பொதுக்காலம் 28 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 14-10-2012


'செல்வமா, மீட்பா ?

இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, 
'நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'
என்று அவரைக் கேட்டார் />  இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, 
'நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'
என்று அவரைக் கேட்டார்


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே,! பொதுக்காலம், வாரம் 28 வது ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஒருவர்: குடித்தால் உடம்பு கெட்டுப் போகும் - என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.
இவர்: அப்ப, குடிக்கிறத நிறுத்திட்டியா?
அவர்: ம்ம்… நிறுத்திட்டேன். குடிக்கிறத இல்ல, அந்தப் புத்தகம் படிக்கிறத நிறுத்திட்டேன்.

சில பேர் கேள்விகள் கேட்பதற்காகவே இருக்கிறார்கள். சில பேர் பதில்களைச் சொல்வதற்காகவே இருக்கிறார்கள். இன்னும் சில பேர் கேள்வியும் கேட்பார்கள், பதிலையும் சொல்லுவார்கள். ஆனால் வெகு சிலர்தான் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். இந்த ஞாயிறு, மீட்புப் பெற வேண்டுமென்றால் நம்மை வேத சத்தியங்களில் செயல்பட அழைக்கிறது.

மீட்படைந்தோர் யார்?
இயேசுவை, இறையரசை, இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் மீட்படைந்தனர்.
கூரைப்பிரிப்பில் விசுவாசம் வெளிப்பட்டது. திமிர் வாதக்காரன் மீட்படைந்தான்.
பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அத்திமரத்தில் ஏறியதில் விசுவாசம் இருந்தது. சக்கேயு மீட்படைந்தான்.
தொட்டால் போதும் என்பதில் இறையரசு இருந்தது. கனானேயப் பெண் மீட்படைந்தாள்.
என்னையும் மன்னிப்பார் என் தந்தை என்ற நினைவு இருந்தது. ஊதாரி மகன் மீட்படைந்தான்.
என்னை நினைத்தால் போதும் என்ற ஆசை இருந்தது. சிலுவையிலேயே கள்ளன் மீட்படைந்தான்.

உங்கள் வாழ்க்கையில் நிறைவையும் நிம்மதியையும் காண விரும்புகிறீர்களா? வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீச விரும்புகிறீர்களா? இதோ இன்று ஆண்டவர் சொல்லுவதைக் கேளுங்கள். அந்த பணக்கார இளைஞரிடம் நிறைய நல்ல மனது உள்ளது. நியாயமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ளது. தன் வாழ்வில் கடவுளின் கட்டளைகளையும் அன்றாடக் கடமைகளையும் தவறாது கடைபிடித்து வாழ்ந்துள்ளான். ஆனாலும் இவற்றில் தான் எதிர்பார்த்த நிறை வாழ்வையும் நிம்மதி வாழ்வையும் அவன் காணவில்லை. ஆகவே இயேசுவிடம் வந்துள்ளான். இயேசுவோடு உங்கள் வாழ்வில் ஆழத்துக்குள் செல்லுங்கள். உங்கள் குடும்பத்தின் ஆழத்துள் அவரை அழைத்து செல்லுங்கள். உங்கள் வாழ்வின் பிரச்சினைகளின் ஆழத்துள் இயேசுவை கூட்டிச் செல்லுங்கள. அவர் அந்த பணக்கார இளைஞனை கூர்ந்து நோக்கியது போல உங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரச்சனைக்குரிய இடங்களையும் கூர்ந்து நோக்கட்டும். நோயின் ஆழத்திற்குச் செல்லட்டும். நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய இயேசு, அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். "நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்." உங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசு உங்கள் நல்வாழ்வுக்கும் நல் விருந்தும் மருந்தும் தருவார். மகிழ்வோடு ஏற்று வாழுங்கள். நிறை வாழ்வைக் காண்பீர்கள். புனிதமான வாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்


சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-11

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 90: 12-13. 14-15. 16-17 (பல்லவி: 14)

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். பல்லவி

16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி



இரண்டாம் வாசகம்



எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-13

சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 5: 3 - அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ``நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'' என்றார். அவர் இயேசுவிடம், ``போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ``உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ``செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ``பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அப்போது பேதுரு அவரிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் தலைசிறந்த பணியாளர்களாகவும், அமைதியை ஏற்படுத்துவோராகவும், அனைவருக்கும் ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் செயற்படுவதற்கும் வேண்டிய ஆற்றலையும், ஞானத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒப்பற்ற செல்வமான இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். உம்மைவிடப் பெரிய செல்வம் எதுவுமில்லை என்று; நாங்கள் உணரச் செய்யும். எங்களிடம் இருக்கும் செல்வம், ஆற்றல்கள், திறமைகள் அனைத்தையும் பிறரோடு நாங்கள் பகிர்ந்து வாழ எங்களுக்கு வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிக்கும் நல்ல தந்தையே இறைவா!

உம்மால் உருவாக்கப்பட்ட குடும்ப உறவும், அழைப்பும் சவால்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் இவ்வேளையில், ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள கணவனும் - மனைவியும் தங்கள் அழைப்பின் உட்பொருளை ஆழமாக உணர்ந்து, உறவுடனும் - ஒற்றுமையுடனும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய அன்பு இயேசுவே,

அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். "நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்." எங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசுவே! எங்கள் நல்வாழ்வுக்கு நல் விருந்தும், மருந்தும் தந்து. நிறை வாழ்வைக் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகனின் மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் நம்பிக்கையுடனும், தூய ஆவியாரின் துணையுடனும் உம்மை நோக்கி மன்றாடும் அருளை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

”தூய்மையின் நிறைவாம் இறைவா,

நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.




சிந்தனை


''இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, 'நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று அவரைக் கேட்டார்'' (மாற்கு 10:17)

செல்வத்தைப் பற்றிய பார்வையில் கத்தோலிக்கப் போதனைக்கும், பெந்தகோஸ்து சபையினரின் போதனைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. அடிப்படையில், அது பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாடுதான். பழைய ஏற்பாடு செல்வத்தை இறைவனின் கொடையாகவும், ஆசியாகவும் பார்த்தது. செல்வம் இருப்போர் இறையாசி பெற்றவர்களாகவும், செல்வம் இல்லாதோர் இறையாசி குறைந்தவர்களாகவும் பார்க்கப்பட்டனர். ஆனால், புதிய ஏற்பாட்டில் இயேசு இந்தப் பார்வையைத் தலைகீழாக புரட்டிப் போட்டார். செல்வம் மீட்பு அடைவதற்குத் தடை என்று ஆணித்தரமாகக் கூறினார். ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்றும் போதித்தார். இன்றைய பெந்தகோஸ்து போதகர்கள் அனைவருமே பழைய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் இயேசுவின் புதிய போதனையைப் போதிக்காமல், பழைய ஏற்பாடு சொல்கின்ற கட்டளைகள், போதனைகள், பத்திலொரு பங்கு காணிக்கை, பரிசேய வாழ்வு போன்றவற்று முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு பிரபலமான பெந்தகோஸ்து போதகர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டுமா, கடவுளைத் துதியுங்கள் என்று நிதி நிறுவன ஏஜென்ட் போலப் போதித்ததைப் பார்த்து வியப்படைந்தேன். நல்லவேளை, இயேசுவின் போதனை தெளிவாக இருக்கிறது. செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். இம்மண்ணகத்தில் செல்வராய் இருப்பதைவிட, விண்ணகத்தில் செல்வராய் இருப்பதுதான் முக்கியம். அதற்கு நம்மிடம் உள்ளதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இப்போதனை பற்றித் தெளிவாக இருப்போம். பிறருக்கும் எடுத்துரைப்போம்.

மன்றாடுவோம்:

ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைவிடப் பெரிய செல்வம் எதுவுமில்லை என்று; நாங்கள் உணரச் செய்யும். எங்களிடம் இருக்கும் செல்வம், ஆற்றல்கள், திறமைகள் அனைத்தையும் பிறரோடு நாங்கள் பகிர்ந்து வாழ அருள்தாரும். இதனால், நாங்கள் விண்ணகத்தில் செல்வர்களாய் மாறுவோமாக. ஆமென்.
-->