யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் புதன்கிழமை
2022-09-07




முதல் வாசகம்

மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31

சகோதரர் சகோதரிகளே, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேளாய்!
திருப்பாடல் 45: 10-11. 13-14. 15-16

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி

13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். 14 பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். பல்லவி

15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். 16 உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ``ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர். ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்'' (மத்தேயு 1:1)

எபிரேய மக்கள் தங்கள் மூதாதையர் பட்டியலைத் தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். பொதுவாகவே மனிதர் தங்கள் குடும்ப வரலாற்றைப் பற்றி அறிவதில் அக்கறை காட்டுவார்கள். ஆனால் அந்த வரலாறு பல முறையும் எழுத்தில் அமைந்த பதிவுகளாக இருப்பதில்லை. மாறாக, வாய்மொழி வழியாகத் தலைமுறை தலைமுறையாக அந்த வரலாறு பாதுகாக்கப்படும். இஸ்ரயேல் மக்களிடையேயும் இந்த வழக்கம் நிலவியது. தங்கள் மூதாதையர் யார் என்பது பற்றி அவர்கள் பதிவு செய்த குறிப்புகள் பல நூற்றாண்டுகளாக வாய்மொழி வடிவில் இருந்து பின்னர் எழுத்து வடிவம் பெற்றன. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் வரலாற்றை எழுதப் புகுந்த போது இயேசு தாவீதின் வழி வந்தவர் என்றும், ஆபிரகாமின் வழி வந்தவர் என்றும் முதல் வரியிலேயே குறிப்பிடுகிறார். ஏன் தாவீது, ஏன் ஆபிரகாம் என்னும் கேள்வி எழுகிறது. தாவீது என்பவர் இஸ்ரயேல் என்னும் வட நாட்டையும் யூதா என்னும் தென் நாட்டையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய அரசாக மாற்றி ஆட்சி செய்தவர். அவருடைய பெருமை விவிலியத்தில் பல இடங்களில் போற்றப்படுகிறது. ஆனால் தாவீது குற்றம் குறைகள் நிறைந்த மனிதரே. அவருடைய ஆட்சியில் விளங்கிய சிறப்பைவிட அதிகச் சிறப்பைக் கொணர வல்ல ஒருவர் பிறப்பார் என்றும், அவர் தாவீதின் வழி வந்து, கடவுளால் திருப்பொழிவு பெற்றவராக (''மெசியா'') மக்களை நீதி நேர்மையோடு ஆட்சி செய்வார் என்றும் இறைவாக்கினர் முன்னுரைத்தனர். மத்தேயு நற்செய்தியாளர் தம் நூலின் தொடக்கத்திலேயே இயேசு தாவீதின் வழி வந்தவர் என்பதைக் குறிப்பிடுகிறார். தாவீதின் வழி வந்ததால் இயேசு உண்மையான ''மெசியா'' என்பதையும் மத்தேயு குறிப்பாய் உணர்த்துகிறார்.

மேலும், இயேசு ஆபிரகாமின் வழி வந்தவர் என்பதையும் மத்தேயு தெரிவிக்கிறார். ஆபிரகாம் என்பவர் இஸ்ரயேல் மற்றும் யூத குல மக்களுக்குத் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆபிரகாம் தாம் வாழ்ந்துவந்த நாட்டை விட்டு, கடவுள் அவருக்குக் காட்டிய நாட்டுக்குச் சென்றார். கடவுளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, தம் சொந்த மகனாகிய ஈசாக்கைக் கடவுளுக்குப் பலியாக்கிடவும் முன்வந்தார். எனவே, கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கை மிக ஆழமானதாக இருந்தது. மத்தேயு நற்செய்தியில் இயேசு ''ஆபிரகாமின் மகன்'' எனக் குறிக்கப்படுகிறார் (மத் 1:1). இயேசு புதியதொரு மக்கள் குலத்திற்குத் தலைவராக ஏற்படுத்தப்படுகிறார் என்னும் உண்மையை இங்கே காண்கிறோம். மேலும் கடவுள்மீது இயேசு முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருடைய திட்டத்தை இவ்வுலகில் செயல்படுத்துவதே இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. அவர் ஆபிரகாமின் மகன் என்னும் முறையில் நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். தாவீதுக்கும் ஆபிரகாமுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு என்பதிலிருந்து நாம் இயேசுவின் மனிதப் பண்பை அறிகிறோம். கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்து, கடவுளின் மகனாக வரலாற்றில் நம்மிடையே தோன்றிய இயேசு உண்மையிலேயே மனிதராகவும் இருந்தார். மனித வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என நமக்கு வழி காட்டித் தந்தார். அவரை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் உம்மையே முழுமையாக நம்பி வாழ அருள்தாரும்.