யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பெரிய வியாழன் 1வது வாரம் வியாழக்கிழமை
2022-04-14




முதல் வாசகம்

பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்: 12:1-8,11-14

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார் :உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது 'ஆண்டவரின் பாஸ்கா '. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல், அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே.
பதிலுரைப்பாடல். திபா. 116: 12-13.15-18

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவரு க்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரி யது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன். நான் உம் பணி யாள். உம் அடியாளின் மகன். என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர். பல்லவி

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கின்றீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்:11:23-26

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, 'இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் ' என்றார்.அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் ' என்றார்.ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்| என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். (யோவா. 13:34)

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்: 13:1-15

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், 'ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்? ' என்று கேட்டார்.இயேசு மறுமொழியாக, 'நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது: பின்னரே புரிந்து கொள்வாய் ' என்றார். பேதுரு அவரிடம், 'நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன் ' என்றார். இயேசு அவரைப் பார்த்து, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை ' என்றார். அப்போது சீமோன் பேதுரு, 'அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும் ' என்றார். இயேசு அவரிடம், 'குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் 'உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: 'நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் 'போதகர் ' என்றும் 'ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"நான் செய்தது போல நீங்களும் செய்யுமாற" (யோவா13:15)

கத்தோலிக்கத் திருச்சபையின் உயிர் நற்கருணை. மனிதனோடு வாழும் இறை இயேசுவின் குறையில்லா இறைப் பிரசன்னம் இவ்வுலகில் நற்கருணை. மனிதனை வாழவைக்கும் உள்ளுயிர் வலுப்பெற, உரமூட்டும் ஆன்மீக உணவு நற்கருணை. மனிதன்வாழ கல்வாரியில் பலியான, பலியாகும் ஒரே பலி நற்கருணை. இறை பிரசன்னமாம், ஆன்ம உணவாம், ஒரே பலியாம் இந் நற்கருணை, இரு இணை பிறியா தன்மைகளைத் தன்னுள்கொண்டது. தெய்வீகமும் மனிதமும்; வழிபாடும் வாழ்வும்; புனிதமும் பாவமும் இவ் இரு இணை பிறியா தன்மைகள். ஆனால்,தெய்வீகம், புனிதம், வழிபாடு இவற்றை நற்கருணையோடு நெருக்கி இணைத்துப் பார்ப்பதில் பரவசமடையும் நாம், மனிதம், பாவம், வாழ்வு இவற்றை நற்கருணையுடன் சேர்த்துப் பார்க்க பிரசவ வேதனைப்படுகிறோம்.

இறைவன் இயேசு இந்த இரண்டினையும் இணைத்துத்தான் நற்கருணையை ஏற்படுத்தினார். நற்கருணை ஒரு இரவில் (பெரிய வியாழன் ) ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு இவற்றின் நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஏற்படுத்தப்பட்டது. மனித பார்வையில் இது பல நாட்களின், பல நிகழ்வுகளாகத் தோன்றலாம்; முன் பின் நிகழ்ச்சியாகலாம்; முக்கியமானது இரண்டாம்தரமானது என்ற எண்ணம் எழலாம்.ஆனால் எல்லாம் ஒரே நிகழ்வு, ஒரே தரம், ஒன்று.

"இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்". "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை." " எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்று (லூக்22:19-20)நற்கருணையின் ஒரு பக்கத்திற்கு வடிவம் கொடுத்த இயேசு, அதே இரவில், அதே இடத்தில், 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன். நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்(யோவா 13:15-16) என்று நற்கருணையின் மறு பக்கத்திற்கும் வடிவம் கொடுத்தார். இதை ஏனோ மங்கலாகப் பார்க்கிறோம்.

இரு நிகழ்வுகளும் " எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" "நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்" என்னும் ஒரே முத்திரையால் பத்திரப்படுத்தப்படுவது இரண்டின் சமநிலைக்கான சமாதானங்கள். அப்பத்தைப் பிட்கும் அன்புச் செயலும், அயலானுக்காக வியர்வை சிந்தி, உடலும் இரத்தமும் சிந்தி சிதைக்கப்படும் பலி வாழ்வும் ஒன்றை ஒன்று தாங்கிச் செல்லும் ஒரே செயலின் இரு பரிமாணங்கள். வாழ்வையும் வழிபாட்டையும் இணையுங்கள்.இறைவனையும் மனிதனையும் சேர்த்துப் பாருங்கள். பெரிய வியாழனையும் பெரிய வெள்ளியையும் ஒன்றாகக் காணுங்கள். அதுவே நற்கருணை. உயிர்ப்பின் நிறை வாழ்வு. இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடலை இறைவனின் ஆலயமாக மாற்றியதுபோல, நாங்களும் எங்கள் உடலை உம்மை மாட்சிமைப்படுத்த பயன்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.