யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-10-07




முதல் வாசகம்

ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-17

சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல், ``உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது. ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர். திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில், ``திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்!'' என்று எழுதியுள்ளது. சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில், ``நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.'' திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, ``சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்'' என்று எழுதியுள்ளது. ``மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்'' என்று எழுதி உள்ளவாறு, நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும், வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவுமே இவ்வாறு செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல் 111: 1-2. 3-4. 5-6

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, ``பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: ``தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், `நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'' (லூக்கா 11:9)

கேட்டல், தேடல், தட்டுதல் ஆகிய செயல்களில் மனித ஈடுபாடு துலங்குவதைக் காணலாம். அந்த ஈடுபாடு தீவிரமாகும்போது அதன் விளைவாக மனிதர் கேட்டதைப் பெறுவார்கள்; தேடியதைக் கண்டடைவார்கள்; தட்டிய கதவு திறப்பதை உணர்வார்கள். கடவுளை நோக்கி நாம் வேண்டுதல் செய்யும்போது நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோம். எனவேதான் இறைவேண்டலுக்கு ''மன்றாட்டு'' என்னும் பெயரும் உண்டு. என்றாலும் இறைவேண்டலை இக்குறுகிய கண்ணோட்டத்தில் நாம் புரிதல் சரியல்ல. இங்கே நாம் இயேசுவின் முன்மாதிரியைக் கடைப்பிடிக்கலாம். அவர் தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டினார். பல மணி நேரம் இறைவேண்டலில் செலவிட்டார். தந்தையின் விருப்பம் யாதென உணர்ந்து அதைக் கடைப்பிடித்தலே இயேசுவின் வாழ்க்கைத் திட்டமாக இருந்தது. தம்மைப் போலத் தம் சீடரும் இறைவேண்டலில் ஈடுபட வேண்டும் என இயேசு கேட்டார்.

நாம் கேட்டது கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது இறைவேண்டலின் பண்பாக இருத்தலாகாது. நம் உள்ளத்தைக் கடவுளை நோக்கி எழுப்புதலே இறைவேண்டல். கடவுளின் முன்னிலையில் தாழ்ச்சியோடு நம்மை நிறுத்தும்போது அங்கே இறைவேண்டல் நிகழ்கிறது. நம் கவலைகளையும் கலக்கங்களையும் களைந்துவிட்டு, இறைப்பிரசன்னத்தின் அமைதியில் நாம் புகும்போது நம் இறைவேண்டல் அர்த்தமுள்ளதாகும். நம்மைக் கடவுளின் கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டால் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதைச் செயலாக்க நாம் முன்வருவோம். தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, அவருடைய உந்துதலுக்கு நம்மைப் பணிவுடன் கையளித்துச் செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். நம் இதயத்தில் தூய ஆவியின் சக்தியை நாம் உணர்ந்து, கடவுளிடத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்து, அவருடைய பாதுகாப்பில் நம்மைக் கையளிப்பதே உண்மையான இறைவேண்டல், நிறைவான மன்றாட்டு. அப்போது நாம் கேட்பதும் தேடுவதும் கடவுளின் புகழாக இருக்கும்; நாம் கடவுளின் இதயக் கதவுகளைத் தட்டும்போது அவர் நம்மைத் தம் இல்லத்தில் ஏற்று நம்மை அன்பின் அரவணைப்பில் பிணைத்திடுவார்; நாமும் இறையன்பு என்னும் ஆழ்கடலில் மூழ்கித் திளைத்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நோக்கி மன்றாடும்போது எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.