யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை
2023-02-07




முதல் வாசகம்

கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார்.
தொடக்கநூலிலிருந்து வாசகம் 1:20-2:4

தொடக்கத்தில் கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லா விதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் உமது பெயர் உல்கெங்கும் மேன்மையாய் விளங்குகிறது
திருப்பாடல்கள் 8:3-8

3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திபா 119:4a,36a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7:1-13

ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார். மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது ‘கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, 'உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?' என்று கேட்டனர்'' (மாற்கு 7:5)

கிருமிகள் வழியாக நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்பது இப்போது பரவலான வழக்கமாக இருக்கிறது. இது நல்ல வழக்கம்தான். அதுபோல, உணவருந்துமுன் கைகளைக் கழுவ வேண்டும் என்பதும் சரியாகத்தான் படுகிறது. ஆனாலும் சடங்கு சம்பிரதாயமாகக் கை அலம்புகின்ற பழக்கம் யூதர்களிடையே நிலவியது. இது பற்றிய சட்ட திட்டங்கள் ''மூதாதையர் மரபு'' என்னும் தொகுப்பாக முதலில் வாய்மொழி முறையிலும் பின்னர் ''மிஷ்னா'' என்னும் எழுத்துமுறையிலும் வடிவம் பெற்றன. வழிபாட்டுச் சடங்குகளை நிறைவேற்றும்போது தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக யூத குருக்கள் கை கழுவினர். பிற இனத்தாரோடு உறவுகள் வளரவே, கை கழுவும் பழக்கம் குருக்களல்லாத பொது மக்களிடையேயும் பரவியது. சட்டத்தைக் காக்கும் வேலியாக உருவான இப்பழக்கம் படிப்படியாக ஒரு தடுப்புச் சுவர் போல ஆயிற்று. அதாவது, மக்களை ஒருவர் ஒருவரிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரிக்கின்ற தடையாக மாறிற்று. இத்தகைய தடுப்புச் சுவர்களை இயேசு தகர்த்தெறிய வந்தார். கை கழுவவதற்கு எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துவது, கைகளைக் கழுவும்போது அவற்றை எப்படி விரிப்பது, எத்தனை தடவை கழுவுவது போன்ற அதிநுணுக்கமான கேள்விகள் எழுப்பப்பட்டன. உரோமை ஆட்சியாளர்களால் சிறைப்படுத்தப்பட்ட யூத குரு பற்றி ஒரு கதை உண்டு. குடிப்பதற்கென்று அவருக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அத்தண்ணீரைக் குடித்துத் தாகம் தீர்ப்பதைவிட சடங்குமுறையான கை அலம்பலுக்கென்றே தண்ணீரை எல்லாம் பயன்படுத்திவிட்டதால் சாவும் நிலைக்கு வந்துவிட்டாராம். அந்த அளவு சடங்குமுறை ஒழுங்குகள் மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டன.

தண்ணீரினால் கழுவிப் பெறுகின்ற வெளித்தூய்மையை விட உள் தூய்மையே முதன்மையானது என இயேசு கற்பிக்கிறார். தேவையற்ற சுமைகளை மக்கள் மீது ஏற்றிய சமயத் தலைவர்களை இயேசு கடிந்துகொள்கிறார். தூய்மை என்பது உள்ளத்திலிருந்து எழ வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுளுக்கு நம் உள்ளத்தை நாம் திறப்பதே தூய்மை அடைய வழியே தவிர வெளிச் சடங்குகளால் வாழ்வில் தூய்மை துலங்கிவிடாது. அதுபோலவே தீட்டு என்பது மனித உள்ளத்திலிருந்து பிறக்கின்ற அழுக்கு. அத்தகைய அழுக்குகளை இயேசு பட்டியலிடுகிறார்: ''மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன'' (மாற் 7:21-22). இத்தகைய தீட்டுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும் தூய்மை வாழ்வு நடத்தவும் நாம் விரும்பினால் நாம் ''உதட்டளவில் கடவுளைப் போற்றாமல் உள்ளத்தளவில் அவரை அணுகிச் செல்ல வேண்டும்'' (காண்க: மாற் 7:6). கடவுளின் வார்த்தையை நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் உருவாகிட எங்களையே உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.