முதலாவது திருவழிபாடு ஆண்டு 2021-12-19
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5
, திருப்பாடல் 80: 1-2. 14-15. 17-18,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 5-10
, லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45)
திருப்பலி முன்னுரை
கடவுளுக்குரியவர்களே, திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்ட தயாரிப்புக்கு இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. கடவுளின் பெயரால் இஸ்ரயேலை ஆட்சி செய்யும் மீட்பரின் வருகையை எதிர்நோக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. இயேசுவை வயிற்றில் சுமந்தவராய் சென்ற கன்னி மரியாவை சந்தித்த எலிசபெத்தும், யோவானும் அடைந்த மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் அழைக்கப்படுகிறோம். வரவிருக்கும் நம் ஆண்டவரும் அமைதியின் அரசருமான இயேசுவை நம் உள்ளத்திலும், இல்லத்திலும் வரவேற்க தயாராவோம். நிகழவிருக்கும் கிறிஸ்து பிறப்பு நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டுமென்று, இந்த திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5
ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
திருப்பாடல் 80: 1-2. 14-15. 17-18
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி
14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி
17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி
இரண்டாம் வாசகம் உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 5-10
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது''என்கிறார்.
திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார்.
பின்னர், “உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நிறைவு தருபவராம் இறைவா, அமைதியின் அரசராம் எங்கள் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியை யும் கொடுப்பவர்களாக திகழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
பேருவகை அளிப்பவராம் இறைவா, உம் திருமகனின் பிறப்பு விழாவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் உலக மக்கள் அனைவரும், தங்கள் மனமாற்றத்தின் வழியாக புதுவாழ்வு காணவும், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடையவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மாட்சியின் மன்னராம் இறைவா, எம் நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், மக்களை நேரிய வழியில் நடத்தவும், மக்களிடையே தோன்றும் பிரிவினைகளை ஊக்குவிக்காமல் ஒற்றுமையை உருவாக்கவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
வாக்குமாறாத தெய்வமே! பல்வேறு தேவைகளுடன் இன்றைய திருப்பலியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் தாம் எதிர்நோக்கி காத்திருக்கும் காரியங்கள் நிறைவேற்றப்பட்டு வாக்குமாறாத தெய்வமாகிய உம்மேல் இன்னும் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக, தன் விசுவாச வாழ்வை புதுப்பித்துக் கொள்ளும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம் சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா! வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும், நம் வீண்பெருமைகளின் கடினமான ஓரங்களை மிருதுவாக்கி, இயேசுவுக்கு உள்ளத்தில் இடம் உருவாக்கும் காலம், இத்திருவருகைக் காலம் என்பதை உணரும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
தோழமையின் நாயகனே எம் இறைவா! தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
உறவின் நேரம் !
அன்னை மரியாவும், அவர் உறவினர் எலிசபெத்தும் சந்தித்துக்கொண்ட காட்சியை நற்செய்தியாளர் வர்ணிக்கும் விதமே அலாதிதான். அந்த உறவின் வேளையில் அங்கே நிகழ்ந்த நேர்நிலை நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் நாம் வியப்படையத்தான் செய்வோம்: (1) விரைவு (2) வாழ்த்து. (3) மகிழ்ச்சியின் துள்ளல் (4) தூய ஆவியின் ஆட்கொள்தல் (5) ஆசி வழங்கல். ஆம், அன்னை மரி நமக்கெல்லாம் உறவின் மாதிரியாகத் திகழ்கிறார். உண்மையான, ஆழமான உறவில் விரைவான அன்பின் செயல்பாடு நிகழவேண்டும். உறவில் வாழ்த்தும், ஆசியும் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும். உண்மையான மகிழ்ச்சி நிலவ வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கே தூய ஆவியின் துணை வேண்டும். நம்முடைய உறவுகளில் இந்த ஐந்து அம்சங்களும் இருக்கின்றனவா என்று நம்மை ஆய்வு செய்வோம். அத்துடன், இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, இந்த ஐந்து அம்சத் திட்டத்தைக் கடைப்பிடித்து, நமது உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனுப்பும்போது,வாழ்த்தும், ஆசியும், மகிழ்ச்சியும், தூய ஆவியின் செபமும் இணைத்து அனுப்புவோம். அந்த வாழ்த்து நம் உறவை ஆழப்படுத்தும்.
மன்றாட்டு:
உறவுகளின் நாயகனே ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில்;, எங்களுடைய உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும், ஆழப்படுத்திக்கொள்ளவும் உமது அருளைத் தந்தருளும். நாங்கள் அன்பு செய்வோரை வாழ்த்தி, ஆசி கூற, உமது ஆவியின் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|