யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2024-08-04

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4,12-15,.திபா 78: 3,4b. 23-24. 25,54 ,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 17, 20-24,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இயேசுவுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நிலைவாழ்வுக்கான உணவைத் தேட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு செய்த அற்புதத்தால் அப்பங்களை வயிறார உண்ட மக்கள், மீண்டும் உணவைத் தேடி இயேசுவிடம் செல்கின்றனர். இயேசு அவர்களிடம், தானே வாழ்வு தரும் உணவு என்று எடுத்துரைக்கிறார். மனித உடல் எடுத்த இறைமகன் இயேசு, நற்கருணை வடிவில் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார். நமது ஆன்மத் தேவைகளுக்காக நிலைவாழ்வு அளிக்கும் உணவாம் இயேசுவைத் தேடும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4,12-15

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். "இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கிää "இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்துää எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றனர். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்." "இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், "மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் " என்று சொல" என்றார்." மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையானää தட்டையானää மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது."இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி "மன்னா " என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:"

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்
.திபா 78: 3,4b. 23-24. 25,54

3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை – இவற்றை உரைப்போம். 4b வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். பல்லவி

23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். 24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். பல்லவி

25 வானதூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார். 54 அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 17, 20-24

ஆதலால் நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தாவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவேää உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றிää தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35

இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏற இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்? " என்ற கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் " என்றார். அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? " என்று கேட்டார்கள். "இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்""என்றார். அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! "அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் " என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! " என்றனர். இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல: வானிலிருந்து உங்களுக்கு உண்மையான அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது " என்றார். அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் " என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நல்லாயனே எம் இறைவா!

திருஅவையின் நல்மேய்ப்பர்கள் தங்கள் செயல்களால். இறைவார்த்தையின் ஒளியால், இருளில் வாழும் உம் மக்களை நல்பாதையில் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

வாழ்வுதரும் உணவே எம் இறைவா!

உம்மை உட்கொள்ளும் எவரும் உம்மில் நிலைத்து நிலைவாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நம்பிக்கையின் நாயகனே இறைவா!

நாங்கள் உம்மில் நம்பிக்கை வைத்து, உமது வார்த்தையின்படி வாழ்ந்து, உணவாக வந்த இயேசு கிறிஸ்துவோடு உண்மை நீதியோடு ஒன்றித்து வாழ வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

என்றும் வாழும் இறைவா!

நாட்டில் இன்றும் இயேசுவை அறியாத பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக செபிக்கிறோம். அவர்களுக்கு நீர் வழங்கும் வாழ்வும், ஒளியும் கிடைக்க நீர் அவர்களோடு தங்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நம்பிக்கையின் இறைவா!

உயிரளிக்கும் இயேசுவின் வார்த்தையை வாசித்து, தியானித்து அவரை வாழ்வாக்க அருள்தர வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

நீதியின் அரசராம் இறைவா,

உலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், உள்நாட்டு கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் உமது உதவியை நாடவும், தீமையை வெறுத்து, நன்மையையும் நீதியையும் தேடி நல்ல வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

அழிந்து போகும் உணவும், அழியா வாழ்வு தரும் உணவும்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மீண்டும் இரு விதமான உணவுகளைக் காண்கிறோம். அழிந்து போகும் உணவு. இந்த உணவுக்காகத்தான் மனிதர் அனைவரும் ஆலாய்ப் பறக்கின்றனர். ஆர்வத்துடன் உழைக்கின்றனர். இடையூறுகளைச் சகித்துக்கொள்கின்றனர். அழியாத வாழ்வு தரும் உணவாக இறைமகன் இயேசு இருக்கிறார். அவரது மொழியும், உடலும் நிலைவாழ்வைத் தருகின்றன. ஆனால், இவற்றின்மீது ஆர்வமற்றவர்களாக, அல்லது ஆர்வம் குறைந்தவர்களாக நம்மில் பலரும் வாழ்கிறோம். மெல்ல, மெல்ல உலக மக்கள் இறைப் பற்றை, ஆன்மீகத்தின் அடிநாதத்தை இழந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இறைவன் தரும் அமைதி, ஆற்றல், மகிழ்ச்சியைவிட உலக இன்பங்கள், உணவு, உல்லாசங்கள் பெரிய மதிப்பீடுகளாக மாறி வருகின்றன.

எனவே, இன்று இயேசு நமக்கு ஓர் எச்சரிக்கை அழைப்பு விடுக்கின்றார்; அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். எனவே, நம் அன்றாட வாழ்வில் இறைவார்த்தைக்கும், நற்கருணைக்கும், இறைத் திருவுளத்துக்கும் நேரமும், ஆற்றலும் செலவழிக்க முன்வருவோம். அப்போது மற்ற அனைத்தையும் இறைவன் நமக்கு நிறைவாகத் தருவார்.

மன்றாட்டு:

அழியா வாழ்வின் உணவான இயேசுவே, நீர் வழங்கும் வார்த்தை மற்றும் நற்கருணை என்னும் உணவுகளுக்காக நன்றி செலுத்துகிறோம். அழிந்து போகும் உணவுக்காக நாங்கள் அதிகம் கவலைப்பட்டு, உம்மை மறந்துவிடாதிருக்க எங்களுக்கு அருள்தாரும். நீரே வானிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு என்று ஏற்று அறிக்கையிடுகிறோம். ஆண்டவரே, இவ்வுணவை எப்போதும் எங்களுக்குத் தாரும் என்று மன்றாடுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.