யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் திங்கட்கிழமை
2022-10-03

புனித புறூனோ




முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக நற்செய்தி எனக்குக் கிடைத்தது.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-12

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பொருட்டு அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக! இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது. சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல் 111: 1-2. 7-8. 9,10

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. பல்லவி

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10 அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், ``போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?'' என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது'' என்றார். இயேசு, ``சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்'' என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ``எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ``ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, `இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்'' என்றார். ``கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?'' என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், ``அவருக்கு இரக்கம் காட்டியவரே'' என்றார். இயேசு, ``நீரும் போய் அப்படியே செய்யும்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' (மத்தேயு 21:41)

கடவுளின் திராட்சைத் தோட்டம் பரந்து விரிந்த இப்பாருலகைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தோட்டத்தின் பொறுப்பு மனிதரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தைப் பண்படுத்தி, அதில் தரமான செடிகளை நட்டு, அவற்றிற்கு உரமிட்டு, நீர்ப்பாய்ச்சிக் கண்காணித்து, செழிப்பான விளைச்சலைக் கொணர்கின்ற பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தண்டனைக்கு உள்ளாவர்; ஆனால் பொறுப்பாகச் செயல்படுவோர் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவர். உலகத்தின் பொறுப்பு மனிதரிடம் உள்ளது என்றால் அவ்வுலகத்தை அவர்கள் தங்கள் விருப்பம்போல, மனம்போன போக்கில் சுறண்டலாம் என்று பொருளாகாது. இவ்வுலகத்தின் வளங்கள் எல்லைக்கு உட்பட்டவையே. நிலத்தின் கீழ் உள்ள தாதுப்பொருள்களும், எண்ணெய் வளங்களும் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கும் என நாம் நினைத்தலாகாது. அதுபோலவே, சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்ற நச்சுப் பொருள்களை நாம் உற்பத்திசெய்துகொண்டே இருக்கலாம் என நினைப்பதும் பொறுப்பற்ற சிந்தனையே.

இயற்கையைப் பொறுப்போடு பராமரிக்க வேண்டும் என்பதோடு மனித சமுதாயத்தையும் நாம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பது தெளிவு. மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகள் அன்பு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமே ஒழிய அதிகாரம் அடக்குமுறை போன்ற எதேச்சைப் போக்குக்கு அங்கே இடமில்லை. ''உரிய காலத்தில்'' கனி வழங்கும் பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளதால் அப்பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினால் நாம் திராட்சைத் தோட்ட உரிமையாளராகிய கடவுளின் ஆட்சியில் பங்கேற்கும் அருளைக் கடவுளே நமக்குத் தருவார் (மத் 21:43).

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.