யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2022-12-01




முதல் வாசகம்

மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1-6

நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர். ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.
திருப்பாடல் 118: 1,8-9. 19-21. 25-27

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21,24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: �என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்' என்றார்'' (மத்தேயு 7:24)

இயேசு வழங்கிய ''மலைப் பொழிவின்'' இறுதிச் சொற்கள் இருவிதமான வீடுகள் பற்றி விவரிக்கின்றன. பாறைமேல் கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்கும்; மணல்மீது கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்காது. இந்த இரு வகை வீடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இயேசு வேறு உருவகங்கள் வழியாகவும் எடுத்துரைத்தார். இடுக்கமான வாயில், அகன்ற வாயில் (மத் 7:12-14); நல்ல மரம், கெட்ட மரம் (மத் 7:17); ஆண்டவரே ஆண்டவரே என்போர், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவோர் (மத் 7:21) என்னும் வெவ்வேறு உருவகங்களும் குறித்து நிற்பது ஒரே அடிப்படை உண்மைதான். அதாவது, இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் உறுதியான உள்ளத்தோடு, முழுமையான ஈடுபாட்டோடு அவரைப் பின்செல்ல வேண்டும். மேலெழுந்த வாரியான போக்கு இயேசுவின் சீடருக்கு ஒவ்வாத ஒன்று. பாறை என்னும் உருவகம் பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கு உருவகமாக வருகிறது (காண்க: இச 32:4; 18:31; திபா 18:2; 28:1; எசா 17:10). மலைப் பொழிவில் ''பாறைமீது வீடுகட்டுவது'' இயேசு என்னும் உறுதியான அடித்தளத்தில் நம் வாழ்க்கை ஊன்றியிருப்பதைக் குறிக்கிறது. பின்னர் இயேசு ''பாறை'' என பேதுருவைக் குறிப்பிடுவார் (காண்க: மத் 16:18).

நம் வாழ்க்கை இயேசு என்னும் பாறையில் கட்டப்பட வேண்டும் என்றால் பொருள் என்ன? முதன்முதலில், இயேசு நம் வாழ்க்கை முறையை நமக்கு நிர்ணயித்துத் தருகிறார் என்பதை நாம் நம்பிக்கையோடு ஏற்க வேண்டும். அவர் தம் சொற்களாலும் செயல்களாலும் நமக்குக் கற்பித்ததை நாம் உளமார ஏற்று, முழுமையாகக் கடைப்பிடிக்கும்போது நம் வாழ்க்கை அவரில் வேரூயஅp;ன்றியதாக அமையும். இயேசுவின் போதனையோடு அவருடைய உடனிருப்பும் நமக்கு உறுதியான அடித்தளமாகிறது. துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசு வரலாற்றில் வாழ்ந்த பிற மனிதர்களைப் போல வெறும் ''நினைவு'' என மங்கலாக மட்டுமே நமக்குத் தெரிவதில்லை. மாறாக, இயேசு நம்மோடு எந்நாளும் இருப்பதாக வாக்களித்துள்ளார். அவருடைய ஆவியின் துணை நமக்கு உள்ளது. எனவே, நம் வாழ்க்கையானது இயேசுவின் மன நிலையைப் பிரதிபலிக்கின்ற போது பாறைமேல் கட்டப்பட்ட வீடு போல நிலைத்து நிற்கும் பண்பு கொண்டிருக்கும். ஆக, இயேசுவின் போதனை, செயல்பாடு, உடனிருப்பு ஆகியவை நம் வாழ்க்கைக்கு அடித்தளம் ஆகும்போது நாம் உறுதியான உள்ளத்தோடு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம். ''ஆண்டவரே, ஆண்டவரே'' என்று வெளிப்படுகின்ற வெற்றுச் சொற்களாக இல்லாமல், கடவுளின் திருவுளத்தை நடைமுறையில் செயல்படுத்துகின்ற விதத்தில் நமது வாழ்க்கை அமையும். இந்த உறுதியான அடித்தளம் இல்லாதபோது நம் வாழ்க்கை மணல்மீது கட்டப்பட்ட வீடுபோல எளிதில் விழுந்துவிடும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்ட வீடாக எங்கள் வாழ்க்கை அமைந்திட அருள்தாரும்.