திருவழிபாடு ஆண்டு - A 2023-11-26
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா ஞாயிறு
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17,திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26,28,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46)
திருப்பலி முன்னுரை
கடவுளுக்குரியவர்களே, கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாட்டத்துக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். ஆட்சி செய்வதற்கு தகுதியுள்ள ஒரே ஒருவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத்தன்மை குறித்து சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உலகின் முடிவில் நல்லோரையும், தீயோரையும் நம் ஆண்டவர் இயேசு பிரித்து தீர்ப்பு வழங்கும் வேளையில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நாம் இன்று அழைக்கப்படுகிறோம். அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தைப் பயன்படுத்தி, அவரது வலப்பக்கத்தில் நிற்கத் தகுதி பெறுவதற்கு ஏற்ப வாழ வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
என் மந்தையே, நான் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
இரண்டாம் வாசகம் கிறிஸ்துவின் வருகையின்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26,28
சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.
எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார்.
அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.
அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருச்சபையின் ஆயரே இறைவா, உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அரசர்களின் அரசரே இறைவா, உமது அரசின் பரவலுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பதவி இழக்கவும், உலகெங்கும் உமது அரசு கட்டியெழுப்பப்படவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மாட்சியின் மன்னரே இறைவா, எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையின் நற்செய்தியை விரும்பித் தேடவும், உம் திருமகனின் மேலான ஆட்சியை மனமுவந்து ஏற்கவும் துணை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றி புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவுகொடுத்தீர்கள்;
தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்'' (மத்தேயு 25:35)
மத்தேயு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் ''மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு'' என்னும் பிரிவு உள்ளது (மத் 25:31-46). இயேசு வழங்கிய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்கும்போது இறையன்பும் பிறரன்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை இப்பகுதி காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதை ''நல்ல சமாரியர்'' உவமை வழியாக எடுத்துரைத்த இயேசு (காண்க: லூக் 10:25-37), இங்கே நாம் பிறர் மட்டில் காட்டுகின்ற அன்பு கடவுளுக்கு நாம் காட்டுகின்ற அன்பின் மறுவடிவமே என்று எடுத்துரைக்கிறார். உலகத்தில் பசியாலும் தாகத்தாலும் வாடுகின்ற மனிதர் பலருண்டு; அன்னியராக நடத்தப்படுவோர் உண்டு; இருக்க இடமும் உடுக்க ஆடையும் இல்லாதோர் உண்டு; நோயினால் வாடுவோர் உண்டு; சிறைப்பட்டுத் துன்புறுவோர் உண்டு. இவர்களைப் பார்க்கும்போது இயேசுவே இவ்வாறு பசி பிணி நோய் போன்ற துன்பங்களை அனுபவிக்கிறார் என உணரவும், மனிதருக்குச் செய்வதையே அவருக்கே செய்கிறோம் என அறியவும் இயேசு நம்மை அழைக்கிறார்.
இங்கே ஒரு முரண்பாடு எழுவதுபோல் தெரிகிறது. அதாவது, இயேசு சாவை வென்று நம் ஆண்டவராக ஏற்கெனவே மகிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இயேசு இவ்வுலகில் மனிதராக நம்மிடையே நடமாடுகிறார். குறிப்பாக, ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர் போன்ற ''மிகச்சிறியோர்'' (மத் 25:40,25) வடிவத்தில் அவர் நம்மிடையே உள்ளார். இந்த உண்மையைத் தூய பவுல் ''நாம் கிறிஸ்துவின் உடல்'' என விளக்குவார் (காண்க: உரோ 12:4). மனித குலம் முழுவதும் மனிதராக நம்மிடையே வந்த கிறிஸ்துவில் ஒன்றித்திருப்பதால் நாம் ஒருவர் ஒருவருக்குச் செய்வதை (நன்மையோ தீமையோ) கிறிஸ்துவுக்கே செய்கிறோம் எனலாம். ஆக, நம்மிடையே சகோதர அன்பு விளங்கும்போது அங்கே இறையன்பும் துலங்குகிறது; அதற்கு மாறாக, சகோதர அன்பு குறைபடுகின்ற வேளையில் இறையன்பும் குறைபடுகிறது. நேர்மையாளராக நாம் வாழ்ந்து ''நிலைவாழ்வு'' அடைவதும், தீயோராக நடந்து ''தண்டனை'' பெறுவதும் நாம் பிறரில் கடவுளைக் கண்டு அவர்களை அன்போடு நடத்தினோமா இல்லையா என்பதன் அடிப்படையில் அமையும்.
மன்றாட்டு:
இறைவா, ஏழைகளில் உம்மைக் கண்டு அன்புசெய்ய அருள்தாரும்.
|