முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 28வது வாரம் வெள்ளிக்கிழமை 2023-10-20
முதல் வாசகம்
ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8
சகோதரர் சகோதரிகளே, இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை.
ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? ``ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்.'' வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார்.
அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்: ``எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்.''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.
திருப்பாடல் 32: 1-2. 5. 11
1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி
5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி
11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 33: 22
அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7
அக்காலத்தில் ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார்.
அவர் அவர்களிடம் கூறியது: ``பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.
ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' (லூக்கா 11:52)
இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதி (காண்க: லூக்கா 11:37-54) பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ''ஐயோ! உங்களுக்குக் கேடு!'' என்று இயேசு கூறுவது இயேசுவின் சாந்தமான குணத்திற்கு நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசு கண்டிப்பது அக்கால சமய, மற்றும் சமூகத் தலைவர்களிடம் காணப்பட்ட குறைகளை மட்டுமல்ல, மாறாக அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நேரிய நடத்தை என்னவென்பதையும் இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், இயேசு கண்டித்த குறைகளும் அவர் போற்றியுரைத்த நடத்தையும் இன்று வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். தாமும் நுழையாமல் பிறரையும் நுழையவிடால் செயல்படுவது எதைக் குறிக்கிறது? வீட்டு வாசலில் ஒருவர் நிற்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒன்றில் அவர் வீட்டுக்குள் நுழைய வேண்டும் அல்லது வாயிலை அடைத்துக்கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிறர் நுழைய முடியும். இதையே இயேசு ஓர் உருவகமாகக் கொண்டு இறையாட்சி பற்றிய ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார்.
நுழைதலும் நுழையவிடுதலும் நம் வாழ்வில் அன்றாடம் நிகழ்கின்ற அனுபவங்கள். கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கும்போது, அவரிடத்தில் முழுமையாக நம்மைக் கையளிக்கும்போது நாம் அவருடைய ஆட்சியில் நுழைகிறோம் எனலாம். அதுபோல, பிறர் நம்மைக் காணும்போது நம் வாழ்வில் கடவுளின் பண்புகள் துலங்குகின்றன என உணர்ந்து, அதே பண்புகளைத் தம் வாழ்விலும் கடைப்பிடிக்க முன்வரும்போது நாம் அவர்கள் இறையாட்சியில் நுழைவதற்கு வழியாகின்றோம் (காண்க: லூக்கா 11:42).. இதுவே தூயவர்களின் வாழ்க்கையில் நாம் காண்கின்ற உயர்ந்த நெறி. அன்னை தெரசாவின் வாழ்க்கையைப் பார்த்தால் இவ்வுண்மை தெளிவாகத் துலங்கும். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களை அவர் கடவுளின் பிள்ளைகள் என்றுதான் பார்த்தாரே தவிர மனித மாண்பு இல்லாத பொருள்களாகக் கருதவில்லை. கடவுளிடம் துலங்குகின்ற அன்பும் இரக்கமும் நம் வாழ்விலும் துலங்கும்போது இறையாட்சியில் நாமும் நுழைவோம், பிறரும் அந்த ஆட்சியில் பங்கேற்று அதில் நுழைவதற்கு நாம் கருவிகளாகச் செயல்படுவோம். அப்போது ''நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்'' என்று இயேசு கூறிய சொற்கள் நமக்குப் பொருந்தாது எனலாம். அந்த அளவுக்கு நம் வாழ்க்கை விளங்குகிறதா?
மன்றாட்டு:
இறைவா, இறையாட்சியில் நாங்கள் நுழைந்திட இயேசுவை வாயிலாகத் தந்ததற்கு உமக்கு நன்றி!
|