இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






Pascha, பாஸ்கா காலம் இரண்டாம் வாரம்

முதல் வாசகம்: தி.பணி 5,12-16
திருப்பாடல்: 118
திருவெளிப்பாடு 1,9-13.17-19
யோவான் 20,19-31


முதல் வாசகம்
முதல் வாசகம்: தி.பணி 5,12-16

12மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். 13மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். 14ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். 15பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; 16எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

இந்த பகுதி திருத்தூதர்கள், ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின், எருசலேமில் ஆற்றிய மறைபரப்பு பணியைப் பற்றி விவரிக்கின்றது. ஏற்கனவே பேதுருவும், மற்றையவர்களும் மக்கள் மத்தியில் பிரசித்தமாய் காணப்பட்டனர். சில அரும் அடையாளங்களையும் அவர்கள் இயேசுவின் பெயரால் செய்யத்தொடங்கியிருந்தனர். அனனியா மற்றும் சப்பிராவின் நிகழ்வும் இந்தவேளையில் தான் நடைபெற்றிருந்தது. இதனால் மக்கள் இவர்கள் சொல்வதைக் கேட்கவும், பல நோய்களை குணபடுத்திக்கொள்ளவும் திருத்தூதர்களின் பின்னால் குவியத்தொடங்கினர். இப்படியான ஒரு வேளையிலேதான் இந்தக் காட்சி நடைபெறுகிறது.

வ. 12: இந்த காலப்பகுதியில் பலர் மாயவித்தைகளையும் வினோதங்களையும் செய்திருக்கலாம், ஆனால் திருத்தூதர்கள் இயேசுவின் பெயரால் அரும் அடையாளங்களைச் செய்ததை லூக்கா வித்தியாசமாகக் காட்டுகிறார். இவை மக்களின் பார்வையையும் திருத்தூதர்களின் பால் ஈர்த்தது.

சாலமோன் மண்டபம், எருசலேம் கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. பாரிய தூண்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த மண்டபம், நண்பர்களும் யூதர்களும் சந்திக்கும் இடமாக இருந்தது. பழைய சாலமோன் ஆலயத்தின் எச்சம் எனவும் இதனை சில ஆய்வாளர்கள் காண்கின்றனர். ஏரோது இதனை பெருப்பித்திருந்தான். இயேசு ஆண்டவர் அதிகமான வேளைகளில் மக்களையும் சீடர்களையும் சந்திக்கும் இடமாகவும் இது இருந்தது. அதனைப் போலவே தொடக்க திருச்சபையும் இந்த இடத்தில் அதிகமாக கூடியது. மக்கள் ஆலயத்தினுள் செல்வதற்கு முன் இந்த இடத்தில் கூடி ஆன்மீக காரியங்களைப் பற்றியும் விவாதித்தனர். உரோமையர் எருசலேமை அழித்தபோது இந்த மண்டபமும் முழுவதுமாக அழிந்து போனது. (மேலும் வாசிக்க http://www.bible-history.com/jerusalem/firstcenturyjerusalem_royal_porticoes.html)

வ. 13: மற்றவர் எவரும் என, லூக்கா யூதர்களை குறிக்கிறார் எனக் கொள்ளலாம். அவர்கள் இந்தத் கூட்டத்தில் சேராவிடினும், இந்தக் கூட்டத்தின் மீது கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் இது காட்டுகிறது. இக்காலத்தில் சாதாரன யூதர்கள் கிறிஸ்தவர்களின் மேல் மிக மரியாதை வைத்திருந்ததை இவ்வாறு நோக்கலாம்.

வ. 14: நம்பிக்கைக் கொண்டிருந்தவர்கள் என்ற ஒரு எச்சவினை பாவிக்கப்பட்டுள்ளது (πιστεύοντες) இது ஆரம்பகால கிறிஸ்தவர்களைக் குறிக்கலாம். ஆண்களையும் பெண்களையும் சரிவர குறிப்பிட்டிருப்பது, ஆரம்ப கால திருச்சபையில் பாலினம் ஒரு பிரச்சனையாக இல்லாதிருந்ததை காணலாம்.

வ. 15: பேதுருவின் நிழலாவது நோயாளிகளில் விழாதா என எண்ணுமளவிற்கு பேதுரு புனிதராக உருவெருத்திருந்தார்.

வ. 16: எருசலேமில் மட்டுமல்ல, புற நகர்ப்பகுதியிலிருந்தும் நோயாளர்கள் திருத்தூதர்களின் தொடுகைக்காக கொண்டுவரப்பட்டிருந்தனர். அனைவரும் நலமடைந்தனர் என்பது, ஆண்டவரின் தரிசனம் அங்கே அதிகமாக உணரப்பட்டதாக காட்டுகிறார் லூக்கா. லூக்கா இந்தப் பகுதியை ஒரு முன்னுரை போலவே காட்சிப்படுத்துகிறார், பின்னர் வருகிற பகுதிகள் எவ்வாறு திருத்தூதர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை காட்டும்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 118

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! 5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார். 6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?✠ 7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன். 8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! 10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன். 11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன். 12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன். 13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். 14ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; 18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. 19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். 22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். 25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள். 28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். 29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தை மையப்பொருளாக வைத்து இந்த 118வது புகழ்சித்திருப்பாடல் வருகின்றது.

இந்த திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:

அ). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு.

இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார். முதலில் மக்களையும் பின்னர் குருக்களையும் அழைப்பது, கடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார். ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில் ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ இחֶסֶד ஹெசட்- இரக்கம்). ஆண்டவருக்கு அஞசுவோர் என்று எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஆ). வவ.5-13: அரசரின் சாட்சியம்.

இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல். அரசர் தன்னுடைய இராணுவ துன்பங்களின் போது எவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார். இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம். மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர் தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.

இ). வவ.14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம்.

வ.14, ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளது. பாடல், என்பதை பலம் என்றும் மொழிபெயர்கலாம் (זִמְרָה ட்சிம்ராஹ்- இசை, பாடல், பலம்). ஆண்டவர் தன்னை கண்டித்தார் என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.

உ). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.

இந்த வரிகள் பாடலாக மட்டுமன்று நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டவரின் வாயில், இவ்வழியாக நீதிமான்கள் நுளைவர் என்பது இந்த வழிபாட்டைக் குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்கு பாவிக்கின்றனர்- கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வது வசனம், ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பது, பின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டது, நமக்கு இது இயேசுவைக் குறிக்கிறது. 27வது வசனம், கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறது, இது ஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம். இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையான ஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம்.

ஊ). வ.29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.

இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறது. அரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும் நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார்.



இரண்டாம் வாசகம்
திருவெளிப்பாடு 1,9-13.17-19

9உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. 10ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். 11'நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை' என்று அக்குரல் கூறியது.

12என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். 13அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்

17நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; 'அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. 18வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. 19எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.



அ. விவிலியத்தில் அதிகமாக ஆய்வுசெய்யப்பட்ட நூல்களில் திருவெளிப்பாடு ஒரு முக்கியமானதெனக் கொள்ளலாம். இது ஒரு வகை வெளிப்பாட்டு ஆரம்ப யூத இலக்கியவகையைச் சார்ந்தது. இதன் காலத்தை இரண்டாம் நூற்றாண்டு எனக் கணிக்கின்றனர். 1-2 ஏனோக்கு, 2-3 பாருக்கு, 4 எஸ்ரா போன்றவையும் இவ்வகையை சார்ந்தவையே. ஆரம்ப காலத்தில் இது ஒரு திருமடலாகவே கருதப்பட்டது. அதிகமான காட்சிகள், உருவகங்கள், அடையாளங்கள், இலக்கங்கள், என மிகவும் குறியீட்டு மொழிகளைக் கொண்டமைந்துள்ள இந்தப் புத்தகத்தை அவதானமாகவும், அதன் மூல சூழ்நிலை தேவைகளிலும் வாசிக்க வேண்டும். இது இறைவார்த்தை என்றபடியால் எமது இன்றைய தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் இது பதிலளிக்கக் கூடியது, ஆனால் இலகுவில் தவறாக பாவிக்கப்படக்கூடிய ஆபத்தையும் இதன் வாசகர்கள் எதிர்நோக்குவர். திருவெளிப்பாட்டு இலக்கிய வகை நூல்கள், தன்மையை (முதன் நபர்) பேசுபொருளாகவே கொண்டிருக்கின்றன. அவ்வப்போது கதையின் தலைவர்க்கு சிலர் தோன்றி வெளிப்பாடுகளை விளங்கப்படுத்துவதைக் காணலாம். இதனுடைய செய்தியாக, அறிவிற்கப்பாற்பட்ட செய்திகளை விவரிக்கப்படுவதை எடுக்கலாம். இதனுடைய நோக்கமாக, வாசகர்கள் தங்களது வாழ்வில் வரும் துன்பங்களையும், அல்லது தாங்கள் இவ்வுலகில் சந்திக்கும் அஞ்ஞானத்தையும் எதிர்கால கண்கள் கொண்டு பார்க்கவும் இதனால் புத்துணர்ச்சியடையவும் எழுதப்பட்டது என எடுக்கலாம். நான்கு தடவைகள் யோவான் என்றொருவர் குறிப்பிடப்பட்டுள்ளமையால் இதன் ஆசிரியராக திருச்சபை, திருத்தூதர் யோவனை முன்மொழிகிறது. இக்கருதுகோளுக்கு சார்பாகவும் எதிராகவும் பல வாதங்களும் புதுவாதங்களும் இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு தடவையும் இந்நூலை வாசிப்பவர், ஆச்சரியங்களையும், இனிமையையும் உணர்வர்.

ஆ. இதன் ஆசிரியத்துவம், ஆழமான எபிரேத்தையும், அரமெயிக்கத்தையும், அத்தோடு தகுந்த முதல் ஏற்பாட்டு அறிவையும் காண்பிக்கிறது. நிச்சயமாக உரோமையர் கிறிஸ்தவர்களுக்கெதிராக தூண்டிவிட்ட கலாபனைகளுக்கு பதிலளிப்பதாகவும், கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இந்நூல் எழுதப்பட்டது என நம்பலாம். இருபத்தோரு அதிகாரங்களைக் கொண்டுள்ள இப்புத்தகம், ஏழு திருச்சபைகளுக்கான கடிதங்கள், விண்ணக காட்சிகள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், திருச்சபைக்கும் தீய சக்திகளுக்குமான போராட்டம், ஏழு துன்பக் கிண்ணங்கள், எதிர்கிறிஸ்துவின் ஆட்சியும்-அழிவும், கிறிஸ்துவின் வெளிப்பாடு-கடவுளின் நகர், இறுதியாக முடிவுரையையும் கொண்டு அமைந்துள்ளது.

வ.9: பத்மோஸ் (Πάτμος) ஏஜியன் கடலில் அமைந்துள்ள மலைத் தீவு. தனிமையிலுள்ள இந்த எரிமலைத் தீவில்தான் யோவான் ஆண்டவரின் திருவெளிப்பாட்டை தாம் பெற்றுக்கொண்டதாக கூறுகிறார். இன்று இது கிரேக்க நாட்டிற்கு உரியதாகும். யோவானுக்கு முன்னமே உரோமைய வரலாற்று ஆசிரியர்களினால் இந்த தீவு அறியப்பட்டிருந்தது. உரோமையர்கள் தங்கள் சிறைக்கைதிகளை இந்தத் தீவில் அடைத்திருந்தனர். முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களின் அழைப்பினைப்போன்று யோவான் ஒரு முன்னுரை கொடுக்கிறார். இந்த வசனம் முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் துன்பங்களை அப்படியே வர்ணிக்கிறது. அதாவது வேதனையிலும், மனவுறுதியிலும், ஆட்சியுரிமையிலும் பங்குகொள்ளுதல். யோவான் தன்னை ஒரு உடன் சகோதரனாக இந்த போராட்டத்தில் இணைத்துக்கொள்கிறார், தான் பாத்முவுக்கு கடத்தப்பட்டதன் நோக்கமும் அதுவே என்கிறார்.

வ.10: யோவான் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் அல்லது ஆவி அனுபவத்தில் இருந்தார் என்றும் மொழிபெயர்க்கலாம். ஞாயிற்றுக் கிழமை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆண்டவரின் நாள் என்று கிரேக்க மூலத்தில் உள்ளது. இது அக்கால வழக்கத்தில் இருந்த சீசரின் நாள் அல்லது அரசரின் நாள் என்ற பின்புலத்தை நினைவூட்டுகிறது. ஓரு எகிப்திய தொலமி அரசன் ஒவ்வொரு 25வது நாளையும் தன்னுடைய நாளாக அறிவித்தான். இந்த பின்புலத்திலே கிறிஸ்தவர்கள் ஆண்டவரின் உயிர்ப்பு நாளை ஆண்டவரின் நாளாக கடைப்பிடிக்கத் தொடங்கினர், இது எபிரேயர்களின் ஓய்வு நாளை அடிப்டையாகவும் கொண்டிருக்கலாம். எக்காளங்கள் இறைசெய்தியை குறிக்கின்ற அறிகுறிகள்.

வ.11: இந்த ஏழு திருச்சபைகளும் எபேசிலிருந்து இலாவோதேகியா செல்லும் பிரதான வீதியை பாதையாக கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏழு திருச்சபைகளும், ஏழு பிரதான சிறு நகர்களைக் அடிப்படையாகக் கொண்டு அமைந்தருந்தன. யோவானுடைய காலத்தில் அதிகமான கிறிஸ்தவ மக்கள் தொகையையும் இந்த நகர்கள் கொண்டமைந்திருந்தன. சுருள் ஏட்டில் எழுதச் சொன்னது முதல் ஏற்பாட்டில், எசாயா, எரேமியா மற்றும் எசேக்கியல் இறைவாக்கினர்களுக்கு கடவுள் கொடுத்த ஏட்டுச் சுருள்களை நினைவூட்டுகின்றன.

வ.12: இந்த ஏழு விளக்குத் தண்டுகள் எருசலேம் தேவாலயத்திலிருந்த ஏழு விழக்குத் தண்டுகளை நினைவூட்டுகிறது. (מְנוֹרָה மினோரா - ஒர் அடியையும் ஏழு தண்டுகளையும் விளக்குகள்) காண்க வி.ப 25,31. எபிரேயர்களுக்கு நிறைவை குறித்த இந்த விளக்கு தண்டு, இங்கே கிறிஸ்தவர்களுக்கு ஒரே கடவுளையும், ஒரே உயிர்;த்த ஆண்டவரையும் அவரின் திருச்சபைக் கூட்டத்தையும் குறிக்கிறது.

வ.13: இந்த வசனம் அப்படியே தானியேலை நினைவூட்டுகிறது, தானியேலில், இந்த மானிட மகனுக்கு, பல விளக்கங்கள் இருந்தாலும், யோவான் இந்த மானிட மகனை ஆண்டவர் இயேசுவாகவே தனது கருத்தியலுக்கு ஏற்றவாறு காண்கின்றார் (காண்க: தானி 7,13). நீண்ட அங்கி, இங்கே ஆண்டவரின் நித்தியத்தையும், இறைதன்மையையும், தெய்வீகத்தையும் குறிக்கலாம். பொன்பட்டை அவரது அதிகாரத்தையும் தெய்வீக உரிமையையும் குறிக்கிறது.

வ.17: காட்சியைக் கண்ட யோவான் தனது நிலைப்பாட்டை ஓர் இறைவாக்கினரைப் போல ஒப்பனை செய்கிறார், ஆண்டவர் தனது பலத்தை கொடுப்பது போல வலக்கையை வைத்து அதிகாரம் கொடுக்கிறார். ஆண்டவர் தன்னை முதலும் முடிவும் என்று சொல்வது எசாயா இறைவாக்கை நினைவூட்டுகிறது (காண்: எசாயா 41,4). நான் இருக்கிறேன், என்று சொல்வதும் (ἐγώ εἰμι எகோ எய்மி) முதல் ஏற்பாட்டு இறைவெளிப்பாடுகளை நினைவூட்டுகிறது. இதே அர்த்தத்தில் முடிவுரையிலும் பல வசனங்கள் வரும் (ஒப்பிடுக: 21,6: 22,13).


நற்செய்தி வாசகம்
யோவான் 20,19-31

19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார். 20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா' என்றார். 24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25மற்றச் சீடர்கள் அவரிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்றார்கள். தோமா அவர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' என்றார். 26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார். 27பின்னர் அவர் தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்' என்றார். 28தோமா அவரைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்றார். 29இயேசு அவரிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார். 30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இந்தப் பகுதியில் பயத்திலிருந்து நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான ஒரு மாற்றத்தை சீடர்கள் பெற்றதை அவதானிக்கலாம். இந்த பகுதிக்கு முன்னர் இயேசு ஏற்கனவே மகதலா மரியாவிற்க்கு தோன்றியிருந்தார் அத்தோடு தனது திருத்தூதர்களுக்கும் தனது உயிர்ப்பைப் பற்றி அறிவிக்க சொல்லியருந்தார். மரியா ஆண்டவரின் உயிர்ப்பை விட அவர் தன்னை சந்தித்ததையே பற்றி மகிழ்ந்திருந்தார். எனவே யோவான் இங்கே இன்னொரு முக்கியமான செய்தியை பதிவு செய்கிறார்.

வ.19: மாலை நேரம் கதவுகள் மூடியிருப்பது சீடர்களின் பய உணர்வையும் மனச் சிக்கல்ளையும் அழகாக படம்பிடிக்கிறது. ஆண்டவர் இவர்களின் நடுவில் நிற்பதும், அமைதி உண்டாகுக என்று சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான செய்தி. யோவானின் வாசகர்களுக்கும் இது முக்கியமாக தேவைப்பட்டது. அமைதியை தரக்கூடியது ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமே, அத்தோடு கதவுகள் மூடியிருந்தாலும், மாலையானாலும் ஆண்டவரின் சக்தியை தடுக்க முடியாது என்கிறார்.

வவ.20-21: ஆண்டவர் தனது உடலை காட்டுவதன் மூலமாக தான் ஒரு மாய ஆவி இல்லை என்பதையும், இது ஒரு வகை மனம் சம்பந்தமான அனுபவம் இல்லை என்பதையும் வாசகர்கள் புரிந்துகொள்வர். இங்கே இயேசுவின் அதே பணி, மாற்றங்கள் இன்றி திருத்தூதர்கள் வாயிலாக மீண்டும் தொடர்வதைக் காட்டுகிறது. இது ஏற்கனவே ஆண்டவர் தான் வாழ்ந்தபோது சொன்ன வார்த்தைகளை நிறைவுசெய்கிறது (காண்: 14,27: 16,33). இரண்டு முறை அமைதி தருவதாகச் சொல்வது, அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு அமைதி எவ்வளவு தேவையாக இருந்தது என்பதை கோடிடுகிறது.

வவ.22-23: இங்கே பல செய்திகள் பறிமாறப்படுகின்றன. உண்மையில் திருத்தூதர்கள் ஆவியை நிறைவாக ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்னரே பெற்றுக்கொண்டனர், இந்தப் பகுதி திருத்தூதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுதலை காட்டுகிறது என எடுக்கலாம். அத்தோடு தொடக்கநூலில் ஆண்டவர் மனிதனை படைத்து தனது ஆவியை ஊதியே உயிரைக் கொடுத்தார், இங்கே தனது ஆவியை ஊதி மீண்டும் புது பிறப்பு கொடுக்கிறார், என எடுக்கலாம். பாவங்களை மன்னித்து, ஒப்புரவு அருட்சாதனம் ஏற்றபடுத்தப்பட்ட நிகழ்வாகவும் ஆய்வாளர்கள் இந்நிகழ்வைக் காண்கின்றனர்.

வவ.24-25: தோமாவின் பேச்சும் அவரது செயல்களும் ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச பிரள்வுகளைக் காட்டுகிறது. தோமா ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதைவிட ஆண்டவரின் தரிசனத்தை நம்பவில்லை என்றே தோன்றுகிறது. தோமா மற்றவர்களைவிட விசுவாசத்தில் குறைந்தவர் என்று சொல்வது யோவானின் செய்தியல்ல. இவருடைய பெயர் அரமெயிக்க மொழியில் இருவர் என்ற அர்தத்தைக் கொடுக்கிறது. தோமாதான் ஆண்டவருடன் இறக்கவும் முதன் முதலில் ஆயத்தமாக இருந்தவர் (11,16). அதே வேளை தன்னுடைய வினாக்களை அஞ்சாது ஆண்டவரிடம் கேட்கவும் தயாராக இருந்தவர் (14,5). தோமா நம்பிக்கையின்மையின் அடையாளம் என்பதைவிட ஆரம்பகால திருச்சபையின் மனித முகம் என்றே எடுக்கவேண்டும். ஆண்டவரின் காயங்கள், அவரின் சிலுவை மரணத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன.

வவ.26-27: எட்டு நாட்கள் என்பது கிரேக்கர்களின் ஒரு வார அளவைக் குறிக்கும். கதவுகள் மூடியிருந்ததும், இயேசு உள்ளே வந்ததும், சீடர்கள் இன்னும் பயத்திலே இருந்ததையும் குறிக்கிறது. ஆண்டவர் இரண்டு முறை அவர்களுக்கு அமைதி கொடுத்தும் அவர்கள் பயத்திலே இருக்கிறார்கள். ஆக மற்ற சீடர்களுக்கும் தோமாவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆண்டவர் தோமாவிற்கு சொல்லும் செய்தி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியது, அது, அச்சம் விலக்கி நம்பிக்கை கொள்ளுங்கள் என்பதாகும். யோவான் நற்செய்தியின் நோக்கமும் இதுவே.

வ.28: கிறிஸ்தவ நாகரீகத்தினதும், விசுவாசத்தினதும் முக்கியமான கோட்பாடு இது. இயேசுதான் ஆண்டவர், அவரேதான் கடவுள் (ὁ κύριός μου καὶ ὁ θεός μου - என் ஆண்டவரே சக என் கடவுளே!)

வவ.29-31: யோவான் இவ்வாறு தன் நற்செய்தியின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறார். இயேசுவைக் காணாமல் அவரை நம்புதலே இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்க்கைக்கு தேவையாக இருந்தது. யோவான், இயேசுவின் அனைத்து செய்ற்பாடுகளையும் நற்செய்தி உள்வாங்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார். இங்கனம், நற்செய்திகள் சில குறிப்பிட்ட தேவைகளுக்காவே எழுதப்பட்டது என்பது புலனாகிறது. நற்செய்திகள் உண்மையில் இயேசுவின் அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் உள்ளடக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

நம்பிக்கை என்பது ஒரு கொடை, அது அறிவிலும் புரிதலும் மட்டும் தங்கியிருக்க முடியாது. நம்பிக்கைக்கு அடித்தளம் தாழ்ச்சியும் நன்றியுணர்வுமாகும் என்பதே நற்செய்தியாளர்களின் படிப்பினைகள்.

ஆண்டவரே எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும், நம்பிக்கை மூலமாக எங்கள் வாழ்வை ஆழப்படுத்தும். ஆமென்.