பொதுக்காலம் 34 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 25-11-2012


இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா!

 நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் 
தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? என்று கேட்டான்./> நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் 
தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? என்று கேட்டான். நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் 
தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? என்று கேட்டான்.


திருப்பலி முன்னுரை


இறையரசுக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் முப்பத்திநான்காம் ஞாயிறு திருப்பலியுடன் இன்று தாய் திருச்சபையானது கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கப்படுகிறோம்.

என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத் தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர், ஆளுநன் பிலாத்து முன்னிலையில் ஒரு கைதியாக நிற்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.

உண்மைக்கு சாட்சியம் கூறுவதே என் பணி, வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைமகன் இயேசுவின் கூற்று அவரது பணி வாழ்வில் நிறைவேறியது. இவ்வுலகில் எத்தனை அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன ஆனால் ஒன்றுகூட நிலையான அரசு இல்லை, காரணம் உண்மை இல்லை. இயேசு இவ்வுலகிற்கு கொண்டு வந்த அரசு நிலையான அரசு. அந்த நிலையான அரசின் மக்களாக வாழ வேண்டுமென்றால நம்மிடம் உண்மை இருக்க வேண்டும். உண்மையை வெளிப்படுத்தவே இறைமகனாகிய இயேசு, மானிடமகன் ஆனார். அவருடைய வருகைக்காக இந்த உலகைத் தயாரிக்கும் பணி ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உண்டு என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நம் ஆண்டவரும் அரசருமான இயேசுவைப் பற்றிய உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7:13-14

அந்நாட்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 93: 1-2. 5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

பல்லவி

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி

1 பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி



இரண்டாம் வாசகம்


திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8

இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி: இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்: மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை ஆமென்! "அகரமும் னகரமும் நானே " என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே..

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மாற் 11: 10 - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


நற்செய்திக்கு முன் வசனம்

அரசன் என்று நீர் சொல்கிறீர்.


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37

அக்காலத்தில், பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், "நீ யூதரின் அரசனா? " என்று கேட்டான்.இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? " என்று கேட்டார்.அதற்கு பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? " என்று கேட்டான்.இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல " என்றார். பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ? " என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்: இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் " என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


உண்மைக்கு சாட்சியம் பகர்கிற உன்னத அரசர் இயேசு. மற்றவர்வளுக்கு வலிக்குமே என்பதற்காக சுடுகிற உண்மையை மறைப்பவரல்லர் அவர். அவரின் அடியொற்றி வாழுகிற மனிதர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் துணிச்சலாய் சான்று பகர்வார்கள். தவறுகளை தட்டிக் கேட்பார்கள், சரியானவைகளைத் தட்டிக் கொடுப்பார்கள். அந்த அரசபுனிதம் மற்றவர்களை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அற்ப இன்பங்களுக்குள் மனிதர்களை அடக்கி வைக்காது.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

திருச்சபையின் அரசராம் இறைவா,

உமது முடிவில்லா அரசை உலகெங்கும் நிறுவும் உள்ளார்வத்தோடு, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தியின் தூதுவர்களாக வாழும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம் இறைவா , எம் அரசே,

நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை எம் தலைவராக, ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று, பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியான நீர்நிலைகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

விடுதலையின் தந்தையே இறைவா!

சிறைகளுக்குள்ளும், வதை முகாம்களுக்குள்ளும், தடும்பு முகாம்களுக்குள்ளும் அடைபட்டு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் விடுதலைபெற்று அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கிறிஸ்துவே எங்கள் அரசரே!

எமது பங்குத்தந்தையை ஆசீர்வதியும். அவர் உமது பணிக்காக எடுக்கும் அனைத்து முயற்சியிலும் உமது தூய ஆவியின் துணையை கொடுத்து, வெற்றியினை கொடுத்தருளும். உமது தெய்வீக ஆற்றலால் நல்ல உடல் சுகத்தோடு உமக்காக இறைபணியாற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயகத்தின் திருவுருவே இறைவா!

எங்களைச் சூழ்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு சகோதரனையும், சகோதரியையும் மதித்து ஏற்றுக்கொண்டு, அன்புசெய்து வாழக்கூடிய உள்ளத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா,

உம் திருமகன் வழியாக எங்களுக்கு நீர் அறிவிக்கின்ற உண்மையை நாங்கள் எங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொண்டிட ஒவ்வொருவருக்கும் அருள்தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.






சிந்தனை


''இயேசு பிலாத்துவை நோக்கி, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்' என்றார்'' (யோவான் 18:37)

இயேசுவை நாம் அரசராகப் போற்றுகின்றோம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களில் இயேசு ''இறையாட்சி'' பற்றிய நற்செய்தி அறிவித்தது விளக்கப்படுகிறது. எனவே கடவுளின் பெயரால் ஓர் ''அரசாட்சியை'' நிறுவுவதை இயேசு தம் பணியாகக் கொண்டிருந்தார். அந்த ஆட்சியில் கடவுளே அரசராக இருப்பார். இயேசுவும் அந்த ஆட்சியில் பங்கேற்பார். யோவான் நற்செய்தியில் ''இறையாட்சி'' என்னும் கருத்து மைய இடம் பெறவில்லை. மாறாக, இயேசு கடவுள் பற்றிய ''உண்மை''யை அறிவிப்பவராக, அதை வெளிப்படுத்துபவராக வருகின்றார். கடவுள் பற்றிய உண்மை யாது? கடவுள் நம் வாழ்வின் தொடக்கமும் நிறைவுமாக இருக்கின்றார் என்பதே அந்த உண்மை. கடவுள் நம்மை அன்புசெய்து, நமக்காகத் தம் திருமகனையே பலியாக்கினார் என்பதே அந்த உண்மை. கடவுள் நம் நல்ல ஆயராக இருந்து நம்மை அன்புடன் ஆண்டு நடத்துகிறார் என்பதே அந்த உண்மை. இவ்வாறு கடவுள் பற்றிய உண்மையை நமக்கு எடுத்துரைத்த இயேசு அந்த உண்மையை யார்மீதும் திணிக்கவில்லை. பிலாத்துவின் முன்னிலையில் குற்றவாளி போல நிறுத்தப்பட்ட போதும் இயேசு தம்மை ஓர் அரசராக அடையாளம் காட்டி பிலாத்துவைக் கவரவில்லை. மாறாக அவர் விடுப்பது ஓர் இனிய அழைப்பு. அதை யார்யார் ஏற்கின்றார்களோ அவர்களே இயேசுவின் ஆட்சியில் பங்கேற்பவர்கள். -- இயேசு இவ்வுலகில் வந்து பிறந்தது கடவுள் பற்றிய உண்மையை நமக்கு அறிவித்து, நாம் அந்த உண்மையை ஏற்றிட நமக்கு அழைப்பு விடுப்பதற்காகவே. இயேசுவின் அழைப்புக்குச் செவிசாய்க்கின்ற மனிதர்கள் அவருடைய ''மந்தை''யைச் சார்ந்தவர்கள். அவர்கள் சில வேளைகளில் வழிதவறிச் சென்றுவிட நேர்ந்தாலும் நல்ல ஆயராகிய இயேசு அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வருவார். இயேசு ஆற்றிய பணி நமது பணியாக மாறிட வேண்டும். நாமும் கடவுள் பற்றிய உண்மைக்குச் சான்று பகர அழைக்கப்படுகிறோம். அவ்வாறு சான்று பகர்கின்ற வேளையில் நமக்கும் துன்பங்கள் ஏற்படலாம். எதிர்ப்புகள் நம்மை எதிர்கொண்டு வரலாம். அந்த வேளைகளில் நாம் இயேசுவைப் போல நிலைத்து நிற்க வேண்டும். அவர் நமக்குத் தருகின்ற தூய ஆவியின் வல்லமையால் நாம் திடம் பெற்ற மனிதர்களாக ''உண்மைக்குச் சான்று பகர்ந்திட'' வேண்டும். உண்மையை முதலில் நம் உள்ளத்தில் ஏற்றால்தான் நாம் அதற்குச் சான்று பகர முடியும். அவ்வாறு ஏற்கும்போது நம் உள்ளத்தில் நிலவுகின்ற பாவம் என்னும் இருள் நம்மை விட்டு அகலும். கடவுளின் அருள் என்னும் ஒளி நம் உள்ளத்தையும் இதயத்தையும் வாழ்வையும் நிரப்பும். அப்போது நாம் ஒளியின் மக்களாகத் திகழ்வோம். ''அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளியாக'' உலகுக்கு வந்த இயேசுவை நம் அரசராக நாம் ஏற்போம்; அவருக்கு உகந்த குடிமக்களாக வாழ்ந்திடுவோம்.

மன்றாடுவோம்:

இறைவா, உம் திருமகன் வழியாக எங்களுக்கு நீர் அறிவிக்கின்ற உண்மையை நாங்கள் எங்கள் வாழ்வுக்கு ஒளியாகக் கொண்டிட அருள்தாரும்.
-->