யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






திருவருகைக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2021-12-16




முதல் வாசகம்

கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10

பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப் பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு; உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக்கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர். அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்க மாட்டாய். ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், `படைகளின் ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; `உலக முழுமைக்கும் கடவுள்' என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவிபோலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;
திருப்பாடல் 30: 1,3. 4-5. 10, 11, 12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு, இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப் பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகைகளில் அல்லவா இருக்கின்றனர்! பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். `இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என இவரைப் பற்றித்தான் மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.'' திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

யோவானிலும் பெரியவர்...

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவைனை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆனால் இறைஅரசில் பங்குபெறும் சிறியவர் யோவானை விடப் பெரியவர்". திருமுழுக்கு யோவானை உயர்த்திபேசும் ஆண்டவர் அதே வேளையில் கடவுளின் அரசில் செல்லத் தகுதிபெறுபவர் அவரினும் பெரியவர் என்று குறிப்பிடுகிறார். யார் இந்த யோவான்? அவருக்கு நேர்ந்த கதி என்ன? இயேசுவின் வருகைக்காக மக்களை தயார் செய்தவர். கடவுள் அவருக்குக் கொடுத்த பணியைத் திறம்படச் செய்தவர். இறைவாக்கினருக்கு சிறந்த மாதிரியாய் செயல்பட்டவர். ஏரோது அரசன் தன் சகோதரன் மனைவியை வைத்திருத்தலாகாது என்று இடித்துரைத்தவர். அவ்வாறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிரசேதம் செய்யப்பட்டு உண்மைக்கு சாட்சியாக வாழ்து மரித்த இறைவாக்கினர்.

இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்டிய யோவான் உண்மைக்காக கொல்லப்பட்டிருக்கிறார். விசுவாச வாழ்வில் உண்மைக்கு சாட்சியம் பகர்ந்தவர்கள், நேர்மையோடும் நீதியின்படியும் வாழ்ந்தவர்கள், தங்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்த அநேக விசுவாசிகள் இன்னல்கள் பட்டதும் கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக உயிர் துறந்தவர்;களும் ஏராளம். அவர்களில் சிலர் இன்று புனிதர்களாக நம் மத்தியில் அறிவிப்பட்டிருக்கிறார்கள். அறிவிக்கப்டாத புனிதர்கள் ஏராளம்.

உண்மைதான். கிறிஸ்தவ விசுவாச வாழ்வு என்பது மிகக் கடினமாக ஒன்று. இன்றய பொருள் நாட்டமிக்க (Materialistic) உலகில் கிறிஸ்துவின் மதிப்பிடுகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் பெரும் இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் உள்ளாக்கப்படுவது தவிற்கமுடியாத ஒன்று. கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் பற்றுடனும், உறுதியுடனும் வாழ, இயேசுவின் மதிப்பீடுகளை பின்பற்றி நடக்க ஆண்டவரிடம் அருள்வேண்டி பயணத்தை தொடர்வோம். துன்பங்களின் மத்தியில் வெற்றிவாகை நமதே!

மன்றாட்டு:

இறைவா, எங்கள் பிணிகளைப் போக்கி நலம் அளிக்கின்ற உமக்கு நன்றியுடையோராய் நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.