யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
வருடப் பிறப்பு இறைவனின் அன்னை தூய கன்னி மரியா பெருவிழா 1வது வாரம் சனிக்கிழமை
2022-01-01




முதல் வாசகம்

இஸ்ராயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது நாம் அவர்களுக்கு ஆசி அளிப் போம்:
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம். 6:22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களு க்கு ஆசிகூற வேண்டிய முறை: ;ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுக த்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! ; இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி:கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!.
பதிலுரைப்பாடல்: திபா. 67: 1-2, 4-5,7

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உல கம் உமது வழியை அறிந்துகொள்ளும்: பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளு கின்றீர்: உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்க ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்:
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்கு மாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி; அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்:

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தி யிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டே திரும்பிச் சென்றார்;கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்'' (லூக்கா 2:21)

ஆண்டின் முதல் நாள் திருச்சபை தூய மரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. தாய்மை என்பது கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்று. மனிதருக்கு உயிரளித்து, அவர்களைப் பேணிக்காத்து, வளர்த்து மேம்படுத்தும் செயலைக் கடவுள் செய்வதால் அவரை நாம் தாய் என உரிமையோடு அழைக்கலாம். கடவுளின் தாய்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் மரியா வழியாக அது சிறப்பான விதத்தில் உயர்வுபெற்றது. மரியா கடவுளின் தாய் என அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் கடவுளின் மகனை நமக்கு ஈந்தளித்த செயல் ஆகும். மரியாவின் ''வயிற்றில் உருவான'' குழந்தைக்கு இடப்பட்ட பெயர் அவருடைய பணியை அழகாகக் குறிப்பிடுகிறது. இயேசு என்னும் சொல் மீட்பர் எனப் பொருள்படும். பழைய ஏற்பாட்டுக் காலத்தினராகிய யோசுவாவும் இவ்வாறே ''மீட்பர்'' என்று அறியப்பட்டார். இஸ்ரயேல் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்க யோசுவா ஒரு கருவியாக இருந்தார். இப்போதோ உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்கவும் அவர்களை நிலைவாழ்வில் பங்கேற்கச் செய்யவும் வல்லவராக இயேசு வருகின்றார்.

இயேசு கொணர்கின்ற மீட்பு நம்மைக் கடவுளோடு நெருங்கிய விதத்தில் இணைக்கின்றது; கடவுளின் வாழ்வில் நமக்குப் பங்கு வழங்கப்படுகிறது. ஏனென்றால், நம் வாழ்வு கடவுளின் வாழ்வோடு இணைவதே அதன் இறுதிக் குறிக்கோளாகும். அக்குறிக்கோளிலிருந்து நம்மைப் பிரிக்கின்ற அனைத்தையும் கடவுள் இயேசுவின் வழியாக நம்மிலிருந்து அகற்றிவிடுகின்றார். தடைகள் அகலும்போது நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டு, கடவுளுடைய அருளின் வல்லமையால் புதுப் பிறவிகளாக மாறுகிறோம். புதுப்பிறப்படைந்த மனிதர் புது வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அந்த வாழ்வு நம்மில் ஓர் ஆழ்ந்த மாற்றத்தைக் கொணர வேண்டும். புத்தாண்டில் நாம் புதுமை பெற்று வாழ்ந்திட முன்வர வேண்டும்.

மன்றாட்டு:

ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கு உங்கள் வாழ்வில் விளக்காக இருந்து வெளிச்சம் தந்து, செல்வங்கள் அனைத்தும் தந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வதாக. உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இயேசுவின் அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் என்றும் உங்களோடு இருப்பதாக.

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.