இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம்,

முதல் வாசகம்: தி.பணி 5,27-32.40-41

திருப்பாடல்: 30

திருவெளிப்பாடு 5,11-14

யோவான் 21,1-19


முதல் வாசகம்
தி.பணி 5,27-32.40-41

27அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!' என்றார். 29அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்' என்றனர். 40பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். 41இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

இந்தப் பகுதி திருத்தூதர்கள் துன்புறுத்தப்பட்ட வரலாற்றை விவரிக்கின்றது. இதற்கு முன் உள்ள பகுதியில் ஏற்கனவே திருத்தூதர்கள் எச்சரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். ஆண்டவரின் தூதரின் வல்லமையால் இவர்கள் விடுதலையாகி ஆலயத்தின் வாயிலில் வாழ்வு தரும் வார்த்தைகளை கற்பிக்கும்படி கேட்கப்பட்டிருந்தனர். தலைமைச் சங்கம் (συνέδριον சுனெத்ரியொன்- தலைமைச் சங்கம்) அவர்களை விசாரனை செய்யும்படி சிறையை ஆய்வு செய்தபோது அவர்கள் ஏற்கனவே தப்பியிருந்தனர். சிறையில் இல்லாத திருத்தூதர்களை, மீண்டும் கோவிலில் கைது செய்து தலைமைச் சங்கத்தின் முன் கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் நடந்தவற்றையே இன்றைய முதலாம் வாசகம் நமக்கு காட்டுகிறது.

வவ.27-28: இந்த தலைமைக்குரு அநேகமாக கயபாவாக இருக்கலாம். அவர் இரண்டு விதமான குற்றச்சாட்டுக்களை திருத்தூதர்கள்மேல் சுமத்துகிறார்.

அ). கீழ்படியாமை

ஆ). மரணப்பழி:

லூக்கா இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் வாயிலாக இரண்டு செய்திகளை ஆழமாக கற்பிக்கிறார். அவை, இயேசுவின் போதனைகளை முன்னெடுக்கிறவர்களும் அவரை பின்பற்றுகிறவர்களும் நிச்சயமாக சமய தலைவர்களினால் சோதிக்ப்படுவார்கள், எனவே அவர்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பது. அவர்கள் வித்தியாசமான கட்டளைகளை அதிகாரத்தின் பேரில் முன்வைப்பார்கள். இங்கே இவர்கள் இயேசுவை பற்றி கற்பிக்கக்கூடாது என்று கட்டளை வைக்கிறார்கள். இயேசுவை கற்பிக்கக்கூடாது என்று கட்டளை கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கடவுளை தடுக்க மனிதர்கள் முயல்வதை இங்கே காணலாம். (இன்றும் இயேசுவை அறிவிப்பதை தடுக்க பல மனித அரசாங்கங்கள் கட்டளை கொடுப்பதை என்னவென்று சொல்வது. பயங்கரவாதிகள் இப்போது இதில் புதிதாக இனைந்துள்ளார்கள், பாஸ்கா விழாவன்று அப்பாவி கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டதும் இந்த வரலாறே (21.04.2019) இதில் இன்னும் நசைக்சுவையான விடயம், சில கிறிஸ்தவ அரசுகளே தங்களை அறிவாளிகளாகவும், அரச-தந்திரிகளாகவும் நினைத்து ஆண்டவரை தடுக்க முயலுவார்கள், சமரசமும் செய்வார்கள்!!!).

இறுதியாக இயேசுவின் இரத்தபழி தங்களுடையது அல்ல என்று மறுதலிக்கின்றனர். பிலாத்து, பல முறை முயன்றும் இதே தலைமைச் சங்கம்தான் ஆண்டவரை சிலுவையில் அறையக்கேட்டது. பிலாத்து ஆண்டவருடைய இரத்தப்பழியை கழுவியபோது, தங்கள்மேலும், தங்கள் பிள்ளைகள் மீதும் இவர்கள்தான் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். ஆக இந்த கேள்விக்கான விடையை இவர்கள் தங்கள் வாயிலாக அவர்களே சொல்வதை அழகாக லூக்கா படம்பிடிக்கிறார்.

வ.29: லூக்கா இங்கே கிரேக்க பொதுக் கூட்டங்களில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் விவாதம் செய்வதனைப்போல காட்சியமைக்கிறார். இப்போது எதிர்கட்சியாக உருவெடுத்திருக்கும் பேதுருவின் தலைமையிலான ஆரம்ப கால திருச்சபை பேசுகிறது. இங்கே பேதுருவின் பதில், இந்த தலைவர்கள் தங்களுக்கு கடவுள்கள் அல்ல எனவும், தங்களின் கடவுள் இயேசு, ஆகவே வானதூதர் சொன்ன கட்டளையைத்தான் தாங்கள் செய்வதாக (காண் வ.20) காரணம்காட்டுகிறது.

வவ.30-31: இங்கே திருச்சபை பல குற்றச்சாட்டுக்களையும் கடவுளின் செயல்களையும் முன்வைக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்ததாக தலைமைச் சங்கத்தை சாடுகிறது. ஏற்கனவே பேதுரு தன்னுடைய தலைமையுரையில் மக்களையும் உரோமையரையும் குற்றம் சுமத்தியிருந்தார், இங்கே தலைமைச் சங்கத்தை சாடுகிறார். அத்தோடு பேதுரு தன்னுடைய மறைபோதனையை அழகாக தலைமைச்சங்கத்திற்கே முன்வைக்கிறார், அதாவது: மனமாற்றத்தையும் பாவமன்னிப்பையும் வழங்க கடவுள் இயேசுவை தனது வலப்பக்கத்திற்கு உயிர்பித்துள்ளார் எனவும், அதற்கு தாங்களும் தூய ஆவியும் சாட்சிகள் என்கிறார். இங்கே ஆழமாக பார்கப்படவேண்டியவை இரண்டு: முதலாவது, வலப்பக்கம் என்பது, (δεξιᾷ αὐτοῦ தெக்ட்சியா அவ்டூ, அவரின் வலப்பக்கம்) இனி கடவுளின் அதிகாரம் இயேசுவையே சாரும், தலைமைச் சங்கத்தையோ அல்லது அவர்களின் சட்டங்களையோ சாராது என்பதைக் குறிக்கிறது. இரண்டாவது, மனிதர்களின் சாட்சியத்தை தலைமைச் சங்கம் மறுக்கலாம், ஆனால் தூய ஆவியை மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்பதாகும்.

வவ.40-41: எப்படித்தான் திருச்சபை உண்மையை உரைத்தாலும் தண்டிக்கப்படுவாள்; என்று கூறுகிறார் லூக்கா. இறுதி வசனம், திருத்தூதர்கள் தண்டிக்கப்பட்டாலும் மகிழ்சியோடு சென்றார்கள் என்று காட்டுகிறது. ஆக துன்பங்களில் இருந்து தப்பியோடுதல் சாட்சியம் அல்ல மாறாக அதனை தாங்கி, தாண்டி வருவதே மகிழ்சியளிக்கும் என்று பாடம் புகட்டுகிறார் லூக்கா.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 30

நன்றி செலுத்தல்

(புகழ்ப்பர் திருக்கோவில் அர்ப்பணப்பர் தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

2என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர்.

3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.

4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.

6நான் வளமுடன் வாழந்தபோது, ‛என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன்.

7ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன்.

8ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்; என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.

9நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?

10ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.

11நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.

12ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.



நன்றிப்பாடல்கள் அனேகமான வேளைகளில், செபங்களாக இருப்பதனைக் காணலாம்  இதனை இந்த முப்பதாவது திருப்பாடலிலும் காணலாம். அத்தோடு நன்றிப்பாடல்களில் பழைய நிகழ்வுகளையும் நினைவூட்வதனையும் காணலாம். இறுதியாக, வேண்டுதல்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது எனவும், பாடலாசிரியர் தான் எக்காலமும் நன்றி செலுத்துவதாகவும் அமையும். இந்தப் பாடல், தேவை-மீட்பு-நன்றி என்ற தோரணையில் அமைந்துள்ளதனைக் காணலாம். 

தாவீதின் ஆலய அர்பணப் பாடல் என்று இத் திருப்பாடலின் தலைப்பு தொடங்குகிறது.  இங்கு ஆலயம் என்பது (הַבַּיִת לְדָוִד ஹபாயித் லெதாவித்) தாவிதின் வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இதனை அறிவது கடினமாய் இருக்கிறது. தாவிதின் காலத்தில் எருசலேம் ஆலயம் கட்டப்படவில்லை என்பதும் முக்கியமானது. சாலமோனின் ஆலயத்தை தாவிதின் ஆலயம் என்று சொல்வதும் அக்காலத்தில் வழக்கிலிருந்தது. சிலர் இந்த ஆலயத்தை சாலமோனின் முதல் ஆலயம், அல்லது யூதர்கள் பபிலோனிலிருந்து திரும்பி வந்து புதுப்பித்த இரண்டாவது ஆலயம், அல்லது கிரேக்கர்கள் இரண்டாவது ஆலயத்தை தீட்டுப்படித்தியபின் மக்கபேயரின் ஆலய தூய்மைப்படுத்தும் சடங்கிற்கான பாடல் எனவும் காண்கின்றனர். எவ்வாறெனினனும், இது ஒரு புகழ்சிப்பாடல் என்பது மட்டும் புலப்படுகிறது.  מִזְמוֹר שִׁיר־חֲנֻכַּת הַבַּיִת לְדָוִד׃ மிட்ஸ்மோர் ஷிர்-ஹனூகாத் ஹபாயித் லெதாவித்- ஆலய அர்ப்பணிப்பு திருவிழா பாடல், தாவீதிற்குரியது. 

வ.1: ஆண்டவரை ஏந்திப் புகழ்வதாக வாக்களிக்கிறார் ஆசிரியர், அதற்கான காரணமாக, அவர் ஆண்டவர் தன்னை எதிரிகளின் மகிழ்வில் இருந்து பாதுகாத்தார் என்கிறார். לֹא־שִׂמַּחְתָּ אֹיְבַי לִֽי׃ லோ'- சிம்ஹதா 'ஓய்வாய் லி- என் எதிரிகள் என்னில் மகிழவிடவில்லை. எதிரிகள் கதாநாயகரின் தோல்வியில் மகிழ்வது, அவருக்கு தோல்வியை விட மிகுதியான சங்கடத்தைக் கொடுக்கும், அப்படியான ஒரு உணர்வைத்தான் தாவீதும் கொண்டுள்ளார் போல. எதிரிகள் யார் என்று ஆசிரியர் குறிப்பிடவில்லை. ஆசிரியர் தாவீதாக இருந்தால், எதிரிகள் வேற்று நாட்டு அரசர்களாக இருந்திருக்கலாம். பிலிஸ்தியர்கள் தாவீதின் நேரடியான எதிரிகளாக இருந்தார்கள். 

வ.2: ஆண்டவர் குணப்படுத்துகிறார் என்பது முதல் ஏற்பாட்டின் நம்பிக்கையில் மிக முக்கியமானது. உடல் ரீதியான குணப்படுத்தலையும், உள ரீதியான குணப்படுத்தலையும், ஆசிரியர் மாறி மாறி குறிப்பிடுவதால், இந்த இடத்தில் என்ன குணப்படுத்தல், காட்டப்படுகிறது என்பது புரியவில்லை. תִּרְפָּאֵנִי திர்பா'எனி - என்னை குணப்படுத்தினார். ஆசிரியர் ஏதோ ஒரு பொல்லாத நோயால் பாதிக்கப்பட்டிருந்து குணமாகியது போல தோன்றுகிறது. 

வ.3: ஆண்டவர் தன்னை சாவிலிருந்து பாதுகாத்தார் என்கிறார். சாவைக் குறிக்க இரண்டு சொற்கள் பாவிக்கப்படுகின்றன: பாதாளம், சாவுக்குழி. ஆண்டவர் இவரை பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்கிறார் அத்தோடு சாவுக்குழியில் இறங்கிய இவரை ஆண்டவர் காக்கின்றார் (שְׁאוֹל ஷெ'ஓல், בוֹר போர்). இந்த வரியும் ஆசிரியர் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்ற அனுபவத்தைக் கொடுக்கிறது எனலாம். 

வ.4: இறையன்பர்களுக்கு கட்டளை கொடுக்கிறார் ஆசிரியர். இறையன்பர்களைக் குறிக்க (חָסִיד) ஹசித் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். 

பிற்காலத்தில் சட்டஙக்ளை பின்பற்றியவர்கள், எசேனியர்கள், புனிதர்கள் போன்றவர்களுக்கு இந்த சொல் பாவிக்கப்பட்டது. ஆண்டவருடைய புனிதமான பெயரை நினைவுகூர்வது இந்த தூயவர்களின் முக்கியமான பணியாக கருதப்பட்டது. זַמְּרוּ לַיהוָה ட்சம்ரூ லஅதோனாய்- கடவுளை நினைவுகூருங்கள். 

வ.5: ஆசிரியர் கடவுளின் சினத்தையும், இரக்கத்தையும் நன்கு அனுபத்திருக்கிறார் போல பாடுகிறார். ஆண்டவரின் சினத்தையும், இரக்கத்தையும் ஒப்பிடுகிறார். ஆண்டவருடைய சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும் என்கிறார் (כִּי רֶגַע ׀ בְּאַפּוֹ֮ கி றெகா' பெ'அபோ- அவர் கோபம் ஒரு கணம்). ஆண்டவரின் சினம் ஒரு நொடிப்பொழுதுதான் என்பதை அவர் அடையாளமாகவே பாவிக்கிறார் எனலாம். 

அதற்கு எதிராக ஆண்டவருடைய கருணையை வாழ்நாட்கள் முழுவதற்கும் ஒப்பிடுகிறார்  (חַיִּ֪ים בִּרְצוֹנוֹ ஹய்யிம் பிர்ட்சோனோ- வாழ்நாட்கள் அவர் நன்மைத்தனம்). இந்த ஒப்பிடுதலைக் குறிக்க இன்னோர் உதாரணத்தை முன்வைக்கிறார். அதாவது மாலையின் ஆழுகை கடவுளின் தண்டனையைக் குறிக்க, காலையின் விடியல் ஆண்டவரின் ஆசீரைக் குறிக்கிறது. 

வ.6: தன்னுடைய பழைய வாழ்க்கையை ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். தான் வழமுடன் வாழ்ந்தபோது என்று இறந்த கால வினையில் பேசுகிறார் (אָמַ֣רְתִּי 'அமர்த்தி-நான் சொன்னேன்). தன்னை யாரும் அசைக்க முடியாது என்று சொன்னதை எதிர்மறையாக நினைவுகூர்கிறார்  (בַּל־אֶמּוֹט לְעוֹלָם׃ பால்-'எமோத் லெ'ஓலாம்- எக்காலமும் அசையாது). 

வ.7: ஆண்டவர்தான் ஒருவரின் பலம் என்பதைக் காட்ட மலையை உருவகத்திற்கு எடுக்கிறார் ஆசிரியர். மலை இஸ்ராயேலருக்கு மிக நன்கு தெரிந்த உருவகம். மலை அசையாது நிற்பதாலும், நில நடுக்கத்திலும் அவை அசையாது இருப்பதாலும், மலை உயரமாக இருப்பதாலும் அதில் கடவுள் இருக்கிறார் என்று நம்பப்பட்டது. முதல் எற்பாட்டில் பல இடங்களில் ஆண்டவரின் காட்சி மலையில்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உறுதிக்கு உதாரணமாக மலை மாறுகிறது. 

ஆண்டவருடைய கருணையால் தான் மலைபோல உறுதியாக நின்றதாகச் சொல்கிறார் (לְהַרְרִ֫י עֹז லெஹர்ரி 'ஓட்ஸ்- உறுதியான மலைபோல). இதற்கு எதிர்மாறாக, கடவுள் தன் முகத்தை மறைத்தால் உடனே தான் நிலைகலங்கிப் போனதாகச் சொல்கிறார். ஆண்டவரின் முகத்தை யாரும் கடண்டதில்லை, இருந்தும் முகத்தை மறைத்தல் என்பது, ஆண்டவரின் கரிசனை இல்லாமல் போனதை குறிக்க பாவிக்கப்படும் உருவகம் (הִסְתַּרְתָּ פָנֶ֗יךָ ஹிஸ்தார்த்தா பானெகா- உம் முகத்தை மறைத்தீர்). 

வ.8: ஆண்டவரை தன் தலைவர் என விழிக்கிறார். இந்த சொல் விவிலியத்தில் ஆண்டவருக்கு பாவிக்கப்படும் பிரத்தியோகமான ஒரு சொல் (אֲדֹנָ֗י 'அதோனாய்-என் தலைவர்). இந்த பெயரைத்தான் விவிலிய ஆய்வாளர்கள் ஆரம்ப காலத்தில் கடவுளுடைய இயற்பெயருக்கு பதிலாக பாவித்தனர். ஆண்டவருடைய இயற்பெயர் அதிதூய்மையாக இருந்த படியால் (יְהוָה யாவே, யெஹோவா) அதனை உச்சரிக்க தயங்கி, அதோனாய் (என் தலைவர்) என்ற சொல்லை பயன்படுத்தினர். தனக்கு இரங்குமாறு ஆண்டவராகிய தலைவரிடம் கேட்கிறார் ஆசிரியர்.

வ.9: சாவு ஆண்டவருக்கு பயனற்றது என்பதை அழகாகக் காட்டுகிறார். சாவினால் மனிதர்கள் படுகுழிக்குள் செல்கிறார்கள் என இஸ்ராயேலர் கருதினர் (שָׁחַת ஷாஹத்-குழி). இங்கே மரணத்தை குறிக்க மூன்று விதமான சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன: 

அ. இரத்தத்தை எடுத்தல் (דָּם தாம்): இரத்தத்தில்தான் உயிர் உள்ளதாக கருதப்பட்டது.

ஆ. படுகுழியினுள் செல்லல் (שָׁחַת ஷாஹத்): இது சீயோலைக் குறிக்கிறது. 

இ. தூசாக மாறுதல் (עָפָר 'ஆபார்): மனிதர் தூசினால் உருவாகினர், மரணத்தின் பின் தூசாக மாறினர் என நம்பப்படுகிறது. 

படுகுழியினுள் இருப்பவர்களும், தூசியாக போனவர்களாலும் கடவுளின் மாட்சிக்கு எதுவும் செய்ய முடியாது, எனவே இந்நிலையில் இவர்கள் இருப்பதனால், கடவுளுக்கு நன்மையில்லை என்பதைப் போல சொல்கிறார். உயிரோடு இருப்பவர்களால்தான் கடவுளின் வாக்குப் பிறழாமை தெரிவிக்கப்படுகிறது என்கிறார். 

வ.10: எபிரேய திருப்பாடல்கள் எவ்வகையான பாடல்களாக இருந்தாலும், அவற்றில் வேண்டுதல் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும். இந்த பாடலிலும் வேண்டுதல் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. 

ஆசிரியர் கடவுளை தனக்கு செவிசாய்க்கவும் (שְׁמַע ஷெமா'- கேளும்), இரங்கவும் (חָנֵּנִי ஹான்னேனி), துணையாக இருக்கவும் (הֱיֵה־עֹזֵר ஹெயெஹ்-'ஓட்செர்- உதவியாக இரும்) கேடக்கிறார். இந்த மூன்று வினை சொற்களும் ஒத்த கருத்தில் பாவிக்கப்படுகின்றன. 

வ.11: புலம்பலை கடவுள் களிநடனமாக மாற்றிவிட்டார் என்கிறார் ஆசிரியர், இதனை மேலும் சொல்ல சாக்குடைக்கு பதிலாக மகிழ்ச்சியை உடுத்தினார் என்றும் சொல்கிறார். 

புலம்பல் துன்பத்தைக் குறித்தது. இந்த புலம்பலில் பலவகையான செயற்பாடுகள் காணப்பட்டன. புலம்பல்கள் பாடல்களாகவும் இருந்திருக்கின்றன. சாக்குடை தரித்தலும் புலப்பலைக் காட்ட பயன்பட்டது. தாவீது தன்னுடைய முதல் மகனின் இறப்பிற்கு முதல் இந்த சாக்குடையைத்தான் தரித்து செபித்தார் என விவிலியம் காட்டுகின்றது (מִסְפֵּד மிஸ்பெத்- புலம்பல்: שַׂק சாக்- சாக்கு). 

மகிழ்ச்சியை ஆடையாக காட்டுவது விவிலியத்திற்கே உரிய தனித்துவமான அடையாளம். மகிழ்ச்சி இங்கே ஆடையாக வர்ணிக்ப்படுவது, ஒருவகையான சிறப்பு ஆடையைக் குறிக்கலாம் என்றும் வாதிடப்படுகிறது (וַתְּאַזְּרֵנִי שִׂמְחָה வாத்தெ'அட்ஸ்ரெனி சிம்ஹாஹ்- மகிழ்வை ஆடையாக உடுத்தினீர்). 

வ.12: இதனால் தன் உள்ளம் அமைதியாக இராமல், நன்றிசொல்லி புகழ்ந்துபாடும் என்கிறார்.  உள்ளத்தைக் குறிக்க (כָבוֹד) காவோத் என்ற சொல் பாவிக்கப்படுகின்றது. இந்த சொல்ல 'மாட்சியை' குறிக்கிறது. ஏன் இந்த சொல் பாவிக்கப்பட்டடுள்ளது என தெரியவில்லை. சிலர் இதனை כְּבֵדִי (கெவெதி) என காண்கின்றனர். அதாவது 'என் ஈரல்' என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஈரல் ஒருவருடைய உணர்வுகளின் உறைவிடமாக கருதப்பட்டது. ஆகவே இந்தச் சொல் இங்கே பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆரமப் கால விவிலியம் மெய்யெழுத்துக்களால் மட்டுமே எழுதப்பட்டதால், இப்படியான பல சிக்கல்கள் இன்றும் காணக்கிடக்கின்றன. 



இரண்டாம் வாசகம்
திருவெளிப்பாடு 5,11-14

11தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: 12'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். 13பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், 'அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன' என்று பாடக் கேட்டேன். 14அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென்' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

வானுலக காட்சி என்ற பகுதியிலிருந்து, இன்றைய இரண்டாம் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யோவான் ஆட்டுக்குட்டியின் மாட்சியை விவரிக்கின்றார்.

வ.11: நான் பார்த்துக்கொண்டிடுருக்கும் (Καὶ εἶδον காய் எய்தொன்) போது என்று யோவான் தொடங்குவது, வெளிப்பாட்டு இலக்கியங்களின் முக்கியமான பண்பாகும். இந்த முறை அவர் பலவற்றைக் காண்கிறார். அவை, அரியணை, மூப்பர்கள், கோடிக்கணக்கான வானதூதர்களின் குரல் என்பனவாகும். 4,10 இந்த மூப்பர்களை இருபத்தினாங்கு என்று வரையறுக்கிறது. இந்த இலக்கம் பன்னிரண்டின் நிறைவான இன்னொரு இலக்கமாகும். அத்தோடு இது பன்னிரு குலங்களையோ அல்லது பன்னிரு திருத்தூதர்களையோ அல்லது நிறைவான திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். இந்த நான்கு உயிர்கள், முழு உலகத்தையும் குறிக்கிறது. அல்லது முழு உலகத்திற்கு பொறுப்பான கடவுளின் அதிகாரத்தை குறிக்கிறது. கோடிக்கணக்கான வானதூதர்கள் உண்மையில் ஆயிரம் ஆயிரம் (χιλιάδες χιλιάδων கிலியதெஸ் கிலியதோன்) வானதூதர்களின் கூட்டம் என்றே மூல மொழியில் அமைந்துள்ளது.

வ.12: வானதூதர்கள் இங்கே மூப்பர்கள், உயிர்கள் முன்நிலையில் ஆட்டுக்குட்டிக்கு சாட்சியமும் தீர்ப்பும் சொல்கிறார்கள். இந்த ஆர்ப்பரிப்பு எசாயா நூலில் செராபீன்கள் கடவுளுக்கு புகழ்பாடி சாட்சியம் சொன்னதை நினைவூட்டுகிறது. கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியின் பண்புகள் காட்டப்படுகின்றன: வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது (ἄξιόν ἐστιν τὸ ἀρνίον τὸ ἐσφαγμένον λαβεῖν τὴν δύναμιν καὶ πλοῦτον καὶ σοφίαν καὶ ἰσχὺν καὶ τιμὴν καὶ δόξαν καὶ εὐλογίαν அக்ட்சியொன் எஸ்டின் டொ அர்னியொன் டொ எஸ்பாக்மெனொன் லாபெய்ன் டேன் தூனாமின் காய் புலூடொன் காய் சொபியான் காய் இஸ்கூன் காய் டிமேன் காய் தொக்ஸ்சான் காய் எவ்லொகியான்).

வ.13: இந்த வசனத்தின் மூலம் இப்பொழுது முழு பிரபஞ்சமுமே ஆட்டுக்குட்டியை புகழத் தொடங்குகின்றன. விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் (πᾶν κτίσμα ὃ ἐν τῷ οὐρανῷ καὶ ἐπὶ τῆς γῆς καὶ ὑποκάτω τῆς γῆς⸌ καὶ ἐπὶ τῆς θαλάσσης καὶ τὰ ἐν αὐτοῖς ⸀πάντα பான் கிடிஸ்மா ஹொ என் டோ ஊரானோ காய் எபி டேஸ் கேஸ் ஹூபொகாடோ டேஸ் கேஸ் காய் எபி டேஸ் தாலாஸ்சேஸ் காய் டா என் அவ்டொய்ஸ் பான்டா) என்பவை இந்த நான்கு உயிர்களுடன் தொடர்புடைய, வாழும் உலக உயிர்களைக் குறிக்கின்றன. ஆக முழு உலகமும் இங்கே அரியணையிலிருக்கும் கடவுளையும் அவருடைய ஆட்டுக்குட்டியான இயேசுவையும் புகழ்கின்றன.

வ.14: உயிர்களின் அறிக்கையை கேட்டவுடன் நான்கு உயிர்கள் (τὰ τέσσαρα ζῷα டா டெஸ்ஸாசரா ட்சோஆ- நான்கு உயிர்கள்) ஆமென் என்று பதிலளிக்கின்றன. இது இஸ்ராயேல் மக்களின் செபத்தைக் குறிக்கிறது. ஆமென் என்பது ஏற்றுக்கொள்ளுதலைக் குறிப்பவை. மூப்பர்கள் விழுந்து வணங்குதலும் இன்னொரு ஏற்றுக்கொள்ளுவதற்கான அடையாளம். இந்த வரிகளின் அடையாளங்கள் மூலமாக யோவான், இயேசுவை அனைத்து உலகங்களும், கடவுளின் வானதூதர்களும் முறையாக ஏற்றுக்கொண்டனர் என்று விவரிக்கின்றார்.


நற்செய்தி வாசகம்
யோவான் 21,1-19

இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்

1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: 2சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், 3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். 6அவர், 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். 8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. 10இயேசு அவர்களிடம், 'நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்' என்றார். 11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களிடம், 'உணவருந்த வாருங்கள்' என்றார். சீடர்களுள் எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். 14இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். இயேசுவும் பேதுருவும் 15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார். 16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளை மேய்' என்றார். 17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளைப் பேணிவளர். 18'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்' என்றார். 19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், 'என்னைப் பின் தொடர்' என்றார்.


இந்த பகுதியில் பேதுருவிக்கு ஆண்டவர் பொறுப்பாளர் பட்டம் கொடுக்கும் நிகழ்வை யோவான் அழகான கிரேக்க வார்த்தைகளில் காட்சிப்படுத்துகிறார். யார் இந்த பேதுரு என்ற சற்று பார்ப்போம்.

அ. சிமோன் பார்யோனா என்பது அரமேயத்தில் யோனாவின் மகன் சிமோன் என்று பொருள்படும் (Σίμων Βαριωνᾶ ட்சிமோன் பார்யோனா). சீமோன் பேதுரு தனது சகோதரர் போல ஒரு கலிலேய மீனவராவர். நற்செய்தியாளர்கள் பல விதமான அழைப்புக் கதைகளை பேதுருவுக்கு கொடுக்கின்றனர். மாற்கு-லூக்காவின் காட்சிப்படி இவர் மீன்பிடித்தபோது இயேசுவால் அழைக்கப்படுகிறார் (மாற்கு 1,16-17: லூக்கா 5,1-11). யோவான் இவரை அவர் சகோதரர் அந்திரேயா இயேசுவிடம் அழைத்துவந்தாக காட்டுவார் (யோவான் 1,35-42). ஆக பேதுரு அழைக்கப்பட்ட முக்கியமான திருத்தூதர் என்பது புலப்படுகிறது. அனைத்து நற்செய்தியாளர்களும் பல விதமாக பேதுருவின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றனர். மத்தேயுவின் நற்செய்தியில் பேதுரு முக்கியமான பாத்திரம். முக்கியமான மூன்று பேர்களிலும் சரி, பன்னிருவரிலும் சரி மிக முக்கியமானவராக பேதுரு இருப்பார், பேசுவார். பிறகால முதல் திருச்சபையும் பேதுருவிற்கு முக்கியமான இடத்தை கொடுத்திருந்தது, பவுலடிகளார் கூட பேதுருவுடன் கருத்தில் முரன் பட்டாலும், அவரது முக்கியத்துவத்தை கேள்வியாக்கமாட்டார் என்பதை நோக்க வேண்டும் (1கொரி 15,5).

ஆ. ஆளுமையைப் பொறுத்த மட்டில் ஒரு சாதாரண மீனவராக இருந்தார், அதீத ஈடுபாட்டாலும், இயேசுவின் மீது கொண்ட ஆழமான அன்பினாலும் சில வேளைகள் இடம் பொருள் ஏவல் மறந்து செயல் பட்டு இயேசுவிடம் அன்பு-குட்டு வாங்குவார். நற்செய்தியாளர்களும் சரி பவுலும் சரி பேதுருவை சுயநலவாதியாகவே அல்லது தீய என்னங்கள் உடையவராகவோ காட்ட மாட்டார்கள். பலவீனனான பேதுரு இயேசுவின் அசைக்க முடியாத கட்டளைத் தளபதி என்பதை புதிய ஏற்பாடு விதவிதமாக விவரிக்கிறது. ஆண்டவரை மறுதலித்த காட்சி உண்மையில் பேதுருவிற்கு எதிரான காட்சியல்ல மாறாக அது பேதுருவிற்கு முக்கியமான படிப்பினையும், சாட்சியமும் தந்த காட்சி. பேதுருவின் மறுதலிப்பைவிட அவரது அழுகையையும், விசுவாச பிரமாணங்களையும் நாம் உற்று நோக்க வேண்டும்.

இ. பேதுரு பல கடிதங்களை எழுதியதாக பாரம்பரியம் நம்புகிறது, அவற்றுள் இரண்டு புதிய ஏற்பாட்டில் தரப்படுத்தப்பட்டுள்ளது. பேதுரு உரோமைக்கு மறை பயணம் செய்ததாகவும், உரோமையில் ஏற்பட்ட பெரிய தீச் சம்பவத்தின் பின் (கி.பி 64) சிலுவையில் தழைகீழாக அறையப்பட்டு மறைசாட்சியானதாகவும் பாரம்பரியம் ஏற்றுக்கொள்கிறது. திருமுகங்களைவிட, பேதுருவின் பணிகள், பேதுருவின் வெளிப்பாடு, பேதுருவின் நற்செய்தி, பேதுருவின் போதனைகள், பேதுரு-பவுலின் பாடுகள், பேதுரு மற்றும் பன்னிருவரின் பணிகள், பேதுரு யாக்கோபுக்கு எழுதிய கடிதம், மற்றும் பேதுரு பிலிப்புக்கு எழுதிய கடிதம் என்பவை விவிலியத்திற்கு வெளியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறைந்திருக்கின்றன. இவற்றை பேதுரு எழுதாவிட்டாலும், அவை பேதுருவிற்கு அர்பணிக்கப்பட்டிருப்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் கேள்வியின்றி புலனாகின்றது.

அதிகமான அறிஞர்கள் இந்த பகுதியை பிற்சேர்ப்பு என்றே அழைக்கின்றனர். இவர்கள், இந்தப் பகுதி யோவான் நற்செய்திக்கு முடிவுரை போலவும், திருச்சபையை மையப் படுத்தியதாகவும் இருக்கிறது என்று காரணம் காட்டினாலும் சில முக்கியமான தற்கால, யோவான்-நற்செய்தி அறிஞர்கள் இப்பகுதி யோவான் நற்செய்தியின் பிரிக்க முடியாத பகுதியே என்றும் வாதாடுகின்றனர். இந்த நற்செய்தி இரண்டு முக்கியமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது. வவ.1-14: இயேசுவின் காட்சி, வவ.15-24: பேதுருவுடனான இயேசுவின் உரையாடல்.

வவ. 1-3: கானாவூர் திருமண வீட்டுக் காட்சி போலுள்ளது. நேரம், இடம், காலம் சொல்லப்பட்டுள்ளது. திபேரியாக்கடல் என்று காட்டி உயிர்த்த ஆண்டவர் எருசலேமைவிட்டு வெளியில் தோன்றுவது காட்டப்படுகிறது. இயேசு தோன்றினார் என்று, கடவுளின் காட்சிக்கு பயன்படுத்தும் வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது (φανερόω பானெரோவோ- தோன்று). ஏழு சீடர்கள் இங்கே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நத்தானியேல் முதல் தடவையாக பெரிய நிகழ்வொன்றைக் காண்கிறார். மூன்றாவது வசனம் சீடர்கள் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பியதை காட்டுவதாக அமைந்துள்ளது. சிலர், பேதுருவின் தலைமையில் புது மீன்பிடித்தலில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் இதனை பார்க்கின்றனர். ஆண்டவர் இல்லாமல் மீன்பாடு குறைவாக இருக்கிறது.

வவ. 4-6: நற்செய்தியாளருக்கு (ஆசிரியர்) கரையில் நிற்பவர் இயேசு என்று தெரிகிறது, சீடர்களுக்கல்ல. பகல் நம்பிக்கையை குறிக்கிறது. பிள்ளைகளே என்று நெருக்கமான வார்த்தையாலும், கேள்வி கேட்பதன் மூலம் தான் அவர்களின் சிக்கல்களை புரிந்துள்ளார் என்று காட்டுகிறார் (παιδίον பைதியொன்- பிள்ளாய்). வலப் பக்கம் அதிகமான மீன்கள் இயேசுவின் அதிகாரத்தையும் ஆசீர்களையும் குறிக்கின்றன.

வவ. 7-14: அதிகமான மீன் பாடு இயேசுவை அன்புச் சீடருக்கு (ὃν ἠγάπα ὁ Ἰησοῦς ஹொன் ஏகாபா ஹொ ஈயேசூஸ்- இயேசு அன்பு செய்தவர்) அடையாளம் காட்டுகிறது. கல்லறையில் நடந்ததைப் போல, இங்கே மீண்டுமாக அன்புச் சீடர்தான் இயேசுவை அடையாளம் காண்கிறார். பேதுரு அதே உற்சாகத்தை இங்கேயும் எண்பிக்கிறார். ஆர்வத்தோடும் கூட ஆடையணிவதில் முக்கியம் காட்டி ஆண்டவருக்கு மரியாதை செய்ய முயற்சிக்கிறார். ஆண்டவர் சீடர்களுக்கு அப்பமும் மீனும் கொடுப்பது அவர்தான் ஊற்றுக்களின் உறைவிடம் என காட்டுகிறது. பெரிய மீன்கள், 153 என்ற எண்ணிக்கை, வலைகள் கிழியவில்லை என்றுமாக சொல்லி வாசகர்களின் பார்வையை திருப்புகிறார் ஆசிரியர். சிலர் இந்த எண்ணிக்கையை உருவகமாக பார்க்கின்றனர். உதாரணமாக அகுஸ்தினார் இதனை நிறைவின் அடையாளமாக பார்கிறார், அலெக்சாந்திரிய சிறில் இதனை திருத்துவத்தின் அடையாளமாக அகுஸ்தினாருடன் சேர்ந்து பார்க்கிறார். சிலர் இதனை திருச்சபையின் நிறைவின் அடையாளமாக பார்க்கின்றனர். பேதுரு வலையை இழுத்தது பிடிப்பட்டவற்றை இயேசுவோடு இணைக்கிறது என்று பார்க்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள வினைச்சொல் இதனையே குறிக்கிறது (ἕλκω இழு). கேள்வி கேட்காமையும், ஆண்டவரோடு உணவருந்தியமையும், உயிர்த்த ஆண்டவர் சீடர்களுடன் நல்ல உறவை கொண்டிருந்ததைக் காட்டுகிறது. அத்தோடு சில பாடங்கள் இந்த நிகழ்வில் நற்கருணை ஏற்படுத்திய செபங்களையும் இணைத்து, இதனையும் நற்கருணைக் கொண்டாட்டமாக பார்க்கின்றன (வ.13). ஆண்டவர் மூன்றுமுறை தோன்றினார் என்பது பல முறை தோன்றினதை உறுதிப்படுத்துகிறது.

வவ.15-17: 15வது வசனத்தில் தமிழில் இவர்களைவிட என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது, கிரேக்கத்தில் பலர்பால் வகையில் உள்ளது (πλέον τούτων பிலெயொன் டூடோன் - இவைகளைவிட) ஆதலால் கிரேக்கத்தில் இது பேதுருவின் பழைய சீடத்துவத்தையோ அல்லது அவரது தொழில் துறைகளையோ அல்லது மற்றைய சீடர்களின் மேல் அவருக்கிருந்த அன்பையோ குறிக்கலாம், இவையனைத்தையும் அவர் துறக்கவேண்டும். இங்கே ஆண்டவர் பேதுருவை தன்னுடைய ஆடுகளை மேய்குமாறு மூன்று தடவை கேட்கிறார், இது பேதுரு மூன்று தடவை ஆண்டவரை மறுதலித்ததை சரிபடுத்த என்று பலர் வாதிடுகின்றனர். இயேசு மூன்று தடவை பேதுருவை முழுப் பெயர் சொல்லி அழைத்தமை, அவரை நல்ல ஆயராக காட்டுகிறது. ஏற்கனவே நல்ல ஆயன் தன் ஆடுகளை பெயர்சொல்லி அழைப்பான் என்று யோவான் சொல்லி இருக்கிறார். அன்பைக் குறிக்க இரண்டு முக்கியமான சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன (ἀγαπάω அகாபாஓ- அன்புசெய், φιλέω ஃபிலெஓ- நட்புகொள்). அதேபோல ஆடுகளைக் குறிக்கவும் இரண்டு வேறு வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன (ἀρνίον அர்னியோன்- செம்மறி, πρόβατον புரொபாடொன்- மந்தை). இந்த அமைப்புகள், சாதாரண ஒத்த கருத்துச் சொற் பாவனை என்று சில அறிஞர்கள் பார்க்கின்றனர், சிலர் இதனையும் அடையாளமாக பார்க்கின்றனர். அதிகமானவர்கள் இந்த பகுதியை பேதுரு பொறுப்பெடுக்கும் காட்சியாக காண்கின்றனர். உண்மையில், இந்த பகுதியின் முக்கியத்துவம் பேதுருவுக்கும் இயேசுவிற்குமான உறவாகும். இங்கே ஆண்டவர் தன் ஆடுகளை பேதுருவின் அதிகாரத்திலோ அல்லது தனி கவனிப்பிலோ விடவில்லை, மாறாக இயேசுவை அன்புசெய்வதென்றால், தன் ஆடுகளை பேணிகாப்பதே ஆகும் என்று விளங்கப்படுத்துகிறார். இயேசு மட்டுமே, என்றும் ஆண்டவர்.

வவ.18-19: இவ்வரிகள் பேதுருவின் சாட்சிய மரணத்தை பற்றியது என்று திருச்சபை பாரம்பரியமாக நம்புகிறது. கைகளை விரித்துக்கொடுத்தல் சிலுவை மரணத்தை குறிக்கலாம் (ஒப்பிடுக: வி.ப 17,12: எசா 65,2). இடையைக் கட்டுதல் ஒருவருடைய தனிச் சுதந்திரத்தை குறிக்கிறது. இயேசுவைப் போல் பேதுருவும் தம் மரணத்தால் கடவுளை மாட்சிபடுத்தினார் என்கிறார் ஆசிரியர். இறுதியான வசனம் அனைத்து சீடர்களுக்கும் உரியது. பேதுருவின் அதிகாரம் அவரது தலைமைத்துவத்தில் இருந்து வரவில்லை மாறாக அவர் இயேசுவோடு கொண்ட உறவிலும், நட்பிலும் அவரது சாட்சியத்திலிருந்தும் வருகிறது என்பது யோவானின் ஆழமான போதனை.

ஆண்டவர் இயேசு மட்டும்தான் ஆண்டவர்,

ஆடுகளுக்கிடையில் வெள்ளாடோ,

கறுப்பாடோ செம்மறியோ கிடையாது.

ஆடுகள் என்பதும் உருவகம் மட்டுமே.

நாம் அனைவரும் அவர் சீடர்கள்.

இயேசுவுடன் உள்ள உறவே பணியை தெரிவு செய்கிறது.

இந்த பணி இயேசுவை பற்றிக்கொள்ள கேட்கிறது, அதிகாரத்தையல்ல.

பேதுருவின் அதிகாரம் என்ற மாயையை பார்க்காமல், அவர் இயேசுமேல் கொண்ட

நம்பிக்கையையும், அவர் காட்டிய அன்பையும் பார்த்து வாழ்வோம்.

திருச்சபையிலோ, இறையரசிலோ, அதிகாரம் என்பது

பிழையான வாதம்.

ஆண்டவரே, அனைத்தையும் விட உம்மை அன்பு செய்வது கடினமாக இருக்கிறது,

அதனைச் செய்ய நம்பிக்கையையும் வல்லமையையும் தாரும். ஆமென்.

இந்த வருடம் பாஸ்கா விழாவில் உயிர் தியாகம் செய்த உறவுகளின்

வாழுகின்ற குடும்ப உறவுகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.