யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம்
2022-04-19

பாஸ்கா எண்கிழமை செவ்வாய்




முதல் வாசகம்

மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.'' அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, ``சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள்.
அதற்குப் பேதுரு, அவர்களிடம், ``நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.
ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது'' என்றார்.
மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, ``நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
திபா 33: 4-5. 18-19. 20. 22

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில் மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார்.
இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், ``அம்மா, ஏன் அழுகிறீர்?'' என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், ``என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை'' என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.
இயேசு அவரிடம், ``ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார்.
மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ``ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார்.
இயேசு அவரிடம், ``மரியா'' என்றார்.
மரியா திரும்பிப் பார்த்து, ``ரபூனி'' என்றார்.
இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள்.
இயேசு அவரிடம், ``என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்'' என்றார்.
மகதலா மரியா சீடரிடம் சென்று, ``நான் ஆண்டவரைக் கண்டேன்'' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார் (யோவான் 20:15)

இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படை. கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்த அந்த நேரத்தில் இயேசுவைக் கண்டவர் எவருமில்லை. ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசு அவரில் நம்பிக்கை கொண்ட பல மனிதருக்குத் தோன்றினார். யோவான் நற்செய்தியில் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாததால் கவலையோடு அழுதுகொண்டிருந்த மரியா ஒரு மனிதரைக் காண்கின்றார். அவர் தோட்டக்காரராக இருப்பாரோ என மரியா எண்ணுகிறார். ஆனால் உண்மையிலே அவர் உயிர்பெற்றெழுந்த இயேசுதான். இயேசு மரியாவிடம் ''ஏனம்மா அழுகிறாய்?'' எனக் கரிசனையோடு வினவுகிறார். ''யாரைத் தேடுகிறாய்?'' என இயேசு கேட்கிறார். இயேசுவைத் தேடுவதாக மரியா கூறியதும் இயேசு ''மரியா'' என்று பெயர் சொல்லி அழைக்கிறார். அக்குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பதை மரியா உடனேயே கண்டுகொள்கிறார். தான் பேசிக்கொண்டிருக்கின்ற மனிதர் உண்மையிலேயே இயேசுதான் என உணர்ந்த அந்த நேரத்திலேயே மரியா ''ரபூனி'' (''போதகரே'') என இயேசுவைக் கூப்பிடுகிறார்.

இயேசு நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். இயேசுவை யார் என நாம் அறிந்து அவரிடத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை நாம் அவர் நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கிறார் என்னும் உண்மையை ஏற்பதுதான். இயேசுவின் அன்பு நம்மை அரவணைக்கிறது எனவும் அவருடைய அன்பின் பிணைப்பில் நாம் புதுவாழ்வு பெறுகிறோம் எனவும் நாம் ஏற்றுக்கொண்டால் அவரை நாம் ஆண்டவரே எனவும் போதகரே எனவும் அழைப்பதோடு அவருடைய போதனையை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் கொள்வோம். இயேசுவை அனுபவித்து உணர்கின்ற மனிதர் அவருடைய அன்பின் ஆழத்தை அறிவார்கள். அப்போது நாம் தேடுகின்ற இயேசு நம் கைகளுக்கு எட்டாதவராகவோ நம் பார்வைக்கு அப்பாற்பட்டவராகவோ இருக்கமாட்டார். மாறாக, அவர் நாம் நமக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளோமோ அதைவிடவும் நமக்கு நெருக்கமாக உள்ளார் என நாம் உணர்வோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்மை முற்றிலுமாக உருமாற்றுகிறது. பாவம் என்னும் தீமையிலிருந்து இயேசு நம்மை விடுவித்துள்ளார் என்னும் அனுபவம் நமதாக வேண்டும். அப்போது நன்மையைத் தேடிச் செல்கின்ற மனநிலை நம்மில் உருவாகும். நாம் தேடுகின்ற இயேசு நம்மை விட்டு அகன்றுவிட்டாரோ என்னும் அச்சம் நம்மில் எழாது. மாறாக, இயேசுவின் உடனிருப்பு நம் உள்ளத்தில் உள்ளதை நாம் உணர்வோம்; அவருடைய ஆவியால் புது வாழ்வு பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றி நாங்களும் உம் திருவுளத்தை நிறைவேற்ற அருள்தாரும்.