யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-06-11

இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் விழா

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3,14b-16a,திருப்பாடல் 147: 12-13, 14-15, 19-20 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஆண்டவருக்குரியவர்களே, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். ஈசாக்கின் பலியும், பாஸ்கா செம்மறியும் நம் ஆண்டவர் இயேசுவின் சிலுவைப் பலியை முன்குறிப்பவையாக இருந்தன. கிறிஸ்துவின் சிலுவை பலியை எக்காலத்துக்கும் நிலைநிறுத்தும் அடையாளமாக, அவர் நமக்கு நற்கருணையை ஏற்படுத்தி தந்துள்ளார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து ஆயிரக் கணக்கானோரின் பசியாற்றிய இயேசு, நற்கருணை வழியாக தம்மையே நமக்கு உணவாக தருகிறார். கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் மறைந்திருக்கும் கிறிஸ் துவின் உடனிருப்பை முழுமையாக நம்பி, அவரைப் போன்று மற்றவர்களின் நலனுக்காக நம்மையே பகிர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3,14b-16a

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல் 147: 12-13, 14-15, 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். -பல்லவி

14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. -பல்லவி

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. -பல்லவி

இரண்டாம் வாசகம்

அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17

சகோதரர் சகோதரிகளே, கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 6:51-52
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58

அக்காலத்தில் இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: ``விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.'' ``நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கும் இருப்பவராம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான உடனிருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவாசத்தில் வளர்க்கவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஒற்றுமையை அருள்பவராம் இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

வானக அரசரே இறைவா,

உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த தங்கள் சொந்த விருப்பங்களில் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், நிலை வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேட துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும் எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்க ளில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய் தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு மக்களிடம், ''என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்' என்றார்'' (யோவான் 6:44)

மனிதர் தம் சொந்த முயற்சியால் கடவுளை அடைய முடியாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். கடவுளைத் தேடிச் செல்கின்ற மனிதர் கடவுளைக் கண்டுபிடிப்பார்கள் என நாம் நம்புகிறோம். ஆனால் கடவுளைத் தேடுவதற்கான ஆவலை நம் உள்ளத்தில் பதித்தவரே கடவுள்தாம். தம்மை மக்கள் தேடி வர வேண்டும் என்பது கடவுளின் திருவுளம் என்றால் அத்தேடலை நிறைவு செய்பவரும் கடவுளே. எனவேதான் கடவுள் நம்மை முதலில் அன்புசெய்தார் (காண்க: 1 யோவா 4:19 - ''அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்''). இந்த அன்பு எல்லையற்றது; நிகரற்றது. ஆனால், மனிதர் கடவுள்மட்டில் காட்டுகின்ற அன்பு எப்போதுமே குறைவுள்ளதுதான். அந்த அன்பு நம்மிடமிருந்து எழவேண்டும் என்றால் அதற்கு முதல் படியாக அமைவது கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்புதான். எனவேதான் கடவுள் நம்மை ஈர்க்கிறார் என இயேசு கூறுகிறார் (காண்க: யோவா 6:44). காந்தம் இரும்பை ஈர்க்கும்போது இரும்பு காந்தத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். அதுபோல, கடவுள் நம்மை ஈர்ப்பதால் நாம் அவரில் இணைகிறோம்; அந்த அன்பில் மகிழ்ச்சியடைகிறோம். எனவே கடவுளை அன்புசெய்வதற்கு நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குபவர் கடவுளே எனலாம்.

இவ்வாறு கடவுளால் ஈர்க்கப்பட்டு அவருடைய அன்புப் பிணைப்பில் மகிழ்ச்சியடைகின்ற நாம் கடவுளிடமிருந்து தலைசிறந்த ஒரு கொடையைப் பெற்றுக்கொள்கின்றோம். இதை நற்செய்தி நூல்கள் பல சொற்களைப் பயன்படுத்தி விளக்கிச் சொல்கின்றன. கடவுள் நமக்கு வழங்குகின்ற கொடை யாது? இறையாட்சியில் நாம் பங்குபெறக் கடவுள் நம்மை அழைக்கிறார்; கடவுள் நமக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றார்; நிலைவாழ்வைக் கடவுள் நமக்குத் தருகிறார். இவ்வாறு கடவுளின் கொடையை நாம் பெற்றுக்கொள்கின்றோம். இயேசு கடவுளிடமிருந்து வந்து நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, மீண்டும் கடவுளின் அரசில் மாட்சிமை பெற்றதுபோல நாமும் இயேசுவின் மீட்புச் செயல் வழியாகக் கடவுளின் ஆட்சியில் நிறைவாகப் பங்கேற்கும் பேற்றினைப் பெற்றுள்ளோம். இது கடவுள் நமக்கு வழங்கும் கொடையேயன்றி, நாமாக தேடிக்கொள்கின்ற செல்வம் அல்ல. கடவுள் வழங்குகின்ற கொடை நமக்கு நிலைவாழ்வாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை ஈர்க்கின்ற உம்மை நாடி வந்து உம்மில் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.