலர்கள் கடவுளின் வாக்குறுதிகளை வாழ்நாளில் அல்லது இந்த உலகத்தில் எதிர்பார்த்தார்கள் எனலாம். இவ்வுலகில் மக்கள் அன்னியர் மற்றும் தற்காலிகக் குடிகள் என்ற இந்த எபிரேய நூல் ஆசிரியரின் சிந்தனை மிகவும் மெச்சுதலுக்குரியது. இந்த சிந்தனை இரண்டாம் வாழ்வு பற்றிய சிந்தனையை அடிப்படையாக கொண்டது எனலாம். 

வவ.14-16: இங்கே ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபுவின் சில வரலாற்று துளிகள்  இறையியலாக்கப்படுகிறது.  இங்கே தாய்நாடு என்று விழிக்கப்படுவது விண்ணக எருசலேம் அல்லது புதிய திருச்சபை என்ற கிறிஸ்தவ எண்ணகருவாக இருக்கவேண்டும். அத்தோடு ஆபிரகாம் ஒருகாலும் தான் துன்பங்களை சந்தித்தவேளை தன்னுடைய பழைய மொசோபொத்தோமிய ஊருக்கு திரும்பிச்செல்ல முயலவில்லை என்பதை நம்பிக்கையின் அடையாளமாக காண்கிறார் ஆசிரியர். முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் ஆபிரகாம் தன்னை அன்னியன் என்று கானானியருக்கு அறிவித்திருக்கிறார், இந்த வரிகளைக் கொண்டே மோசேயும் பிற்கால இறைவாக்கினர்களும் மற்றைய அன்னிய மக்கள் மேல் இஸ்ராயேலர் இரக்கம் காட்ட வேண்டும் என்ற சட்டங்களை உருவாக்கினர் (காண்க தொ.நூல் 23,4✯) (✯'நான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்று விடுங்கள்' என்று கேட்டார்.)

வ.16: ஆபிரகாமும் அவருடைய உடனடி வழித்தோன்றல்களும் இவ்வுலகில் ஒரு வாக்களிக்கப்பட்ட நாட்டை தேடவில்லை மாறாக அவர்கள் வின்னுலகிலே ஒரு நாட்டை தேடினார்கள் என்பது இந்த ஆசிரியரின் நம்பிக்கையும் இறையியல் சிந்தனையுமாகும். எபிரேயர் நூல் தன் வாசகர்களின் பிரச்சினைகளுக்கு இந்த இறையியல் மூலமாக நம்பிக்கை அளிக்க முயல்வதை இங்கே காணலாம். 

வவ.17-18: ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முன்வந்தது விவிலியத்தில் பல வேளைகளில் நம்பிக்கையின் உச்சகட்ட உதாரணமாக பார்க்கப்பட்டது. இந்த உதாரணம் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் மு;ன்னிலையில் இருந்ததை இங்கணம் காணலாம். 

வ.19: ஈசாக்கு பலியிடப்படாமல் உயிரோடு காப்பாற்றப்பட்ட நிகழ்வை ஆசிரியர் இயேசுவின் உயிர்ப்புடன் ஒப்பிடுகிறார். அத்தோடு இயேசுவின் உயிர்ப்புதான் முக்கியமாக நிகழ்வு, ஈசாக்கின் மீட்பு ஒரு அடையாளம் மட்டுமே என்கிறார். 


நற்செய்தி வாசகம்
லூக்கா: 12,32-48

32'சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். 33உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. 34உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். 35'உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். 36திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். 37தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 38தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். 39எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். 40நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.' 41அப்பொழுது பேதுரு, 'ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?' என்று கேட்டார். 42அதற்கு ஆண்டவர் கூறியது: 'தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்? 43தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். 44அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். 45ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் 46அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். 47தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். 48ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.

லூக்கா நற்செய்தியின் 12-13 அதிகாரங்கள் வரவிருக்கும் நெருக்கடிகளுக்கு ஆயத்தமாக இருக்கும் படியான பல சிந்தனைகளை முன்வைக்கிறன. அத்தோடு இந்த அதிகாரத்தில் லூக்கா 'கவலைவேண்டாம்' என்ற தலைப்பில் இயேசுவின் வார்த்தைகளை ஆவணப்படுத்துவதை காணலாம். இந்த வரிகள்; ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் துன்பங்களிலும் தோல்விகளிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்திருக்கலாம். காட்டுப் பறவைகள், செடிகள், புற்கள் போன்றவற்றின் இருப்பியலை உதாரணமாக காட்டி, தேவையில்லாத கவலை என்பது தன் மக்களுக்கு அவசியமில்லாதது என்று கூறுகிறார் (ஒப்பிடுக வவ.22-31).

வ.32: சிறிய மந்தை என்பது இங்கே பல அர்த்தங்களை முன்வைக்கலாம். அ. இது கிறிஸ்தவர்களுக்கான 'செல்லமான' வார்த்தையாக இருக்கலாம் ஆ. அல்லது இது இவர்கள் அக்காலத்தில் சிறிய எண்ணிக்கையில் இருந்ததை குறிக்கலாம். 

வவ.33-34: இந்த இரண்டு வரிகள் விண்ணரசை மையப்படுத்திய செல்வத்தை போதிக்கின்றன. இவ்வுலக செல்வம் என்பது கடவுளின் ஆசீர்வாதத்தின் அடையாளமாக காணப்பட்டது இந்த சிந்தனையை வித்தியாசமாக பார்க்கிறார் இயேசு. அழிந்துபோகக்கூடிய இவ்வுலக செல்வம் உண்மையான ஆசீராக இருக்க முடியாது என்பது ஆண்டவரின் போதனை. செல்வமும் உள்ளமும் என்ற லூக்காவின் வார்த்தைகள் மிகவும் அழகானவை. அகத்திலிருப்பது முகத்தில் தெரியும் என்ற தமிழ் பழமொழி இந்த சிந்தனையைத்தான் வேறு வரிகளில் முன்வைக்கிறது. ஆரம்ப கால திருச்சபையில் இருந்த பகிர்வும் அதற்கெதிரான போக்குகளையும் மறைமுகமாக லூக்கா சாடுவதனைப்போல் இந்த இயேசுவின் வரிகள் ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. 

வவ.35-48 'விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்' என்ற உவமையை சார்ந்துள்ளது. மத்தேயு நற்செய்தி 24,45-51 இலும் இதே உவமையை காண்கின்றோம். இந்த இரண்டு நற்செய்தியிலும் நற்செய்தியாளர்கள் இந்த உவமையை விவரிக்காமல் அதற்கு விரிவுரை கொடுப்பதனை காணலாம். இதிலிருந்து இந்த உவமை அக்கால வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்திருந்த உவமைகளில் ஒன்று என கருதலாம். அத்தோடு இயேசுவின் உயிர்ப்பின் பின்னர் திருச்சபை சந்தித்த சிக்கல்களை எப்படி எதிர்நோக்குவது என்பதனை மையமாக இந்த உவமை கொண்டுள்ளதையும் காணலாம். 

வ.35: இடையை வரிந்து கட்டிக் கொள்ளுதலும் விளக்குகள் எரிந்து கொண்டிருத்தலும் அவசர நிலையைக காட்டும் உருவகங்கள். யூதர்களின் நீண்ட ஆடைகள் இடையில் கட்டப்படாவிட்டால் அவசர வேலை செய்வதற்கு இடைஞ்சலாக இருக்கும். விளக்குகள் எரிந்து கொண்டிருத்தல் இங்கே இரவிலும் அவர்கள் பகல்போல் வேலைசெய்ய எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்ற அடையாளத்தை கொடுக்கிறது. 

வவ.36-37: இந்த வரிகள், வெளியில் சென்றிருந்த தலைவரையும் அவரது விழிப்பான பணியாளர்களையும் உருவகிக்கிறது. அக்கால முதலாளி, அடிமை வர்க்க சமுதாய அமைப்பை இந்த வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. பணியாளர்கள் என்பது உண்மையில் இங்கே அடிமைகளைத்தான் குறிக்கிறது. அக்காலத்தில் திருமண விழாக்கள் பல நாட்களாக நடந்தது. கதவை உடனடியாக தலைவருக்காக திறத்தல் என்பது இங்கே இந்த பணியாளர்கள் விழிப்பாய்  இருந்தார்கள் என்பதனையும் விட, அவர்கள் தம் தலைவருக்காக காத்திருந்தார்கள் என்றே பார்க்க வேண்டும். முதலாளிகள் தங்கள் அடிமை பணியாளர்களுக்கு சேவை செய்வது மிக மிக அரிது. இந்த அரிதான உதாரணத்தை இயேசு எடுத்து, விழிப்பான பணியாளர்கள் தங்கள் எஜமானின் பணிவிடையை பெற்றுக்கொள்வார்கள் எனபதன் மூலம், இந்த பணியாளர்கள் ஓர் உன்னதமான பரிசை பெறுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுக்கிறார். அத்தோடு இது இயேசு தன் சீடர்களுக்கு கால் கழுவிய நிகழ்வையும் இது காட்டுகிறது என சில விரிவுரையாளர்கள் காண்கின்றனர். 

வவ.38: இந்த இரண்டாம் மற்றும் மூன்றாவது காவல் வேளை, அக்கால நேர கணிப்பு முறையை மையப்படுத்தியது. இது உரோமையரின் நேர கணிப்பு முறை, இரண்டாம் காவல் அதிகமாக பி.ப 9 மணியாகவும் மூன்றாவது காவல் விடியற்காலை 3 மணியாகவும் இருக்கும். காவல் வீரர்கள் தங்கள் காவற் பணிகளை இவ்வாறு பிரித்தெடுத்து காவற் கோபுரங்களில் பணிசெய்தனர். 

வவ.39-40: இந்த வரிகள் இன்னொரு குறுகிய உவமை. அக்கால இரவுகள் கள்வர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் அவர்கள் அதனை திருடுவதற்கு பயன்படுத்தினர். (இக்கால திருடர்களுக்கு திருடுவதற்கு பகலும் இரவும் பெரிய வித்தியாசங்களை கொடுப்பதில்லை). திருடர்கள் வரும்வரை சோம்பேறி பணியாளர்கள் எப்படி ஊகிக்க மாட்டார்களோ அதேபோல் சோம்பேறி விசுவாசிகள் ஆண்டவரின் வருகையை ஊகிக்க மாட்டார்கள் என்பது லூக்காவின் போதனை. 

வ.41: இந்தக் கேள்வி லூக்காவின் தெளிவான சிந்தனையைக் காட்டுகிறது. விழிப்பு மற்றும் ஆண்டவருக்கான எதிர்பார்ப்பு மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். 

வவ.42-47: இந்த வரிகள் இன்னொரு உவமையை சுருக்கமாக காட்சிப்படுத்துகிறது. மேலாளர்களின் திறமையான நிர்வாகம் அக்காலத்திலும் இக்காலத்திலும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. யார் அறிவாளியான மேளாளர்? என்பது இயேசுவின் காலத்தில் இருந்த முக்கியமான கேள்வி.

இதனை லூக்கா ஆரம்ப கால திருச்சபைக்கு ஒப்பிடுகிறார். ஆரம்ப கால திருச்சபையின் தலைவர்கள் இந்த மேலாளரைப்போல அறிவுள்ளவர்களாக இருக்க எதிர்பார்கப்பட்டார்கள். அத்தோடு அறிவற்ற மேலாளர்களின் செயற்பாடுகளான, நம்பிக்கையற்றதன்மை, உடன்பணியாளர்களை துன்புறுத்துதல் போன்றவை எச்சரிக்கப்படுகின்றன. அத்தோடு அறிவற்ற நம்பிக்கை துரோக மேலாளர்க்கான தண்டனைகளும் வரிசைப்படுத்தப்படுகின்றன. அவர் தண்டிக்கப்படுவார், மேலாளர் நிலையிலிருந்து நம்பிக்கை துரோகிகளுக்கான இடத்தை அடைவார், மற்றும் நன்றாய் அடிபடுவார். இங்கே தண்டனை பெறுதல் இரண்டு தடவை சொல்லப்படுவதன் வழியாக இப்படியானவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறார். 

வ.48: அறியாமல் தவறு செய்பவர்களுக்கான தண்டனையும் விளக்கப்பட்டுள்ளது. அறியாமை பாராட்டப்படாமல் சிறிய வகை தண்டனை வழங்கப்படுகிறது. இதிலிருந்து கிறிஸ்தவம் என்ற சீடத்துவத்திற்கு அனைவரும் விழிப்பாயிருக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். சந்தர்ப்பங்கள் என்பது கடவுள் தரும் பொறுப்புக்களின் அடையாளம் என்ற சிந்தனையை இது காட்டுகிறது. இவ்வுலகில் எதுவும் தற்செயல் அல்ல அனைத்தும் கடவுளின் எதிர்பார்ப்புடன் கொடுக்கப்படுகின்றன அத்தோடு கொடுக்கப்படுகிறவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்கப்படுகின்றன என்ற சிந்தனைகளையும் இங்கே காணலாம். 

நம்பிக்கை என்பது இஸ்ராயேலருக்கு மட்டுமான அடையாளமல்ல, 

அது கிறிஸ்தவர்களுக்கும், அனைவருக்குமான அடையாளம்.

நம்பிக்கைதான் அதிகான வேளைகளில் வாழ்வு கொடுக்கிறது. 

நம்பிக்கையற்றவர்கள் பாதி இறந்தவர்கள் என்பதும் ஒரு விதத்தில் உண்மையே.

கிறிஸ்தவமும் கிறிஸ்துவும் மாய வித்தைகளின் அடையாளம் அல்ல,

மாறாக அவை நம்பிக்கையின் அடையாளங்கள்.

இன்றைய உலகில் முக்கிய பிரச்சனையான வன்முறை என்ற நஞ்சை முறியடிக்கும் மருந்து, நம்பிக்கை. 

அன்பான ஆண்டவர் இயேசுவே, உம்மிடம் இருந்து அதிசயங்களை நாம் எதிர்பார்க்காமல், உம்மிலே நம்பிக்கை வைக்க எமக்கு உதவி செய்யும். ஆமென்