யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2022-10-23

(இன்றைய வாசகங்கள்: சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18,திருப்பாடல்கள் 34: 1-2. 16-17. 18,22,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

செபிப்பவர்களே, பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் வேண்டுதல்களை சமர்ப்பிக்கும்போது நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்று இன்றைய திருவழிபாடு நமக்கு கற்பிக்கிறது. நம் பெருமையை நாடாமல், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நாம் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவரைப் போற்றவும், அவரது இரக்கத்தை மன்றாடவும் இயேசு நம்மை அழைக்கிறார். கடவுளிடம் பிறரைப் பற்றி குறை கூறுவதையும் அவர் கண்டிக்கிறார். ஆண்டவர் முன்பு நம் தாழ்நிலையை உணர்ந்தவர்களாய், அவரது இரக்கத்தை அனுபவிக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 12-14, 16-18

ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார். ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும். தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல்கள் 34: 1-2. 16-17. 18,22

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். -பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 16-18

அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: ``இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: `கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பு இருக் கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, `கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார். '' இயேசு, ``பரிசேயர் அல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எம் ஆயரே இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்தவராய், மக்களை மனமாற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே எம் இறைவா!

உக்ரைன் ரஷ்யா போர் விரைவில் முடிவு பெறவும்; அமைதியான சூழல் ஏற்படவும், போரின் பாதிப்புக்கள் விரைவில் சீரடையவும், வன்முறைகள் முற்றுப்பெறவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா!

போரினால் பலவித இழப்புக்களைச் சந்திக்கின்ற மக்களை ஒப்புக்கொடுக்கின்றோம். அன்பான மனிதர்களை, உடல் உறுப்புக்களை, உடமைகளை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, வேலைகளை இன்னும் பலவற்றை இழந்து தவிப்போருக்கு ஆறுதலாகவும்; ஆதரவாகவும் நீரே இருக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா!

கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றபோது சண்டைகளை விடுத்து அமைதிப் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணவும், மக்களின் அமைதியான வாழ்வையும், நலனையும் குறித்து அக்கறை கொள்ளவும், எங்கள் தலைவர்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தாழ்ந்தோரை உயர்த்துகின்ற இயேசுவே,

எங்கள் வாழ்வில் நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்தி வாழும் அருளைத் தாரும். பிறரிடமிருந்து பாராட்டை, முதன்மையை, மதிப்பை நாங்கள் எதிர்பார்க்காமல், பிறருக்கு நாங்கள் வழங்குகின்ற நல்ல மனதை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கை தருபவரே இறைவா,

வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உதவி செய்பவரே இறைவா,

ஏழைகள், கைம்பெண்கள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், வீடிழந்து நிற்போர், கடும் நோயால் தவிப்போர் அனைவருக்கும் உதவி வழங்க வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

தாழ்ச்சியோடு வேண்டுதல் செய்வோம்

இரண்டு மனிதர்கள் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கிறார்கள். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். ஆனால், இரண்டு பேரும் செபித்தார்களா? உண்மையில் யாருடைய செபம், கடவுளால் கேட்கப்பட்டது? யார் உண்மையில் செபித்தார்கள்? என்பதை, நாம் பார்ப்போம். முதலில் பரிசேயர். அவருடைய வார்த்தைகள் நிச்சயமாக செபம் அல்ல, மாறாக, அது தற்புகழ்ச்சி. தன்னைப்பற்றி கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்புகழ்வதில் அதிக சிரத்தை எடுக்கிறார். கடவுளிடத்தில் பேசுவதைக்காட்டிலும், தன்னைப்பற்றி சொல்வதில், அவர் ஆர்வம் காட்டுகிறார். இது உண்மையான செபம் அல்ல. தற்புகழ்ச்சியும், செருக்கும் என்றைக்குமே நமக்கு அழிவைத்தான் தரும். கர்வம் கொண்டவர்கள் நிச்சயம் செபிக்க முடியாது.

வரிதண்டுபவர் தொலைவில் நிற்கிறார். கடவுளிடத்தில் நெருங்கிவர தனது பாவங்கள் தடையாக இருப்பதாக எண்ணுகிறார். அவரிடத்தில் குற்ற உணர்ச்சி காணப்படுகிறது. தன்னை மிகப்பெரிய பாவியாக எண்ணுகிறார். இது தற்புகழ்ச்சிக்கு இடங்கொடாமல், தன்னை ஒறுத்து, கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடு நிற்பதற்கு ஒப்பாக இருக்கிறது. செபம் என்பது நமது நிலையை உணர்வது. கடவுள் முன்னிலையில் நம்மையே தாழ்த்திக்கொள்வது. செபம் என்பது கடவுளின் இரக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மன்றாடுவது. இரக்கமே தேவை இல்லை, என்கிற மனநிலையில் உள்ள ஒருவர், நிச்சயம் செபிக்க முடியாது. தற்புகழ்ச்சியும், மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவதும் நாம் கடவுளோடு பேசுவதற்கு தடையாக இருப்பவை. செபிக்கின்ற மனநிலையை கெடுக்கக்கூடியவை. எனவே, கடவுள் முன்னிலையில் செபிக்கக்கூடிய மனநிலையைப் பெறுவதற்கு, தாழ்ச்சியை நாம் கேட்போம். தாழ்ச்சி மனநிலையோடு செபிப்போம்.

மன்றாட்டு:

வானகத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களது செபமும், வேண்டுதலும் உமது திருமுன் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் எங்கள் வாழ்வும், மனநிலைகளும் அமைய அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.