யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 3வது வாரம் புதன்கிழமை
2022-05-04




முதல் வாசகம்

தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8

அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம் செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார். சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
திருப்பாடல் 66: 1-3. 4-5. 6-7

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3ய கடவுளை நோக்கி `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். பல்லவி

4 `அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7ய அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: ``வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்றார்'' (யோவான் 6:35)

யோவான் நற்செய்தி இயேசுவை ''ஒளி'', ''உணவு'', ''வழி'', ''வாழ்வு'', ''உண்மை'' போன்ற பல உருவகங்களைப் பயன்படுத்தி நமக்கு அறிவிக்கிறது. தந்தையாம் கடவுளை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். தந்தையிடம் அவர் நம்மை இட்டுச் செல்கிறார். எனவே இயேசு மக்களை நோக்கி, ''என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார். ''இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுதல்'' என்னும் சொற்றொடர் யோவான் நற்செய்தியில் 34 தடவை வருகிறது. ''நம்பிக்கை'' என்னும் சொல் பழைய கத்தோலிக்க வழக்கில் ''விசுவாசம்'' என அழைக்கப்பட்டது. இன்றைய சொல் வழக்கில் ''நம்பிக்கை'' என்பது சில வேளைகளில் பகுத்தறிவால் நிரூயஅp;பிக்க இயலாத, ஆனால் மக்களால் பொதுவாக ஏற்கப்பட்ட ஒரு கருத்தைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, இராகு காலத்தில் திருமணம் நிகழ்வது முறையல்ல என்னும் ''நம்பிக்கை''யைக் காட்டலாம். கடவுளின் பார்வையில் எந்தக் காலமும் நல்ல காலம் தான். எனவே இராகு காலம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கெட்ட நேரமாகக் கருதுவது ''மூட நம்பிக்கை'' என்போம். சிலர் சமய நம்பிக்கை என்றாலே மூட நம்பிக்கை என நினைக்கிறார்கள். ஆனால் மனித அறிவுக்கு எட்டாத பரம்பொருள் உண்டு எனவும் கடவுள் என நாம் அழைக்கும் அவர் நம்மை அன்போடும் பாசத்தோடும் அரவணைக்கின்ற தந்தையாக, தாயாக விளங்குகிறார் எனவும், அவர் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தம் ஒரே மகனை நம் மீட்பராக நம்மிடையே அனுப்பினார் எனவும் கிறிஸ்தவ சமயம் போதிக்கிறது. இதை நாம் ''கிறிஸ்தவ நம்பிக்கை'' என்கிறோம். இயேசு கிறிஸ்து நமக்குக் கடவுளைப் பற்றிக் கற்றுத் தந்துள்ளார். எனவே அந்த இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு ஐயாயிரம் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்ததைக் கண்ட மக்கள் அவரைத் தேடி வருகிறார்கள். மேலும் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையை ஆழப்படுத்துகிறார். அவர்கள் தம் அகக்கண்களைத் திறந்து கடவுளின் செயலைக் கண்டுகொள்ள அவர்களை அழைக்கிறார். உடல் சார்ந்த பசியைப் போக்குகின்ற அப்பமல்ல, ஆனால் மனித வாழ்வின் ஏக்கங்களையெல்லாம் நிறைவுசெய்கின்ற ''அப்பத்தை'' இயேசு வாக்களிக்கிறார். அந்த அப்பம் இயேசுவே. மக்கள் இயேசுவை நம்ப வேண்டும். அதாவது, அவரை முழு இதயத்தோடும் உள்ளத்தோடும் ''பற்றிக்கொள்ள'' வேண்டும். அப்போது அவர்கள் வேறு இடங்களில் அப்பம் தேடிப் போக மாட்டார்கள். மாறாக, இயேசு வழங்குகின்ற போதனையும் அவரோடு இணைந்திருக்கின்ற அன்புப் பிணைப்பும் அவர்களுக்கு ''அன்றாட அப்பமாக'' அமையும். பற்றற்ற இறைவனின் பற்றைப் பற்ற வேண்டும் என்றார் வள்ளுவர் (குறள் 350). கிறிஸ்தவப் பார்வையில் இறைவன் மனிதர் மட்டில் மிகவும் பற்றுடையவர். மனிதரை வேறுபடுத்தி, ஒருதலைச் சார்பாகச் செயல்படாமல் அனைவரையும் தம் அன்புப் பிணைப்பால் தழுவுகின்றவர். எனவே இறைவனிடம் நம்பிக்கை கொள்வது நாம் அவரே நமது கதி எனக் கொண்டு அவருடைய வழிநடத்தலுக்கு நம்மை முழுமையாகக் கையளித்தலில் அடங்கும். இத்தகைய நம்பிக்கையைத் தான் இயேசு மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். அப்போது அவரே நம் ஆன்ம பசியைப் போக்கி, நம் வாழ்வின் ஏக்கங்களைத் தணித்திடுவார். நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திட அருள்தாரும்.