திருவழிபாடு ஆண்டு - A 2023-04-08
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43
,திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23
,திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9
)
திருப்பலி முன்னுரை
ஆண்டவரே உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம் திருமகன் இயேசுவை உயிர்ப்பித்து நமக்கு வாழ்வு தரும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று புனித சனி. இயேசுவின் உயிர்ப்பை நினைவு கூர்ந்து மகிழும் நன்நாள். இஸ்ரயேல் மக்களை இருளின் உறவிலிருந்தும் மரணத்தின் பிடியிலிருந்தும், அடிமைத்தனத்தின் ஆதிக்கத்திலிருந்தும் மோசே விடுவிக்க இறைவனின் பாஸ்காவை கொண்டிடாடி - செங் கடல் வழியாக நடத்தி பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு கூட்டிச் சென்றார். ஒளியின் பாதையிலும் மேகத்தூணின் வழிநடத்தலிலும் நடந்து சென்று அந்த காணான் நாட்டை உரிமையாக்கினார்கள். இன்னும் பாவ இருளில் இருந்தும் சாவின் பிடியிலிருந்தும் விடுவிக்க இயேசு இறந்து உயிர்த்த இந்த இரவு இலட்சிய கனவுகளுக்கு சாவில்லை என்று உணர்த்துகிறது. உரிமைகளும் சுதந்திரங்களும் உயிர்பெற்று எழும் நேரம் வந்துவிட்டது. சாவே உன் கொடுக்கு எங்கே என்று வெற்றி வேந்தனாய் உயிர்த்த எம்பெருமான் இயேசுவின் இலட்சியம் நிறைவேறியது போல நாமும் நமது இலட்சியத்தை அடிப்படையாகக்கொண்டு சாவிலிருந்து வாழ்வுக்கும், அநீதியிலிருந்து உண்மைக்கும், பொய்மையிலிருந்து மெய்மைக்கும் அழைத்துச் செல்ல இயேசு உயிர்த்தார், நாமும் உயிர் பெறுவோம். இதில் முழுமையாகப் பங்கெடுத்து இறைவன் இயேசுவின் உயிர்ப்பில் புதுவாழ்வைத் தொடங்குவோம்.
முதல் வாசகம்
கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.
இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43
அப்போது பேதுரு பேசத் தொடங்கி, திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்" என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்
திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என்று
இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி
16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;
ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; -பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி
இரண்டாம் வாசகம் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! 1 கொரி 5:7b-8b
அல்லேலூயா, அல்லேலூயா ! ”நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகவே நாம் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” அல்லேலூயா
அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9
வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிரளிக்கும் உடனிருப்பே எம் இறைவா! எம் தாய் திருச்சபையை உம் கையில் அர்ப்பணிக்கிறோம். முழுவிடுதலையை நோக்கி பயணமாகும் திருச்சபை புத்துயிர் பெற்ற புதிய எருசலேம் திருநகராக திகழ்ந்து உலகிற்கு ஒளியாய் திகழவும். திருச்சபை வழிகாட்டிகள் அனைவரும் உம் திருவுளத்தின்படி அன்பையும், நீதியையும் சமாதானத்தையும் இப்புவியில் பரப்பிட எங்களை வழிநடத்த எம் தலைவர்களுக்கு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உலகின் பேரொளியே இறைவா! சாவை வென்று வெற்றி வீரராய் நீர் பவனி வந்ததை போன்று, நாங்களும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கவும், சோதனைகளைக் கண்டு கண்ணீர் வடிக்காமல் அவற்றைத் துணிவோடு போராடி வெற்றிகொள்ளவும் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உலகின் ஒளியே இறைவா! பாஸ்கா என்றாலே கடத்தல் என்பதை உணர்ந்து, எங்களது பழைய பாவ இயல்புகளில் இருந்து கடந்து உம் அன்பின் சிறகுகளுக்குள் தஞ்சம் அடையவும், நம்பிக்கை அன்பு, அருள் போன்ற பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்ப பெற்று வாழ்ந்திடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உலகின் மீட்பரே எம் இறைவா! உயிர்ப்பின் பாஸ்கா பலியை கொண்டாடும் உம் பிள்ளைகள் எங்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உமது உயிர்ப்பின் ஒளியால் வளமான எதிர்காலத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்று வாழ்வில் வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஞானத்தின் ஊற்றே இறைவா! உலகெங்கும் மனித மாண்புக்கு எதிரான அநீதியான அடக்குமுறைகள் அகற்றப்படவும், எல்லா மனிதர்களும் எவ்வித பாகுபாடுமின்றி மதிக்கப்படவும், அனைவரும் முழுமையான மகிழ்ச்சியைப் பெற்றிடவும் ஆட்சியாளர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே! நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு மகதலா மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார்'' (யோவான் 20:15)
மரியா மகதலா யார்? இக்கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டில் மகதலா மரியா மனம் திரும்பிய ஒரு பாவியாகச் சித்தரிக்கப்பட்டார். முதலில் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இயேசுவைச் சந்தித்ததிலிருந்து அவர் மனம் மாறி, கடின தபசு மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தம் பாவத்திற்காகத் தவம் செய்ததாகவும் வரலாறுகள் எழுந்தன. ''ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியா'' இயேசுவின் சீடராக மாறினார் என லூக்கா நற்செய்தியில் வருகின்ற குறிப்பின் அடிப்படையில் (காண்க: லூக் 8:1-3), மரியா பெரிய பாவியாக இருந்தவர் என முடிவுசெய்தனர் சிலர். ஆனால் நோய்களுக்குக் காரணம் தீய ஆவிகளே என்னும் நம்பிக்கை நிலவிய அக்காலத்தில் மரியாவை இயேசு ஒரு நோயிலிருந்து குணப்படுத்தியிருப்பார் என முடிவுசெய்தலே சரி. பெத்தானியாவில் இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசிய மரியா கதையும் (யோவா 12:1-8), சீமோன் என்பவரில் இல்லத்தில் இயேசுவின் தலைமேல் எண்ணைய் பூசிய பெண் கதையும் (மாற் 14:3-9), அப்பெண் ''பாவியாக'' இருந்தார் என்ற குறிப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரே கதையாக மாற்றம் பெற்றன. இவ்வாறு மகதலா மரியா பற்றிய கதை எழுந்தது.
ஆனால் மகதலா மரியாவின் உண்மை வரலாறு இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைந்து பிணைந்ததாகும். கிறிஸ்தவ சமய நம்பிக்கைக்கு மையமாக இருப்பது இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையாகும். மகதலா மரியாதான் உயிர்த்தெழுந்த இயேசுவை முதல்முறையாகக் கண்டவர். அவரிடம் இயேசு ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். அதாவது மரியா சென்று, இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, அவர் உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவிக்க வேண்டும் (காண்க: யோவா 20:17-18). உண்மையிலேயே ''திருத்தூதர்களுக்குத் தூது அறிவிக்க அனுப்பப்பட்டவர்'' மரியா ஆனார். நான்கு நற்செய்தி நூல்களிலும் இச்செய்தி குறிக்கப்பட்டிருப்பதை நாம் கருதலாம் (காண்க: யோவா 20:1-18; மாற் 16:9-11; மத் 28:1-7; லூக் 24:1-12). இயேசு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக நம்மிடையே தங்கியிருக்கிறார் என்னும் உண்மையை உலகெங்கும் பறைசாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மிடையே உறைகிறார் எனவும், உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவி நம்மை வழிநடத்துகிறார் எனவும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்; அந்த நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். இப்பொறுப்பை ஆற்றுவதில் மகதலா மரியா நமக்குச் சிறந்த முன் உதாரணம் ஆகிறார்.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்தில் உறைந்து எங்களை வழிநடத்துகின்ற இயேசுவின் ஆவியை நாங்கள் அனுபவித்து வாழ அருள்தாரும்.
|