மூன்றாம் ஆண்டு 23-12-2012உறவின் நேரம் !திருப்பலி முன்னுரைஅன்பு இறைவன் மாந்தரை மீட்க மானிடராய் வந்ததைக் கொண்டாட ஆவலுடன் அணியமாகிக்கொண்டிருக்கும் இறை இயேசுவில் ப்ரியமுள்ள அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) மற்றும் இறைமக்களே! கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களை முன்னதாகவே உரியதாக்குகிறேன். திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்ட தயாரிப்புக்கு இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. கடவுளின் பெயரால் இஸ்ரயேலை ஆட்சி செய்யும் மீட்பரின் வருகையை எதிர்நோக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்: 1. விரைவு 2. வாழ்த்து. 3. மகிழ்ச்சியின் துள்ளல் 4. தூய ஆவியின் ஆட்கொள்தல் 5. ஆசி வழங்கல். ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே தூய ஆவியின் துணை வேண்டும். நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது, வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், தூய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம். அந்த வாழ்த்து நம் உறவை ஆழப்படுத்தும். வரவிருக்கும் நம் ஆண்டவரும் அமைதியின் அரசருமான இயேசுவை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வரவேற்க தயாராவோம். நிகழவிருக்கும் கிறிஸ்து பிறப்பு நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டுமென்று, இந்த திருப்பலியில் மன்றாடுவோம். முதல் வாசகம்இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5 ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்திருப்பாடல்: 80: 1-2. 14-15. 17-18 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
பல்லவி |
சிந்தனைதாயால் குழந்தைக்கு ஆசி ! எலிசபெத்து அன்னை மரியாவை வாழ்த்தும்போது, நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என்று வாழ்த்துகிறார். இந்த வார்த்தைகளை அவர் தாமாகக் கூறவில்லை. தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டுக் கூறியதாகத் தெளிவாக எழுதியுள்ளார். எனவே, தூய ஆவியால் தூண்டப்பட்டே எலிசபெத்து இந்த வார்த்தைகளைச் சொல்லி மரியாவை வாழ்த்தினார் என்பதில் ஐயமில்லை. இங்கே முதலில் தாயும், அந்தத் தாயால் குழந்தையும் இறைவனின் ஆசி பெறுகின்றார்கள் என்று எலிசபெத்து அறிக்கை இடுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். இது ஓர் இயல்பான உண்மைதானே! ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் ஆசி. அந்த ஆசியை இறைவன் தாய்க்கு வழங்குகிறார். அந்தத் தாயை அதே இறைவன் அந்தக் குழந்தைக்கும் ஓர் ஆசியாக வழங்குகிறார். எனவே, இயேசுவால் மரியாவும், மரியாவால் இயேசுவும் இறைத் தந்தையின் ஆசியைப் பெறுகின்றனர் என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, ஒவ்வொரு குழந்தையும், தாய்க்காக நன்றி கூறவேண்டும். ஏனென்றால், நம் தாயே நமக்கொரு ஆசி. அந்தத் தாயால்தான் நாம் பெற்ற அனைத்து ஆசிகளும். தாயில்லாமல் நாமில்லை. தாயில்லாமல் நமக்கு இறைவனின் ஆசியுமில்லை. இது நமது மண்ணகத் தாய்க்கும் பொருந்தும். நமது மண்ணக, விண்ணகத் தாயாம் அன்னை மரியாவுக்கும் பொருந்தும். அன்னை மரியாவால் நம் அடைந்த எண்ணிலடங்கா ஆசிகளுக்காக நன்றி கூறுவோமா! மன்றாடுவோம்:தாயும் தந்தையுமான இறைவா, ஒவ்வொரு தாயின் வழியாகவே நீர் பிள்ளைகளை ஆசிர்வதிக்கின்றீர். வளப்படுத்துகின்றீர். என் மண்ணகத் தாய்க்காக நன்றி கூறுகிறேன். அந்தத் தாயின் வழியாக நீர் தந்த ஆசிகளுக்காக, கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன். அதுபோலவே, என் விண்ணகத் தாயான அன்னை மரியவாவுக்காகவும் நன்றி கூறுகிறேன். அந்தத் தாயின் பரிந்துரையால் நீர் என்மீது பொழிந்து எண்ணிலடங்கா ஆசிகளுக்காக, அருள்கொடைகளுக்காக நன்றி கூறுகிறேன். ஒரு தாயினும் மேலாக என்னை அன்பு செய்வதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்