யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2025-01-12

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40:1-5,9-11,திருப்பாடல்: 104: 1-4. 24-25, 27-30,திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:11-14, 3:4-7,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:15-16, 21-22)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

'ஆண்டவரில் அகமகிழ்வோம்'

அன்பிற்கினியவர்களே! ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா, கிறிஸ்து பிறப்புக் காலத்தின் முடிவாகவும், ஆண்டின் பொதுக்காலத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. யோர்தான் நதிக்கரையில் இயேசு பெற்ற இறையனுபவம் தான், அவருடைய வாழ்விலே அவர் சந்தித்த மிகப்பெரிய அற்புதமான நிகழ்வு. இந்த இறையனுபவம்தான், இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு அடித்தளமாகவும், ஆரம்பப் புள்ளியாகவும் அமைகிறது. இந்த யோர்தான் நிகழ்வு, தந்தை கடவுள் தன் மகனை உலகினுக்கு வெளிப்படுத்திய மிக அருமையான நிகழ்வு. தந்தைக் கடவுள், தன் மகனில் மனமகிழ்ந்த நிகழ்வு. தூயஆவியால் கருவான இயேசு, இன்று அதே தூயஆவியால் இயக்கப்படுகின்றார். இன்றைய திருவழிபாட்டின் அனைத்து வாசகங்களுமே, தூய்மையின் அடையாளமான தண்ணீரை மையப்படுத்தியதாக அமைகிறது. ஆம் இறைமக்களே! நாமும், அதே தண்ணீரால் தூய்மைப்படுத்தப்பட்டு திருமுழுக்கினால் கடவுளின் பிள்ளைகளான நாளினை, இன்றைய இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா நமக்கு நினைவுபடுத்துகின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நம் பிறந்த நாளை ,மகிழ்ச்சியாக மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கின்றோம்? ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு, நாம் திருமுழுக்கு பெற்ற நாள் தெரியும்? என்று சிந்தித்தவாறு , இன்றைய நாளில் நாம் நம்முடைய திருமுழுக்கு விழாவினை கண்முன் கொண்டுவருவோம். கடவுளின் பிள்ளைகளாக மாறிய பெருமிதத்தோடு, நம் திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்துக் கொள்வோம். இயேசு பெற்ற யோர்தான் நதிக்கரை அனுபவங்களை, இத்திருப்பலியில் நாமும் பெற்று, தூய ஆவியின் துணையோடு தொடர்ந்து வாழ ஆண்டவர் நம்மில் அகமகிழ, ஆண்டவரில் நாம் அகமகிழ , வரம் கேட்டு பக்தியுடன் பலியில் இணைவோம்! திருமுழுக்கின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம்!



முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40:1-5,9-11

"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள். குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். "

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல்: 104: 1-4. 24-25, 27-30

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்: வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்: பல்லவி

நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்: கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்: காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றனவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்: தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். பல்லவி

ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்: அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. பல்லவி

தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன: நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. பல்லவி

நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்: நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:11-14, 3:4-7

அன்பிற்குரியவரே மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! லூக் 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா! “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்” அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:15-16, 21-22

அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புதுப் பிறப்பளிக்கும் இறைவா!

உம் திருமகனும் திருமுழுக்கு பெற வேண்டும் என்ற திருவுளத்தைக் கொண்டீரே! நாங்களும் எங்கள் புதுப்பிறப்பினை உணர்ந்து வாழ அருள்தர • உம்மை மன்றாடுகிறோம்.

என் அன்பார்ந்த மகன் நீயே என்று சான்று பகர்ந்திட்ட தந்தையே இறைவா!

நாங்களும் உம் அன்பிற்குரியோராய் வாழ்ந்திட வரம் தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

ஆற்றலோடு ஆட்சி புரியும் இறைவா!

பாவ உலகானது தனது மாட்சியை மீட்டெடுத்து உம் திருமகனின் பராமரிப்பில் வாழ்ந்திட வரமருள இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

நல்லாயனாம் இறைவா!

நாங்கள் அனைவரும் உன்னத மேய்ப்பரான கிறிஸ்துவின் மேய்ச்சலில் கருத்தாய் வாழ்ந்திட வரம் தர இறைவா, உம்மை வேண்டுகிறோம்.

கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை எம்மீது நிறைவாகப் பொழியும் தந்தையே!

தூய ஆவியின் தூண்டுதல்களை எமது வாழ்வாக்கிட வரமருள உம்மை வேண்டுகிறோம்.

நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா!

கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராக் கொடுத்து அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

என் அன்பார்ந்த மகன் நீயே !

இன்று ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா. இயேசு திருமுழுக்கு பெற்றுத் தன் பணிவாழ்வைத் தொடங்கிய நாள். அந்தப் பணியைத் தொடங்கும் வேளையில் இயேசுவின்மேல் துhய ஆவி புறா வடிவில் இறங்கினார். வானத்திலிருந்து என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ” என்று தந்தையின் குரல் கேட்டது. இந்த இரு நிகழ்வுகளும் நமக்குத் தருகின்ற செய்தி:

1. நமது பணியை ஆற்றுவதற்குத் தூய ஆவியின் துணை வேண்டும். அவரது அருள்கர ஆற்றலின்றி நமது பணி வெற்றியடைய முடியாது.

2. தந்தை இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதே நமது பணியின், வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். அதற்கு முதல்கட்டமாக, தந்தை இறைவனோடு நாம் நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும். அதற்கான அருளை இன்று மன்றாடுவோம்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவை உமக்கு மகிழ்ச்சி தரும் மகனாக அறிக்கையிட்டதுபோல, என்னையும் உம்மை மகிழ்ச்சிப்படுத்தும் மகனாக, மகளாக மாற்றுவீராக. உம்மை மாட்சிமைப்படுத்துவதே என் வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும். அதற்கான ஆற்றலைத் தூய ஆவி வழியாக எனக்கு வழங்குவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.