யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-03-19

(இன்றைய வாசகங்கள்: சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 16:1,6-7,10-13,பதிலுரைப்பாடல்: 23: 1-3a. 3b-4. 5. 6,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:8-14,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-41)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஒளிக்குரியவர்களே, உலகின் ஒளியாம் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். அதிசயங்கள் செய்யும் ஆண்டவரைப் பற்றிய அகப்பார்வை பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நமக்கு ஒரு புதிய பார்வையைத் தந்தவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிறவியில் இருந்தே பார்வையற்ற ஒருவரை அவர் குணப்படுத்தும் நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. கண்ணால் செய்யப்படும் பாவங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இயேசு நமக்கு படிப்பிக்கிறார். தீர்ப்பளிக்கும் ஆற்றல் கொண்ட தம் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் ஆண்டவர் அழைக்கிறார். பாவ இருளில் இருந்து விலகி, கிறிஸ்துவின் ஒளியில் பங்குபெற்று வாழும் வரத்துக்காக, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்:
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம். 16:1,6-7,10-13

அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார். ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ‘‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். ‘‘இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, ‘‘உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, ‘‘இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், ‘‘ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை!
பதிலுரைப்பாடல்: 23: 1-3a. 3b-4. 5. 6

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; - பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

இறந்தவனே, உயிர்பெற்றெழு: கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:8-14

சகோதர சகோதரிகளே! ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மைநிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. ஆதலால், "தூங்குகிறவனே, விழித்தெழு: இறந்தவனே, உயிர்பெற்றெழு: கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார் " என்று கூறப்பட்டுள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 8:12b
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-41

அக்காலத்தில் இயேசு சென்று கொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?'' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட் டார்கள். அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண் டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி'' என்றார். இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்க ளில் பூசி, "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்'' என்றார். சிலோவாம் என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள். அவரும் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், "இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல் லவா?'' என்று பேசிக்கொண்டனர். சிலர், "அவரே'' என்றனர்; வேறு சிலர், "அவரல்ல; அவ ரைப்போல் இவரும் இருக்கிறார்'' என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், "நான்தான் அவன்'' என்றார். அவர்கள், "உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?'' என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, 'சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது'' என்றார். "அவர் எங்கே?'' என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர்," எனக்குத் தெரியாது'' என்றார். முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, "எப்படிப் பார்வை பெற்றாய்?'' என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், "இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது'' என் றார். பரிசேயருள் சிலர். "ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிட மிருந்து வந்திருக்க முடியாது'' என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், "பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?'' எனக் கேட்ட னர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம்", உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?'' என்று மீண்டும் கேட்டனர். "அவர் ஓர் இறைவாக்கினர்'' என்றார் பார்வை பெற்றவர். அவர் பார்வையற்றி ருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. "பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங் கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?'' என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, "இவன் எங்களுடைய மகன் தான். இவன் பிறவியிலேயே பார்வையற்றவன்தான். ஆனால் இப்போது எப்படி அவனுக் குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்க ளுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன்தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்'' என்றனர். யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்க ளிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், "அவன் வயது வந்தவன்தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றனர். பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், "உண்மையைச் சொல்லி கட வுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்'' என்றனர். பார்வை பெற்றவர் மறுமொழியாக, "அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரி யாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்: நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்'' என்றார். அவர்கள் அவரிடம், "அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, "ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர் களோ?'' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, "நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது'' என்றார்கள். அதற்கு அவர், "இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்ப தில்லை; இறைப்பற்று உடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, "பிறப்பி லிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?'' என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர். யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, "மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று கேட்டார். அவர் மறுமொழியாக, "ஐயா, அவர் யார்? சொல்லும். அப் போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்'' என்றார். அவர், "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்'' என்று கூறி அவரை வணங்கினார். அப்போது இயேசு, "தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வை யுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, "நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கேட்டனர். இயேசு அவர்க ளிடம், "நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் 'எங்களுக்குக் கண் தெரிகிறது' என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக் கிறீர்கள்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒளியாய் இருப்பவரே இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது வழிகாட்டும் ஒளியில் பயணிக்க அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

பார்வை அளிப்பவரே இறைவா,

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உமது ஒளியில் நடந்து, மக்களின் துன்பங்களைப் போக்க ஆர்வத்துடன் உழைக்கும் மனம் தந்திடுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

சுகம் கொடுப்பவரே இறைவா,

உடல், உள்ள, ஆன்மீக பார்வையிழந்து தவிக்கும் மக்கள் அனைவரையும் குணப்படுத்தி, உமது ஒளியால் இந்த உலகத்தின் முகத்தைப் புதுப்பிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!

பிறருக்கு நன்மை செய்பவர்களை மனமுவந்து பாராட்டவும், ஏற்றுக்கொள்ளவும், குறை கூறுகின்ற தெளிவற்ற பார்வை எம்மில் மாறிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!

இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா!

சமாரியப் பெண் உம்மை மீட்பர், நிலைவாழ்வுத் தரும் ஊற்று என்பதைக் கண்டு கொண்டு மற்றவர்களுக்கும் உம்மை அறிவித்தது போல நாங்களும் உமது இரக்கத்தையும், அன்பையும் இத்தவக்காலத்தில் உய்த்துணர்ந்து, உம் சீடர்கள் என்ற உணர்வைப் பெற்றுச் செபம், தவம், தர்மம் ஆகியவற்றின் மூலம் இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்பட வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...


இன்றைய சிந்தனை

"எங்களுக்குக் கண் தெரிகிறது.. .. நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்"

கண் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற கண்ணில் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி பட்டு பிரதிபலிக்க வேண்டும். இயேசு என்னும் ஒளி, கண்ணின் ஒளியாகவும் பார்க்கும் பொருளின் ஒளியாகவும் இருக்கவேண்டும்.அப்பொழுது, பார்க்கும் பொருளின் உண்மைப் பொருளை உணர முடியும். அந்த பரிசேயர்களுக்கு கண் இருந்தது. கண்ணில் ஒளி இருந்தது. ஆனால் இயேசு என்னும் உன்னத ஒளி அவர்களில் இல்லை.எனவேதான், பார்த்தார்கள். ஆனால் தவறாகப் பார்த்தார்கள். பார்வையற்றிருந்த ஒருவர் இன்று பார்வையோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளம் பார்வை அவர்களுக்கு இல்லை. "உங்கள் மகன் இவன்தானா?" என்று கேட்கும் அளவுக்கு அவர்களின் பார்வை தடை பெற்றிருந்தது. பாவத்தில் இருக்கும் மனிதனின் பார்வையும் தடைபடுகிறது. தீய சிந்தனை, தீய செயல்பாடுகள் உள்ள மனிதனின் பார்வை மங்கிவிடுகிறது. இதயம் சுருங்கி, உண்மையையும் எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் அகக்கண் புறையுற்று, பார்வையைப் பாதித்துவிடுகிறது. பார்வைக்கும் பாவத்திற்கும் நெருக்கம் அதிகம். புனித பார்வையில் சரியானதை, உண்மையை காண்போம். அங்கு கடவுளின் மாட்சியைக் காணலாம். கண்டு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.