முதலாவது திருவழிபாடு ஆண்டு 2023-06-10
(இன்றைய வாசகங்கள்:
தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 1, 5-15, 20,திருப்பாடல் 13: 2, 6, 7, 8,,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
)
திருப்பலி முன்னுரை
ஆண்டவருக்குரியவர்களே, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். ஈசாக்கின் பலியும், பாஸ்கா செம்மறியும் நம் ஆண்டவர் இயேசுவின் சிலுவைப் பலியை முன்குறிப்பவையாக இருந்தன. கிறிஸ்துவின் சிலுவை பலியை எக்காலத்துக்கும் நிலைநிறுத்தும் அடையாளமாக, அவர் நமக்கு நற்கருணையை ஏற்படுத்தி தந்துள்ளார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பகிர்ந்து ஆயிரக் கணக்கானோரின் பசியாற்றிய இயேசு, நற்கருணை வழியாக தம்மையே நமக்கு உணவாக தருகிறார். கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத்திலும் மறைந்திருக்கும் கிறிஸ் துவின் உடனிருப்பை முழுமையாக நம்பி, அவரைப் போன்று மற்றவர்களின் நலனுக்காக நம்மையே பகிர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
என்னை அனுப்பினவரிடம் போகிறேன்; நீங்களோ கடவுளைப் போற்றுங்கள்.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 1, 5-15, 20
அந்நாள்களில்
திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, “மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு; உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு” என்றார்.
பின்னர் இரபேலை அழைத்து, “நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக” என்று கூறினார். அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: “கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது. தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும். பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள். “முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். “மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது” என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன். நீர் உணவு அருந்துவதை விட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம் செய்யத் தயங்காதபோது, நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன். அதே போல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார். நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்.
இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்; கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றை எல்லாம் எழுதிவையுங்கள்” என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என்றும் வாழும் கடவுள் போற்றி!
திருப்பாடல் 13: 2, 6, 7, 8
என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. -பல்லவி
6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார். -பல்லவி
7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப் பாருங்கள்; நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள்; என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். -பல்லவி
8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே, மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கம் காட்டுவார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மத் 5:3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில்
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கும் இருப்பவராம் இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான உடனிருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவாசத்தில் வளர்க்கவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
ஒற்றுமையை அருள்பவராம் இறைவா, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
வானக அரசரே இறைவா, உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த தங்கள் சொந்த விருப்பங்களில் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், நிலை வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேட துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா! உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும் எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே! இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்க ளில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய் தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புத் தந்தையே இறைவா! உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர்
பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்'' (லூக்கா 16:10)
''ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பார்கள். சிறிய பொறுப்புகளைக் கவனமாக நிறைவேற்றுபவர் பெரிய பொறுப்பையும் அவ்வாறே நன்முறையில் நிறைவேற்றுவார் என நாம் எதிர்பார்க்கலாம். மனித வாழ்க்கையில் சிறிதும் பெரிதுமாகப் பல பொறுப்புகள் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை நிலைக்கும் பணிக்கும் வளர்ச்சிப்படிக்கும் ஏற்ப வெவ்வேறு பொறுப்புகளைப் பெறுவது வழக்கம் என்பதை நாமறிவோம். ஆனால் எந்த நிலையில், பணியில், வளர்ச்சிப்படியில் நாம் இருந்தாலும் சரி, கடவுளால் நமக்குத் தரப்படுகின்ற அடிப்படையான பொறுப்பு ஒன்று உண்டு. அதுவே கடவுள் நமக்கு விடுக்கின்ற அழைப்புக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் மொழி. கடவுளுக்கு நாம் ''ஆம்'' எனப் பதில் இறுக்கலாம், அல்லது ''இல்லை'' என்றுகூடப் பதில் இறுக்கலாம். ஏனென்றால் நமக்குக் கடவுள் சுதந்திரத்தைத் தந்துள்ளார். வரம்புகடந்த சுதந்திரம் நமக்குக் கிடையாது; ஆனால், எல்லைகளுக்க உட்பட்ட விதத்தில் நாம் சுய முயற்சியோடு முன்வந்து கடவுளின் திட்டத்தை ஏற்றோ மறுத்தோ பதில் வழங்கும் திறமையைக் கடவுள் நமக்கு அளித்திருக்கின்றார்.
-- சில நாட்களுக்கு முன் (நவம்பர் 4, 2008) அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க ஒரு நிகழ்வு நடந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவான 1776இலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு மோலாக வெள்ளையர் இனமே ஆட்சிநடத்தி வந்த இந்த நாட்டின் தலைவராகக் கறுப்பு இனத்தைச் சார்ந்த பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கறுப்பு இனத்தவர் அடிமைகளாக நடத்தப்பட்டு, பிரித்து வேறுபடுத்தப்பட்டு எத்தனையோ கொடுமைகள் அனுபவித்தது வரலாற்று உண்மை. ஆனால் இன்றைய உலகில் மனித மாண்பு பற்றிய உணர்வு முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்பதற்கு பராக் ஒபாமாவின் வெற்றி ஒரு சான்றாக அமைகிறது. இப்பின்னணியில் இயேசுவின் கூற்றை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நமக்குக் கடவுள் தருகின்ற பொறுப்பு யாது? கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்ட மனிதர் யாராக இருந்தாலும் சரி, எந்த குலத்தை அல்லது நாட்டை அல்லது இனத்தைச் சார்ந்தவராயினும் சரி, அவர்கள் அனைவருமே நம் மதிப்புக்கு உரியவர்கள். யாதொரு வேறுபாடும் காட்டாமல் மனிதர் ஒருவர் ஒருவரை மதித்து, அன்புசெய்ய வேண்டும். இப்பொறுப்பைப் பெற்றுள்ள நாம் நம்பத்தகுந்த விதத்தில் நடந்துகொள்ள கடவுள் நம்மை அழைக்கிறார். ''சிறியவற்றிலும்'' ''பெரியவற்றிலும்'' நாம் நம்பத் தகுந்தவராய் செயல்பட வேண்டும் (லூக்கா 16:10).
மன்றாட்டு:
இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைக்கின்ற பொறுப்பை நாங்கள் மனமுவந்து நிறைவேற்றிட அருள்தாரும்.
|