திருவழிபாடு ஆண்டு - C 2025-03-16
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூலிலிருந்து வாசகம். 15:5-12, 17-18, 21,பதிலுரைப்பாடல் 27: 1, 7-9, 13-14,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:17-4:1,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:28-36)
திருப்பலி முன்னுரை
மாட்சிக்குரியவர்களே, எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடுகள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெறவும், நாம் பங்கெடுக்கும் ஒவ்வொரு திருப்பலியும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நமக்கு நினைவு படுத்துகின்றது. நம் கிறிஸ்தவ வாழ்வு வெறும் வாடிக்கையாக இல்லாமல், ஒவ்வொரு கல்வாரி பலியும் நம்மில் புது மாற்றத்தை கொண்டுவரும் தாபோர் மலை அனுபவமாக அமைய வரம் வேண்டி இப்பலியில் இணைவோம். மனமாற்றத்தோடு கிறிஸ்துவின் மாட்சியில் பங்கெடுக்க தொடர்ந்து ஜெபிப்போம்.
முதல் வாசகம்
கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 15:5-12, 17-18, 21
அந்நாட்களில், ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். "ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்." அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?" என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு:
பதிலுரைப்பாடல் 27: 1, 7-9, 13-14
ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி
ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும்; என் மீது இரக்கங் கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ;புறப்படு, அவரது முகத்தை நாடு ; என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். பல்லவி
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்: நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கி விடாதிரும்: நீரே எனக்குத் துணை: என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடா தேயும். பல்லவி
இரண்டாம் வாசகம் கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்: திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:17-4:1சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு: வயிறே அவர்கள் தெய்வம்: மானக்கேடே அவர்கள் பெருமை: அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு: அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.
ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி: நீங்களே, என் வெற்றி வாகை: அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மாற் 9: 7
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:28-36
அக்காலத்தில், இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது: அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்: நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
"நிறை ஆசீர்" என்ற மறுபெயர் கொண்ட இறைவா! எம் நம்பிக்கையின் தந்தையாகிய ' ஆபிரகாமை நீர் ஆசீரால் நிரப்பியது போல, எம்மையும் நிரப்பிட உம்மை வேண்டுகின்றோம்.
தந்தையாம் இறைவா! நாங்கள் நேச பெருவிருப்புடன் உம் திருமகனின் சிலுவையைப் பற்றிக்கொண்டு விண்ணகமாம் எம் தாய்நாட்டின் பெருமைமிகு குடிகளாகப் பீடுநடை போட அருள் தர. இறைவா உம்மை வேண்டுகிறோம்.
இறைவா எம் தலைவரே! அனைத்தையும் தம் வல்லமைமிக்கச் சொல்லால் தாங்கி வழிநடத்தும் இயேசுவிற்கு நாங்கள் பணிந்து வாழவும், இறைமகனை எமது வாழ்வில் இடையறாத் தன்மையுடன் பிணைத்திடவும் வரம் தர இறைவா! உம்மை வேண்டுகிறோம்.
தனிப்பெரும் இறைவா,
சிலுவை வழி வாழ்வே வெற்றி வாழ்வு என்பதனை எம் மனதில் இருத்திடவும், சிலுவையின் அரசரான எம் உயிரானவரை உறுதியுடன் பற்றிக் கொள்ளவும் வரம் தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்.
எம்மவரின் தந்தையே இறைவா! எம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயேசு மட்டும் இருக்கிறார் என்கிற உள உறுதியை எம்மில் பதியச் செய்யும். இயேசு இல்லாத உணர்வு நிலைகள் எம்மிலிருந்து அகற்றப்பட அருள் தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்
இறைவா! உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கிடையே தொடர்ந்து பெருகிவரும் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து மனிதநேயம் வளர்ந்து மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த நாட்டு தலைவர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயல்பட நல்மனதினைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
கூடாரம் அமைப்போம்
பேதுருவின் நியாயமான ஆசை. மூன்று பேருக்கும் மூன்று கூடாரம் அமைக்க விரும்பினார். கூடாரங்கள் விவிலியத்தில் இறைப் பிரசன்னத்தின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் பாலை வனப் பயணத்தில் இஸ்ராயேல் மக்களோடு யாவே இறைவன் தனக்கென தனி கூடாரம் அமைத்துக் குடிகொண்டார். "மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம்அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்." (விடுதலைப் பயணம் 33.7)
இறை மாட்சியைக் கண்ட பேதுரு அத் தெய்வீகப் பிரசன்னம் தங்களோடு என்றும் தங்கியிருக்க விரும்பினார்.உண்மையில் இறைவன் நம்மோடு வாழும் தெய்வம். இம்மானுவேல் என்பது அவரது பெயர்.உலகம் முடியும்வரை நம்மோடு இருக்கும் தெய்வம். பேதுருவின் ஆசையிலும் இறைவனின் இயல்பிலும் ஒரே கருத்து உள்ளோடுவதை உணரமுடிகிறது.
இதைச் செயல்படுத்துவதில் சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. மாட்சியும் பெருமையும் அவரைக் கவர்ந்தது. பேரொளி, பெரிய ஆட்கள் அவருக்குப் பெருமை சேர்த்தது. உயர்ந்த மலை உடலுக்கு இதமாக இருந்தது. இத்தகைய சுனம் கண்டதால், அங்கு ஆண்டவனுக்குக் கூடாரம் அமைப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக, தன் பாடுகள், மரணம் இவற்றால் மாட்சி அடைவதை அவர் விரும்பினார். "மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்பதை இயேசு கூடாரம் அமைப்பதின் கொள்கையாகக் கொண்டார். மாய சுகத்தில் அமைக்கும் கூடாரம் நிலைக்காது. உழைத்து உருவாக்கிய கூடாரம் இறைவன் விரும்புவது. அங்கு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிசாய்க்க எங்கள் இதயத்தைத் திறந்தருளும்.
|