மூன்றாம் ஆண்டு 30-12-2012

ஆன்மீகம் நிறைந்த குடும்பங்கள் !

மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே/> மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே/> மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே/>


திருப்பலி முன்னுரை


இறையேசுவில் இனிய சகோதரர்களே சகோதரிகளே நண்பர்களே, மகிமை மிகு இப் பெருவிழாவில் மனமுவந்து உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவிப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளிப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற பண்புகளில் வளர்வது உறவின் வெளிப்பாடு. இறுதியாக, திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் நற்செய்தி அறிவிக்கும் கடமையுடையவர்கள் என்னும் நிலையில், தங்களால் இயன்ற விதத்தில் நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழ்வது நற்செய்தி அறிவிப்புப் பணியின் வெளிப்பாடு. இந்த நான்கு தளங்களிலும் நிறைவு பெறும் குடும்பங்களே ஆன்மீகம் நிறைந்த குடும்பங்களாக விளங்க முடியும். இந்த நாளில் நமது குடும்பங்கள் அனைத்தும் இத்தகைய ஆன்மீக குடும்பங்களாகத் திகழ இறைவனிடம் வரம் கேட்டுச் செபிப்போம். இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 60:1-6

1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!2 இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்! 3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்
திருப்பாடல்கள் 72:1-2, 7-8, 10-13

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்
எபேசியர்க்கு எழுதிய நிருபத்தில் இருந்து வாசகம் 3:2-3,5-6

2 உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.3 அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.5 அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.6 நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-12

1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், ″ யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கு உங்கள் வாழ்வில் விளக்காக இருந்து வெளிச்சம் தந்து, செல்வங்கள் அனைத்தும் தந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வதாக. இயேசுவின் அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் என்றும் உங்களோடு இருப்பதாக.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

இறைவா!

மகிழ்ச்சியின் மன்னர்களாக நாங்கள் வாழ விசுவாசத்தில் ஒழுக்கத்தில் எங்களை வழிநடத்த செபித்து செயல்பட்டு கொண்டிருக்கும் எம் திருச்சபையின் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். பாப்பரசர், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள், வேதியர்கள் இவர்களை நீர் ஆசீர்வதிக்கவும் உடல் நலத்தையும், மனபலத்தையும் தந்திடவும் உம்மை மன்றாடுகிறோம்.

அனைத்துக் குடும்பங்களின் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும். எல்லாக் குடும்பங்களும் இயேசு, சூசை, மரியா போன்ற திருக்குடும்பங்களாக வாழ அருள்தாரும். எங்கள் குடும்பங்களில் நாங்கள் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவிப்பு என்னும் நான்கு தளங்களிலும் நிறைவாக வாழ எமக்கு வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பே உருவான ஆண்டவரே,

எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் நேர்மை விளங்கச் செய்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவாழ்வை வாக்களிக்கும் தந்தையே!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும், உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அவனியில் அவதரித்த அன்பு இறைவா!

எங்கள் ஒவ்வொருடைய உள்ளத்திலும் அவதரித்து அன்பு, அமைதி, சமாதானம் போன்ற புண்ணியங்களை எங்களுக்கு பொழிந்தருள வேண்டுமாய், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எல்லா மக்களையும் ஆசிர்வதிக்க உம்மை கேட்கிறோம். பிரிந்து சென்ற சகோதரர்கள் திரும்பி வரவும் உம்மை அறியாத மக்கள் அறிந்து கொள்ள முன்வரவும் உம்மில் நம்பிக்கை இல்லாதவர் நம்பிக்கை கொள்ளவும் செய்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலன்களின் அருட்கடலே எம் இறைவா!

உண்மையான மகிழ்ச்சி என்னவென்று கூறும் இறைவாக்கிற்கேற்ப உம் மக்களாகிய நாங்கள் வளர வாழ உம் அருளைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.






இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு தம் பெற்றோர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்'' (லூக்கா 2:51)

இயேசு தம் தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார். அதாவது, தந்தையின் விருப்பப்படி நடப்பதே இயேசுவின் வாழ்க்கை முறையாக இருந்தது. ஏனெனில் அவர் தந்தையோடு எந்நாளும் இணைந்திருந்தார். இந்த இயேசு தம் பெற்றோராகிய யோசேப்பு, மரியா ஆகிய இருவருக்கும் கூட ''பணிந்திருந்தார்'' என்பதன் பொருள் என்ன? முதன்முதலில் இங்கே நாம் காண்பது இயேசுவின் மனிதப் பண்பு. அவர் கடவுளின் மகனாக இருந்த போதிலும் மனிதருள் ஒருவராக மாறினார்; மனிதப் பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார். எனவே இயேசு தம் தாய் மரியாவுக்கும், வளர்ப்புத் தந்தை யோசேப்புக்கும் பணிந்திருந்தார். பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை இயேசுவின் வாழ்க்கை முறையாகவும் இருந்தது. பழைய ஏற்பாட்டு ஆன்மிகம் இயேசுவின் ஆன்மிகமாகத் துலங்கியது. பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்னும் பழைய ஏற்பாட்டுக் கட்டளையை இயேசுவும் கடைப்பிடித்தார் (விப 20:12 - ''உன் தந்தையையும் தாயையும் மதித்து நட''). -- பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்திருக்க வேண்டும் என்னும் கட்டளை இரு வேறு விதங்களில் தவறாக விளக்கப்பட்டு வந்துள்ளது. முதலில், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை மேற்கோள் காட்டிச் சிலர் குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துகின்ற போக்கு ஆங்காங்கே உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. ஏனென்றால், மனிதர் பெரியவராயினும் சரி, சிறியவராயினும் சரி, அவர்களுக்குக் கடவுளே வழங்குகின்ற மனித மாண்பு உண்டு. அதை யாரும் அழித்துவிடவோ எடுத்துவிடவோ இயலாது. சிறுவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவற்றை யாரும் மீறலாகாது. இரண்டாவது, பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் காட்ட வேண்டிய கீழ்ப்படிதல் ஒரு நாளும் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக அமையலாது. இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகளில் ஒன்று அவர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், தம் சொந்த விருப்பப்படி நடக்கலாமே என்பது (மத் 4:1-11). இயேசு அச்சோதனைக்கு இடம் கொடுக்கவில்லை. கடவுளுக்கு மட்டுமே நம் உள்ளார்ந்த பணிதலும் கீழ்ப்படிதலும் தெரிவிக்கப்பட வேண்டும். மனிதர் மனிதர் பிற மனிதர்மீது கொண்டிருக்கின்ற அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு எதிராக அயைலாகாது. மாறாக, எல்லா மனிதரும் கடவுளின் விருப்பம் யாதெனக் கண்டு உணர்ந்து அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயேசு தம் விண்ணகத் தந்தைக்குப் பணிந்து வாழ்ந்தர். தம் பெற்றோருக்கும் அவர் பணிந்தார். இவ்வாறு இயேசு நமக்கு ஒரு முன்மாதிரிகை தந்துள்ளார்.

மன்றாட்டு:

இறைவா, எம் வாழ்க்கைப் பயணத்தில் எங்களோடு இருந்து வழிநடத்தியருளும்.

-->