யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் புதன்கிழமை
2021-11-10




முதல் வாசகம்

தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 1-11

மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்து கொள்ளுங்கள் உலகின் கடையெல்லை வரை நீதி வழங்குவோரே, கற்றுக் கொள்ளுங்கள். திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள். ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்து அறிபவர் உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே. அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை. கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார் உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார். எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார் வலியோரை வன்மையாகத் தண்டிப்பார். அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார் உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்க மாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே எல்லாரும் ஒன்று என எண்ணிக் காப்பவரும் அவரே. அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார். எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறி பிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்@ தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர் தூய்மையானவற்றைக் கற்றுக் கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர். எனவே என் சொற்கள்மீது நாட்டங்கொள்ளுங்கள் ஏக்கங்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, உலகில் எழுந்தருளும், நீதியை நிலைநாட்டும்.
திருப்பாடல்கள்

3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள் சிறுமை யுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்! 4 எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்! பல்லவி

6 நீங்கள் தெய்வங்கள் நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். 7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள் தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள் என்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார் அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! என்றார். பின்பு அவரிடம், எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நன்றியின் நன்மைகள் !

நேற்றைய நற்செய்தி வாசகத்துக்கும், இன்றைய வாசகத்துக்கும் ஏதாவது முரண்பாடு தெரிகிறதா? மேலோட்டமாகப் பார்த்தால், முரண்பாடும், ஆய்ந்து பார்த்தால் முரண்பாடின்மையும் புலப்படுகின்றன. நன்றி உணர்வைப் பொறுத்த அளவில் இயேசுவின் போதனை தெளிவாகவே இருக்கிறது. நாம் நன்மைகள் செய்யும்போது, பலனை, பாராட்டை, நன்றியை எதிர்பாராது செய்ய வேண்டும். ஏனென்றால், அது நமது கடமை, நம்மேல் சுமத்தப்பட்ட பளு. மேலும், நாம் செய்கின்ற நன்மைகளின் ஊற்று இறைவனிடம் இருந்தே வருகிறது. எனவே, நமக்கென்று சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. ஆனால், பிறரிடமிருந்து நாம் பெறுகின்ற நன்மைகளுக்கு நாம் மறவாமல் நன்றி பாராட்ட வேண்டும். ஏனென்றால், அந்த நன்மை நமது உரிமையல்ல, மாறாக இறைவனின் அருள் மேலி;;ட்டால் அருளப்பட்ட கொடை. எனவே. இறைவனுக்கும், இறைவன் யார் வழிகாக அதை அருளினாரோ அவர்களுக்கும் நன்றி செலுத்துவது நமது கடமை. மேலும், நன்றி சொல்வதால், நமது மனம் பரவலாகிறது. நமது கொடைகள் நமக்குச் சொந்தம் அல்ல என்னும் எண்ணம் வலுவடைகிறது. நன்றி தாழ்வு மனத்தைப் போக்கி, தன்னம்பிக்கையைத் தருகிறது. போதும் என்று மனநிலையைத் தருகிறது. பிறரைச் சார்ந்து வாழ்கிறோம் என்னும் தாழ்ச்சியை, எளிய மனத்தைத் தருகிறது. எனவே, எப்போதும் நன்றி சொல்வோம். நன்றி மனநிலையோடு வாழ்வோம்.

மன்றாட்டு:

நன்மைகளின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் நீர் எங்களுக்குத் தந்திருக்கிற அனைத்துக் கொடைகளுக்காகவும், நன்மைகளுக்காகவும், ஆசிகளுக்காகவும் ;நாங்கள் நன்றி கூறுகிறோம். நல்ல மனிதர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் நன்றி. அந்த உறவுகளின் வழியாக நீர் தருகின்ற மகிழ்ச்சி, நிறைவு, நன்மைகளுக்காகவும் நன்றி. நாங்கள் எந்நாளும் உமக்க நன்றியுள்ளவர்களாக வாழும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.