யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-11-19




முதல் வாசகம்

புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 36-37, 52-59

அந்நாள்களில் யூதாவும் அவருடைய சகோதரர்களும், ``நம் பகைவர்கள் முறியடிக்கப் பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்'' என்றார்கள். எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச் சென்றார்கள். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்; பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணி செய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள். மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள் வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாட்சிமிகு உம் பெயரைப் போற்றுகிறோம் ஆண்டவரே
1 குறி 29: 10-12

10 எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப்பெறுவீராக! பல்லவி

11ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. பல்லவி

11உன ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப்பெற்றுள்ளீ செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. பல்லவி

12 நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்'' (லூக்கா 19:17)

வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு என்னும் செல்வரின் வீட்டில் இயேசு விருந்துண்டார். அந்த நிகழ்ச்சியை விவரித்த பிறகு லூக்கா நற்செய்தியாளர் செல்வத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஓர் உவமை வழி விளக்குகிறார். இதுவே ''மினா நாணய உவமை'' என அழைக்கப்படுகிறது (லூக் 19:11-28). செல்வக் கொழிப்பில் மிதந்த சக்கேயு மனம் திரும்பினார். தம் செல்வத்தை ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவர் முன்வந்தார். இங்கே செல்வத்தைப் பயன்படுத்தும் முறை என்னவென்பதை இயேசு எடுத்துக் கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாம். அந்நிகழ்ச்சிக்குப் பின் இயேசு கூறிய ''மினா நாணய உவமை''யை லூக்கா குறிப்பிடுகிறார். இந்த உவமையிலும் செல்வத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்னும் கருத்து மேலும் விளக்கம் பெறுகிறது. உவமையில் வருகின்ற பணியாளர் மூன்று பேர். அவர்களில் முதல் இருவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தைக் கொண்டு மேலும் அதிக பணம் ஈட்டுகின்றார்கள். ஆனால் மூன்றாவதாக வருகின்ற பணியாளரோ தம்மிடம் கொடுக்கப்பட்ட பணத்தை ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்துவிட்டு மேல் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுகிறார்.

கடவுள் நமக்குத் தருகின்ற செல்வத்தையும் நேரத்தையும் திறமைகளையும் நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்னும் உண்மையை இயேசு இந்த உவமை வழி உணர்த்துகிறார். கடவுளாட்சியை நம்மிடையே நிறுவ வந்த இயேசுவின் கட்டளையை ஏற்று, அவரோடு ஒத்துழைக்க முன்வருவோர் சோம்பேறிகளாக இருக்கமாட்டார்கள்; மாறாக, கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளைக் கொண்டு அவருடைய ஆட்சியை இவ்வுலகில் நிலைநாட்டிட மனமுவந்து உழைப்பார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வத்தைக் கொண்டு மேலும் அதிக செல்வத்தை ஈட்டிய பணியாளர்களைப் போல நாமும் செயல்பட்டால், ''நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்'' (லூக் 19:17) என்னும் பாராட்டு மொழியைக் கேட்கும் பேறு நமதாகும். மேலும், தான் பெற்ற பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்த பணியாள் தன் தலைவரின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என்பதையும் நாம் கருத வேண்டும். எனவே, முன்மதியோடு செயல்பட நம்மை அழைக்கின்ற கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடந்தால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்ற நல்ல பணியாளர்களாக இருப்போம். அவரிடமிருந்து நாம் பெறுகின்ற கைம்மாறு நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொணரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு நீர் வழங்குகின்ற கொடைகளைக் கொண்டு இறையாட்சி வளர நாங்கள் உழைத்திட அருள்தாரும்.