திருவழிப்பாட்டு ஆண்டு C (10-02-2013)

சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 
'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்/> சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 
'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்/> சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 
'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்/>


திருப்பலி முன்னுரை

இறைபிரசன்னத்தில் ஒரே சமூகமாக ஒன்றிணைந்திருக்கும் அனைவரையும் அன்போடு இன்றைய ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் வாரம் திருவழிபாட்டிற்கு வரவேற்கின்றேன்.

மீனவரான சீமோன் பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வு இது. அவரது வாழ்வையே புரட்டிப் போட்ட நிகழ்வு என்றும் சொல்லலாம். ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னபோது, சீமோன் பேதுருவின் பதில் மொழி: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை” என்பது. நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் உண்டு.

பாடுபட்டுப் படித்தும் தேர்வில் தோல்வி அடைவோர், பாடுபட்டு வேலை தேடியும் வேலை இன்றித் தவிப்போர், பாடுபட்டுப் பணம் சேர்த்தும், அதை ஒரே நாளில் இழந்துவிடுவோர், பாடுபட்டு ஏற்பாடுகள் செய்து பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தும், அவர்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதைக் கண்டு கலங்கும் பெற்றோர், பல மருத்துவர்களிடம் சென்றும் நலம் பெறாதோர்... எனப் பல தரப்பட்ட மக்கள் சீமோன் பேதுருவின் வரிசையில் நிற்கின்றனர்.

அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பேதுருவின் பதில் மொழியிலுள்ள இரண்டாம் பகுதி எடுத்துச் சொல்கிறது: ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ”. அதாவது, சொந்த முயற்சியில் நம்பிக்கை வைக்காமல், இறையாற்றலில், இறைவனின் பேரன்பில், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது. அவ்வாறு, சொல்லி, செயல்பட்ட உடனே பேதுருவின் வாழ்வில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வலைகள் கிழியும் அளவுக்கு மீன்பாடு கிடைத்தது. மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை. கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது” என்னும் இறைமொழியை நினைவில் கொள்வோம். இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்
எசாயா நூலிலிருந்து வாசகம் 6:1-8

1 உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்: அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்: ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன: ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்: இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்: மற்ற இரண்டால் பறந்தனர்.3 அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்: மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.4 கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்ள் அசைந்தன: கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.5 அப்பொழுது நான்: ஐயோ, நான் அழிந்னே. ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்: தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்: படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே என்றேன்.6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.7 அதனால் என் வாயைத் தொட்டு, இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது: உன் பாவம் மன்னிக்கப்பட்டது, என்றார்.8 மேலும் யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் என்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்
திருப்பாடல்கள் 138:1-5,7-8

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். 4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!

7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 15:1-11

1 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்: அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள்.2 நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்: இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.9 நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன்.10 ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை: என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.11 நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:1-11

1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். 2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். 3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். 4 அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். 5 சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார். 6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, 7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. 8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார். 9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். 10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார். 11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எங்கள் வலிமையும், வாழ்வுமாகிய இறைவா!

வேதனைகளும், துன்பங்களும், இழப்புக்களும், வன்முறைகளும், அழிவுகளும் பெருகிவிட்ட இன்றைய உலகிலே உமது அருட்பணியைத் தொடர்ந்தாற்றும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நீர் தூய ஆவியின் கொடைகாளால் நிரப்பி, அவர்களை வலுப்படுத்தி, அவர்கள் அனைவரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்திகளாக விளங்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் ஊற்றான இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய சொந்த விருப்பத்தினாலோ, பாடுபட்டு உழைப்பதாலோ நாங்கள் எதையும் சாதித்துவிடப் போவதில்லை. உமது இரக்கத்தால் மட்டுமே எங்கள் உழைப்புக்குக் கனிகள் கிடைக்கும் என்று அறிகிறோம். ஆண்டவரே, எங்கள் உழைப்பை ஆசிர்வதியும். உமது இரக்கத்தால் எங்கள் பணிகளில் எங்களுக்கு வெற்றி அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் உமக்குப் பணிபுரிவதற்கு வேண்டிய நல்லுள்ளம் அவர்களிடம் உருவாகிடவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நாங்கள் வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே எங்களை ஆசிர்வதிக்கும் அன்பு தெய்வமே,

உம்மைப் போற்றுகிறோம். எங்களது சோர்வு வேளைகளில் நாங்கள் தளர்ந்து விடாமல், உமது சொற்களை நம்பி, தொடர் முயற்சிகளில் ஈடுபட எங்களுக்கு ஆற்றறல் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

''சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்' என்றார்'' (லூக்கா 5:8)

கடவுள் புனிதம் நிறைந்தவர்; தூய்மைக்கு ஊற்றாக இருப்பவர். அவர் முன்னிலையில் எல்லா மனிதருமே குறையுள்ளவர்கள்தாம். பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, என்னை விட்டுப் போய்விடும் என்று ஏன் கூறினார்? இயேசுவின் சொல்லிலும் செயலிலும் கடவுளின் வல்லமை துலங்கியதைப் பேதுரு கண்டுகொண்டார். ஆகவே, இயேசுவின் முன்னிலையில் நிற்கவும் தனக்குத் தகுதியில்லை என பேதுரு நினைத்தார். இரவு முழுதும் அயராது உழைத்த பிறகும் மீன்பாடு இல்லாததால் மனமுடைந்து போயிருந்த பேதுரு இயேசுவின் சொற்படி ''ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய் வலை வீசியதும்'' பெருந்திரளான மீன்களைப் பிடித்தார் (லூக் 5:4,6). இயேசுவின் சொல் வல்லமை மிக்கது எனக் கண்டுகொண்ட பேதுரு தன் தகுதியின்மையை உணர்கிறார்.
கடவுளின் முன்னிலையில் நிற்பதற்கு மனிதருக்குத் தகுதி உள்ளதா என்னும் கேள்விக்கு நாம் இருவிதமாகப் பதிலளிக்கலாம். மனிதர் கடவுளுக்கு நிகரானவர்கள் அல்ல. கடவுளே மனிதரை உலகில் படைத்து அவர்களுக்கு வாழ்வளித்துக் காப்பவர். எனவே, நாம் எப்போதுமே கடவுளை நம்பியே வாழ்கின்றோம். கடவுள் நம்மைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவை இல்லை. இருப்பினும், கடவுளின் திட்டப்படி, மனிதர் தனிச்சிறப்பான விதத்தில் படைக்கப்பட்டுள்ளார்கள். மனிதர் தம்மோடு எந்நாளும் நல்லுறவிலும் அன்புப் பிணைப்பிலும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் நம்மைப் படைத்தார்; நம்மைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டார்; நம்மைத் தொடர்ந்து பாதுகாத்து வழிநடத்தி வருகின்றார். எனவே, நாம் கடவுளின் முன்னிலையில் நிற்க நமக்குத் தகுதியை அவரே நமக்கு வழங்கியுள்ளார். இத்தகுதி நம் சொந்த முயற்சியாலோ சக்தியாலோ நமக்குக் கிடைப்பதல்ல; மாறாக, கடவுளே நமக்கு மாண்பையும் உயர்வையும் அளித்து நாம் அவரோடு எந்நாளும் இணைந்து பேரின்பம் துய்த்திட நமக்கு வழிவகுத்துள்ளார். இயேசு கிறிஸ்து வழியாக நாம் பெற்றுள்ள இந்த மாண்பும் உயர்வும் எல்லா மனிதருக்கும் உரித்தானதே என உணர்ந்து செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்கு அளிக்கின்ற மாண்புக்கு ஏற்ப நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.