ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









மனம் திறந்து
திருத்தந்தை பிரான்சிஸ் உடனான ஒரு சிறப்பு நேர்காணல்.
பாகம் 2

நீங்கள் ஏன் இயேசு சபையில் சேர்ந்தீர்கள்?



திருத்தந்தையே! நீங்கள் இயேசு சபையைத் தேர்ந்தெடுக்க தங்களைத் தூண்டியது எது? இயேசு சபையில் உம்மைக் கவர்ந்திழுப்பது என்ன?
“நான் இதைவிட சற்று அதிகம் ஆசைப்பட்டேன். ஆனால் நான் என்னவென்றே தெரியவில்லை. நான் குருமாணவராக மறைமாவட்ட குருமடத்தில் சேர்ந்தேன். நான் சுவாமிநாதர் சபையை விரும்பினேன்: எனக்கு சுவாமிநாதர் சபையைச் சேர்ந்த பல நண்பர்கள் இருந்தனர். பின்னர் நான் நன்கு அறிந்திருந்த இயேசு சபையைத் தேர்ந்து கொண்டேன்: ஏனெனில், நான் சேர்ந்திருந்த மறைமாவட்ட குருமடம் இயேசு சபையினரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இயேசு சபையில் குறிப்பாக மறைபரப்பு ஆர்வம், ஒன்று கூடி வாழும் குழும வாழ்வு, ஒழுக்கம் ஆகிய மூன்றும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் என்ன வித்தியாசம் என்றால்.. உண்மையிலேயே.. உண்மையிலேயே ஒழுக்கமில்லாத நபர் நான். ஆனால் அவர்களுடைய ஒழுக்கம், அவர்கள் நேரத்தைக் மேலாண்மைச் செய்யும் விதம் என்னை மிகவும் பாதித்தது. எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது எனது துறவற குழுமம். நான் எப்பொழுதும் குழுமத்திற்காக ஏங்கினேன். நான் என்னை எனக்குநானே ஒரு குருவாக மட்டும் பார்க்கவில்லை. எனக்கு குழுமம் தேவைப்படுகிறது. நான் தற்போது இந்த புனித மார்த்தா இல்லத்தில் இருப்பதிலேயே உங்களால் இதனை ஊகிக்க முடியும். திருத்தந்தைத் தேர்வின் போது நான் இங்குள்ள அறை எண் 207 இல் இருந்தேன். (குலுக்கல் முறையில் தான் ஒவ்வொருவருக்கும் அறைகள் ஒதுக்கப்படும்). நாம் தற்போது உள்ள இந்த அறை இதற்கு முன்பு விருந்தினர் தங்கும் அறையாக இருந்தது. நான் தற்போது அறை எண் 201 ஐ எனக்காக தேர்ந்தெடுத்தேன். ஏனெனில், திருத்தந்தையர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் வழக்காக தமக்காக தேர்ந்து கொள்ளும் அடுக்குமாடி குடியிருப்புக்கான உரிமையை நான் அடைந்தபோது, எனக்குள் நான் “வேண்டாம்” என்பதைத் தெளிவாக கேட்டேன். அப்போஸ்தலிக்க அரண்மணை வளாகத்தில் உள்ள திருத்தந்தைக்கான குடியிருப்பு ஆடம்பரமாக இல்லை. அது ஒரு பழமையான, ரசிக்கத்தக்க விதத்தில் அலங்கரிக்கப்பட்ட, மிகப்பெரிய ஒன்றே தவிர, ஆடம்பரமானது அல்ல. ஆனால் முடிவில் அது ஒரு தலைகீழாக கவிழ்க்கப்பட்ட புனல் போன்று உள்ளது. அது மிகப்பெரியதாகவும் விசாலமாகவும் இருந்தாலும் அதன் நுழைவாயில் உண்மையிலேயே குறுகியதாக உள்ளது. மக்களால் தயங்கி தயங்கி மட்டுமே வரமுடியும்: ஆனால் என்னாலோ மக்களின்றி வாழ முடியாது. நான் என் வாழ்வை மற்றவர்களோடு வாழவே விரும்புகிறேன்.

ஒரு இயேசு சபையாளர் உரோமையின் ஆயராக இருப்பதன் பொருள் என்ன?
உரோமைக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இயேசு சபையாளர் என்பதைப் பற்றி நான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கேட்டேன். இஞ்ஞாசியாரின் ஆன்மிக வெளிச்சத்தில், உலகளாவிய திருச்சபைக்குத் தொண்டாற்றும் உங்கள் பங்கை எப்படி நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்? ஒரு இயேசு சபையாளருக்கு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பொருள் என்ன? உங்களுக்கு புனித இஞ்ஞாசியாருடைய ஆன்மீகத்தின் எந்தப் பகுதி உங்களது பணியை ஆற்றுவதற்கு உதவுகிறது?
“ஆய்ந்துணர்தல்” (Discernment) என்று அவர் சொன்னார். புனித இஞ்ஞாசியாருக்குள்ளேயே மாற்றம் ஏற்படுத்திய ஒன்றில் ஆய்ந்துணர்தல் என்ற பண்பும் ஒன்று. அப்பண்பு ஆண்டவரை அறியவும், நெருக்கமாக அவரைப் பின் தொடரவும் பேராட்டத்திற்கான ஒரு கருவியாக அவருக்கு விளங்கியது. புனித இஞ்ஞாசியாரின் இலட்சியப்பார்வையைப் பற்றி விளக்கும்போது எடுத்தாளப்டும் இந்த மேற்கோளைச் சொல்லும்போது எனக்கு உணர்ச்சி மேலிடும் non coerceri a maximo, sed contineri a minimo divimum est (மிகச் சிறந்தவற்றால் சிறைப்படுத்தப்பட கூடாது: இருப்பினும் மிகச் சிறியவற்றில் அடங்கிவிடுகிறது - அதுதான் இறைமை ஆகும்). திருச்சபையின் நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பாத்திரங்களைக் குறித்து, குறிப்பாக இன்னொருவருக்கு இல்லத் தலைவராக இருப்பது தொடர்பாக நான் இந்த மேற்கோளைப் பற்றி அதிகம் சிந்தித்துள்ளேன். பரந்த இடத்தால் வரையறைப்படுத்தப்படக் கூடாது என்பதும் இன்றியமையாதது: வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் தங்கிட இயல்வதும் இன்றியமையாதது. பெரியது மற்றும் சிறியதின் சிறப்பு பெருந்தன்மை நிறைந்தது. பெருந்தன்மைக்கு மிக்க நன்றி: நாம் நிற்கிற நிலையிலிருந்தே அந்த தொடுவானத்தை எப்பொழுதும் பார்க்க முடியும். அன்றாட வாழ்வில் சின்னஞ்சிறிய செயல்களை இறைவனுக்கும் மற்றவருக்கும் பரந்த மனப்பான்மையோடு செய்ய இயலும் என்பதையே குறித்துக்காட்டுகிறது. பரந்து விரிந்து தொடுவானத்திற்குள் இறையரசிற்குரிய சின்னஞ்சிறியவற்றை உய்த்துணர இயலும் என்பதையே இது குறித்துக்காட்டுகிறது. தொடர்ந்து திருத்தந்தை “இந்த விருதுவாக்கு” ஆய்ந்துணர்தல் பற்றி தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள பல்வேறு எல்லைக்கோடுகளை அளிக்கிறது. இதன்மூலம் இறைவனுக்குரியவற்றை இறைவன் “பார்க்கும் விதத்தில்” பார்க்க முடிகிறது. புனித இஞ்ஞாசியார் சொல்வதைப் போன்று மிகப்பெரிய கொள்கைகள் இடம், பொருள், ஏவல் ஆகியவற்றின் சூழ்நிலைகளைக் கொண்டே செயலுருப்படுத்தப்படுகிறது. திருத்தந்தை 23 ஆம் யோவான், தமக்கே உரிய முறையில், திருச்சபையின் நிர்வாகம் குறித்த மனநிலையை தகவமைத்துக்கொண்டு, தன் விருதுவாக்கைத் மறுபடியும் திரும்பச் சொல்லும்போது “அனைத்தையும் பார்: பெரும்பாலானவற்றைக் கண்டுக்கொள்ளமால் இரு: சிறியவற்றைச் சரி செய்திடு” என்றார். திருத்தந்தை 23 ஆம் யோவான் அனைத்தையும் கண்ணுற்றார்: அதீத கோணங்களில் உற்றுப்பார்த்தார்: ஆனால் ஒருசிலவற்றைத் மிகக்குறைந்த பருமானத்தில் திருத்தியமைக்கத் தேர்ந்துக் கொண்டார். நீங்கள் மிகப்பெரியத்திட்டங்களைக் கொண்டிருக்கலாம்: மிகச் சிறியவற்றைக் கொண்டு அவற்றைச் செயல்படுத்த முனையலாம். அல்லது புனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் குறிப்பிடுவது போல, நீங்கள் பலவீனமான வழிகளைப் பயன்படுத்தலாம்: அவை பலமானவற்றைவிட வீரியமிக்கதாக, நல்ல பலன் தருவதாக இருக்கலாம்.

இந்த ஆய்ந்துணர்தல் என்பது கால தாமதமாகும்: உதாரணமாக, பலர் நினைப்பது போல மாற்றங்களும் சீர்திருத்தங்களும் மிக குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பபடலாம்: என்னைப் பொருத்தவரை, உண்மையான நல்ல பலன்மிக்க மாற்றத்திற்கு அடித்தளமிட நமக்கு பெருமளவில் நேரம் தேவைப்படுகிறது. இது ஆய்ந்துணர்வதற்கான நேரம். சில சமயங்களில் பிற்காலத்தில் நீங்கள் செயல்படுத்தலாம் என்று கருதி உங்கள் சிந்தனையில் முதன்முதலில் தோன்றியதை குறிப்பாகச் செய்ய ஆய்ந்துணர்தல் வற்புறுத்துகிறது. இதுதான் கடந்த சில மாதங்களாக எனக்கு நேர்ந்தது. ஆய்ந்துணர்தல் என்பது எப்போது ஆண்டவரின் பிரசன்னத்தில் ஒரு சில அடையாளங்களைக் கண்டு, நடைபெறும் சம்பவங்களுக்கு நன்கு செவிசாய்த்து, மக்களின் உணர்வுகளை, குறிப்பாக ஏழை எளிய மக்களின் உணர்வுகளை மதித்து நடைபெறுகிறது. அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட என்னுடைய விருப்பத் தேர்வுகள் உட்பட, அதி நவீன கார்களைப் பயன்படுத்த விரும்புவது உட்பட, அனைத்தும் ஆன்மீக ஆய்ந்துணர்தலோடு தொடர்புடையதாகும். இது மக்களையும் காலத்தின் அறிகுறிகளையும் நன்கு கண்டுணர்ந்து, அதற்கேற்ப தக்க பதிலளிக்கும் விதத்தில் உள்ளது. இறைவனில் ஆய்ந்துணர்தலே என்னுடைய நிர்வாகத்திற்கு வழிகாட்டுகிறது. ஆனால் நான் அவசரப்பட்டு தீர்மானிப்பதால் களைப்படைந்துள்ளேன். நான் எப்போதும் முதன் முதலாக எடுக்கும் முடிவைக் குறித்து, அதாவது, நான் முடிவெடுக்க வேண்டியிருந்தால் என் எண்ணத்தில் முதன் முதலில் தோன்றுவதை முடிவாக எடுப்பதைக் குறித்து மிகவும் சோர்வடைந்திருக்கிறேன். இது ஒரு தவறான வழிமுறையாகும். நான் பொறுத்திருந்து, ஆய்ந்துணர்ந்து, எனக்குள்ளே ஆழமாக நன்கு உற்றுப்பார்த்து, போதுமான அளவுக்கு நேரத்தை எடுத்துக்கொண்டு செய்திட வேண்டும். ஆய்ந்துணரும் ஞானம், தேவையான வாழ்வியல் சூழலை மீட்டு, மிகச் சிறந்ததாக, வலிமையானதாக தோன்றுபவையோடு ஒருபோதும் பொருந்திப் போகாத, தக்க வழிமுறைகளைக் கண்டுணர உதவுகிறது.

சேசு சபை

ஆய்ந்துணர்தல் என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய ஆன்மீகத்தின் தூணாக உள்ளது, அது அவர் ஓர் இயேசு சபையாளர் என்ற அடையாளத்தை குறிப்பிட்ட வகையில் வெளிப்படுத்துகிறது. எப்படி இயேசு சபை இன்று திருச்சபைக்குத் தொண்டாற்ற முடியும் என்று நான் அவரிடம் கேட்டேன். இயேசு சபையின் பண்புகள் என்ன? அது எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
இயேசு சபை என்பது தற்போது அழுத்த நிலையில் (tension) உள்ள ஒரு நிறுவனம் (tension). என்று பதிலளித்த திருத்தந்தை, அது எப்பொழுதும் அடிப்படையில் உட்புயல் அமைதி நிலையில் உள்ளது. தன்னை ஒருபோதும் மையப்படுத்தாதவர்தான் இயேசு சபையாளர் ஆவார். சபை என்பதே என்னவெனில் எது தனக்கு வெளியே ஒன்றை மையப்படுத்துவது ஆகும். அந்த மையம் கிறிஸ்துவும் திருச்சபையும் ஆகும். ஆகையால் இச்சபை, கிறிஸ்துவுக்குள்ளும் திருச்சபைக்குள்ளும் தன்னை மையப்படுத்தும்போது, அது அதன் சமநிலைப்படுத்திக் கொள்வதற்கும், விளிம்பு நிலையிலும், முன்னணியிலும் வாழ்வதற்கும் இரண்டு அடிப்படை நிலைகளை கொண்டிருக்கின்றன. அது தன்னைத்தானே மிகுதியாக பார்த்துக்கொண்டால், அது தன்னைத்தானே வலிமையாக, நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் மையப்படுத்திக் கொள்கிறது. அப்படியெனில் இங்கே பாதுகாப்பு உணர்வுக்குள்ளும், சுய திருப்திக்கும் ஆளாகும் அபயாம் அதற்கு உள்ளது. எப்பொழுதும் வலிமையான இறைவனையும், ((Deus simper maior), இறைவனின் அதின உன்னத மகிமைக்கான நாட்டத்தையும், நாம் குறையுள்ள மட்பாண்டமாக இருந்தபோதிலும், யாருக்கு நம்மையும், நமது அனைத்து கடின உழைப்பையும், அர்ப்பணிக்கிறோமோ, அந்த அரசரும் நம் ஆண்டவருமான கிறிஸ்துவின் மணமகளான திருச்சபையையும் சேசுசபை தன் முன்னே கொண்டுள்ளது. இந்த அழுத்தம் நம்மை நம்மிலிருந்து தொடர்ந்து வெளியேற்றுகிறது: இந்த ஆயுதம்தான் இயேசு சபையை தன்னை மையப்படுத்தாத உருவாக்குகிறது: வலிமைப்படுத்துகிறது: பின்னர், தன் மறைபணியை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற உதவுவதற்காக தந்தைக்குரிய, சகோரத்துவ மனசாட்சியை உருவாக்கிறது. ஒர் இயேசு சபையாளர் “அவர்தம் மனசாட்சியை வெளிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தும் இயேசு சபையின் சபை ஒழுங்கு (constitution) யைக் இங்கே திருத்தந்தைக் குறிப்பிடுகிறார். அதாவது, ஒர் இயேசுபையாளருடைய உள்ளார்ந்த ஆன்மீக சூழ்நிலையை இது குறிக்கும். அதன் மூலம் சபையின் தலைவர் மறைபரப்பு பணிக்கென்று அந்நபரை அனுப்ப போதுமான அறிவையும் உணர்வையும் பெற இயலும். இயேசு சபையைப் பற்றி பேசுவது என்பது சற்றே கடினம்.. என்று தொடர்ந்த திருத்தந்தை..நீங்கள் உங்களையே கொஞ்சம் அதிகமாக வெளிப்படுத்தும்போது, தவறாக புரிந்துக்கொள்ளகூடிய அபாயம் உள்ளது. இயேசு சபையை கதைக் கூற்றுக்குரிய வடிவில் மட்டுமே (narrative form) விவரிக்கமட்டுமே முடியும். விவாதிக்க உங்களை அனுமதிக்கிற மெய்யியல் முறையிலான இறையியல் ரீதியிலான விளக்கங்களில் அல்ல: கதைக் கூற்றுக்குரிய வடிவில் மட்டுமே உங்களால் ஆய்ந்துணர முடியும். இயேசு சபையின் செயற்பாணி என்பது விவாதத்தால் கட்டமைக்கப்பட்டதல்ல: மாறாக ஆய்ந்தறிதலால் கட்டமைக்கப்பட்டது. வழிமுறையில் விவாதம் என்பது ஒரு பகுதி என்பதை இந்த ஆய்ந்தறிதல் அனுமானிக்கிறது. ஆய்ந்தறிதலின் புரிந்து கொள்ள இயலாத பகுதி என்னவெனில் அது ஒருபோதும் அதன் விளிம்புகளை வரையறுப்பதில்லை: சிந்தனையை ஒருபோதும் நிறைவாக்குவதில்லை. ஒர் இயேசு சபையாளர் என்பவர் யாரெனில் எவர் ஒருவருடைய சிந்தiனை முழுமையடையவில்லையோ அவர் தான். அதவாது அவர்தம் சிந்தனை திறந்த-நிறைவுச் சிந்தனையாக (open-ended) இருக்கிறது என்பது பொருள். இயேசு சபையாளர் மூடப்பட்ட கட்டிறுக்கமானச் சிந்தனைச் சூழலில் அறிவு கடந்த மெய்யுணர்வுநிலையைக் காட்டிலும் வலியுறுத்தும் கடுந்துறவு முறையில் (more instructive-ascetic than mystical) வாழ்ந்ததற்காக காலக்கட்டம் சபையில் உண்டு. இயேசு சபையாளரின் இப்படிப்பட்ட வாழ்க்கைமுறை சிதைவுக்குப்பின் தகர்த்தெறியப்பட்டபின் Epitome Instituit பிறந்தது.

சபையின் ஒழுங்கு நூலுக்கு ஒரு மாற்றாக, நடைமுறை நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ‘கொள்கை முறை சுருக்கம்’ (Compendium) என்பதைத் திருத்தந்தை இங்கே குறிப்பிடுகிறார். சபை ஒழுங்கை சிலர் படிக்காமலேயே சில சமயங்களில் இயேசு சபையாளரின் பயிற்சி என்பது இந்தப் பாட அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இக்காலக்கட்டத்தில், திருத்தந்தையின் கருத்துப்படி, சட்டங்கள் அதன் ஆன்மாவை அழித்துவிடும் அளவுக்கு மிரட்டின: சபையும் விளக்கம் தருகிற சோதனைக்கு பலியாகியது: அதன் சபையின் விருதுவாக்கையும் மிகவும் சுருக்கி வரையறுத்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்தார் இல்லை. ஒரு இயேசு சபையாளர் கிறிஸ்துவை மையப்படுத்தி கிறிஸ்துவுடன் அவர் செல்ல வேண்டிய தொடுவானத்தைப் பார்த்து எப்பொழுதும் திரும்ப திரும்ப நினைக்கிறார்: இதுதான் அவருடைய உண்மையான பலம். தேடல் நிறைந்த, படைப்பாற்றல்மிக்க, தாரள சபையாக இருக்க இது சபையை உந்தித் தளளுகிறது. ஆகையால் தற்போது, இதற்கு முன்பு இல்லாத வகையில், இயேசு சபையானது செயல்பாட்டில் தியானத்தோடு (contemplative in Action) இறைமக்களோடும், படிமமுறையிலான தாயாம் திருச்சபையோடும் மிகவும் நெருக்கத்தோடு வாழ வேண்டும். நீங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படும்போதும் அல்லது தவறான பழிச்சொல்லுக்கும் அவதூறுக்கும் தவறான புரிந்து கொள்ளுதலுக்கும் நீங்கள் ஆளாகுமபோது தாழ்ச்சி, தியாகம் மற்றும் தைரியம் தேவைப்படுகிறது. ஆனால் மிகவும் பலன் தரக்கூடிய மனப்பான்மையாகும். சீன சடங்குமுறை கருத்துமாறுபாடு, மலபார் ரீதி .. பராகுவே பிரச்சனை (Reductions) என கடந்த காலத்தில் இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கருத்துமோதல்களையும், நினைத்துப் பார்ப்போமாக. சேசு சபை தற்போது அனுபவிக்கிற தவறான புரிதல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் எனக்கு நானே சாட்சியாக இருக்கிறேன். அவற்றில் கடினமான காலகட்டங்களும் உண்டு, சிறப்பாக திருத்தந்தைக்கு கீழ்படிதல் என்னும் நான்காம் வார்த்தைப்பாட்டை இயேசு சபையாளர் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த பிரச்சனையின்போது..அருட்தந்தை அருப்பே (இயேசு சபையின் தலைவராக 1965 -1983 வரை) அவர்களின் காலத்தில் எனக்கு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவர் செபிக்கின்ற மனிதராக, செபத்தில் அதிக நேரம் ஈடுபடுகிற நபராக இருந்தார். ஜப்பானிய முறையில் தரையில் அமர்ந்து செபிப்பதை நான் தற்போது நினைத்துப் பார்க்கிறேன். இதற்கு ஏற்ற பொருத்தமான மனப்பான்மையை அவர் தனக்குள்ளே கொண்டிருந்தார்: சரியான முடிவுகளை மேற்கொண்டார்.



குறிப்பு : இவ்வாக்கம் லா சிவில்ட்டா கத்தோலிக்கா (La Civilta Cattolica) என்ற இதழுக்கு திருத்தந்தை வழங்கிய நேர்காணலில் இருந்து தொகுக்கப்பட்டது

[2014-09-22 22:32:07]


எழுத்துருவாக்கம்:

Rev.Fr.Gnani Raj Lazar
Mylapore, Chennai,
India