யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 4வது வாரம் வெள்ளிக்கிழமை
2022-05-13




முதல் வாசகம்

நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், `நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்'
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில் பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: ``சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், `நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்' என்று எழுதப்பட்டுள்ளது.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
திருப்பாடல் 2: 6-7. 8-9. 10-11

6 என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். 7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். -பல்லவி

8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. -பல்லவி

10 மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள். 11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை," என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், `உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.'' தோமா அவரிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?'' என்றார். இயேசு அவரிடம், ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'''மீண்டும் இயேசு, 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்றார்'' (யோவான் 14:1)

இயேசு ம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்துகிறார். யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போவதை இயேசு முன்னறிவிக்கிறார். அதுபோல, பேதுரு கூடத் தம்மை மறுதலிக்கப்போகிறார் என இயேசு கூறுகிறார். இதையெல்லாம் கேட்டதும் சீடர்களின் உள்ளத்தில் ஒரே கலக்கம். தங்கள் குருவும் தலைவருமாகிய இயேசு ஏன் இவ்வாறு பேசுகிறார் என அவர்கள் திகைக்கின்றனர். அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகிறார்: ''நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்'' (யோவா 14:1). சீடர்கள் கவலையை விட்டொழித்து, கடவுளிடத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கவேண்டும். கடவுளால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்த இயேசுவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் - இதுவே இயேசு அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பதில். இவ்வாறு சீடர்கள் கடவுளையும் இயேசுவையும் நம்பி ஏற்பதாக இருந்தால் அவர்களுக்குக் கடவுளோடு எந்நாளும் நிலைத்து வாழ்கின்ற பேறு கிடைக்கும். இதைக் குறிப்பிட்டே இயேசு, ''என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன'' என்றும், ''நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்'' என்றும் கூறுகிறார் (காண்க: யோவா 14:2,3).

''தந்தை வாழும் இடம் (இல்லம்)'' என இயேசு எருசலேம் கோவிலை முன்னொரு நாள் குறிப்பிட்டிருந்தார் (காண்க: யோவா 2:16). அந்த இல்லம் இடிபட்டு விழுந்தாலும் அதை மீண்டும் கட்டி எழுப்புவதாக இயேசு கூறியிருந்தார். ''இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்'' (யோவா 2:21) என யோவான் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவே தந்தை வாழும் இடம் (கோவில்) என்பது தெளிவாகிறது. இவ்வாறு, கடவுளின் இல்லமாக இயேசுவே நம்மிடையே இருப்பதால் இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் உறைவிடம் பெறுவார்கள். இயேசு தம்மை நம்புவோருக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். அவர்கள் இயேசுவோடு இணைந்திருப்பர். இயேசுவே கடவுளின் இல்லமாக இருப்பதால் அவர்கள் தந்தையோடும் இயேசுவோடும் அன்புறவில் பிணைந்திருப்பர். இவ்வாறு கடவுளின் அன்பில் நிலைத்திருப்போருக்கு இயேசு நிலைவாழ்வை வாக்களிக்கிறார். அந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இயேசுவை வழியாகக் கொண்டு, அவர் அறிவிக்கின்ற உண்மையை நம் வாழ்வில் ஏற்றுச் செயல்பட்டால் நிலைவாழ்வைக் கண்டடைவோம். இயேசு கூறுகிறார்: ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' (யோவா 14:6)

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வுக்கு வழியான இயேசுவை நாங்கள் பின்சென்றிட அருள்தாரும்.