திருவருகையின் முதலாம் ஞாயிறு

மூன்றாம் ஆண்டு 02-12-2012


என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா !

 ''இயேசு, 'விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். 
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா'/>  ''இயேசு, 'விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். 
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா'/>  ''இயேசு, 'விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். 
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா'/>


திருப்பலி முன்னுரை


இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே இறை இயேசுவின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

புதிய திருவழிபாட்டு மூன்றாம் ஆண்டின் முதல் நாளாகிய இன்று, நாம் திருவருகைக் காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். இயேசுவினுடைய பிறப்பிற்கு முன்னுள்ள நான்கு வாரங்களும் திருவருகைக் காலம் என்று அழைக்கப்படுகின்றது. ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்கவும் நமது மீட்புக்காக நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டுமெனவும் இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

மண்ணுலகில் நிலவும் குழப்பமும், விண்வெளியில் தோன்றும் அடையாளங்களும் ஆண்டவரின் வருகையை முன்னறிவிக்கும் என இயேசு முன்னறிவித்துள்ளார். ஆண்டவர் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து முதலாம் வாசகம் 33:14-16

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 25: 4-5, 8-9, 10,14 (பல்லவி:1)

பல்லவி: ஆண்டவரே உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.

பல்லவி

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு , அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார். அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர். பல்லவி



இரண்டாம் வாசகம்


கிறிஸ்துவின் வருகைக்கென்று திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:12-4:2

சகோதர சகோதரிகளே, உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக! சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்: அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திபா 85:7 - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும் உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நற்செய்திக்கு முன் வசனம்

உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.


புனித.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:25-36

அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. " மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


உண்மைக்கு சாட்சியம் பகர்கிற உன்னத அரசர் இயேசு. மற்றவர்வளுக்கு வலிக்குமே என்பதற்காக சுடுகிற உண்மையை மறைப்பவரல்லர் அவர். அவரின் அடியொற்றி வாழுகிற மனிதர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் துணிச்சலாய் சான்று பகர்வார்கள். தவறுகளை தட்டிக் கேட்பார்கள், சரியானவைகளைத் தட்டிக் கொடுப்பார்கள். அந்த அரசபுனிதம் மற்றவர்களை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அற்ப இன்பங்களுக்குள் மனிதர்களை அடக்கி வைக்காது.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

கருணைக் கடலே இறைவா!

உம்முடைய திருவருகைக்காக இறைமக்களைத் தயார்படுத்தும் திருத்தந்தை, ஆயர்கள் , குருக்கள் , துறவிகள் , பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இறைமக்களை நல்ல முறையில் தயாரிக்க வேண்டிய வார்த்தைகளையும் , செய்திகளையும் அவர்களுடைய வாயில் ஊட்டி, ஞானத்தையும், வல்லமையையும் அவர்கள்மேல் நிறைவாகப் பொழிந்து அவர்களை ஆசீர்வதித்துக்காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிலைவாழ்வு தரும் வார்த்தைகளின் ஊற்றான இயேசுவே,

உம் வாக்கு எம் காலடிக்கு விளக்கு. எம் பாதைக்கு ஒளியும் அதுவே. உம் வார்த்தைகளுக்காக நன்றி கூறுகிறோம். இந்த வார்த்தைகளால் பிறரும் வாழ்வடைய இறைவார்த்தையைப் பரப்பும நற்செய்தியாளர்களாக வாழ எங்களுக்கு அருள்தாரும். நாங்கள் ஒவ்வொருவரும் நடமாடும் நற்செய்தி நூல்களாக, உமது வார்த்தைகளை வாழ்வில் அறிக்கையிடுபவர்களாக விளங்க அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உறவின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும், உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் தந்தையே இறைவா!

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா! உலக நாடு முழுவதும் பரவிவரும் பல்வேறுபட்ட கொடிய நோய்கள் நோய்கள் இல்லாதொழியவும், இயற்கையாகவும், மனிதராலும் உருவாக்கப்படும் எல்லா அழிவுகளும் இல்லாது போகவும்: மக்கள் அனைவரும் உம்முடைய குரலுக்கே செவிகொடுத்து, உம்மைப் பின்பற்றி வாழவும் அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கிறிஸ்துவே எங்கள் அரசரே!

எமது பங்குத்தந்தையை ஆசீர்வதியும். அவர் உமது பணிக்காக எடுக்கும் அனைத்து முயற்சியிலும் உமது தூய ஆவியின் துணையை கொடுத்து, வெற்றியினை கொடுத்தருளும். உமது தெய்வீக ஆற்றலால் நல்ல உடல் சுகத்தோடு உமக்காக இறைபணியாற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயகத்தின் திருவுருவே இறைவா!

எங்களைச் சூழ்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு சகோதரனையும், சகோதரியையும் மதித்து ஏற்றுக்கொண்டு, அன்புசெய்து வாழக்கூடிய உள்ளத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா,

எந்நாளும் நிலைத்து நிற்கின்ற உம் வார்த்தையை நாங்கள் பக்தியுடன் கேட்டு நல வாழ்வு வாழ்ந்திட அருள்தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.






சிந்தனை


''இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது'' (லூக்கா 21:28)

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய ''ஒத்தமை நற்செய்திநூல்களில்'' எருசலேமின் அழிவு முன்னறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றோடொன்று கலந்த விதத்தில் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: லூக் 21:20-28). எருசலேம் நகரம் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்டபோது (கி.பி. 70) அங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரக் கணக்கில் இறந்தனர்; எஞ்சியோர் பெருந்துன்பங்களுக்கு ஆளாயினர். அந்நிகழ்வுகளின் பின்னணியில் உலக முடிவும் விவரிக்கப்படுகிறது. வான மண்டலத்தில் அடையாளங்கள் தெரியும், கடல் கொந்தளிப்பு ஏற்படும்; மக்கள் தங்களுக்கு ஏற்படப் போகின்ற அழிவு குறித்து அஞ்சி நடுங்குவர் என்று இயேசு எச்சரிக்கிறார். ஆனால் இந்த அச்சுறுத்தும் அடையாளங்களின் நடுவே ஆறுதல் தரும் வார்த்தையும் உரைக்கப்படுகிறது. அதாவது, மானிட மகன் மாட்சியோடு வருவார்; மனிதரின் மீட்பு நிறைவுறும். -- மனிதர்கள் அச்சத்தால் நடுங்குகின்ற வேளையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆறுதல் செய்தி இது: ''நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' (லூக் 21:28). இவ்வாறு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அடிப்படையான காரணம் ''நமது மீட்பு நெருங்கி வருவது''தான். இயேசு கூறிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன? பண்டைக் காலத்தில் இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது கடவுள் அவர்களுடைய ஏக்கமிகு மன்றாட்டுக்குச் செவிமடுத்தார். தம் மக்களின் வேதனையைப் போக்கிட அவர் முன்வந்தார். எனவே, இஸ்ரயேல் மக்கள் ''இடையில் கச்சை கட்டி'', ''கால்களில் காலணி அணிந்து'', ''கையில் கோல்பிடித்து'' பாஸ்கா உணவை உண்ணவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர் (காண்க: விப 12:11). இவ்வாறு, பயணம் போகத் தயாரான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கடவுளின் வல்லமையால் அவர்கள் விடுதலையும் மீட்பும் அடைந்தார்கள். இயேசுவும் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார். உலகம் என்று முடிவுக்கு வரும் எனத் தெரியா நிலையிலும் நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க இயேசு நம்மை நோக்கித் ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்'' எனக் கேட்கின்றார் (லூக் 21:28). நமக்குக் கடவுள் வழங்குகின்ற மீட்பு நம்மை நெருங்கி வந்துவிட்டது என்னும் நல்ல செய்தி நமக்கு மகிழ்ச்சி தர வேண்டும். உலக அழிவு பற்றி அச்சமுறாமல் நாம் ''தலைநிமிர்ந்து நின்று'', நம் கடவுளிடமிருந்து வருகின்ற மீட்பை நன்றியோடு ஏற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாடுவோம்:

இறைவா, அழிவுச் சக்திகளைக் கண்டு அஞ்சாமல் வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
-->