யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் புதன்கிழமை
2022-01-26

புனித திமோத்தேயு தீத்து




முதல் வாசகம்

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை
திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-8

1 என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: 2 தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!3 என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூறுகின்றேன்.4 உன் கண்ணீரை நினைவிற் கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்: கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்.5 வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டிலோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.6 உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.7 கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.8 எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை: கடவுளின் வல்லமைகேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்
திருப்பாடல்கள் 96:1-8

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். 4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.

5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். 6 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன; ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன;

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.


நற்செய்திக்கு முன் வசனம்

மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10;1-9

இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். 2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது; "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். 3 புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். 4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். 5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள். 6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். 7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். 8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். 9 அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே' என்றார்'' (லூக்கா 6:5)

ஓய்வு நாள் என்பது யூதருடைய சமய வழக்கங்களில் மிக முக்கியமான ஒன்று. வெள்ளிக் கிழமை மாலை பொழுது சாயும் வேளையிலிருந்து தொடங்கி மறுநாள் சனிக்கிழமை பொழுது சாய்வது வரை ஓய்வு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆறு நாள்களில் உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்னும் விவிலியச் செய்தியின் அடிப்படையில் ஓய்வுநாள் சட்டம் விளக்கப்பட்டது. கடவுளின் படைப்பை வியந்து, நன்றியுணர்வோடு கடவுளுக்குப் புகழ்செலுத்தும் நாளாக ஓய்வுநாள் அமைந்தது. அன்றாட வேலையிலிருந்து ஓய்வெடுப்பதற்கும் அந்நாள் பொருத்தமாக இருந்தது. என்றாலும் யூத சமயத் தலைவர்கள் ஓய்வுநாள் கட்டளைக்கு அளித்த விளக்கங்கள் மக்கள்மேல் திணித்த ஒரு பெரிய சுமையாக மாறிவிட்டிருந்தது. சட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் புதுப்புது விளக்கங்களைத் தந்து இறுதியில் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். சட்டம் மனிதருக்கா மனிதர் சட்டத்திற்கா என்று கேட்டால் அவர்கள் மனிதர் சட்டத்திற்காகவே என்று பதிலளித்திருப்பர். ஆனால், இயேசுவின் அணுகுமுறை யூத அறிஞரின் அணுகுமுறைக்கு நேர்மாறாக அமைந்தது. மனிதத் தேவைகள் எழும்போது சட்டம் அடிபணிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற சக்தியாக மாறிவிடலாகாது.

ஓய்வு நாளில் இயேசுவின் சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றது சட்டத்திற்கு மாறானதல்ல (காண்க: இச 23:25). ஆனால் அவர்கள் ஓய்வுநாளன்று அவ்வாறு செய்தது சரியல்ல என இயேசுவின் எதிரிகள் வாதாடினர். இயேசு அவர்களோடு வாதத்தில் ஈடுபட மறுத்துவிட்டார். மாறாக, பசியாய் இருந்தபோது தாவீதும் அவரோடு இருந்தவர்களும் ''அர்ப்பண அப்பங்களை'' எடுத்து உண்டது எப்படி சட்டத்திற்கு எதிராக அமையவில்லையோ அதுபோலவே, பசியாயிருந்த சீடர் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தானியத்தை உண்டது சட்டத்தை மீறியதாகாது என இயேசு போதித்தார். மக்களின் வாழ்வுக்காக இயேசுவே ''அர்ப்பண அப்பமாக'', நற்கருணையாக மாறினார்; தம்மையே நமக்கு உணவாக அளித்தார் என்பதையும் நாம் இவண் நினைவுகூரலாம். ஓய்வுநாள் என்றால் என்னவென்று விளக்குவதற்கு இயேசு அதிகாரம் கொண்டிருந்தார் என்னும் செய்தி அவருடைய எதிரிகளுக்குப் பெரும் வியப்பைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனைப்படி, சட்டம் மனிதருக்குப் பணிபுரிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற எசமானனாக மாறிவிடலாகாது. சிலர் சட்டத்தின் பெயரால் அநீதி இழைக்கத் தயங்கமாட்டார்கள். பிறருக்கு என்ன நிகழ்ந்தாலும் சரி, சட்டம் மட்டும் மீறப்படலாகாது என்பது அவர்களுடைய பார்வை. ஆனால் இயேசுவின் பார்வை அதுவல்ல. அவர் மனிதருக்கே முதன்மை அளித்தார். எதுவெல்லாம் மனித நலனுக்குத் தடையாக அமைகிறதோ அதைத் தகர்த்து எறிய வேண்டும் என்பதே இயேசுவின் அணுகுமுறை.

மன்றாட்டு:

இறைவா, மனித நலனை எப்போதும் முன்னிலைப்படுத்தி உமது புகழைப் பாடிட எங்களுக்கு அருள்தாரும்.