யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 3வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-12-14




முதல் வாசகம்

மெசியாவின் மீட்பு எளியவர் அனைவர்க்கும் வாக்களிக்கப்படுகிறது.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2,9-13

ஆண்டவர் கூறுகிறார்: கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு! எந்தச் சொல்லுக்கும் அவள் செவிசாய்ப்பதில்லை; கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை; தன் கடவுளை அண்டி வருவதுமில்லை. அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள். எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள். எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்; இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல் 34: 1-2. 5-6. 16-17. 18,22

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப் போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசகம்


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

வாரும், ஆண்டவரே, காலம் தாழ்த்தாதேயும்; உம் மக்களின் பாவங்களைப் போக்கியருளும்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: �இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், `மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, `நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, `நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார். அவர்கள் �மூத்தவரே'' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், �வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யோவான், 'நான் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்' என்றார்'' (யோவான் 1:26)

யோர்தான் ஆற்றருகே யோவான் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய குரல் கணீரென ஒலிக்கிறது. மக்கள் மனம் மாறி, கடவுளிடம் திரும்பாவிட்டால் அவர்களுக்கு அழிவு வந்தே தீரும் என அச்சுறுத்தும் மொழியில் பறைசாற்றுகிறார் யோவான். மக்கள் கடவுளோடு நல்லுறவு கொண்டாட வேண்டும் என்றால் அவர்கள் தம் பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு நன்னெறியில் வழிநடக்க வேண்டும். இதற்கு அடையாளமாகத்தான் திருமுழுக்கு அமைகின்றது. யோவான் வழங்கிய திருமுழுக்கு யூத மரபில் முற்றிலும் புதிது என்று சொல்ல முடியாது. எஸ்ஸேன் என்னும் துறவியர் குழுவில் திருமுழுக்கு வழக்கம் இருந்தது. மேலும், நீரைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்தும் சடங்குகளும் யூதரிடையே நிலவின. ஆயினும், யோவான் அறிவித்த திருமுழுக்கில் சில தனித்தன்மைகள் உள்ளன. மக்கள் தங்கள் பாவ வாழ்க்கையைத் துறக்கவேண்டும் எனவும் மனம் மாறிக் கடவுளிடம் செல்லவேண்டும் என்றும் கேட்ட யோவான் தம்மைவிடவும் பெரியவர் ஒருவர் வருகிறார் எனவும் அறிவித்தார். ''நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்'' என்று யோவான் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்.

இயேசுவைப் பலர் பார்த்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் இயேசுவை உண்மையிலேயே அறியவில்லை. திருமுழுக்குப் பெற்ற பிறகுதான் இயேசு தம் பொதுப் பணியைத் தொடங்கினார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இன்று நம் நடுவே இயேசு இருக்கிறார் என நாம் நம்புகிறோம். ஆனால் அவரை நாம் உண்மையிலேயே அறிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியை எழுப்புவது பொருத்தமே. விவிலியத்தில் ''அறிதல்'' என்னும் சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. ஏதோ மேல்மட்டமாக ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்வது உண்மையான ''அறிவு'' அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் புரகின்ற செயல்கள் மேலோட்டமான நிலையில் நின்றுவிடுகின்றன. ஆனால் இயேசுவை ''அறிதல்'' என்பது அவருடைய உண்மையான இயல்பை ஆழப் புரிந்துகொண்டு, அவரை நம் உள்ளத்தில் வரவேற்பதைக் குறிக்கும். இந்த அறிவு வெறும் புலனளவிலோ சிந்தனையளவிலோ நின்றுவிடாது. மாறாக, புலனும் சிந்தையும் காட்டுகின்ற இயேசுவை நம் இதயத்தில் ஏற்று, அவரின் வரவால் நம் வாழ்க்கை முற்றிலுமாகத் திருப்பம் பெறச் செய்வதே இயேசு பற்றிய உண்மையான ''அறிவு''. ஆக, நாம் அறியாத ஒருவர் நம்மிடையே இருக்கிறார் என்றால் அவரை அறிந்துகொள்ள நாம் என்ன செய்கிறோம்?

மன்றாட்டு:

இறைவா, இயேசுவை நாங்கள் அறிந்து அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.