யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






கிறீஸ்துபிறப்புக்காலம்
2022-12-30

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம்




முதல் வாசகம்

ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3:2-7, 12-14

பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்; பிள்ளைகள்மீது அன்னையர்க்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டிவைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்; அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்; ஆண்ட வருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள். குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு; அவரது வாழ்நாளெல்லாம் அவரது உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கை.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-21

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கு இசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-15,19-23

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்'' என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு, அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “ `நசரேயன்' என அழைக்கப்படுவார்'' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

திருக்குடும்பம்

இயேசு தம் தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார். அதாவது, தந்தையின் விருப்பப்படி நடப்பதே இயேசுவின் வாழ்க்கை முறையாக இருந்தது. ஏனெனில் அவர் தந்தையோடு எந்நாளும் இணைந்திருந்தார். இந்த இயேசு தம் பெற்றோராகிய யோசேப்பு, மரியா ஆகிய இருவருக்கும் கூட ''பணிந்திருந்தார்'' என்பதன் பொருள் என்ன? முதன்முதலில் இங்கே நாம் காண்பது இயேசுவின் மனிதப் பண்பு. அவர் கடவுளின் மகனாக இருந்த போதிலும் மனிதருள் ஒருவராக மாறினார்; மனிதப் பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார். எனவே இயேசு தம் தாய் மரியாவுக்கும், வளர்ப்புத் தந்தை யோசேப்புக்கும் பணிந்திருந்தார். பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை இயேசுவின் வாழ்க்கை முறையாகவும் இருந்தது. பழைய ஏற்பாட்டு ஆன்மிகம் இயேசுவின் ஆன்மிகமாகத் துலங்கியது. பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்னும் பழைய ஏற்பாட்டுக் கட்டளையை இயேசுவும் கடைப்பிடித்தார் (விப 20:12 - ''உன் தந்தையையும் தாயையும் மதித்து நட'').

பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்திருக்க வேண்டும் என்னும் கட்டளை இரு வேறு விதங்களில் தவறாக விளக்கப்பட்டு வந்துள்ளது. முதலில், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை மேற்கோள் காட்டிச் சிலர் குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துகின்ற போக்கு ஆங்காங்கே உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. ஏனென்றால், மனிதர் பெரியவராயினும் சரி, சிறியவராயினும் சரி, அவர்களுக்குக் கடவுளே வழங்குகின்ற மனித மாண்பு உண்டு. அதை யாரும் அழித்துவிடவோ எடுத்துவிடவோ இயலாது. சிறுவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவற்றை யாரும் மீறலாகாது. இரண்டாவது, பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் காட்ட வேண்டிய கீழ்ப்படிதல் ஒரு நாளும் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக அமையலாது. இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகளில் ஒன்று அவர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், தம் சொந்த விருப்பப்படி நடக்கலாமே என்பது (மத் 4:1-11). இயேசு அச்சோதனைக்கு இடம் கொடுக்கவில்லை. கடவுளுக்கு மட்டுமே நம் உள்ளார்ந்த பணிதலும் கீழ்ப்படிதலும் தெரிவிக்கப்பட வேண்டும். மனிதர் மனிதர் பிற மனிதர்மீது கொண்டிருக்கின்ற அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு எதிராக அயைலாகாது. மாறாக, எல்லா மனிதரும் கடவுளின் விருப்பம் யாதெனக் கண்டு உணர்ந்து அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயேசு தம் விண்ணகத் தந்தைக்குப் பணிந்து வாழ்ந்தர். தம் பெற்றோருக்கும் அவர் பணிந்தார். இவ்வாறு இயேசு நமக்கு ஒரு முன்மாதிரிகை தந்துள்ளார்.

மன்றாட்டு:

இறைவா, எம் வாழ்க்கைப் பயணத்தில் எங்களோடு இருந்து வழிநடத்தியருளும்.