யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






திருவருகைக்காலம் 4வது வாரம் புதன்கிழமை
2022-12-21




முதல் வாசகம்

இதோ, மலைகள்மேல் தாவி என் அன்பர் வருகின்றார்.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.''பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.
திருப்பாடல் 33: 2-3. 11-12. 20-21

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்'' (லூக்கா 1:39)

தான் கருத்தரித்த குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து ஈன்றளிக்கின்ற பேறு பெண்களுக்கு மட்டுமே உரிய அனுபவம். பேறுகால வேதனையும் மகிழ்ச்சியும் என்னவென்பதை மரியாவும் எலிசபெத்தும் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து அறிந்தார்கள். அந்த இரு பெண்களின் வாழ்விலும் கடவுளின் அருள்செயல் தெளிவாக வெளிப்பட்டது. என்றாலும் அவர்கள் குழந்தைப் பேறு அடைந்ததில் வேறுபாடுகளும் உண்டு. எலிசபெத்து வயதில் முதிர்ந்தவர்; குழந்தை பெற இயலாதவர். குழந்தைப் பேறு தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்றிருந்த அவருக்குக் குழந்தை பிறக்கிறது கடவுளின் அருள்செயலால். ஆனால் மரியாவோ இளம் வயதுக் கன்னிப் பெண். உரிய காலத்தில் தமக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என அவர் நினைத்திருப்பார். ஆனால் கணவனோடு கூடி வாழும் முன்னரே அவருக்குக் குழந்தைப் பேறு கிடைக்கிறது கடவுளின் அருள்செயலால். மரியாவின் வாழ்வில் கடவுள் வல்லமையோடு செயல்பட்டார் என்பதற்குச் சான்று முதிர்ந்த வயதில் எலிசபெத்து குழந்தைப் பேறு பெற்றதாகும் (காண்க: லூக் 1:36). எலிசபெத்து மரியாவின் வயிற்றில் கருவாக இருந்த குழந்தை ''ஆசி பெற்றது'' எனப் போற்றுகிறார்; மரியாவை ''என் ஆண்டவரின் தாய்'' என வாழ்த்துகிறார் (காண்க: லூக் 1:42-43). அதுபோலவே, எலிசபெத்துக்கு மகனாகப் பிறந்த திருமுழுக்கு யோவான் மரியாவுக்கு மகனாகப் பிறந்த இயேசுவைப் பார்த்து, ''என்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார்'' எனச் சான்று பகர்வார் (காண்க: லூக் 3:16).

மரியா எலிசபெத்தைத் தேடிச் சென்றது எதற்காக? எலிசபெத்தின் பேறு காலத்தில் அவரோடு கூட இருந்து அவருக்கு உதவி செய்வதற்காகவே மரியா சென்றிருக்கலாம். அதே நேரத்தில் மரியாவுக்கும் எலிசபெத்தின் உதவி தேவைப்பட்டது. திருமண உறவில் புகுமுன்னரே கருத்தரித்திருந்த மரியா எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை எனவும், அவருடைய வயிற்றில் வளர்ந்துவருகின்ற கரு தூய ஆவியின் வல்லமையால் ஏற்பட்டதே என அவருக்கு உறுதியளிக்கவும், இரு பெண்களும் இணைந்து கடவுளின் அருள்செயலை வியந்து போற்றிடவும் மரியா-எலிசபெத்து சந்திப்பு தேவைப்பட்டது. நம் வாழ்விலும் நாம் கடவுளின் அருள்செயலை உணர்ந்துகொள்ள நம்மை அடுத்திருப்போர் பல சமயங்களில் துணை செய்கின்றனர். நம் கண்களுக்கு மறைந்திருப்பது பிறர் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகின்ற நேரங்கள் உண்டு. கடவுள் நம் வாழ்வில் அதிசயங்களை நிகழ்த்துகிறார் என்பதை நாம் சில வேளைகளில் நம்மைப் பார்த்துப் பிறர் கூறுவதிலிருந்தும் அறிந்துகொள்கிறோம். அதுவும் கடவுளின் செயலே.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வில் அரும் செயல் புரிகின்ற உம்மைக் கண்டுகொள்ள எங்கள் கண்களைத் திறந்தருளும்.