பொதுக்காலம் 24 வது - ஞாயிறு
இரண்டாம் ஆண்டு 16-09-2012
'பேதுரு மறுமொழியாக, 'நீர் கடவுளின் மெசியா' என்று உரைத்தார்' !
/>
திருப்பலி முன்னுரை
மீட்புக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இன்றைய திருவழிபாடு நமது சிலுவையை சுமந்து கொண்டு ஆண்டவரைப் பின்பற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது.
கிறிஸ்தவ வாழ்வென்பது ஒரு சீடருக்குரிய வாழ்வு. அற்புதங்களையும், அதிசயங்களையும் எதிர்பார்க்காமல்,
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பயணத்தைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அரச அதிகாரத்தோடு கூடிய
மெசியாவை அல்ல, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை நாம் பின்பற்ற வேண்டும் என்பதே கடவுளின்
திருவுளம் என்பதை நினைவில் கொண்டு வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
இயேசுவை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும் என்றால் அவர் நம் வாழ்வின் மூச்சாக மாற வேண்டும்.
அவரே நம் உள்ளத்திலிருந்து நம்மை வழிநடத்த நாம் முழுமையாக அவருடைய கைகளில் நம்மை ஒப்படைக்க வேண்டும்.
அப்போது 'துன்புறும் மெசியா' வாக வந்த இயேசு துன்பங்களின் நடுவிலும் நமக்குத் தோன்றுவார்; நம்மைத் தேற்றி நமக்குத்
தம் புது வாழ்வில் பங்களிப்பார். நம்மைக் கடவுளோடும் மனிதரோடும் நல்லுறவில் இணைக்கின்ற பாலமாக விளங்குவார்.
இறையாட்சியின் இலட்சியங்களுக்காக
நம்மை முழுவதும் இழந்து கடவுளின் அரசை இவ்வுலகில் நிலைநாட்டும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 5-9
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவும் இல்லை.
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி
உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்;
என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத்
தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?
அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
பல்லவி
1 ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.
2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.
பல்லவி
3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.
4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.
பல்லவி
5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். 6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்;
நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.
பல்லவி
8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.
9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18
என் சகோதரர் சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டா விட்டால்,
அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட
உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து,
``நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்'' என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.
ஆனால், ``ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன''
என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க
முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
கலா 6: 14 அல்லேலூயா, அல்லேலூயா! நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி,
வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில்,
உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நற்செய்திக்கு முன் வசனம்
`மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35
அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி,
``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அவரிடம், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு
சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள்.
`ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று அவர் அவர்களைக் கேட்க,
பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா'' என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
`மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள்
ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும்
வேண்டும்' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்.
ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், `என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில்
நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' என்று கடிந்து கொண்டார்.
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, `என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து,
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்;
என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இறைமக்களின் வேண்டல்கள்:
மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர். இயேசு தரும் உணவை உண்பவரும் மடிந்து போவார்கள்.
ஆனால் இந்த உலகத்தில் அவர்கள் வாழ்வு முடியலாம், மறுவுலகத்தில் அவர்கள் வாழ்வு தொடரும்.
காரணம் இறையாட்சி என்கின்ற இலக்கை அவர்கள் கண்டடைவார்கள். மன்னா உண்டவர்கள் அவர்கள்
அடைய வேண்டிய கானான் தேசம் என்னும் இலக்கை கண்டடையாமல் மடிந்து போனார்கள்.
இயேசுவை உண்பவர்கள் இறையாட்சி என்னும் இலக்கை கண்டடைவார்கள்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
மீட்பு அளிப்பவராம் இறைவா,
உம் திருமகனின் சிலுவைப்பாதையைப் பின்பற்றி உலகில் நீதியையும், அமைதியை யும் நிலைநாட்டுபவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவருக்கும் அளித்து, உமது திருச்சபையை மீட்பின் பாதையில் வழி நடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நம்பிக்கை தருபவராம் இறைவா,
நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் போற்றுகிறோம்.
உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும்,
சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வின் நிறைவே இறைவா,
வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே
ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும், உம்மோடு உரையாடி அதன்
வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் தூய
ஆவியின் ஞானத்தை நிறைவாகத் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நம்பிக்கை தருபவராம் இறைவா,
உலக மக்கள் அனைவரும் உம் திருமகனின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவத்தை உணரவும்,
அவரது சிலுவையின் வழியாக நீர் செயல்படுத்திய மீட்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் தேவையான மனதை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா,
உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகனின் மாதிரியைப் பின்பற்றி,
நாங்களும் நம்பிக்கையுடனும், தூய ஆவியாரின் துணையுடனும் உம்மை நோக்கி மன்றாடும்
அருளை எங்களுக்கு அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
”தூய்மையின் நிறைவாம் இறைவா,
குறைகளை களைந்து நிறைவான வாழ்வு வாழ்வதுவே வாழ்வின் லட்சியம் என்பதனை உணர்ந்து,
அதனை மெசியாவாலேயே தந்திட முடியும் என்று உணர்ந்து வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.
உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்.
அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி,
ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும்
விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும்.
இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|