யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 5வது வாரம் புதன்கிழமை
2022-05-18

புனித கிறிஸ்தோப்பர் மெகாலன்




முதல் வாசகம்

எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6

அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், ``நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது'' என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பிவைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர், சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, ``அவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்'' என்று கூறினர். இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல் 122: 1-2. 4-5

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்றார்'' (யோவான் 15:8)

இயேசு தம்மைத் ''திராட்சைச் செடி'' என்றும் தம்மில் நம்பிக்கை கொள்வோரைத் ''திராட்சைக் கொடி'' என்றும் உருவகித்துக் கூறுகிறார். செடியோடு இணைந்திருக்கின்ற கொடிதான் உயிரோடு இருக்கும். செடியை விட்டுப் பிரிந்த கொடி மடிந்துபோகும். இந்த உருவகத்தில் இயேசு இரு உண்மைகளைக் காட்டுகிறார். முதல் உண்மை இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே உள்ள உறவு. இயேசு என்னும் திராட்சைச் செடியை ''நட்டு வளர்ப்பவர்'' இயேசு தந்தை என அழைக்கின்ற கடவுள்தாம். இதனால் இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தெரிகிறது. இயேசு தந்தையோடு கொண்டுள்ள உறவு மனித உறவுகளைக் கடந்தது. ஆனால் அன்பின் நிறைவும் முழுமையும் அந்த உறவில் உண்டு. அந்த அன்பு எவ்வளவு ஆழமானது என்றால் இயேசு தம்மைக் காண்போர் தம் தந்தையையே காண்கின்றனர் என்றார். அதே நேரத்தில் இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் அமைந்தவராகவே இவ்வுலகிற்கு வந்தார். தந்தை தமக்களித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கருத்தாயிருந்தார்.

தந்தையாம் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவாக மாறுகிறது. அதாவது, இயேசு தம்மைத் திராட்சைச் செடிக்கும் தம் சீடர்களைத் திராட்சைக் கொடிக்கும் ஒப்பிடுகிறார். இயேசு செடி என்றால் அவரில் நம்பிக்கை கொள்ளும் நாம் கொடிகள். கொடி செடியோடு இருந்தால் வாழ்வு பெறும்; செடியைப் பிரிந்த கொடி மடியும். இயேசுவோடு இணைந்திருத்தலில் இரு அம்சங்கள் உண்டு. முதலில் நாம் அவரிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும். அதன் விளைவாக நாம் அவருடைய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செயல்படும்போது கடவுளுக்கு நாம் மாட்சி அளிப்போம். கடவுள் நமக்குத் தருகின்ற வாழ்வு மறைந்துபோகும் ஒன்றல்ல; அது எந்நாளும் நீடிக்கின்ற நிலைவாழ்வு. அதே நேரத்தில் நம்மில் உறைகின்ற இறைவாழ்வு நற்கனிகளாக வெளிப்பட வேண்டும். அன்பிலிருந்தும் இறைநம்பிக்கையிலிருந்தும் பிறக்கின்ற கனிகள் மனித குலம் வாழ்வதற்கு வழியாகும். பிறருடைய நலனை நாம் முன்வைத்துச் செயல்படும்போது நாம் ''மிகுந்த கனி தருவோம்''. மனிதர் வாழ்வு பெறுவதே கடவுளுக்கு மாட்சியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வு அன்பு என்னும் கனியை ஈந்திட அருள்தாரும்.