யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் வியாழக்கிழமை
2022-11-10




முதல் வாசகம்

ஒனேசிமுவை அன்புமிக்க சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்.
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7-20

அன்பிற்குரியவரே, உம் அன்பைக் குறித்து நான் பெருமகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் உள்ளம் புத்துயிர் பெற்றுள்ளது. எனவே, நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்தவ உறவில், எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும், அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்யவேண்டும் என்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம் பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்கு உரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்கு உரியவனாகிறான்! எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். `நானே அதற்கு ஈடு செய்வேன்' எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டோர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 146: 7. 8-9-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9 அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, ``இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது'' என்றார். பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: ``ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், `இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!' என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார். ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இறையாட்சி உங்கள் நடுவேயே !

மன மகிழ்ச்சியை வெளியே தேட முடியாது. அது அகத்தின் உள்ளேதான் இருக்கிறது. அதுபோல, இறையாட்சியும் மானிட வாழ்வுக்கு வெளியே இல்லை. நமது நடுவிலேயே இருக்கிறது என்னும் ஆண்டவரி;ன அமுத மொழிகள் இன்று நமக்கு வாழ்வு தரும் வார்த்தைகளாக வழங்கப்படுகின்றன. இன்று பலரும் தங்கள் தேடுதலை வெளியே வைத்திருக்கிறார்கள். சிலர் அற்புதங்களைத் தேடி நற்செய்திக் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் புதமைகளைத் தேடி திருத்தலங்களுக்குச் செல்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியைத் தேடித் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், தங்களுக்குள்ளேயே தேடினால், அமைதியும், நீதியும், மகிழ்ச்சியும் தங்களின் வாழ்விலும், பணியிலுமே அடங்கியிருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம். இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது என்கிறார் ஆண்டவர். இறையாட்சியி;;ன் அடையாளங்களைக் கண்டுகொள்ளலாம். எங்கெல்லாம் சமத்துவம் இருக்கிறதோ, எங்கெல்லாம் மனிதர்கள் மன்னிப்பை அனுபவிக்கிறார்களோ, எங்கெல்லாம் பொருள்களைவிட மனிதர்கள் பெரிதாக மதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் இறைவனின் விழுமிங்கள் போற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் இறையாட்சி புலர்ந்துவிட்டது என்றுதானே பொருள். எனவே, இறையாட்சியை நாம் வெளியே தேடவும் வேண்டாம். இறையாட்சிக்குரிய பண்புகளைப் பிறரிடமும் எதிர்பார்க்க வேண்டாம். நமது வாழ்விலேயே இறையாட்சிப் பண்புகளை நாம் கடைப்பிடித்து, நம்மைக் காண்பவர்கள் இறையாட்சி இங்கேயே இருக்கிறது என்று கண்டுகொள்ளும் வண்ணம் வாழ்வோமாக.

மன்றாட்டு:

வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உமது அரசு வருக என்று வேண்டுகிறோம். உமது அரசாட்சியி;ன் கூறுகளை எங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க அருள்தாரும். உமது ஆசிகளை நாங்கள் வெளியே தேடாமல், எங்கள் வாழ்விலும், பணியிலுமே கண்டுகொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.