மனிதர் அனைவரும் கடவுளின் மீட்பைக் காண்பர் !திருப்பலி முன்னுரைஇறைமகன் இயேசுவில் இனிமையான சகோதரர்களே சகோதரிகளே ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இறையருள் பெருக வாழ்த்துகிறேன். இன்று திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு. நாம் மனம் மாறி புதிய வாழ்வைக் கண்டடையவேண்டு மென்று பொறுமையோடு காத்திருக்கும் நம் அன்புத் தந்தையின் திருப்பாதத்தில் ஒன்று கூடியுள்ளோம். மீட்பரை நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வரவேற்க அணியமாகிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்று கூறப்படும் இறைமொழிகள் மிக அடிப்படையானவை. நம்மை நாடிவரும் அவர் நம்மை விரைவாய் நெருங்க இடையூறுகள் அகற்றப்பட்ட வழி அமைக்கப்பட வேண்டுமென்று இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் இறையாட்சிக் கனவைப் பறைசாற்றுகிறது. இது யோவானின் கனவு மட்டுமல்ல, இறைமகன் இயேசுவின் கனவு, அவரது தந்தையாம் இறைவனின் கனவு. இறைவனின் வருகைக்காக அகத்திலும், புறத்திலும் ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட வேண்டும். மலை, குன்றுகள் தாழ்த்தப்பட வேண்டும். கோணலானவை நேராக்கப்பட வேண்டும். கரடுமுரடானவை சமதளமாக்கப்பட வேண்டும். இந்த சமுதாயத்தின் மேடு, பள்ளங்கள், முரண்பாடுகள் அனைத்தும் சீராக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காணவேண்டும். எல்லாருக்கும் இறையன்பு பரவலாக்கப்பட வேண்டும். கடவுளின் பரிவை, பாசத்தை அனைத்து மானிடரும் அனுபவிக்க வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற திருமுழுக்கு யோவான் நம்மை அழைக்கிறார். நாம் சந்திக்கின்ற அனைவருக்கும் இறைவன் நல்லவர், பரிவும் மீட்பும் தருபவர் என்னும் செய்தியை நாம் அறிவிப்போமா? வரம் கேட்டுச் செபிப்போம். இந்த திருப்பலியில் பங்கேற்போம். முதல் வாசகம்இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9 எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்துகொள்; என்றும் உள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார். `நீதியில் ஊன்றிய அமைதி', `இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி' என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார். எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவுகூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார். பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னை விட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள். கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்து வரும்பொருட்டு, உயர்மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்திருப்பாடல்: 126: 1-2. 2உன-3. 4-5. 6 (பல்லவி: 3)
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.
பல்லவி |
சிந்தனை''திருமுழுக்கு யோவான், 'பாவமன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று பறைசாற்றிவந்தார்'' (லூக்கா 3:3) நற்செய்தி நூல்களில் திருமுழுக்கு யோவானுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. அவர் இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் பாலம் போல அமைந்தவர். யோவானின் வாழ்க்கைப் பாணியே தனி. அவர் குருக்கள் குலத்தைச் சார்ந்தவர். அவருடைய தந்தை செக்கரியா எருசலேம் கோவிலில் திருப்பணி ஆற்றிவந்தார் (லூக் 1:8). ஆனால் யோவான் குருப்பணி ஆற்றவில்லை. மாறாக, அவரை நாம் பாலைநிலத்தில் காண்கின்றோம். பாலைநிலம் என்பது இஸ்ரயேலரின் வாழ்விலும் வரலாற்றிலும் தனிப்பொருள் கொண்ட ஓர் உருவகம். அதாவது, எகிப்து நாட்டில் அடிமைகளாக வேலைசெய்து துன்புற்ற இஸ்ரயேலர் கடவுளின் வல்லமையாலும் மோசேயின் வழிநடத்தலாலும் விடுதலை பெற்று வந்தபோது பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள் வழிநடந்தனர். அதன் பிறகு வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழையும்போது அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டினார்கள். யோவானும் அதே யோர்தான் நதியில் மக்கள் இறங்கி முழுக்குப் பெற வேண்டும் எனக் கேட்டார். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் திருமுழுக்குப் பெற வேண்டும் என அவர் கோரினார். -- யோவான் அறிவித்த செய்தியில் ''மன மாற்றம்'' முக்கியமானது. இங்கே மனம் எனக் குறிக்கப்படுவது மனிதரின் முழுமையையும் குறிக்கும். நம் உள்ளத்தில் உண்மையான மாற்றம் ஏற்படும்போது அந்த மாற்றம் நம் சொல்லிலும் செயலிலும் உறவிலும் நடத்தையிலும் வெளிப்படும் என்பது தெளிவு. எனவேதான் மக்கள் மனம் மாற வேண்டும் என்று கேட்ட யோவான் மக்கள் தங்கள் வாழ்க்கைப் பாணியை வேரோட்டமாக மாற்றி அமைத்திட வேண்டும் என அறிவித்தார். இயேசுவும் இந்தச் செய்தியை அறிவிப்பார். ஆக, கடவுளுக்கு நாம் நமது உள்ளத்தைத் திறந்து கொடுக்க வேண்டும் என்றால் அந்த உள்ளத்தில் முதலில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். நாம் நமது என்னும் போக்கு இருக்கும் வரை அங்கே கடவுளுக்கு இடம் இராது. ஆனால் பிறரை நாம் அன்புசெய்து, அவர்களையும் நம்மையும் மன்னித்து ஏற்கின்ற கடவுளையும் அன்புசெய்து வாழக் கற்றுக்கொண்டால் நம்மில் ஏற்படுகின்ற மாற்றம் உண்மையிலேயே கடவுளுக்கு உகந்த மாற்றமாக இருக்கும். அப்போது நம் வாழ்வில் விடுதலையும் மீட்பும் எதார்த்தம் ஆகும். மன்றாடுவோம்:இறைவா, எங்கள் வாழ்க்கை முறையை உமக்கு உகந்ததாக மாற்றிட அருள்தாரும். |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்