யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-10-30

(இன்றைய வாசகங்கள்: சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 11: 22 - 12: 2,திருப்பாடல்கள் 145: 1-2. 8-9. 10-11. 13-14,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11 - 2: 2,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் ஒன்றாக இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் வார வழிபாட்டில் பங்கேற்கும் என் அன்பின் சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்கிறேன்.

இழந்த போனதைத் தேடி மீட்கும் இறைமகன் இயேசுவின் பிரசன்னத்தில் நன்றி சொல்லவும், அருள் பெறவும் ஒன்று கூடியுள்ளோம். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார், என்னும் இறையன்பின் ஆழம் நமக்கு வெளிப்படத்தப்படுகின்றது. ஆகையால் நாம் அனைவரும் மனமாற்றம் பெற்று இறைன்புக்குச் சாட்கிகளாய வாழுவோம். இன்று இவ்வுலகில் செல்வந்தர்கள் மட்டுமல்ல, சாமானியர்கள்கூட இறைவனை நாடாது மனம் போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர். "தாம் பாவம் புரிகின்றோம்; அடுத்தவரை துன்புறுத்தி, ஏமாற்றி, தாம் மட்டும் மகிழ்ச்சியோடு வாழ்கின்றோம்' என்ற குற்ற உணர்வின்றி வாழ்கின்றனர். அவ்வாறு இல்லாமல் சக்கேயுவைப் போல மனம் மாறிய சிறுபிள்ளைகளாவோம்! கடவுளிடம் நம்பிக்கை கொள்வோம். இறை இயேசுவின் மீட்பை நாமும் பெறுவோம். வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 11: 22 - 12: 2

ஆண்டவரே, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசி போலவும் நிலத்தின்மீது விழும் காலைப் பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது. நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்; மனிதர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்தும் பாராமல் இருக்கின்றீர். படைப்புகள் அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன. உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிதுசிறிதாய்த் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.
திருப்பாடல்கள் 145: 1-2. 8-9. 10-11. 13-14

1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

13 ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11 - 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக! சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ``சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், ``பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்'' என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, ``ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, ``இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எம் ஆயரே இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தாமாகவே முன் வந்து சக்கேயுவை அழைத்து, அவரோடு விருந்துண்டு, அவரது வாழ்வை மாற்றிய அன்பு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

உம்மைப் போல நாங்களும் தன்முனைப்பு உள்ளவர்களாகச் செயல்பட உமது தூய ஆவியை எங்களுக்கு நிறைவாகத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உதவி செய்பவரே இறைவா,

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சக்கேயுவை நோக்கி, 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்' என்று சொன்னார்'' (லூக்கா 19:9-10)

வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு என்பவர் இயேசுவைச் சந்தித்த நிகழ்ச்சியை லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 19:1-10). அந்த நிகழ்ச்சியோடு லூக்கா ''ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி'' என்னும் பகுதியை நிறைவுக்குக் கொணர்கின்றார் (காண்க: லூக் 15:1-19:10). இருப்பினும், ஏழைகள் பற்றியும் தாழ்த்தப்பட்டோர் பற்றியும் அமைந்துள்ள இப்பகுதியின் இறுதியில் செல்வம் படைத்த ஒருவரின் வரலாற்றையும் லூக்கா இணைத்திருப்பது கருதத்தக்கது. இயேசு வழியாகக் கடவுள் வழங்குகின்ற மீட்பு எல்லா மனிதருக்கும் அவர் அளிக்கின்ற கொடை என்பது இதனால் விளங்குகிறது. இயேசுவைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்த இன்னொரு செல்வர் பற்றிய கதையை லூக்கா ஏற்கெனவே எடுத்துக் கூறியிருந்தார் (லூக் 19:18-23). ஆனால் அந்த மனிதர் தம்முடைய செல்வத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அதையே பற்றிக்கொண்டிருந்தார். சக்கேயு இதற்கு நேர் மாறாகச் செயல்படுகிறார். அதாவது, தமது செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள அவர் முன்வருகிறார் (லூக் 19:8). சக்கேயு யார்? அவர் ''வரிதண்டுவோருக்குத் தலைவர்'' என அறிமுகம் செய்யப்படுகிறார். அக்காலத்தில் வரிதண்டுதல் என்பது எளிதில் செல்வம் சேர்ப்பதற்கு வழியாக அமைந்த ஒரு தொழில். பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்திய உரோமை ஆளுநர்கள் வரிதண்டும் பொறுப்பைக் குத்தகைக்கு விட்டனர். ஆனால் வரிதண்டுவோர் மக்களிடமிருந்து அதிகமாக வரி வசூலித்தனர். எனவே, வரிதண்டுவோர் என்றாலே மக்களால் வெறுக்கப்பட்டனர்.

சக்கேயுவின் கீழ் பலர் வேலை செய்திருக்க வேண்டும். எனவேதான் லூக்கா அவரை ''வரிதண்டுவோருக்குத் தலைவர்'' என அடையாளம் காட்டுகிறார். சக்கேயு நல்ல வசதி படைத்த மனிதர். ஆனால் தான் திரட்டிய செல்வம் மக்களிடமிருந்து அநியாயமாகப் பெறப்பட்டது என்பதை அவர் ஏற்று அதற்காக மனம் வருந்துகிறார். அதே நேரத்தில் மக்களிடமிருந்து ''எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்'' என உறுதியளிக்கிறார். இவ்வாறு மனம் திரும்பிய சக்கேயு கடவுளை நாடி வந்ததை இயேசு காண்கின்றார். ''இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று'' என இயேசு அறிக்கையிடுகிறார். மனிதரின் கடந்த கால வாழ்க்கையில் பல குறைகள் இருந்தாலும், அவர்கள் அக்குறைகளை உணர்ந்ததும் மனம் திரும்பி கடவுளிடம் செல்லும்போது கடவுள் அவர்களை அன்போடு ஏற்றுக்கொள்கிறார். இதற்கு சக்கேயு சிறந்த உதாரணம். ''இழந்துபோனதைத் தேடி மீட்க வந்த'' இயேசு நம்மை இருகரம் விரித்து அழைக்கின்றார். அந்த அழைப்பை மனமுவந்து ஏற்பது நம் பொறுப்பு.

மன்றாட்டு:

இறைவா, எங்களை வரவேற்கக் காத்திருக்கும் உம்மை எந்நாளும் நாடிவர அருள்தாரும்.