யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 7வது வாரம் திங்கட்கிழமை
2022-05-30

புனிதர்கள் மருசலீன் பீட்டர்




முதல் வாசகம்

நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8

அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை நோக்கி, ``நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே'' என்றார்கள். ``அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?'' எனப் பவுல் கேட்க, அவர்கள், ``நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்'' என்றார்கள். அப்பொழுது பவுல், ``யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்'' என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப் பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்
திருப்பாடல் 68: 1-6

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4யஉ கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவிடம், ``இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்'' என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு பதினொரு சீடர்களையும் அணுகி,...'இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று கூறினார்'' (மத்தேயு 28:20)

சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம்

மத்தேயு நற்செய்தியின் முடிவில், இயேசு சீடர்களுக்குத் தோன்றி, அவர்கள் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க வேண்டும் என்னும் கட்டளையைக் கொடுக்கிறார் (மத் 28:16-20). சாவிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களோடு தொடர்ந்து இருப்பதாகவும் வாக்களிக்கிறார் (மத் 28:20). இது மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அங்கே, இயேசு ''இம்மானுவேல்'' என்னும் பெயரால் அறிமுகம் செய்யப்பட்டார். ''இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்'' என மத்தேயு தம் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் (மத் 1:22-23). இயேசு வழியாகக் கடவுள் தம்மை முழுமையாக வெளிப்படுத்தி, அவர் வழியாக நம்மோடு இருக்கிறார் என்னும் உண்மை நமக்கு ஆறுதல் தருகின்றது. இயேசு சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதைச் சீடர் ஏற்றுக்கொண்டாலும் ''சிலர் ஐயமுற்றார்கள்'' (மத் 20:17). கடவுளையும் அவர் நம்மிடையே அனுப்பிய இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்கிறோம் என்றாலும் நம் நம்பிக்கை எப்போதுமே அசையாத உறுதி கொண்டதாக இருக்கும் என்று கூற முடியாது. ''ஐயம்'' என்பதற்கு அங்கே இடம் உண்டு. ஆனால் நாம் நம்பிக்கையை இழக்காமல் நிலைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இயேசு ''உலக முடிவுவரை நம்மோடு இருக்கிறார்'' (காண்க: மத் 28:20).

சீடர்களுக்குத் தோன்றிய இயேசு அவர்களுக்கு வழங்கிய கட்டளையில் மூன்று அம்சங்கள் உள்ளன. அவர்கள் எல்லா மக்களையும் சீடராக்க வேண்டும்; தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுக்கவேண்டும்; இயேசு அளித்த கட்டளைகளை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். இக்கட்டளையைத் திருச்சபை தொடர்ந்து செயல்படுத்த அழைக்கப்படுகிறது. இயேசு ஒரு சில மனிதரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கடவுளாட்சி பற்றிக் கற்பித்து, அவர்களைத் தம் சீடராக மாற்றியதுபோல, இன்றும் திருச்சபை இயேசுவின் பெயரால் நற்செய்திப் பணியைத் தொடர வேண்டும். இப்பணியை ஆற்றுவதற்கான ஆற்றலை நாம் இயேசுவிடமிருந்து பெறுகிறோம். திருச்சபை ''எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க'' அனுப்பப்படுகிறது. இயேசுவின் பணி பெரும்பாலும் யூதர்கள் நடுவே நிகழ்ந்தது. ஆனால், உலகில் உள்ள அனைத்து மக்களும் கடவுளின் மீட்பில் பங்கேற்க அழைக்கப்படுவதால் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளை அளிக்கிறார். அக்கட்டளையை நாம் ஏற்று, நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்த வேண்டும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெற வேண்டும். அப்போது நாம் கடவுள் மனிதரிடையே வாழ்கின்றார் என்னும் உண்மைக்குச் சான்றுகளாக மாறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும்.