யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் செவ்வாய்க்கிழமை
2022-11-29

புனித பிரான்சிஸ் சவேரியார்




முதல் வாசகம்

ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் `புகழ்' என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். `நேர்மையின் தேவதாருகள்' என்றும் `தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை' என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
திருப்பாடல் 117: 1. 2

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

இரண்டாம் வாசகம்

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப் பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மன நிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அப்பொழுது பெருந்திரளான மக்கள் இயேசுவிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்'' (மத்தேயு 15:30)

இயேசு மகிழ்ச்சி தரும் நல்ல செய்தியை மக்களுக்கு அறிவித்தார். அது மனிதர்களுக்கு நலம் கொணர்ந்த செய்தி. மனிதரின் வாழ்வில் ஏற்படுகின்ற எல்லா இன்னல்களிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கே அச்செய்தி வழங்கப்பட்டது. இவ்வாறு மனிதர் பெறுகின்ற விடுதலையை விவிலியம் பல சொற்களால் விவரிக்கிறது. மனிதரின் உடல் சார்ந்த ஊனங்கள், அவர்களது உள்ளத்தைப் பாதிக்கின்ற ஊனங்கள், அவர்களுக்கும் கடவுளுக்கும் பிற மனிதருக்கும் இடையே நிலவ வேண்டிய நல்லுறவைக் குலைக்கின்ற ஊனங்கள் ஆகிய அனைத்துமே மனிதரைச் சிறுமைப்படுத்துகின்றன. இயேசு கொணர்ந்த விடுதலை மனிதருக்கு முழு நலன் வழங்கவே நமக்கு அருளப்படுகிறது. ''பெருந்திரளான மக்கள் இயேசுவிடம் வருகின்றனர்'' (மத் 15:30). இயேசு வழியாகக் கடவுளே தங்களோடு பேசுகிறார் என்பதை மக்கள் உணர்ந்ததால் அப்போதனையைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குழுமி நிற்கிறார்கள். அவர்கள் இயேசுவிடமிருந்து எதிர்பார்த்தது என்ன? இயேசு நினைத்தால் தங்களுக்கு உடல், உள, ஆன்ம நலன் நல்க முடியும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

இன்று இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற நாம் அக்காலத்தில் இயேசுவின் வல்லமையால் நலம் பெற்ற மனிதர்களைப் போல நலம் பெற முடியுமா? கடவுளின் வல்லமையை நம் வாழ்வில் உணர முடியுமா? நம் இதயமும் ஆன்மாவும் கடவுளின் அருளைப் பெற திறந்திருக்கும்போது நாம் கடவுளின் வல்லமையை இன்றும் உணர முடியும். எல்லா மக்களின் முன்னிலையிலும் நிகழ்கின்ற அதிசய செயல்கள் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தை மாற்றி, அதை இறையன்பிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்துகின்ற அனுபவம் நமதாக மாறும். எல்லாரும் கண்டு வியக்கின்ற விதத்தில் உடல் சார்ந்த குணம் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தில் நிலவுகின்ற தீமைகளை அகற்றி நாம் நிலைவாழ்வில் பங்கேற்க இறைவன் நம்மில் ஆற்றுகின்ற செயல்களைக் கண்டு நாம் உண்மையிலேயே வியப்படைய வேண்டும். நம் அகக் கண்கள் பார்வையிழந்து இருக்கும் போது நமக்குப் புதுப் பார்வை வழங்குகின்ற கடவுளின் வல்லமையை நாம் வியந்து போற்ற வேண்டும். ஊனமுற்றோரை நாம் இயேசுவிடம் கொண்டு சென்று அவர்கள் நலமடைய வழி வகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு முழு நலன் வழங்குபவர் நீரே என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.